Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

சிலப்பதிகாரச் சுருக்கம்
ஒளவை துரைசாமி



சிலப்பதிகாரச் சுருக்கம்


1. சிலப்பதிகாரச் சுருக்கம்
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. முகவுரை
7. புகார்க் காண்டம்
    1. மங்கல வாழ்த்துப் பாடல்
    2. மனையறம் படுத்த காதை
    3. அரங்கேற்று காதை
    4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
    5. இந்திர விழ ஊரெடுத்த காதை
    6. கடலாடு காதை
    7. கானல் வரி
    8. வேனிற் காதை
    9. கனாத்திறம் உரைத்த காதை
    10.நாடுகாண் காதை

8. மதுரைக் காண்டம்
    1. காடுகாண் காதை
    2. வேட்டுவ வரி
    3. புறஞ்சேரி இறுத்த காதை
    4. ஊர்காண் காதை
    5. அடைக்கலக் காதை
    6. கொலைக்களக் காதை
    7. ஆய்ச்சியர் குரவை
    8. துன்ப மாலை
    9. ஊர்சூழ் வரி
    10.வழக்குரை காதை
    11.வஞ்சின மாலை
    12.அழற்படு காதை
    13.கட்டுரை காதை

9. வஞ்சிக் காண்டம்
    1. குன்றக் குரவை
    2. காட்சிக் காதை
    3. கால்கோட் காதை
    4. நீர்ப்படைக் காதை
    5. நடுகற் காதை
    6. வாழ்த்துக் காதை
    7. வரந்தரு காதை

சிலப்பதிகாரச் சுருக்கம்

 

ஒளவை துரைசாமி

 


நூற் குறிப்பு
  நூற்பெயர் : சிலப்பதிகாரச் சுருக்கம்
  தொகுப்பு : உரைவேந்தர்தமிழ்த்தொகை - 3
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 448 = 472
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 295/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

முகவுரை


“நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக்
கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே - கூடலார்
கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன்
தண்டா உரைமுத் தமிழ்.”

சிலப்பதிகாரம் என்பது செந்தமிழ் இலக்கியங்களுள் மிக்க தொன்மையும் சிறப்பும் அமைந்த பேரிலக்கியமாகும். “செஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என இந்நூற்றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் பாராட்டினர். பண்டைய ஆசிரியன்மாரும் இவ்விலக்கியத்தை மிக்க சிறப்பாகக் கருதியுரைத் துள்ளனர். சென்ற நூற்றாண்டில் இருந்த ஒரு சான்றோர், “சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்” என ஒரு நயந்தோன்றக் கூறியது, இன்று நாம் நினைக்குந்தோறும் நம் நெஞ்சத்தே இன்பம் நிறைவிக்கின்றது.

இச் சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிவரும் பேரிலக்கிய மாதல்பற்றி, இதனைப் பண்டையாசிரியன் மார், இயலிசை நாடகத் தொடர்நிலைச் செய்யுள் என்றும், நாடகக் காப்பியம் என்றும் உரைப்பர். இதன்கண் இடையிடையே உரை நடையும் விரவுதலால், இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் சான்றோர் கூறுவர்.

I. நூலாசிரியர்:- இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள். இவர் சேரர்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை “ஆராத்திருவின் சேரலாதன்” என்னும் வேந்தர் பெருந்தகை; தாயார், நற்சோணை எனப்படுவார். சேரலாதனுக்கும் நற்சோணைக் கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்; இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒரு நாள் மக்கள் இருவரும் தம் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகன் ஒருவன் வந்தான். வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, “இவனே அரசுரிமை பெறுவன்” என்றான். அதுகேட்ட செங்குட்டுவன் சினந்து எரிதவழ நோக்கினன். மூத்தோன் இருப்ப, இளையனான தான் அரசுரிமை யெய்துதல் ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார். அதனால், இவ்விளங் கோ, இளங்கோ அடிகள் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படு வாராயினர். இவ்வரலாறு, இச் சிலப்பதிகாரத்துக்கு உரைவிரித்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரால் பின்வருவாறு உரைக்கப்படுகிறது:

“குமரியொடு வடஇமயத்து,
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலா தற்குத் திகழொளி ஞாயிற்று
ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன்மகள்
நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள்
முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப்
பின்னோன் தன்னையும் பெருநம்பி யாகஎன
அன்னவர் தம்மொடு தென்னர் செம்பியர்
தன்னடி போற்றத் தமனிய மண்டபத்துச்
சிங்கம் சுமந்த பொங்கணை மீமிசை
உவரித் திரையின் கவரி இரட்ட
வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன்
அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி
“இன்தோள் கழியப் பொன்திகழ் உலகம்
சேர்தி நீ” எனச் சேரலற்கு உரைத்தவன்
மைந்தரை நோக்கி, “நந்தாச் செங்கோல்
அந்தமில் இன்பத்து அரசாள் உரிமை
இளையோற்கு உண்டு” என உளைவனன் நனிவெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன்
கண்ணெரி தவழ அண்ணலை நோக்கிக்
கொங்கவிழ் நெடுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து
ஆயினன்.”

என்பது.

II. நூலாசிரியரின் காலம்:- இவ்விலக்கியத்துட் கூறப்படும் கண்ணகி வரலாற்றினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்த னார் என்னும் நல்லிசைப்புலவர், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகட்கு உரைத்தனர்; அதுகேட்ட அடிகள் இந்நூலை இயற்றி அவரைக் கேட்பித்தனர். சாத்தனார் கடைச்சங்கப் புலவராதலின், இளங்கோவடிகளும் கடைச் சங்க காலத்தவர் என்பது பெறப்படுகிறது.

இனி, இலங்கைநாட்டு வரலாற்றினை விளக்கும் மகாவம்சம் என்ற நூல் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகட்குமுன் இலங்கையைக் கயவாகு என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான் என்று கூறுகின்றது. அவனுக்குப் பின் எண்Q று ஆண்டுகள் கழிய, வேறொரு வேந்தன் கயவாகு என்னும் பெயருடன் இலங்கையை ஆண்டனன் என்றொரு செய்தியும் தெரிகிறது. இச் சிலப்பதிகாரமும் சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழி பட்ட போது, கயவாகு என்னும் இலங்கை வேந்தன் ஒருவன் வந்திருந்து வழி பட்டு வரம்பெற்றான் என்று கூறுகிறது. இவ்வேந்தனுடன் நூற்றுவர் கன்னர் என்னும் வடநாட்டு அரசர் பெயரும் இச்சிலப்பதிகாரத்திற் காணப்படுகிறது. அவர்கள் வடநாட்டு வரலாற்றுட் காணப்படும் சதகரணிகள் என்பர். அவர் காலம் கி.பி. 77-ம் 133 மாகும். ஆகவே, இவர் காலத்துக் கயவாகு முதற் கயவாகுவே என்பது தெற்றென விளங்குகிறது. எனவே, இளங்கோவடிகள் காலம் முதற் கயவாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.

இனி, வேறு சிலர் இச்சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறுசிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இக் கூற்றுக்களை நோக்கின், இப் பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது. இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந் துணையும், இளங்கோவடிகள் இன்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்Qறு யாண்டு கட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம்.

III. நூலாசிரியரின் சமயம்:- இவர் காலத்தே நம் தமிழ் நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்விசெய்தலு மாகிய வைதிக சமயமும், புத்த சமண சமயங்களும் பரவி இருந்தன. தமிழ் நாட்டிற்கே உரிய சிவவழிபாடாகிய, இக்காலத்தே சைவம் எனப்படும் - தமிழ்ச் சமயமும் இருந்துவந்தது. இளங்கோவடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதி யினைத் தக்காங்கு அறிந்திருந்தனர். அவற்றைக் கூறவேண்டுமிடங் களில், அவ்வவற்றிற்குரியவர் போலவே கூறுவது கொண்டு, அவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாரும் பலதிறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவரென்றே துணியுமாறு டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுகின்றார். அஃதாவது:

“கால்கோட்காதையில், செங்குட்டுவன் இமயம் செல்லப் புறப்பட்டபொழுது, “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங் கொண்டு” எனவும், “ஆடக மாடத்து அறிதுயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணீர் கரந்த செஞ் சடைக்கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” எனவும், செங்குட்டு வனை நோக்கி இமயத்தினின்றும் வந்த முனிவர்கள் கூறியதாகச் “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும், வரந்தருகாதையில், மாடலன் கூறியதாக “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” எனவும் இவரே (இளங்கோவடிகளே) கூறியிருத் தலாலும், இவர் அவனுடைய (அச் செங்குட்டுவனுடைய) தம்பியாதலாலும், இவரது சமயம் சைவமென்று தோற்றுகின்றது.”

IV. நூல் வரலாறு:- இளங்கோ அடிகள் துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் உறைந்து வந்தனர். அவர்பால், ஒருகால், தண்டமிழாசானாகிய சீத்தலைச் சாத்தனார் வந்திருந்தார். அப்போது குறவர் பலர் கூட்டமாக வந்து, தமது குன்றத்தே நிற்கும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கண்ணகியார் வந்து நின்று ஆங்கு அப்போது விண்ணவர் கொணர்ந்த வானவூர்தி யில் அவள் ஏறி விண்ணுலகு சென்றதைத் தாம் கண்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட அடிகள் பெருவியப்புக் கொள்ள, சாத்தனார், “யான் அறிகுவன் அது பட்டது” என்று கூறலுற்று, கண்ணகியின் வரலாறு முற்றும் எடுத்துரைத்து, கண்ணகி மதுரை யைத் தீயூட்டியபோது மதுராபதி அவள் முன் தோன்றி அவள் பழம் பிறப்பை யுணர்த்தி, ‘இன்றைய பதினான்காம் நாள் நீ நின் கண வனை வானவர் வடிவில் காண்பாய்’ என்று சொல்லிற்று; அதனை யான் கேட்டேன்’ என்றார். கேட்டதும், அடிகள் மனமகிழ்ந்து,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்,
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்”

என்று மொழிந்தனர். அதற்கு அச் சாத்தனார் “இந்நிகழ்ச்சி முடிகெழு வேந்தர் மூவர் நாட்டினும் நிகழ்ந்ததாதலால், அவ்வேந்தர் குலத்து அடிகளாகிய நீரே இதனை அருளுக” என்றார். அவ்வாறே, அடிகள் இச் சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தைச் செய்தருளினர். பின்பு, இதனை அடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டனர்.

V. நூற்பொருள்:- இச் சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங் களாகப் பகுத்தோதப்பெற்றுள்ளது. கண்ணகியார் வரலாற்றுள், சோழநாட்டில் நிகழ்ந்தன புகார்க் காண்டத்தும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன மதுரைக் காண்டத்தும், சேரநாட்டில் நிகழ்ந்தன வஞ்சிக் காண்டத்தும் கூறப்படுகின்றன. புகார் என்பது காவிரிப்பூம் பட்டினம்; இது சோழநாட்டிற்குத் தலைநகர். மதுரை பாண்டி நாட்டின் தலை நகரம். வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். வஞ்சி நகரமென்பது இப்போது கோயமுத்தூர் சில்லாவிலுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக்களம் என்பாரும் பலதிறத்தர் ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சி நகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை. இதனை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

1.  புகார்க் காண்டம்:- புகார் நகரத்தே, கோவலனும் கண்ணகியும் பெற்றோர் உவப்பத் திருமணம் புணர்ந்து மனையறம் செய்து வருகின்றனர். அந்நகரத்து நாடகக் கணிகையான சித்திரா பதியின் மகள் மாதவி, ஆடலும் பாடலும் வல்லவளாய் அழகு மேம்பட்டுத் திகழ்கின்றாள்; அவள் தன் நாடகக் கல்வித்திறத்தைச் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குக் காட்டக் கருதி அரங்கேற்று கின்றாள். அவளது கல்வி நலங் கண்ட கரிகாலன் “ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அவட்குத் தலைவரிசை” என அருள்செய்கின்றான். அச்செய்தியறிந்த கோவலன், அவட்கு அப் பொன்னைப் பரிசமாகத் தந்து, அவள் மனையை யடைந்து அவள் பான்மையனாகித் தன் மனையை மறந்து ஒழுகுகின்றான். மாதவி அவனொடு கூடி அந்திமாலையின் இன்பம் நுகர்ந்து நகரத்தார் இந்திர விழா அயர, தன் ஆடல் பாடல்களால் அதனைச் சிறப்பிக்கின்றாள். விழாக் கழித்த உவாநாளில் மக்கள் கடலாடச் செல்கின்றனர். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று, புன்னை நீழற் புது மணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்; அப்போழ்து, வசந்தமாலை யென்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாடவேண்டுகின்றாள்; அவனும் தான் ஒன்றின் மேல் மனம் வைத்துக் காவிரிபற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான். பாட்டுக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினானெனப் புலந்தாள் போல் அவ் யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக்கின்றாள். அக் குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளின் நீங்கித் தன் மனையை அடைகின்றான். மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள்.

இதுநிற்க, கோவலன் பிரிவாற் பெருந்துயர் உழந்து, கற்புநெறி வழுவாது, மனையறம் ஓம்பிவந்த கண்ணகி, தீக்கனா ஒன்று கண்டு நெஞ்சுகலுழ்ந்து தன் தோழி தேவந்தியுடன் சொல்லாடியிருக் கின்றாள். கோவலன் அவள்பாற் போந்து,

“சிலம்புமுத லாகச் சென்ற கலனோடு
உலந்தபொருள் ஈட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச் சென்று; (பக். 45)

என்னோடு வருக” என்று மொழிகின்றான். “அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு அன்மையின்” கண்ணகியாரும் உடன் செல்ல இசைகின்றனர். இருவரும் விடிவதற்குள் புகார் நகர் நீங்கி, மதுரை நோக்கி நடந்து செல்கின்றனர். வழியிற் கவுந்தி யடிகளின் துணை அவர்கட்குக் கிடைக்கின்றது. அவருடன் செல்லும் இருவரும் புனல் நாடு நல்கிய இயற்கைக் காட்சியின் இன்பத்தை ஆர நுகர்ந்துகொண்டே உறையூரை அடைகின்றனர்.

2.  மதுரைக் காண்டம்:- உறையூரை யடைந்த மூவரும் ஆங்கிருந்த அருகன் கோயிலைச் சார்ந்து சமணமுனிவர்களைக் கண்டு அன்றைய பகற் போதினைப் போக்கி, மறுநாள் மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்; வழியில் மறையவன் ஒருவனைக் காண்கின்றனர். அவன் கோவலனுக்கு மதுரைக்கு ஏகும் நெறியின் திறத்தை விரியக் கூறுகின்றான். பின்னர், தெய்வம் ஒன்று போந்து, மாதவியின் தோழிபோல் உருக்கொண்டு நின்று, கோவலனை மருட்ட முயல்கின்றது. அவன் ஒரு மறைமொழி யோதி அத் தெய்வ மயக்கைப் போக்குகின்றான். வேனில் வெப்பம் மிகுகின்றது. கோவலன் கவுந்தியடிகட்கும் கண்ணகிக்கும் நீர் கொணர்ந்து தருகின்றான். பின்பு மூவரும் ஐயை கோட்டமடைந்து ஆங்கே ஒரு புறத்தே தங்குகின்றனர்.

அக்காலத்தே, அக்காட்டில் வாழ்ந்த வேட்டுவர் தமக்கு வேட்டம் வாய்த்தல் வேண்டி, ஐயைக்கு வழிபாடு செய்ய வருகின்றனர். அவருள் ஐயையின் கோலத்தில் வந்த சாலினி, தெய்வமருள் கொண்டு கண்ணகியைப் பார்த்துப் பலபடப் பாராட்டுகின்றாள். கண்ணகி நாணி நிற்ப, அவ் வேட்டுவர் பல்வகைப் பாராட்டுகளைப் பாடிக் கூத்தாடுகின்றனர்.

பின்னர் மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரை அடை கின்றனர். அவர்களை ஓரிடத்தே இருத்திக் கோவலன் தன் காலைக் கடன்களைக் கழிக்கச் செல்கின்றான். சென்ற விடத்தே கவுசிகன் என்னும் பார்ப்பனனால், மாதவி ஆற்றாது விடுத்த ஓலை காண்கின் றான். அதனையே தன் பெற்றோர்க்கும் அமைய விடுக்கின்றான். பின்பு அம்பணவர் என்னும் இசைப்பாணர் காட்டிய நெறியால் மதுரை அண்மையில் இருப்பதை அறிகின்றான்.

அன்றைப் பகற்போது கழிதலும் மூவரும் மதுரை மூதூரை யண்மி, வையையாற்றைக் கண்டு, அதன் கரை வழியே சென்று, மதுரைப் புறஞ்சேரியை அடைகின்றனர். அங்கே மாதவர் உறையும் தவப் பள்ளியில், கவுந்திபால் கண்ணகியை விடுத்துக் கோவலன் மட்டில் மதுரை நகர்க்குட் புகுந்து பல்வேறு தெருக்களையும் கண்டு பெயர்கின்றான். பின்பு, மாதரி என்னும் ஆய்ச்சியொருத்தி அங்கே வருகின்றாள். அவளைக் கண்ட கவுந்தியடிகள், கண்ணகியை அவள்பால் அடைக்கலப்படுத்த, அவள் கண்ணகியையும் கோவல னையும் தன் ஆயர் சேரிக்கு அழைத்துச் சென்று தன் மனையில் ஒருபுறத்தே இருக்கச் செய்கின்றாள். கண்ணகியார் இனிய உணவு சமைத்துக் கோவலனை உண்பிக்கின்றார்.

உணவு கொண்டபின் கோவலன் கண்ணகிபால் விடை பெற்றுக்கொண்டு அவரது சிலம்பொன்றை விற்கும் கருத்துடன் மதுரைக் கடை வீதியில் பொற் கொல்லன் ஒருவனைக் காண் கின்றான்; அவன் சூழ்ச்சியால் அரசுமுறை கோடுகின்றது, கோவலன் கொலைசெய்யப்படுகின்றான்.

ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி நிகழக் கண்டு அவர்கள் குரவையயர்கின்றனர்; அவரால் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியாருக்குத் தெரிகிறது. உடனே, திடுக்கிட்ட அவர், ஞாயிற்றை வினவிக் கோவலன் குற்றமிலனாதலைத் தெளிந்து, கோவெனக் கதறி யரற்றிக்கொண்டு ஊர்க்குட்புகுந்து, கொலைக் களம் அடைந்து அங்கே கோவலன் உடல் துணிபட்டுக் கிடப்பது கண்டு பெருவருத்தமுற்றுப் புலம்பி அவ்வுடலைத் தழுவுதலும், அவன் எழுந்து “ஈண்டே இருக்க” எனப் பணித்து விண்ணகம் செல்கின்றான். தீராத் துயரத்தால் மனம் திண்ணியராகிய கண்ணகி யார், பாண்டியன் கோயிலுக்கு வந்து அவன்முன் வழக்குரைத்துக் கோவலன்பால் குற்றமின்மையை மெய்ப்பிக்கப் பாண்டியன் தனது ஆராயாமை யுணர்ந்து ஆவிவிடுகின்றான்; அவன் மனைவியும் உயிர்விடுகின்றாள். உடனே, கண்ணகியார் வெளிப் போந்து தமது இடப்பக்கமார்பைத் திருகி நகர்மீது எறிகின்றார்; மதுரை மூதூரில் பெருந்தீ எழுகின்றது.

மதுரையை எரித்தும் செற்றம் தணியாது திரிந்த கண்ணகியை மதுராபதி என்னும் தெய்வம், கோவலனது பழம்பிறப்புணர்த்தி, “இன்றைய பதினான்காம் நாளில் நீ நின் கணவனை வானவர் வடிவிற் கண்டு கூடுவை” என்று சொல்லுகின்றது. கண்ணகியார் பின்பு ஐயை கோயிலை யடைந்து, தன் கை வளையை உடைத் தெறிந்துவிட்டு வையைக் கரை வழியே சென்று திருச்செங்கோடு என்னும் இடத்தையடைந்து ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கின்றார். பதினான்கு நாட்களும் கழிந்து விடுகின்றன. விண்ணவர் வந்து தாம் கொணர்ந்த வானவூர்தியில் கண்ணகியாரை ஏற்றிக்கொண்டு, தம் விண்ணாடு செல்கின்றனர்.

3.  வஞ்சிக் காண்டம்:- கண்ணகியார் விண்ணாடு ஏகியது கண்ட வேடுவர், அவ்விடத்தே அவரைப் பரவித் தெய்வம் கொண்டாடி மகிழ்கின்றனர். இஃதிவ்வாறாக, சேரன் செங்குட்டுவன் இலவந்தி வெள்ளி மாடத்தில் தேவியோடு எழுந்தருளியிருக்கின்றான். ஒரு நாள் மலைவளம் காண விரும்பித் தேவியும் உரிமைமகளிரும் அரசியற் சுற்றமும் உடன் வரச் சென்று பேரியாற்றங் கரையை யடைந்து ஓரிடத்தே தங்குகின்றான். அவளைக் காண விரும்பிய குறவர் யானைக் கோடும், அகிலும், கவரியும் இவைபோல்வன பிறவும் கொணர்ந்து வழிபட்டுக் கண்ணகி விண்ணுலகு புக்க செய்தியை விளம்புகின்றனர். அங்கே, அப்போது, உடனிருந்த தண்டமிழாசானாகிய சாத்தனார், கண்ணகியின் வரலாறு முற்றும் விரிவாக எடுத்தோதி வாழ்த்துகின்றனர். பின்பு, குட்டுவன், அவரும் பிறரும் கேட்ப, அரசியலின் அருமையை யுரைத்துத் தன் தேவியை நோக்கி, “பாண்டி மாதேவியோ, கண்ணகியாரோ, வியத்தற்கு உரியோர் யாவர்?” என்று வினவ, அரசமாதேவியாகிய வேண்மாள், “கண்ணகியைப் பரவுதலே வேண்டுவது” என்று கூறுகின்றாள். அதனைச் செங்குட்டுவன் உடன்பட்டு நோக்க, அவனுடைய அமைச்சர், “கண்ணகியின் படிமம் சமைத்தற்குப் பொதியிலிலாவது இமயத்திலாவது கல்கொணர்ந்து காவிரியிலாதல் கங்கையிலாதல் நீர்ப்படை செய்தல் தகவுடைத்து” என்கின்றனர். செங்குட்டுவன், “இமயத்துக் கல்கொண்டு கங்கையில் நீர்ப்படை செய்தல் சீரிது” எனச் செப்பலும், அமைச்சர் உடன்பட்டுத் தகுவன கூற, வடநாடு செல்வது குறித்து வஞ்சிநகர்க்கண் முரசு அறையப்படுகின்றது.

இமயச் செலவு கருதிய செங்குட்டுவன், கணிகள் மொழிந்த நன்னாளில் புறப்படுகையில், வடநாட்டு அரசரான கனக விசய ரென்பார் தமிழரசரை இகழ்ந்தனரென்று ஒரு செய்திவரக் கேட்டுச் சினம் மிகுந்து, தான் கொணரக் கருதும் சிலையை அக் கனகவிசயர் தலைமேலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறிப் புறப்பட்டுச் செல்கின்றான். அவற்கு நட்பரசர்களான நூற்றுவர் கன்னர் அவனை வரவேற்றுக் கங்கையைக் கடத்தற்கு ஓடம் அமைத்துத் தருகின்றனர். கங்கையை இனிது கடந்து சென்ற செங்குட்டுவன், தன்னை யெதிர்த்த கனகவிசயரை வென்று, அவர்கட்குத் துணையாய் வந்து தோற்றோடிய பிற அரசர்களையும் பற்றி வருமாறு வில்லவன் கோதை யென்பானை ஒரு பெருஞ் சேனையுடன் செலுத்துகின்றான். தான் இமயத்திலிருந்து, வேண்டும் சிலை யொன்றை வருவித்துக் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து தன் வஞ்சினம் முடிக்கின்றான்.

அக்காலையில், மாடலன் என்பான் குட்டுவன்பால் வந்து, கோவலன் வரலாறும், பாண்டியனுக்குப் பின் இளங்கோ வேந்தன் நாடாளும் திறமும் கூறுகின்றான். அவற்குக் குட்டுவன் ஐம்பது துலாம் பொன்னை நிறுத்துத் தந்து, கனகவிசயரை ஏனைத் தமிழரசர் கட்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய தானைத் தலைவர்களைப் பணிக்கின்றான். சின்னாளில் தானும் புறப்பட்டு, இடையே இருந்த நாடுகளின் பல்வகை வளங்களையும் கண்டு மகிழ்ச்சியுடன வஞ்சி மாநகர் வந்து சேர்கின்றான்.

கனகவிசயரைக் கொண்டு சென்ற நீலன் முதலியோர் திரும்பப் போந்து, “அஞ்சியதனால் மாறுவேடம் பூண்டு ஒடிய இவரைப் பற்றிவருதல் தூய வீரமன்று எனச் சோழரும் பாண்டியரும் இகழ் கின்றன” ரென்று கூறுகின்றனர். அது கேட்டலும் செங்குட்டுவனுக்குச் சினத் தீ மூண்டு எழுகின்றது. அருகே, ஆங்கு வந்திருந்த மாடலன், இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை எடுத்தோதி, வேள்விசெய்து உயர்நிலை யுலகத்துக்கு உறுதி செய்து கோடலே தக்கதென மொழிந்து அவ் வெகுளித் தீயைத் தணிக்கின் றான். செங்குட்டுவன், மாடலனுக்கு வேள்விக்கு வேண்டியவற்றை உதவுமாறு ஏற்பாடுசெய்து, கண்ணகியாருக்குக் கோயில் எடுப்பித்து, இமயத்துச் சிலையாற்செய்த கண்ணகிப் படிமத்தைக் கோயில் கொள்ளநிறுவிச் சிறப்புப் பலவும் செய்து வழிபாடு ஆற்றுகின்றான்.

சிலநாட்கள் கழிக்கின்றன. கோவலன் மாண்டதை மாடலன் சொல்லக் கேட்டு அறிந்த தேவந்தியும், கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும் மதுரைக்கு வந்து, மாதரி மகளான ஐயையைக் கண்டு அவளுடன் வையைக் கரை வழியாக மலைநாடு வருகின்றனர். அங்கே கண்ணகியாரின் கோயிலைக் கண்டு, அங் கிருந்த செங்குட்டுவனுக்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாது வருந்திப் புலம்புகின்றனர். அப்பொழுது, கண்ணகியார் தெய்வவடிவிற் போந்து அவர்கட்குக் காட்சி வழங்கிச் செங்குட்டுவனை வாழ்த்தி மகிழ்விக்கின்றார். அவ்விடத்தே, கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய நற்றாயரும் மாதரியும் என்ற இவர்தம் பிறப்பு வரலாறு வெளியாகின்றது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளான மணிமேகலை துறவுபூண்டதும் அங்கே தேவந்தியால் சொல்லப்படுகிறது. அங்கே வந்திருந்த ஆரியமன்னரும், மாளவமன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும் தம் நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட அருளுமாறு வேண்டி வரம்பெற்றுச் செல்கின்றனர்.

இந்நூலாசிரியரான இளங்கோவடிகளும் கண்ணகி கோயிற்குச் செல்கின்றார். அங்கே இவர்க்கும் இவரது முன் பின் நிகழ்ச்சி தெரிவிக்கப்பெறுகிறது. முடிவில், சோழவேந்தனான பெருநற்கிள்ளி யும் கயவாகு மன்னனும் தத்தம் நாட்டில் கண்ணகியாருக்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்கின்றனர். பாண்டி வேந்தனும் கண்ணகி கோயிலில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு வழிபட்டான் என்று சொல்லப்படுகிறது.

VI. நூற்பயன்:- ஒருநூலை யெழுதும் புலவன், தான் எழுதும் நூலைப் படிப்பவர், படிப்புக்காகச் செலவிடுங்காலம் அவர் வாழ்நாளின் ஒரு பகுதி யென்பதை நன்கு உணர்ந்து, அப் பகுதி நல்லமுறையில் செலவாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் உடையவனாவான். அதனால், அவன் தான் எழுதும் நூலின் நோக்கம் இன்னதெனத் தொடக்கத்தே சுட்டிக் காட்டிதல் பெரிய நாகரிகமாகும். இது குறித்தே, நூற்குப் பாயிரமாவனவற்றுள் நூற்பயன் என்பதை ஓர் இன்றியமையாத உறுப்பாகச் சான்றோர் வரையறுத்தனர்.

இந்நெறியை நன்குணர்ந்த சான்றோராதலின், இந்நூலாசிரிய ரான இளங்கோ அடிகள், தொடக்கத்தே, தாம் இந்நூலைச் செய்வதன் நோக்கம் இதுவென்பாராய்,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்” (சிலப் - பதிகம்)

என்று எடுத்தோதுகின்றார். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்” என்பதனால், இவர் தாம் பாடும் நூற்குப்பெயர், “சிலப்பதிகாரம்” என்பது என்று கூறுதல் காண்க.

இவ்வாறு நன்னெறி காட்டித் தொடங்கிய இவர், தமது நூலின் முடிவில் வறிது செல்கின்றாரல்லர். ஆங்கும் பல நன்னெறி களை வற்புறுத்தி யோதுகின்றார்.

“தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்,
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள் மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது,
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்” (பக். 180 - 1)

என்று இவ்வாறு கூறுகின்றார். இவற்றால், இவர் தமது நூல், படிப் போர்க்கு அறிவு நலமும் ஒழுக்கநலமும் அறவுணர்வும் பெருக வழங்கும் பேரிலக்கியமாய்த் திகழ்தல் வேண்டுமென்ற குறிக்கோளுடன் அதனைச் செய்துள்ளார் என்பது இனிது தெளியப்படும்.

VII. நூல்நுவலுந் திறம்:- தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளங்க வுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது; தான் உணர்த்தக் கருதுவன வற்றை நன்கு ஆராய்ந்து பலநெறிப்படப் பகுத்தும், தொகுத்தும் செம்மை செய்து இலக்கண வரம்பு கடவாது உரைக்கும் மாண்பே, புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர்* கூறுவர். அது நம் அடிகள் பால் மிகச் சிறந்து நிற்கிறது என்றற்கு ஒன்று காட்டுதும்.

கோவலன் கண்ணகியுடன் வாழ்பவன், மாதவியொடு கூடி யிருந்து, பின் அவளின் நீங்கி, தன் மனைவியுடன் மதுரை சென்று கொலையுண்டு இறத்தலும், கண்ணகி, ஆராயாது கொலைபுரிவித்த பாண்டியன்முன் வழக்குரைத்துக் கோவலன் பால் குற்றமின்மை காட்டி மதுரைமாநகரைத் தீக்கிரையாக்கி, மலைநாட்டுச் செங்குன் றத்தில் தேவர் கொணர்ந்த ஊர்தியேறி விண்ணுலகு செல்லுதலும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுதலும் இச்சிலப்பதிகாரத்தின் பிண்டித்த கருப்பொருள் என்பது மேலேகூறிப் போந்த நூற்பொருளால் இனிது விளங்குகின்றது.

இதனை மூன்று காண்டமாக வகுத்துச் சீரிய முறையில் பெயரிட்டு, அடிகள் உரைக்கும் திறம் ஆராய்வார்க்கு மிக்க இன்பம் தருகின்றது. தொடக்கமுதல் கோவலன் கொலையுண்டதுவரை ஒரு காண்டமாகவும், கண்ணகி கேவலனையிழந்து வருந்தி முடிவில் விண்புகுவதுரை ஒரு காண்டமாகவும், செங்குட்டுவன் இவ்வரலாற் றினை யறிந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதுவரை ஒரு காண்டமாகவும் வகுத்து ஓதலாம்; அவ்வாறு ஓதியவழி, பொருட்பாகு பாடும் பொலிவு குன்றாது.

இனி, இதனையே, தொடக்கமுதல் கோவலன் இறப்பது வரை அவனது செயலே மிக்கு நிற்றலால், அவன் பெயரால் ஒரு காண்டமும், அவன் இறந்தது முதல் விண்புகுமளவும் கண்ணகியார் செயலே மிக்குச் சிறத்தலால் அவர் பெயரால் ஒருகாண்டமும், இவ்வரலாறு கேட்டது முதல் கோயிலெடுத்து வழிபடுதல் வரைச் சேரன் செங்குட்டுவன் வெற்றிச்சிறப்பும் பிறவும் மேம்பட்டு நிற்றலின் அவன் பெயரால் ஒரு காண்டமும் வகுத்தோதினும் பாகுபாட்டு நெறி பிழையுறாது.

இக்காட்டிய நெறியேயன்றி வேறுதிறத்தால் படுத்தோதினும் பகுப்பு முறையேயாகும். இவ்வாறு, நெறி பல இருக்கவும், இளங் கோவடிகள், புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் எனப் பகுத்துக்கொண்டிருக்கும் முறையொன்றே அவரது உயர்வற உயர்ந்த புலமைக்குச் சீரிய சான்று பகருகின்றது. இவர் கூறியது போலப் புகார்க் காண்டமென்னாது கொலைவினைக் காண்ட மென்றோ, கோவலற் காண்டமென்றோ பிறிதென்றோ வகுத்துப் பெயர் கூறலுறின், அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிகழுமிடத்து, அதற்குரிய வினைமுதல், வினை, செயப்படுபொருள், காலம், இடம் முதலியன இன்றியமை யாது ஆராயப்படும். இதனோடு, இந் நிகழ்ச்சிதானும், ஏதுவும் பயனுமாக வரும் பல உள் நிகழ்ச்சிகளையுடையதாக இருக்கும். இந் நிகழ்ச்சிகளை ஒரு பெயரால் குறிக்க வேண்டின், மேற்கூறிய வினைமுதல் முதலியவற்றையும் உள் நிகழ்ச்சிகளையும் தேர்ந்து அவற்றுள் யாதேனும் ஒன்றைத் தலைமைபற்றியோ பன்மை பற்றியோ வரைந்துகொண்டு அதனால் பெயர் குறித்தல் மரபாம். அன்றியும், வினைமுதல் முதலியவற்றுள், வினைமுதல் நூற் பெயரிலாதல் பிறவாற்றாலாதல் உணரப்படுமாதலின், வினை, செயப்படுபொருள், காலம், இடம் என்ற இவையே சிறப்பாகத் தேறப்படுகின்றன.

முதற்கண், புகார்க் காண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதன்கண் நிகழும் வினை, கோவலன் தன் மனையை நீங்கி, மாதவிபால் தங்கிப் பொருளிழந்து, கண்ணகியுடன் மதுரைக்கு ஏகுகின்ற செய்தியாகும். கோவலன் தன் மனையை நீங்குவது மாதவிபால் தங்குதற்கும், அவ்வாறு தங்குதல் பொருள் இழத்தற்கும், அவ்விழப்பு மதுரைக்கு ஏகுதற்கும் ஏதுவும் பயனுமாய் வரும் உள் நிகழ்ச்சிகளாகும். சுருங்கிய சொல்லால் இவ்வனைத்தும் தோன்றக் கூறுதல் ஆகாமையால், வினைவகைதேர்ந்து இக்காண்டத்திற்குப் பெயர் குறித்தல் அமையாதாகின்றது. இவ்வினைகளாற் செயப்படு பொருள், கோவலன் உயிரிழத்தலும், கண்ணகி ஆறாத்துயருழத் தலுமே யாதலின், கேடுபற்றிய முடிபால் பெயர் குறித்தல் பொருந்துவதாக இல்லை. இந்நிகழ்ச்சிகட்குச் செலவாகிய காலமும் பலவாதலால், காலத்தாற் பெயர் குறிப்பதும் பொருத்தமன்று. இவ்வெல்லாத் திறங்களையும் நன்கு தேர்ந்தே, அடிகள், இந் நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்தற்கு இடனாகிய புகார் நகரத்தால், புகார்க்காண்டம் எனப் பெயர் குறித்துள்ளார். இவ்வாறே ஏனைக் காண்டங்களும் பெயர் குறிக்கப் பெற்றுள்ளன.

கோவலன் புகார் நகரத்தில் இருந்து பின் மதுரை நகரை நோக்கிச் சென்று சோழநாட்டின் நலம்பலவும் கண்டு கொண்டே உறையூரையடைவது கூறும் பகுதி புகார்க் காண்டம். இதனை உரைக்கப்புகுந்த அடிகள் பத்துப் பகுதிகளாக வகுத்துக்கொள் கின்றார். கோவலனும் கண்ணகியும் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சியும், இருவரும் மனையறம் புரிதலும், மாதவி ஆடல்பாடல் களில் வல்லளாய் அரங்கேறுதலும், கோவலனைக் கூடியிருக்கும் மாதவியின் இன்பமும், பிரிந்துறையும் கண்ணகியின் இடும்பையும் இந்திரவிழாவும், அதன் இறுதியாய கடலாட்டும், இவற்றால் இன்புற்ற கோவலனும் மாதவியும் பிரிந்து நீங்குவதும், மாதவி படும் பிரிவுத் துயரும், கோவலன் மனமாற்றமும், கோவலன் சென்று கண்ணகியோடு கூடி மதுரைக்குச் செல்ல ஒருப்படுதலும், செல்பவர் சோழநாட்டின் நலமும் கவுந்தியடிகளின் துணையும் பெறுதலும் எனப் பல திறமாய் வரும் நிகழ்ச்சிகளை மங்கல வாழ்த்து முதலாக நாடுகாண் காதை ஈறாகப் பத்துப்பகுதிகளால் உரைக்கின்றார். மாதவி கோவலனுடன் கூடி இன்புறும் நிகழ்ச்சியை அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடு காதை என்ற மூன்று காதைகளிலும், அவள் அக்கோ வலனைப் பிரிந்து வருந்தும் நிகழ்ச்சியை மட்டில், வேனிற் காதை யிலும் விரித்து உரைக்கின்றார். இஃதேபோல், கண்ணகி கோவலனை யிழந்து வருந்திய வருத்தத்தை, துன்ப மாலை, ஊர்சூழ்வரி, வஞ்சினமாலை முதலிய பல பகுதிகளில் விரித்துக் கூறுகின்றார்.

இப்பகுதிகள் பலவும் காதை என்ற சொல்லால் பெயர் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் காதை யென்று பெயர் பெறுவன இருபத்திரண்டாகும். இவை பெரும்பாலும் வேற்றிசை விரவாது செந்தூக்குத் தனிப்பாட்டுக்களாகவே இருத்தலால், ஒரு தனிப் பாட்டைக் காதை என்று வழங்குவது முறையென்று தெரிகிறது. இவ்வாறே மணிமேகலையின் ஒவ்வொரு பகுதியும் காதை யென்றே பெயர் பெற்றுள்ளது. அக் காதைகள் முப்பதையும், அந்நூலாசிரியரான சாத்தனார் முப்பது பாட்டுக்களில் உரைத்தனர் என்று அம் மணி மேகலையின் பதிகம் கூறுகின்றது. “வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு, ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனனென்” என்பது அப் பதிகக் கூற்று. இனி, இச் சிலப்பதிகாரப் பதிகம், “இவ்வாறைந்தும், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்றே உரைக்கின்றது. மேலும், மங்கலப்பாட்டும், வரிப்பாட்டும் குரவைப்பாட்டும் பிறவுமாய் வரும் ஏனைய எட்டனுள் பல்வகைப் பாட்டுக்கள் உரையிடையிட்டு இசையும் நாடகவுறுப்பும் விரவிவந்ததனால் அவற்றை ஆசிரியர் இளங்கோவடிகள் “காதை” என்று பெயர் கூறிற்றிலர். ஆகவே, ‘காதை’ என்பது வேற்றிசை விரவாது செந்தூக்காய் வரும் பாட்டு என்று பொருள்படுவதொரு சொல்லாக அடிகள் முதலியோரால் வழங்கப்பெற்றுள்ளது என்பது முடிபாகிறது. இனி, நீலகேசி உரைகாரரான சமயதிவாகரவாமன முனிவர், அடிகள் கூறியவாறே காதையென்னும் சொல்லைச் செய்யுள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். “மானொத்த நோக்கி” (நீல. 117) என்னும் செய்யுளில் வரும், “உயிராதிய உள்பொருள்கள் தான் நற்கு உணர்தல் இதுவாம்” என்பதன் கருத்தை, அதனை அடுத்து வரும், “காண்டலு மல்லதே” (நீல. 118) என்னும் செய்யுளுரையில், “மானொத்த நோக்கி என்னும் காதையுள் உயிராதிபொருள் நற்குணர்தல் நன்ஞான மென்றார்” என்று கூறுதலால், செய்யுள் என்னும் பொருளில் காதை என்ற சொல் வழங்குவதைக் காணலாம்.

இனி, டாக்டர்.உ.வே. சாமிநாதையரவர்கள், “காதை யென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச் சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர்” என்று கூறுகின்றார். இசையுள் நாடகவுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்’காதை’ யென்னும் சொல்லால் அடிகள் குறித்திருத்தலின், அவ் ‘வடமொழி யாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது பெரியதோர் இழுக்காம் என்று தெளியத் தோன்றுகிறது. இதுகுறித்தே, திரு. ஐயரவர்களும், “இதனாலேயே, இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர்பெற்றன போலும்” என நெகிழ்ந்தோதிச் சென்றனர்.

இனி, “வாழ்த்துக் காதை”யுள், பல்வகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையோடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், வாழ்த்துக் காதைக்கு அதுபெயரன்றாதலால், அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப்படும். வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது.

பதிக்கத்துப் பொருளையும், சிலப்பதிகாரப் பகுதிகளின் பெயரையும் ஆராய்ந்து நோக்கின், காடுகாண் காதை புகார்க் காண்டத்தும், குன்றக் குரவை மதுரைக் காண்டத்தும் இருக்கற் பாலனவாம் என்பாரும் உளர்.* இப் பிறழ்ச்சியை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

VIII. நூற் புணர்ப்பு:- இச் சிலப்பதிகார நிகழ்ச்சி ஆற்றொழுக் காகச் செல்கின்றதனால், இதனால் புணர்ப்புவகையில் நுண்ணிய புணர்ப்பு ஏதும் இல்லை. கோவலன் கண்ணகி முதலாயினார் பிறப்பு வளர்ப்புக்களில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுமில்லை; அவ்வரலாறுகளைக் கூறாது, திருமணம் புணரும் செயலையே எழுவாயாக அடிகள் மேற்கொள்கின்றார். மணத்துக்குப் பின் இருவர்க்கும் மனையறம் இனிது செல்கின்றது. கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் கூட்டற்கண் அடிகள், மாதவியின் அரங்கேற்றத்தால், அவளை இலக்கியக் காட்சிக்குக் கொணர்கின்றார். மாதவி அரங்கேற்றம், சோழவேந்தனான கரிகாற் பெருவளத்தானை நமக்குக் காட்டி, அவனால் அவட்குப் பரிசமாலை தரப்பெறும் சிறப்பினையுணர்த்து கிறது. கோவலன் “நகர நம்பியர் திரிதரும் மறுகில்” வந்து தோன்றுகின்றான். அவ்விடத்தே மாதவியின் பரிசமாலை அவன் கண்ணுக்கு இலக்காக, அவன் அதனை வாங்கி மாதவிபால் சென்று சேர்கின்றான்.

ஈண்டுக் கூறற்பாலன கண்ணகியின் பிரிவுத்துன்பமும் மாதவி யின் புணர்ச்சி யின்பமுமே யாகின்றன. மாதவியை அரங்கேற்றி, கோவலனைக் கூடச்செய்தபின், அக்கூட்டவின்பத்துக்குச் சிறப்புச் செய்வது அந்திமாலையாதலின், அதனை அடிகள் எடுத்தோது கின்றார். ஓதுமிடத்து மாதவியின் இன்பத்தை முதற்கண் விதந்தோதி, கண்ணகி துன்பத்தைப் பிற் கூறுகின்றார். இருவர் நிலைக்கும் உரியகாலம் அந்திமாலையாதலின், அதனையே வரைந்துகொண்டு “தாழ் துணை துறந்தோர் தனித்துயர் எய்ம, காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்த….மல்லல் மூதூர் மாலை வந்திறுத்தது” என்று தொடங்கி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக், கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி” என்று மாதவியின் இன்பச் சிறப்புக் கூறி, கண்ணகியின் துன்ப நிலையைச் சிறிது விரித்து, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள் நுதல் திலகம் இழப்ப தவள வாள் நகை கோவலன் இழப்ப, மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப, கையறு நெஞ்சமொடு கலக்கமுற்றனள்” என்று கூறுகின்றார். இதற்குப் பின், புதுமணம் புணர்ந்து இன்புறுவார்க்கு இன்பம் மிகுவிக்கும் விழாச் செய்தி கூறுவார். ‘இந்திரவிழவூர் எடுத்த காதை’ உரைக்கின்றார். அதன் இறுதிக்கண், பின்னர் நிகழ இருக்கும் பிரிவுக்குத் தோற்றுவாயாக, “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உள்நிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன, எண்ணுமுறை இடத்தினும் வலத் தினும் துடித்தன” என்கின்றார். கடலாடுகாதைக்கண் கோவலன் உள்ளத்தில் தோன்றும் ஒரு சிறு மாறுதலைக் காட்டுகின்றார். அஃதாவது இந்திரவிழாவில், மாதவியின் “ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள, ஊடற் கோலமோடு” கோவலன் இருப்ப மாதவி, அவனுவக்குமாறு தன்னை மிக்க சிறப்புடன் புனைந்து கொண்டு, அவனுடன் கடலுக்குச் செல்கின்றாள். கானற் சோலை யில், இருவர்க்கும், பாடிய பாட்டு வாயிலாகக் கருத்து வேறுபடு கின்றது. கோவலன் மாதவியைப் பிரிந்து நீங்குகின்றான்.

வேனிற் காதையில் கோவலனது மனவன்மையும் அவன் பிரிவாற்றாது துயருறும் மாதவியின் கற்பு மாண்பும் எடுத்தோதி, அவள் வரலாற்றை ஓராற்றால் முடித்துக் கோவலனைக் கண்ணகி பால், கனாத்திற முரைத்த காதையில் சேர்ப்பித்து மதுரைக்குப் புறப்படுவிக்கின்றார். நாடுகாண் காதையில் கவுந்தியடிகளோடு தொடர்பு எய்துவித்து அவரது தவப்பெருமையும், கோவலன் கண்ணகி யிருவரது அருள் நிலையும் தெரிவித்து, உறையூரை அடைவிக்கின்றார்.

இவ்வாறு மதுரைக் காண்டத்து, காடுகாண் காதைக் கண், வழி கூறும் மறையோன் வாயிலாகப் பாண்டியர் குடிச் சிறப்பும், திருவேங்கடம், திருவரங்கம் முதலியவற்றில் திருமால் எழுந்தருளிய இயல்நலமும் கூறி, வேட்டுவவரிக்கண், கண்ணகிக்குப் பின்னே விளைய இருக்கும் துயர்நிலையைக் குறிப்பாகக் காட்டி, புறஞ்சேரி இறுத்த காதையில், மாதவியின் மாறாக் காதன்மையும், கோவலனுக்குப் பெற்றோர்பாலுள்ள அன்புடைமையும் உணர வைத்து வையையாற்றின் வனப்பும் மதுரை மூதூரின் மாண்பும் கூறுகின்றார். ஊர்காண் காதையில் கோவலன் தனக்கு நேர்ந்த வருத்தத்தை யெண்ணிமயங்க, கவுந்தியடிகள் தகுவன கூறித் தேற்றரவு செய்ய, அவன் தேறி மதுரை மூதூர் சென்று அதன் கடைத்தெரு, வாணிகவளம் முதலியன கண்டு வருகின்றான். அடைக்கலக் காதையில், அடிகள் கோவலனுக்கு மாதரியின் வேளாண் பகுதியின் தொடர்பு எய்துவிக்கின்றார். கொலைக்களக் காதையில் பிரிந்திருந்து கூடியபின் கண்ணகி கோவலன்பாலும், அவன் அவள்பாலும் கொண்டிருந்த மெய்க்காதற் சிறப்பைத் தெரிவித்து, அவனைக் கண்ணகியை விட்டு நீங்குவித்துக் கொலை யுண்டு இறக்கச் செய்கின்றார். இதன்கண் பொற்கொல்லனது களவு வன்மை அவன் கூறும் களவுநூற் குறிப்பால் இனிது விளக்குகின்றார். ஆய்ச்சியர் குரவை தீக்குறி காட்ட, துன்பமாலை, கண்ணகியின் - கடவுளும் ஏவல் செய்யும் - கற்பு மேன்மை புலப்படுத்த, ஊர்சூழ்வரி அவளது ஆறாத்துயர் தெரிக்க, வழக்குரைகாதையால் பாண்டியனது கோடிய அரசு முறைக்குக் கழுவாய் பிறப்பிக்கு மாற்றால் அவனை யும் வீழ்வித்து, வஞ்சனமாலைக்கண், கண்ணகியின் தீராத் துயர்ப் பட்ட நெஞ்சம் மாறி அவளைச் சீறிய கற்புடையளாகத் திகழ்வித்து நகரைத் தீக் கொளுவுதல் கூறி, அழற்படுகாதையில் அவளது சினத்தீயின் வெம்மை தெரிவித்து, கட்டுரைகாதையால் அவட்கு எய்திய துன்பத்துக்கு ஏது பழம்பிறப்பில் தோன்றிய வினையாம் என்பது காட்டி நம்மனோர் மனத்தை அமைதி பெறுவிக்கின்றார்.

வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில், கண்ணகியின் கடவுட்டன்மைக்குரிய இயைபுகாட்டி, காட்சிக் காதையால், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்துப் படிமம் சமைத்தற்கு இமயம் செல்லும் செலவுக்குத் தோற்றுவாய் பிறப்பித்து, கால்கோட் காதையில், செங்குட்டுவனது சிவபத்தியும் வட ஆரிய மன்னர்க்கும் தமிழ்வேந்தர்க்கும் உள்ள போர் மாண்பும் வெற்றிச் சிறப்பும் விளக்கி, கோவலன் நீங்கியபின் புகார் நகரத்தே நிகழ்ந்த பிறவற்றை யும் தெரிவித்து, கண்ணகிப் படிமத்திற்குரிய சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்தது கூறி, நடுகற்காதையில் கண்ணகிக்குக் கோயி லெடுப்பதும், மாடலன் வாயிலாக வேள்வி வேட்டலின் சிறப்பும் பிறவும் விளக்கி, வாழ்த்துக் காதைக்கண், மாசாத்துவான் துறவும், அவன் மனைவி இறத்தலும் காவற்பெண்டும், அடித்தோழியும், தேவந்தியும் பிறரும் வந்து கண்ணகி கோயிலைக்கண்டு பாராட்டலும் உரைத்து, வரந்தருகாதையில் மணிமேகலை துறவும், செங்குட்டுவன் வரப்பேறும் இளங்கோவடிகளின் வரலாறும் பிறவும் குறிக்கப் படுகின்றன.

இனி, இடையிடையே, அடிகள் தொடுத்திருக்கும் உரை நடைகள் மிக்க அழகுவாய்ந்தவை. ஆயினும், அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது பாட்டுத் தன்மை விரவியுள்ளன. இது கருதியே இவற்றை உரைப்பாட்டு* என்று கூறுகின்றனர். இவ் வுரைப் பாட்டுக்களைச் சில இடங்களில் உரைப்பாட்டு என்றும், சிலவிடங்களில் கட்டுரை யென்றும் இந் நூல் வழங்குகின்றது.
இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்டமென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பது போலச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதன்பின், இலங்கை வேந்தனான கயவாகு என்பானும் சோழ பாண்டிய வேந்தரும் வழிபட்டதும், மதுரை எரியுண்டபின் நிகழ்ந்த பாண்டி நாட்டு அரசியல் நிகழ்ச்சியும் உரைபெறு கட்டுரை† யென்னும் பகுதி உரைக்கின்றது. இதுவும், மேலே கூறிய உரைப் பாட்டுவகையைச் சேர்ந்ததே யாகும்.

IX. இந்நூற்கண் வரும் பெருமக்களின் குணமாண்புகள்:-
1.  மாசாத்துவான்: மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பதவுரைகாரர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும், “மாசாத்துவான் என்பான்” என்றே கூறியிருத்தலால், அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

இம் மாசாத்துவான் கோவலனுக்குத் தந்தை; உயர்ந்த குடிப்பிறப்பும் மிக்க செல்வமும் உடையன்; சுற்றம் சூழ வாழும் பெருமாண்பினன். கண்ணகி, பாண்டியன் முன் வழக்குரைத்த போது, இவன் குடிமைச் சிறப்பையேவிதந்து, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்பதும், செல்வச் சிறப்பை, கோசிகமாணி யென்பான், “இருநிதிக் கிழவன்” என்பதும் நன்கு விளக்குகின்றன. முடிவில் கோவலன் இறந்தது கேட்டு இவன் துறவு பூண்டு விடுகின்றான்.

இனி, கண்ணகியின் தந்தை பெயர் தெரிந்திலது. மாநாய்கன் என்பது இயற்பெயரன்று, குடிப்பெயர் என்றே உரைகாரர் கூறுகின்றனர். “மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்” என்றே அடிகள் கூறி மொழிந்தனர். இவன் தன் மகளுற்றது கேட்டு ஆசீவகப்பள்ளியில் அறம் கேட்டுத் துறவு பூண்டான்; இவன் மனைவியும் உயிர் துறந்தாள். இவனைப்பற்றி வேறே செய்தி யொன்றும் அடிகள் குறித்திலர். கண்ணகியாரின் கற்பு மாண்பே ஒராற்றால் இவன் குடிப் பெருமை விளக்குதலால், அடிகள் வேறொன்றும் குறியாதொழிந்தார் போலும்!

2.  கோவலன்: இவன் சிலப்பதிகாரத்துக்குத் தலை மகளாகிய கண்ணகிக்குக் கணவன். உயர்குடிப் பிறப்பும் செல்வ மிகுதியும் வாய்த்தவன். பிறர்க்குத் தன்னால் இயன்ற உதவிபுரியும் அருளுள்ளம் நிறைந்தவன். மதயானையின் கைப்பட்ட முது வேதியனைக் காத்ததும், பார்ப்பனியைக் கைவிட்டுச் சென்ற பார்ப்பனன் ஒருவற்கு மிக்க பொருள் தந்து இல்லிருந்து அறம் செய்யச் செய்ததும், மகனை யிழந்த தாயொருத்தியின் வருத்தம் கண்டு ஆற்றாது தன்னுயிரை இவன் கொடுக்கத் துணிந்ததும், பிறவும் இவனுடைய அருளுடைமையைப் புலப்படுத்துகின்றன. கவுந்தியடிகளால் குறு நரியாக்கப்பட்ட இருவர் பொருட்டு, அடிகள்பால், “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமையென்றறிதல் வேண்டும்” என்று கூறுவது இவனது ஈர நெஞ்சின் இயல்பை விளக்குகின்றது.

இன் நலம் பலவும் உடையனாயினும், இக் கோவலன் கண்ணகிபால் தீராக் காதற்காமம் கொண்டு அவளது நலம் புனைந்தும் பாராட்டியும் ஓதுவதை நோக்கின், பெருங் காமத்தான் என்பது புலனாகின்றது. ஒருவரையொருவர் முன்னுறக் காண்டலும், காதல் கொளலும், பின்பு கடிமணம் புணர்தலுமாகிய காதற் காமத்துறை இவன் வாழ்வின் காணப்பட வில்லை. மாதவியிடத்தும் இவனது காதல் உயிரொடு கிடந்து தொடரும் உயர்காதலாக இல்லை. மாதவியின் மாலையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு அவன், மனைக்குச் சென்று,

“மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்” (பக். 11)

என்றே அடிகள் கூறுகின்றார். மாதவியினின்று பிரிந்த போதும் இவற்கு அவளது தொடர்பு ஒரு வருத்தமும் பயக்கவே இல்லை. கருத்து வேறுளது போலத் தோன்றிய குறிப்பேதுவாக மாதவியை அறவே வெறுத்துப் பேசும் இவன் மனக்குறிப்பு, பின்னர் மாதவியைப் பற்றிய பேச்சு நிகழுந்தோறும் முற்பட்டுத் தோன்றுகிறது. கொலை யுண்டு கிடந்தபோது கண்ணகியாரால் உயிர்பெற்று விண்ணுலகு சென்றபோதும், இவன், கண்ணகிக்கு, “உண்கண்ணாய், நீ ஈண்டே இருக்க” (பக். 112) என்கின்றான்; இதனால் இவன் கண்ணகிபால் கொண்டிருந்த காதலும் உயர்ந்த காதலாகத் தோன்றவில்லை. மாதரியின் மனையில் இருந்து, கண்ணகி சமைத்திட்ட உணவுண்டு இனிதிருக்கும்போது, கண்ணகியை நோக்கி, “பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” என்பன முதலாகப் பல பாராட்டுரைகளை இவன் வழங்குகின்றான். இவை முற்றும் கண்ணகியின் கற்பு மாண்பு கண்டு தெளியப் பிறந்த வியப்புரையாமே தவிர, காதற் கட்டுரையாகா.

“குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்,
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து என்துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” (பக். 93)

என்ற இக் கூற்று, கோவலன் மனத்தெழுந்த வியப்பும் நன்றியறிவும் தோன்ற நிற்றல் காண்க.

ஆயினும், தான் செய்த தவற்றினை நன்கு உணர்ந்து வருந்து கின்றான். “தேற்றா ஒழுக்கத்தால் தீநெறிப்பட்டேன்” என்றும்,

“இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன்” (பக். 92)

என்றும் கூறுவன உருக்கமாக உள்ளன.

இனி, இவன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் காவலருடைய கைப்படுத்தப்பட்ட போதாவது, கொலைக்களத்தாவது ஒன்றும் கூறவேயில்லை. காவலரிடம் பொற்கொல்லன் கள்வர் செயல் பலவும் வகுத்து விரித்து உரைக்கின்றான். அதனைக் கோவலன் அறிந்துமிருக்கலாம். அக்காலை இக் கோவலன் தன்பாற் களவின் மையை இனிது கூறியேனும் இருக்கலாம்; அஃதும் இல்லை. அப்போது தன் நிலைமையையோ, கண்ணகியையோ, பெற்றோரையோ, கவுந்தியடிகளையோ யாரையாவது எதனையாவது நினைந்து சில கூறியிருக்கலாம். அவன்பால் ஒரு பேச்சும் நிகழவே இல்லை. எதிர்பாராவகையால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கண்டு அறிவு மயங்கி நினைவு, சொல், செயல் யாவும் மழுங்கித் தம்பித்து விட்டான் போலும். இன்றேல், ஏதேனும் ஒன்று மொழிந்திருப்பான்; வினைப் பயன் என்றுகூட அவன் எண்ணவில்லை; எண்ணியிருப்பின், அதனையேனும் விதந்து ஓதியிருக்கலாமே!

3.  மாடலன்: இவன் தலைச்செங்கானம் என்னும் ஊரிற் பிறந்த வேதியன்; நான்மறையும் வல்லோன்; மறையோதிய ஒழுக்கம் நிரம்பியவன். குமரியாடி வருமிடத்தே கவுந்தியடிகளுடன் இருந்த கோவலனைக் கண்டு அளவளாவி, கோவலன் தனக்கு மாதவிபாற் பிறந்த மகட்கு மணிமேகலை யென்று பெயர் வைத்த சிறப்பினை நாமறியச் செய்கின்றான். மேலும், இவனாற் கோவலன் முதுமறையோன் பொருட்டுக் “கடக்களிறடக்கிய கருணை” (பக்.84)யும், பார்ப்பனி யொருத்தியை அவள் கணவனுடன் கூட்டி, “நல்வழிப்படுத்த செல்வ” (பக். 84) நிலையும், மகன் பூதத்துக் கிரையாகியதால் வருந்திய தாய் ஒருத்தியின் பொருட்டு, அம் மகனுடைய

“சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைக்கும்,
பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த”

பண்பும் நமக்குத் தெரிகின்றன. கோவலனை இவன் தேற்றுங் கால்,

“இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (பக். 85)

என்று கூறுவது இவனது இனிய அரிய சொல் வன்மையைக் காட்டு கின்றது. கோவலன் தான் கண்ட தீக்கனவு கூறிய வழி, அதற்குத் தக்க விடை கூறாது வேறு கூறுவது மிக்க வியப்புத் தருகிறது.

இனி, செங்குட்டுவன் கங்கைப் பேரியாற்றின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடிவீட்டில் இனிதிருந்தபோது இம்மாடலன் வந்து அவனைக் காணும் திறம் மிக்க இன்பம் தருவது. கோவலன் மாதவியைப் பிரிந்தது முதல், செங்குட்டுவன் கண்ணகிக் குச் சிலை கொணர்வான் கங்கையிடை நீர்ப்படுத்தது ஈறாகக் கிடந்த வரலாறு முற்றும் மிகச் சுருங்கிய அளவில் அழகுறக் கூறுவான்,

“வாழ்க எங்கோ, மாதவி மடந்தை
கானற் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது” (பக். 153)

என்கின்றான். இவனன்றோ “சொல்லின் செல்வன்.” இதனால் குட்டுவன் அவ்வரலாறு முற்றும் அறிய அவாக் கொள்ளவே, அவன் பின்பு விரித்துக் கூறலுறுகின்றான்.

இவனாற்றான், பின்பு, செங்குட்டுவன், கண்ணகியாரின் முழுவரலாறுமே யன்றி, மாதரி தீயிற் புகுந்ததும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததும், மாசாத்துவான் துறவு பூண்டதும், அவன் மனைவி உயிர் துறந்ததும், மாநாய்கன் ஆசீவகப் பள்ளியில் அறம் பூண்டு துறவு மேற் கொண்டதும், கண்ணகியின் நற்றாய் உயிர்விட்டதும், மாதவி புத்த சமயம் மேற்கொண்டதும் பிறவும் அறிந்துகொள்கின்றான். கோவலன் கொலையால், கோல் வழுவிற்றென உயிர் இழந்த பாண்டியற்குப் பின் வெற்றிவேற் செழியன் பொற்கொல்லர் ஆயிரவரை உயிர்ப்பலி யூட்டி, மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினன் என்று சொல்லும் மாடலன்,

“உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத்து அலமறும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலில்,
நிரைமணிப் புரவி ஒரேழ் பூண்ட
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவு ளேறினன்என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதோ றூழி உலகம் காத்து
வாழ்க எங்கோ வாழியர் பெரிது” (பக். 156)

என்பது மிக்க இறும்பூதும் இன்பமும் பயத்தல் காண்க.

பின்பு அச் செங்குட்டுவன், தன் மைத்துன வளவனான கிள்ளி யென்பானது ஆட்சிமுறை எத்திறமென வினவிய போது மாடலன்,

“வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அறிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” (பக். 157)

என்று உள்ளுதோறினிக்கும் உரை பகர்கின்றான். அப்போது, பெரு மகிழ்வுற்ற குட்டுவன் தன் நிறையான ஐம்பது துலாபாரம் பொன்னை அம் மாடலனுக்கு அளிக்கின்றான்.

பிறிதொருகால், செங்குட்டுவன் சோழ பாண்டியர் மேல் ஆறாச் சினங் கொள்கின்றான். அப்போது அங்கிருந்த மாடலன், அவன் சீற்றந் தணியுமாறு தகுவன கூறி, மேலும்,

“அரைச ரேறே! அமைகநின் சீற்றம்;
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினும் சிறக்க;
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்;
வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை” (பக். 164 - 5)

என்று தொடங்கி, யாக்கை, செல்வம், இளமை முதலியவற்றின் நிலையாமை விளங்கக் கூறி,

“விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;…….
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது;
செய்வினை வழித்தால் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின்…

நீ பெரிய வேள்வி செய்தல் வேண்டும்;

நாளைச் செய்குவம் அறம்,எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீ ருலகில் முழுவதும் இல்லை” (பக். 165 - 6)

என்று கூறி முடிக்கின்றான். செங்குட்டுவனும் வேள்வி செய்கின்றான்.

முடிவில், கண்ணகி கோயிற்கு வந்த தேவந்தி, செட்டி மகளிர் முதலியோரால் நிகழ்ந்தவற்றைக் கண்டு செங்குட்டுவன் பெரு வியப் பெய்த, மாடலன் அதுவே வாயிலாக, அவனுக்கு அறமுறைக்கக் கருதி, “கோவலன் தாயும், கண்ணகி தாயும் மாதரியும் நல்லறம் செய்யாமையின் செட்டி யொருவனுக்குச் சிறுமகளாயினர்;

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கை,” (பக். 178 - 9)

என்று தெளிவித்து, மறுவலும், அச் செங்குட்டுவனை நோக்கி,

“அரசே,
ஆனேறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்,
செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும்
கையகத் தனபோல் கண்டனை யன்றே” (பக். 179)

என்று சொல்லி, அவனை அறத்தாற்றில் நிற்கப் பண்ணுகின்றான்.

4.  செங்குட்டுவன்: இவன் வரலாறு இந்நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்தும், மாடலன் செய்தி கூறுமிடத்தும் ஓராற்றால் விளங்குகின்றன. இவன் மறம் மிக்க வேந்தன். இவன் தன் தம்பி இளங்கோவுடன் தந்தைபால் இருக்கும்போது, கணி யொருவன் போந்து, இளங்கோவுக்கும் அரசாளும் குறிப்புண்மை யறிந்து, கூறக், கேட்ட மாத்திரையே கண் சிவந்தது. காய் சினம் பொங்கிற்று. தன் உடன் பிறந்து உடன் வளர்ந்து உடனொழுகும் இளங்கோவின் உள்ளப்பான்மையை உணராது இவன் சினங்கொண்டான். இதனை, “அரசாளுரிமை இளையோற் குண்டென உளைவனன் நனி வெகுண்டு அழுக்காற் றொழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன், கண் எரி தவழ அண்ணலை நோக்கும்” என அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார்.

இதுவேயன்றி, தான் பற்றிக் கொணர்ந்த ஆரியமன்னரை ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்க்குக் காட்டி வருமாறு விடுப்ப, அவர்களைக் கொண்டு சென்றோர் அவ்வண்ணமே காட்டித் திரும்ப வந்து, சோழ மன்னனும் பாண்டிய வேந்தனும்

“அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது” என்றனர் (பக். 164)

என்று கூறினர். அது கேட்டலும், “தாமரைச் செங்கண் தழல் நிறம் கொள்ள” அச் செங்குட்டுவன் கொண்டசினம் சொல்லும் தரத்த தன்று; அக்காலை மாடலன் ஆங்கிருந்து தகுவன கூறி அவன் கருத்தை மாற்றாதிருந்திருந்தால், இவ் வரலாறே வேறு வகையாகச் சென்றிருக்கும்.

தமிழ் வேந்தரை ஆரிய மன்னர் இகழ்ந்து பேசினர் என மாதவர் சிலர் கூறக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு உண்டாகிய சினம், காலம் கருதி அமைந்து கிடந்து, கண்ணகிக்குக் கல் கொணர நேர்ந்தபோது எழுந்து நிற்கிறது. அப்போது அவன்,

“இமையத் தாபதர் எமக்கு ஈங்குணர்த்திய,
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்” (பக். 145)

என்று கூறி, மறனிழுக்கா மானமுடைமையைப் புலப்படுக்கின்றான். அவன், அக்காலை கூறிய வஞ்சினம் நெஞ்சிற்கு மிக்க மருட்கை யைப் பயக்கின்றது.

“வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும்என் வாய்வா ளாகின்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுக” (பக். 145)

என்பது அவ் வஞ்சின வாய்மொழியாகும். அவ்வஞ்சினமும் தப்பாமே செய்து முடித்தான் இச் செங்குட்டுவன்.

இவ்வஞ்சினம் மொழிந்தபோது மாடலன் ஆங்கில்லை. ஆசான் வேறொருவன் இருந்து பொருந்தாக் கூற்றொன்று புகலு கின்றான். “அவ் வடவாரிய மன்னர் இகழ்ந்து பேசியது நின்னை யன்று; ஏனைச் சோழபாண்டியரையேயாகும்.”

“அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல், நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப! நின் இகழ்ந்தோ ரல்லர்;
அமைகநின் சினம்”

என்பது அவ்வாசானுடைய உரை. ஆனால், அவன் உரையை இச் செங்குட்டுவன் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை வரலாறு கூறிகின்றது.

இனி, இவன் பெற்றுள்ள ஏனை வெற்றிச் சிறப்புக்களை உரைக்கின் இம் முன்னுரை பேருரையாய் விரியும். அவை மிகப் பலவாகும்.

இவன் சிவனிடத்தில் மாறா அன்புடையவன். இவன் இமயம் நோக்கிப் புறப்பட்டபோது, திருமாலின் சேடம் கொணர்ந்து சிலர் கொடுப்ப, அதனைத் தன் மணிப்புயத்தே பெய்து கொண்டான். அதற்குக் காரணம் கூறப் புகுந்த இளங்கோவடிகள்,

“ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின்” (பக். 147)

சென்றான் என்று கூறுகின்றார். மாடலன் ஒருகால் இச்செங்குட்டு வனை நோக்கிக் கூறுமிடத்து, “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” என்று கூறுகின்றான்.

இவன் அறிஞருடன் சொல்லாடுங் காலத்து மிக்க கம்பீரமாகப் பேசும் பண்பு படைத்தவன். மாடலன், கண்ணகி வரலாற்றை மிக்க சுருக்கமாகக் கூறக் கேட்டதும்,

“பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா
நகைத்திறங் கூறினை, நான்மறை யாள!
யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு”

என்கின்றான். இதன்கண், “நான் அறியாத நகை யென்னாது மன்னர் பலரும் அறியாத என்றான், இராசபாவத்தாலே” என்று உரைக் கின்றார் அரும்பதவுரைகாரர்.

செங்கோல் கோடிய பாண்டியன் செய்தி கேட்டதும், இச் செங்குட்டுவன் கூறும் கூற்று நம்மனோர்க்குப் பெருமிதத்தைத் தருகின்றது. அது,

“எம்மோ ரன்ன வேந்தற்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உறுபதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை, மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” (பக். 140)

என வருவதாகும். இம்மட்டில் நில்லாது, இன்னோரன்ன வழுக்கிற்கு இடனாகி, அரசரை வருத்தும் அரசியலின் தன்மையைச் செங் குட்டுவன் நன்கு உணர்ந்திருக்கின்றான். சீத்தலைச் சாத்தனார் மதுரை நிகழ்ச்சியை விரியக் கூறக்கேட்டு மனம் வருந்திய இவன், பாண்டியன் உயிர் துறந்ததை நினைத்து மேலே காட்டியவாறு கூறி,

“மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்,
பிழைஉயி ரெய்தின் பெரும்பே ரச்சம்,
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்” (பக். 140)

என்று கூறுகின்றான்.

5.  கண்ணகி*: கண்ணகியாரின் காற்சிலம்பே இப்பேரிலக்கி யத்துக்குப் பெயராவது. இவர் வடிவில் திருமகளையும், கற்பில் வடமீனையும் நிகர்ப்பர் என அவரை யொத்த மகளிரால் பாராட்டப்படுபவர். நற்குண நற்செய்கை மிக வுடையவர். இவரது உருநலனும் மனை மாண்பும் கோவலனுக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. அவன் இவரை, “அரும் பெறற்பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடிவாணிகன் பெருமடமகளே” எனப் பாராட்டிப் பரவுகின்றான். இவர் கற்புக் கடம்பூண்ட பொற்புடைத் தமிழ்மகள் என்பதைப் பல விடங்களில் இவர் கூறும் சொற்களால் இனிது தெளியலாம்.
    கணவனாகிய கோவலன், காதலொழுக்கத்துக் கண்ணிய நெறியால் வாராது, பெற்றோர் புணர்ப்பவந்த காதலனாயினும், அவன்பால் இவர் கொண்டொழுகிய காதலொழுக்கம் தமிழ் வழங்கும் காதலின்ப ஒழுக்கமாகவே திகழ்கின்றது. அவன் மாதவி வயப்பட்டு மயங்கித் தன்னைப் பிரிந்து ஒழுகிய காலத்து, கண வருவப்ப அணியும் அணிகலன்களை இவர் அணியவேயில்லை. இதனை, அடிகள்,

“அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய,
மென்துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி அணியாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்” (பக். 14)

என்று கூறுகின்றார்.

கோவலனது பிரிவாற்றாது வருந்தி மெலிந்த கண்ணகியார் ஒருநாள் தீக்கனாக் கண்டு தன் தோழி தேவந்திக்குத் தெரிவிப்ப, அவள், “பிரிந்த கணவனைப் பெறக் கருதும் மகளிர், கானற்கண் உள்ள சோமகுண்டம் சூரியகுண்டமென்னும் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவர்;

‘காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்’ (பக். 44)

யாம் ஒருநாள் ஆடுதும் வருக” என்கின்றாள். அவட்கு நம் கண்ணகி யார், “கணவனையல்லது பிற தெய்வங்களைத் தொழுதல் கற்புடைய மகளிர்க்குத் தீது” என்ற கருத்தால், “அது பீடன்று” என்று மறுத்து விடுகின்றார்.

அக்காலை, திரும்பப் போந்த கோவலன், தன் காதற் குறிப்புத் தோன்றும் மொழிகள் சிலவேனும் கூறலாம்; கூறிற்றிலன். துவண்ட மேனியும் சோர்ந்த முகமும் கொண்டு அவர் எதிரில் நிற்பவன், கண்ணகியார் செய்யும் வழிபாட்டையும் நோக்கிற்றிலன்; அவன் உள்ளம் கண்ணகியின் “வாடிய மேனி வருத்தங் கண்டு” பெருங் கலக்கம் எய்துகின்றது. உடனே, அவன் மனத்தே மிக்க நாணம் தோன்றி அலைக்கின்றது;

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு” (பக். 45)

என்று சொல்கின்றான். காமக்களியாட்டில் மயங்கினார்க்கு வேறு நாணமேது; நல்ல காதலேது. பொருளின்மை யொன்றே அவரை வருத்தக்கூடியது. அவன் வருத்தத்தின் பெற்றியை யறிந்த கண்ணகியார்,

“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புள கொள்ளும்”

என்று மொழிகின்றார். செவிவழி சென்று அவன் நெஞ்சு துளைத்து வருத்தும் சுடுசரம் இதனிற்காட்டில் அக்கோவலற்கு வேறு வேண்டாவே.

ஆனால், அவன் இச் சிலம்பையே முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு அழைக்கின்றான். இவ்வாறு தன் மனைவியையும் உடன் அழைத்தது இவன் வரலாற்றில்தான் புதுமையாய்க் காணப்படுகிறது. அக் கண்ணகியாரும் அவன் சொற்படியே புறப்பட்டு விடுகின்றார்.

நெடிது நடந்தறியாப் பெருஞ் செல்வத் திருமகளாகிய கண்ணகியார் அவனுடன் ஒரு காவதம் சென்று, ஆங்கிருந்த கவுந்தியடிகளின் தவப்பள்ளியை யடைந்து கோவலனை அன்புகனிய நோக்கி, முள்ளெயிறு இலங்க முறுவலித்து,

“மதுரை மூதூர் யாது?” என வினவ,
கோவலன்,

“ஆறைங் காதம் அகல்நாட் டும்பர்,
நாறைங் கூந்தல், நணித்து” (பக். 47)

என்று விடையிறுக்கின்றான். அவனது நயமென் மொழியினைக் கேட்டு உவகை நகை செய்து, கவுந்தியடிகளை வணங்கி வழிபடு கின்றார். வழியில் கோவலன் கண்ணகியார்பால் காட்டிய காதல், சான்றோராகிய கவுந்தியடிகள் உணர்ந்து, “கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ” எனப் பாராட்டப் பெறும் பேறு பெறுகின்றது.

உயிரினும் சிறந்த நாணும், அதனிற் சிறந்த கற்பும் உருக்கொண் டாற்போலும் உயர்மகளாதலின், கண்ணகியார், வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் கவுந்தியடிகள்பால் தீமொழி பகரக்கேட்டதும், உடல் நடுங்கி மனங் கூசித் தன் செவி புதைத்து நிற்கின்றார். அது காணப்பொறாமையால் கவுந்தியடிகள் அத் தீயோர் இருவரையும், “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக” எனச் சபிக்கின்றார். மேலும், வேட்டுவர் கூட்டத்துட் சாலினி தெய்வமருள் கொண்டு, கண்ணகி யாரைப் பார்த்து, “இவளோ ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறுகின்றாள். அது கேட்டதும், கண்ணகியார், “பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி” என்று கோவலற்குப்பின்னே சென்று ஒடுங்கி நிற்கும் தோற்றம் உள்ளக்காட்சியில் உவகை செய்கின்றது.

கண்ணகியார் மாதரியென்னும் ஆய்ச்சி வீட்டில் இருந்து, அவள் உதவிய காய், கனி, அரிசி முதலியவற்றால் இனிய உணவு சமைத்துக் கோவலற்கு இடும் திறம் மிக்க இன்பம் தருவதாகும். கோவலனைப் பனையோலைத் தடுக்கில் அமர்வித்து,

தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக்
குமரிவாழையின் குருத்தகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க, அடிகள்! ஈங்குஎன

அவர் மொழியும் மொழிகள் இற்றை நாளை மகளிர்க்கு இனிய நல்லுரையாகும்.

உணவு கொண்டபின் கோவலன், கண்ணகியாரின் வழி நடை வருத்தத்திற்கு வருந்தியும் தன் பெற்றோரை நினைந்தும் சில கூறுகின்றான். அவற்குக் கண்ணகியார் தம் பேரறிவுடைமை சிறக்க ஒரு நல்லுரை கூறுகின்றார்.

“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (பக். 92)

நும் பெற்றோர், அன்பு சிறந்து அருள்மொழி வழங்கி இனிது பாராட்டி வந்தனர். என் பொய்முறுவல் கண்டு, என் உள்ளுறு வருத்த முணர்ந்து வருந்தினர். அவர் அவ்வாறு வருந்தவும் நீவிர்,

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்,
ஏற்றெழுந்தனன் யான்”

என்று கூறித் தெருட்டுகின்றார்.

இதுகாறும் காட்டியவற்றால் கண்ணகியாரின் கற்பும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் யாம் தெளியக் காண நிற்பது விளங்கும். கோவலனது பரத்தைமையும் பிரிவும் பெரிது ஆற்றியிருந்த இக்கண்ணகியார், கோவலன் கொலையுண்டது கேட்டதும், ஆற்றாமையின் வரம்பு கடந்து விடுகிறார். அவரது ஆறிய கற்பு சீறிய கற்பாக மாறுகிறது; மெல்லியற் பொறை வல்லியற் பொறையாகின்றது; மென் மொழி வழங்கிய மலர்வாயில் வன்மொழி வருகிறது; அருள் கிடந்த உள்ளத்தே மருட்கை இடம் பெறுகிறது; அழுகையும் அவலமும் அவரைக் கவர்ந்து கொள்கின்றன; பெண் மையின் வரம்பாகிய பெருநாண் நெகிழ்ந்து நீங்குகின்றது.

“பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த்
திங்கள் முகிலொடும் சேண் நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனை,
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்” (பக். 108)

என அடிகள் அழகுறக் காட்டுகின்றார்.

கண்ணகியார்க்கு இவ்வுலகமே புல்லிதாகத் தோன்றுகிறது; எதிர்காலம் புலனாகிறது; கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு நோற்று வாழும் காட்சி தெரிகிறது; மன்னவன் ஆட்சியில் நேர்ந்த தவறும் இனிது விளங்குகின்றது. தன்னை நோக்குகின்றார், “அன்பனை இழந்தேன் யான்” என வாய்விட்டு அரற்றுகின்றார்; கைம்பெண் எனத் தான் ஆவது கண்டு அருவருக்கின்றார்; அவலம் மிக மிக அவருள்ளம் திண்ணிதாகின்றது. அறிவு சிறிது அவர் வசம் வருகிறது. ஏனை மகளிர் காணத் தம் கணவனான கோவலன் கள்வனல்லன் என்பதனை, செங்கதிர்ச் செல்வனைக் கேட்டுத் தெளிகின்றார்; பிறரையும் தெளிவிக்கின்றார்.

மதுரை நகர்க்குட் கையிற் சிலம்பேந்திப் புகுந்து, தெருவில் தம்மைக் கண்டு வியந்து நிற்கும் நன்மகளிர் அறிய வன்மொழி சில கூறுகின்றார்.

“முறையில் அரசன் தன் ஊரிருந்து வாழும்
நீறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்!……
கள்வனோ அல்லன் கணவன்,என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட் டால்கொன் றாரே,
ஈதொன்று.” (பக். 110)

என் கணவனைச் சென்று காண்பேன்; கண்டு அவன் வாயில் “தீதறு நல்லுரை கேட்பேன்” என்கின்றார். கேளாதொழியின், அது நன்மகளிர் எள்ளி இகழ்தற்கு இடனாகுமன்றே; அதனையுணர்ந்து,

“தீதறு நல்லுரை கேளா தொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்”

என்று இனைந்து கூறுகின்றார்.
பின்பு இவர் நேரே கொலைக்களம் சென்று கோவலன் உடல் கொலையுண்டு குருதி நிறைந்து பொடியாடிக் கிடப்பது கண்டு ஆறாத் துயரமுற்று அவலித் தழுகின்றார். பத்தினிப் பெண்டிர், சான்றோர், தெய்வம் என்ற இவற்றை நினைந்து நோகின்றார். கோவலன் உடலை எடுத்துத் தழீ இக்கொள்கின்றார். அவன் உயிர் பெற்று, கண்ணகியாரின் “நிறைமதி வாண்முகம் கன்றியது” என்று அவர் கண்ணீரைக் கையால் மாற்றுகின்றான். அவர் அவன் திருந்திய அடியைத் தன் வளைக்கையால் பற்றுகின்றார். உடனே, அவன், “இருக்க” என்று சொல்லிவிட்டு விண்ணுலகு சென்று விடுகின்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாகின்றது. கண்ணீர் ஆறாகச் சொரிகிறது. உள்ளம் கொதிக்கின்றது. உடல் நடுங்குகின்றது; சுற்று முற்றும் கண்களைப் பரக்க விழித்துப் பார்க்கிறார்; “போய் எங்கு நாடுகேன்” என்று புகல்கின்றார். கோவலன் கொலைக் காரணத்தை நினைக்கின்றார். அவர் முகம் சிவக்கின்றது; வாயிதழ் துடிக்கின்றது; கண்கள் சிவந்து காய் சினங் காட்டுகின்றன; கணவன் நினைவும் இடையே நிகழ்கின்றது.

“காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;
தீவேந்தன் றனைக்கண்டுஇத் திறம்கேட்பல் யான்” (பக். 113)

என்று சொல்லிக்கொண்டு அரசன்பால் வருகின்றார்.

இவரது காய்சினக் கோலத்தைக் கண்டு அச்சமும் வியப்பும் அடையக் கொண்ட, அரசனது வாயிற் காவலன் அரசன்பால், “கொற்றவையோ, பிடாரியோ, பத்திரகாளியோ என்று கூறற்குரி யளல்லள், கணவனை யிழந்த ஒரு நங்கை” என்கின்றான். இக்குறிப் பறியாத, கல்லா நாடகமக்கள், எங்கள் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியாரை, உயிர்க் கொலை வேட்டுத் திரியும் கூளியாக்கி நடித்துத் திரிகின்றனர். இஃது அறிஞர்க்கு எத்துணை அருவருப்பை யும் வருத்தத்தையும் தருகிறது, காண்மின்.

அரசன்பால் இவர் வழக்குரைக்கும் திறம் மிக்க நயமும் இலக்கிய நலமும் நிரம்பியதாகலின், அதனை ஈண்டுரைப் பிற் பெருகும்.

வழக்குரை முடிவில் அரசன் இறந்ததும், கோப்பெருந் தேவிக்கு உரியன கூற அவள் இறந்ததும் கண்டபின்னும் கண்ணகி யார்க்குக் காய்சினம் தணிந்திலது;

“மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்,
பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும்.” (பக். 119)

என்று மதுரை நகரைத் தீக்கிரையாக்குகின்றார். எரிக்கடவுள் போந்து, “என்னால் விலக்கற் குரியார் யாவர்?” என்று இரந்து கேட்க, கண்ணகியார், அறத்தாறு நுவலும் பூட்கை குன்றாது,

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்,
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க” (பக். 120)

என்கின்றார். வீரபத்தினியாகிய நம் கண்ணகியார் பின்பு மதுராபதி யால் பழம் பிறப்புணர்ந்து, செங்கோடு அடைந்து, தன்னைக் கண்டு வினவிய வேட்டுவர்க்கு, “மணமதுரையோடு அரசு கேடுற, வல்வினை வந்து உருத்த காலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன், யான்” என்று கூறிவிட்டு, தம்பால் வந்த வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வதால் தோன்றும் நலம் பலவும் இனி விரிக்கில் மிகப்பெருகும்.

6.  மாதவி: காவிரிப்பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் சித்திராபதி யென்பாட்கு மகள் இம் மாதவி. இவள், ஆடல், பாடல், அழகு என்ற இவற்றுள் ஒன்றிலும் சிறிதும் குறைபாடு இல்லாதவள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வரையில் ஆடலும் பாடலும் அறிவுமிகு கல்வியும் நன்கு பயின்றவள். திருந்திய அறிவும் பொருந்திய கல்வியும் விரிந்த மனமும் உடையவள். கரிகாற் பெரு வளத்தான் முன் நிருமித்த நாடக அரங்கில், இளங் கோவடிகள், இவளை நமக்குக் காட்டுகின்றார். அங்கே,

“பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்” (பக். 10)

காண்கின்ற நம் மனம் மகிழத் தன் நாடக நூற்புலமையை நன்கு காட்டுகின்றாள்.

மாதவி கோவலனுடைய தொடர்பு பெற்று, அவன்பால் சிறந்த காதல் கொண்டு ஒழுகுகின்றாள். இதனை, அடிகள்,

“நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி” (பக். 14)

என்கின்றதனால் அறிகின்றோம். இவளோடு கூடியிருக்குங் கால் கோவலன் இன்புற்ற திறம்,

“காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு…
காமக் களிமகிழ் வெய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து…
பூமலி கானத்துப் புதுமணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்” (பக். 19)

என்பதனால் இனிது விளங்குகிறது.

இந்திரவிழாவில் இம் மாதவி அரங்கேறி, திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பல வகைத் தேவபாணி பாடி, பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம், முதலாகவுள்ள பதினொருவகைக் கூத்தும் ஆடி மக்களைக் களிப்பிக் கின்றாள். அவளுடைய பாடலும் ஆடலும் அழகும் மக்கள் மனத்தை இன்புறுத்தக் கண்டு கோவலன் “ஊடற்கோலம்” உறுகின் றான். இங்கேதான், அவன் மாதவியைப் பிரிதற்குத் தோற்றுவா யாகிய மனப்பிளவு தோன்றுகிறது.

இதனை மாதவி தெளிய உணராது, வாளாது கூடற்குரிய ஊடலென்றே கருதி யொழிகின்றாள். அவனுவக்குமாறு தனது கூந்தல் முதல் சீறடி ஈறாகப் பலவகையுறுப்பும் அழகு திகழப் புனைந்து கொள்ளுகின்றாள். இக்கோலம் கொண்டது அவன் உவக்குமாறே யன்றித் தன்னைக் காண்பார் மகிழுமாறு அன்று என்பதை அடிகள், “ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப” (கடலாடு. 75) என்றும், “கூடலும் ஊடலும் கோவலற் களித்துப், பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்” (கடலாடு. 109 -10) என்றும் நன்குவற்புறுத்துவதனால், இம்மாதவி, நாடகமகளாயினும் குலமகட்குரிய கற்பும் பொற்பும் உடையளாய் இருந்தமை தெளிய விளங்குகிறது. கடற்கானற்குச் செல்லும்போதும் இம்மாதவி, கோவலனுடன் ஒரே ஊர்தியிற் செல்லாது, அவன் ஒரு கோவேறு கழுதை மேலிவர்ந்து வர, தானோர் வையமேறிச் செல்கின்றாள்.

மாதவி கடற்கானற் சோலையில் இருந்தபோது, தொடக்கத்தே தன் கையிலிருந்த யாழை அவன்பால் தந்து அதனை இசைத்துப் பாடுமாறு வேண்ட, அவனே குறிப்பு வேறுடைய பாட்டுக்களை முதற்கண் பாடலுறுகின்றான். இவற்றைக் கேட்ட மாதவி, இசையின் பத்தோடு பொருள் நலமும் தேர்ந்து, “இவன் மனத்தே வேறு குறிப்பு உளது போலத் தோன்றுகிறது; அவ்வாறு இருத்தற்கு இடமில்லை; இவன் தன் நிலைமயங்கினான்” என்று உட்கொண்டு “கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ் கை வாங்கித், தானும் ஒரு குறிப்பினள்போல்” பாடுகின்றாள். இப்பாட்டுக் குறிப்பை நன்கு ஆராய்ந்து காண்டற்குரிய கோவலன் அதனைச் செய்யாதது அவன் குற்றமே. குறிப்பு வேறு உண்மை கண்டதும், அவன் உள்ளத்தே பொறாமை குடி கொண்டுவிடுகிறது; அறிவு மழுங்கிவிடுகிறது; வெகுளி எழுகின்றது. “கானல்வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்” என்ற நினைக்கின்றான். நினைத்தவன் சிறிதேனும் அங்கே இருந்தானோ எனின் இல்லை; உண்மையிலே அப்போது, பொழுதும் நெடிது கழிந்தது. “பொழுது கழிந்தது, வருக, செல்வோம்” என்றேனும் கூறி, அவளுடன் புறப்பட்டுத் தான் வேண்டுமாயின் தனித்தேகியிருக்கலாமன்றோ! அஃதன்றோ ஆடவர்க்குப் பண்பு. சட்டி சுட்டது, கை விட்டது என்பதுபோல, குறிப்பு வேறுபாடு கண்டதும், “பொழுது ஈங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்று உடனெழாது” சட்டெனத் தனக்குரிய ஏவலர் சூழ்வரத்தான் மட்டில் பிரிந்து ஏகிவிடுகின்றான். மாதவி உண்மை விளங்காளாய்க் கையற்று மனம் வருந்தித் தன் மனையை அடை கின்றாள். இதற்குக் காரணம் ஊழ்வினை என்கின்றார் இளங்கோ வடிகள். இதனால், கோவலன் பிரிவுக்கு மாதவி ஏதும் பிழை செய்திலள் என்பது பெறப்படுகிறது.

பின்பு, அவள் கோவலன் பிரிவாற்றாது வருந்தி அவற்குத் தன் தோழி வயந்தமாலை வாயிலாகத் திருமுகம் விடுப்ப, அதனையும் அவன் மறுத்து விடுகின்றான்; அவளோ மனம் வெறாது, “மாலை வாராராயினும், காலை காண்குவம்” என்று எண்ணிக் கையற்று இருந்தொழிகின்றாள். கோவலன் புகார் நகரின் நீங்கித் தன் மனைவியுடன் வேற்று நாட்டிற்குச் சென்றொழிந்தது அறிந்து கோசிகமாணி என்பான்பால் ஓலையொன்று விடுக்கின்றாள். அதனைக் கண்டபின்பே கோவலன், “அவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து தன் தீதிலள்” எனத் தளர்ச்சி நீங்குகின்றான். முடிவில் கோவலன் கொலையுண்டது கேள்வியுற்றுப் புத்தமாதவர்பால் அறம் கேட்டு புத்தபிக்குணியாய் விடுகின்றாள். இவ்வரலாற்றால், அவள் முடிவுகாறும் கோவலனையன்றிப் பிற ஆடவரைக் கருதாத பெருங் கற்புடையவளாய் விளங்கினதை அறிகின்றோம். இதனை யறியாது, இக்கால நாடகமாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்புமுடைய ‘மாதகி’யாக்கி நடித்துத் திரிகின்றனர்.

7.  கவுந்தியடிகள்: இவர் சமணசமயத் துறவிகளில் பெண் பாலருள் ஒருவராவர். இவர் சோழ நாட்டில் புகார் நகர்க்கு மேற்கில் ஒரு காவதத் தொலைவில் பள்ளியமைத்து அறம் புரிந்து வருகையில், தன்பால் வந்த கோவலனையும் கண்ணகியையும் காண்கின்றார். அவர்களைக் கண்டதும், “உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்” என்று வினவுவது இவரது நல்லொழுக்கத்தைப் புலப்படுக்கின்றது.

மேலும், இவர் கோவலனை நோக்கிக் கண்ணகியின் மென்மைத் தன்மையை விதந்தோதி மதுரைக் கேகுதலை ஒழிக என விலக்குகின்றார்; அவன் அதனைக் கேளாதொழியவே, தானும் மதுரைக்கு அவருடன் வர இசைகின்றார்.

வழிகாட்டிச் செல்லுமிடத்து முதற்கண் அவர் மனத்தே கண்ணகியின் அருமையும் மென்மையும் முன்னின்று வருத்தவே, அக் கண்ணகிக்கு அவலம் செய்வனவற்றையே எடுத்தோதி விலக்கிச் செல்கின்றார். ஏனை யுயிர்கள்பால் அவர் கொண்டிருந்த அருள் நிலை மிகப் பெரிது.

“குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதம் கூடும்”

என்றும்,

“எறிநீ ரடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா”

என்றும் கூறுவன (பக். 49) அவரது அருளறத்தின் இயல்பை நன்கு தெரிவிக்கின்றன.

சாரணர் தோன்றி அக்கவுந்தியடிகளை நோக்கி,

கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:
ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை,
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங்கான் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை யுயிர்கள் (பக். 51)

என்று ஓதி அருகனுடைய பல மாண்புகளையும் எடுத்துரைக் கின்றனர். அவற்றைக் கேட்டதும் கவுந்தியடிகள் கூறுவனவற்றால் அவர் தம் சமய மெய்ப்பொருள்பால் கொண்டிருந்த திண்ணிய பற்று விளங்குகிறது. அவர்,

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாம மல்லது நவிலாது என் நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்;
அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லது என்
பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர் அறவன் அறிவோர்க் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லது என்
தலைமிசை யுச்சி தான்அணிப் பொறாஅது;
இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறிதர ஓதிஎன் மனம்புடை பெயராது; (பக். 52)

என்பது அதற்குத் தக்க சான்றாவதாம். வழியில் வந்து இகழ்வுரை வழங்கிய வம்பப்பரத்தையரைக் ‘குறுநரியாகுக’ எனச் சபித்ததும், பிறகு சாபவிடை வழங்கியதும் அவருடைய ஆற்றற்குத் தக்க சான்றாகின்றன.

மாடலன் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான் பிலத்தின் பெற்றியினைக் கூற, கவுந்தியடிகள், “நலம்புரி கொள்கை நான்மறை யாள, பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை” என்று மறுத்து,

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வம் கண்டடி பணிய
நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்” (பக். 60)

என்று மொழியும் திறம் அவரது விழைவின்மையைக் காட்டுகின்றது.

தன்பால் கண்ணகியை விடுத்துத் தான் தனியே மதுரை மூதூர்க்குச் சென்று வரவேண்டுமென்று கூறி வருந்திய கோவலனுக்கு அவர் மனைத் தொடர்பின் துன்பமும் இராமன் நளன் முதலியோர் வரலாறும் கூறி, தெருட்டுவது அவரது துறவு நெறியும் அறிவின் ஒட்பமும் நன்கு உணரக் காட்டுகின்றது.

அவர் கண்ணகியை மாதரியென்னும் ஆய்ச்சிபால் அடைக் கலப்படுத்துமிடத்துக் கூறுவன மிக்க இன்பந்தருவனவாகும். கண்ணகியைப் பேணுமாறு இது என்பார்போல், கவுந்தியடிகள் மாதரியை நோக்கி,

“மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி,
தேமென் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கு; (பக். 87)

என்றும், கண்ணகியின் கற்புப் பெருமையைக் குறித்து,

“இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடுஎன்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ,” (பக். 88)

என்றும், துறவியாகிய தான் தரும் அடைக்கலத்தைத் தாங்கின் வரும் பயன் குறிப்பாராய்,

“தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும்
மிகப்பே ரின்பம் தருவது கேளாய்” (பக். 88)

என்றும் கூறுகின்றார்.

இவ்வண்ணம் கண்ணகிபால் பேரன்பு செலுத்திய கவுந்தி யடிகள், கோவலன் கொலையுண்டதும் பிறவும் கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்பதிப் பெயர்க்கின்றனர்.

இவ்வாறே பிறர் ஒவ்வொருவருடைய குணம் செயல்களையும் தனித்தனியே காணலுறின், வரம்பின்றிப் பெருகுமாதலின், இம் மட்டில் நிறுத்தி, இவ்விலக்கியத்துள் காட்டப்படும் வரலாறுகள் சில காண்பாம்.

X. வரலாறுகள்:- இதன்கண் சோழவேந்தர் மரபில் தூங்கெ யில் எறிந்த தொடித்தோட் செம்பியன், முசுகுந்தன், மனுவேந்தன், கரிகால்வளவன் முதலியோர் செய்த சிறப்புடைச் செய்திகள் குறிக்கப்படுகின்றன. பாண்டி வேந்தருள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தியும், இந்திரன் சென்னியில் வளையுடைத்தவன், கடலில் வடிவேலெறிதலும், இந்திரன் ஆரத்தைத் தான் பூண்டு கோடலும், மேகத்தைச் சிறை செய்தலுமாகிய செய்திகளும், பாண்டியன் கைகுறைத்துக் கோடலும் பிறவும் காணப்படுகின்றன. சேரவேந்தர் இமயத்தில் விற்பொறித்ததும், கடலில் கடம்பரை யெறிந்ததும், நேரிவாயில் என்னுமிடத்து எதிர்த்த வேந்தர் ஒன்பதின் மரை வென்றதும், முடிவேந்தர் எழுவரை வென்று, அம் முடிப் பொன்னும் மணியும் கொண்டு ஆரமொன்று செய்து சேரவேந்தர் வழிவழியாக மார்பிற் பூண்டொழுகியதும், ஆரிய மன்னரையும் பிறரையும் வென்றதும் பிறவும் விரியக் கூறப்படுகின்றன.

இவையேயன்றி, இறைவன் மூவெயில் முருக்கியதும், முரு கனைப் பயந்ததும், முருகன் சரவணத்தே அறுவர் பாலுண்டு வளர்ந்ததும், அவுணரை வென்றதும், வள்ளியை வேட்டதும், திருமால் வைய மளந்ததும், நரசிங்கமானதும், இராமன் சீதையை இழந்து வருந்தியதும், இராவணனை வென்றதும், கஞ்சனைக் கண்ணன் கொன்றதும், பஞ்சவர்க்குத் தூது சென்றதும், இந்திரன் மலைகளின் சிறகை யரிந்ததும், அவன் மகன் சயந்தன் என்பான் அகத்திய முனிவனால் சாபமுற்று மூங்கிலானதும், நளன் கதையும், பிறவும் ஏற்றவிடத்து எடுத்துக் காட்டப்படுகின்றன.

இவற்றோடு இடையிடையே துறவிகட்குத் தானம் செய்வோர் பெறும் பேறும், கள்வர் தொழில் வன்மையும் கற்புடைய மங்கையர் சிறப்பும் பிறவும் விளக்கும் வரலாறுகள் பல ஓதப்படுகின்றன.

கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்தி முதலியோர் பிறப்பு வரலாறும், பழம் பிறப்பும், சுட்டப்படுகின்றன.

XI. இசை நாடகக் குறிப்புக்கள்:- இந்நூல் “இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள்” எனப் பண்டை ஆசிரியன்மாரால் சிறப்பித் தோதப்படுவதென்று முன்பே கூறினோம். ஆகவே, இதன்கண் இசையும் நாடகமும் குறிக்கப்பெறும் என்பது சொல்லாமலே விளங்கும். இதன்கட் காணப்படும் மங்கல வாழ்த்துப் பாடல், கானல் வரி,வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசையும் நாடகமும் பயின்றுவரும் பகுதிகளாகும். துன்ப மாலையும் வஞ்சின மாலையும் இசைவிரவி அழுகைச் சுவை மிக்கு நிற்பனவாகும்.

அரங்கேற்று காதை, வேனிற் காதை முதலியவற்றுள் பண்டை இசை நாடக நூற்குறிப்புக்கள் செறிந்திருக்கின்றன. காண்டந்தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசை நாடகக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.

இவற்றை இப் பேரிலக்கியத்துக்கு உரைகண்ட அரும் பதவுரைகாரர், அடியார்க்கு நல்லார் என்ற இப் பெருமக்கள் வழங்கியுள்ள உரைக் குறிப்புக்களால் ஒருவாறு காண்டல் கூடும். விரியவுணர்தற்கு ஆகாதவாறு அவ்விசை நாடக நூல்கள் பலவும் இறந்தொழிந்தன. இக்குறை அறிஞர் உலகிற்குப் பேரவலத்தைச் செய்து நிற்கிறது. இத்துறையில் சுவாமி விபுலானந்தர், மகாமகோ பாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், நாவலர் பெருந்தகை பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலி யோர் உழைத்து வருகின்றனர். அவர் முயச்சி வெற்றி பெறுவதாக.

XII. சில வழக்காறுகள்:- ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தும், சங்க நூற் காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் இருந்த திருமணமுறை இச் சிலப்பதிகாரக் காலத்தே மாறியிருக்கிறது. தொல்காப்பியனார் முதலியோர் காலத்தே நிலவிய களவு வழி நிகழ்ந்த காதல்மணம் இளங்கோவடிகள் காலத்தே இல்லையென் பதை, கோவலற்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த மணவினை காட்டு கின்றது. “இரு பெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்ந்தனர்” என்பது அடிகள் உரையாகும். மேலும், “மாமுது பார்ப்பான் மறைவ காட்டிடத், தீவலஞ் செய்வது” என்ற முறை இவர் காலத்தே தோன்றிவிட்டது.

திருமணம் புணரும் மக்களை வாழ்த்துமிடத்தும், கடவுட் பூசை நிகழ்த்துமிடத்தும் பிறாண்டும் அரசனை வாழ்த்தும் நன்முறை, “செருமிகு சினவேற் செம்பியன், ஒரு தனியாழி உருட்டுவோன் எனவே” (மங்கல.) என்றும், “பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறநாட்டுக், கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சிசூடுக விறல் வெய்யோனே” (வேட்டுவ.) என்றும், “உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர், வில்லெழுதிய இமயத்தொடு, கொல்லியாண்ட குடவர்கோவே” (குன்றக்.) என்றும் வருவனவற்றால் இனிதுணரப் படுகின்றது.

இவ்வாறே, மனையறம் செய்தலும், வாணிப முறையும், கைத்தொழில் வளமும், இசை நாடக நலனும், ஆய்ச்சியர் வாழ்வும், குன்றவர் செல்வ நிலையும், அரசியல் முறையும் பிறவும் பண்டைத் தமிழ் வாழ்வின் உயிரோவியம் போல இந் நூற்கண் உருக்கொடுத்துக் காட்டப்படுகின்றன. அவற்றை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

வேள்கி வேட்கும் வழக்கு அடிகள் காலத்தே தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. மதுரை நகரிலும், சேரனாட்டிலும் ஆகுதிப் புகையும், மாடலன் வேள்வியும் பிறவும் நாம் காண்கின்றோம்.

அடிகள் காலத்தே, இசை, நாடகம், சமயம், அரசியல் வாணிபம், மருத்துவம் முதலிய துறைகட்கேயன்றி, கனவு, களவு முதலியவற்றின் உண்மை காண்டற்கும் நூல்கள் பல இருந்திருக் கின்றன. கனாத்திறமுரைத்த காதையும், கொலைக்களக் காதையும் இவற்றைப் புலப்படுத்துகின்றன.

அடிகள் காலத்தே வடநூற்புராண இதிகாசக் கதைகள் தமிழ்நாட்டில் வந்துவிட்டிருக்கின்றன. அவை வாயிலாக, வடவர் வழக்க ஒழுக்கங்களுட் பல தமிழகத்தே புகுந்திருக்கின்றன.

முடிப்புரை:- இப் பேரிலக்கியத்துக்கு அரும்பதவுரை யொன்றுண்டு; அதன் பிற்போந்த அடியார்க்கு நல்லார் என்னும் பேராசிரியர் அழகியதொரு விரிவுரை எழுதியுள்ளார். அரும்பத வுரை நூல் முழுமைக்கும் உண்டு; அடியார்க்கு நல்லார் உரை தொடக்க முதல் வழக்குரை காதை வரையில் தான் உளது. இவற்றின் இடையே கானல்வரிக்கு அவரது உரை கிடைத்திலது. இஞ்ஞான்று நடுக்காவேரி நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நன்காராய்ந்து, நூன் முழுமைக்கும் எழுதிய நல்லுரை தமிழ்மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கின்றது. இப் பெருமக்களின் உரை நலத்தை முதனூலைப் படித்து இன்புறுதல் வேண்டும். இச்சிறு நூலகத்தும் ஆங்காங்கு ஒன்றிரண்டு காட்டப்பெற்றுள்ளன.

இப் பெருநூல், பண்டைத் தமிழ் வாழ்வும் தமிழறிஞர் அறிவு நுண்மையும் பிறவும் நாம் அறிந்துகோடற்கு ஏற்ற பெருமணியாய்த் திகழ்வது. இதன் நலம் முற்றும் காண்பதற்கு வேண்டும் அவாவைப் படிப்போருள்ளத்தில் எழுப்புவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இச் சிறு நூல் வெளியிடப்படுகின்றது.

இதுபோலும் பல தொண்டுகள் இற்றைய நம் தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு வேண்டுவனவாம் என்று நன்கு அறிந்து, இவற்றை ஆற்றுதற்கு முன் வந்திருக்கும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு நாம் பெரிதும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையோம்.
இத்தகைய தொண்டினை ஆற்றற்குரிய பெரும்புலமையும் அருந்திறமையும் படைத்த புலவர் பெருமக்கள் பலரிருக்க, வேங்கடத்தடியில் தமிழ் கற்பிக்கும் தொழில் தாங்கியிருக்கும் அடியேனைப் பொருளாக் கொண்டு இப் பணி புரிவிக்கும் உமையொரு பாகத்து ஒருவன் திருவருளை வியந்து மனமொழி மெய்களால் பணிந்து மகிழ்ந்து பரவுகின்றேன்.

திருவேங்கடம்

9.7.1942

      **rஒளவை. சு. துரைசாமி  

2. உரை பெறு கட்டுரை
1.  அன்றுதொட்டுப் பாண்டியன் நாடு, மழை வறங் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக், கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன், நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.

2.  அது கேட்டுக் கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய, மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.

3.  அது கேட்டுக், கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, “அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்” என, ஆடித்திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

4.  அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து “எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்” என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே.

இளங்கோவடிகள்
அருளிய
சிலப்பதிகாரத்தின் சுருக்கம்

புகார்க் காண்டம்


மங்கல வாழ்த்துப் பாடல்

திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்,

1கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றுஇவ்
2அங்கண் உலகளித்த லான்.

ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்,
காவிரி நாடன் 3திகிரிபோல் 4பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்,
5நாமநீர் வேலி யுலகிற்கு, அவனளிபோல்
6மேல்நின்று தான்சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்,
7வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத் தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்.

உலகளிக்கும் திங்களைப் போல் வெண்குடை நிழற்றி, மேரு வலம் திரியும் ஞாயிற்றைப் போல் திகிரி யுருட்டி, மேல் நின்று சுரக்கும் மா மழை போல் உலகிற்குத் தலையளி செய்து, ஓங்கிப் பரந்த பூம்புகார் போல் பழங்குடி மக்களாய்த் திகழ்ந்த சோழர் குடியிற் பிறந்த சோழ மன்னர் சோழ நாட்டை அறம் இனிது வளர ஆட்சி புரிந்தனர். அக் காலத்தே புகார் எனப் புலவர் பரவும் காவிரிப்பூம் பட்டினம் அவர்கட்குத் தலைநகரம்.

பொதியி லாயினும், இமய மாயினும்,
1பதியெழு வறியாப் பழங்குடி 2கெழீஇய
3பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்,
4நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
5ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்,
6முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.

இப் புகார் நகரத்தே வணிகர் பெரும்பாலராக வாழ்ந்து வந்தனர். அவருள், இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என மூன்று வகையினர் உண்டு. அம் மூவகையினருள் பெருங் குடியர் வகையில் மாநாய்கன் என்றொரு வணிகன் வாழ்ந்து வந்தனன். அவனுக்கு ஒருமகள் இருந்தாள்; இக் கதை தொடங்கும் காலத்தே அவட்கு வயது பன்னிரண்டு; திருமணம் செய்தற்குரிய பருவம் இது.
அவளுந்தான்,

7போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்,
தீதிலா 8வடமீனின் திறம்இவள் திறமென்றும்,
மாதரார் தொழுதேத்த 1வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள், பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ.

இந் நகரத்தே, இப் பெருங்குடியர் மரபிலே மாசாத்துவான் என்பவன் ஒரு வணிகன். இவன் மாநாய்கன்பால் பெண் கொள்ளுதற்கு உரிமையுடையவன்; 2உயர்ந்தோங்கு செல்வத்தான். இவனுக்கு ஒரு மகன் இருந்தான்; அவனுக்கும் இக் கதை தொடங்கும் காலத்தே வயது பதினாறு நிரம்பி யிருந்தது.
அவனுந்தான்,

3மண்தேய்த்த புகழினான், மதிமுக மடவார்தம்
4பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் 5செவ்வேள் என்று 6இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் 7கிழமையான், கோவலன்என் பான் மன்னோ

இக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இருபெரும் குரவரும் திருமணம் செய்யக் கருதினர். குறித்த நாளில் திருமணம் நடந்தது. அதுபோது, மிக்க உயர்வும் பரப்புமுடைய பந்தர்கள் இடப்பட்டன. விதானங்கள் அழகுற அமைக்கப் பெற்றன; அவற்றில் நீல நிறமான ஆடைகளைத் தைத்து முத்துக்கள் அணியப்பெற்றன. எம்மருங்கும் முத்துத் தாமங்களும் பூமாலைகளும் தொங்கின. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டி எரி வளர்த்தான். கோவலன் அருந்ததி அன்ன கண்ணகியைக் கைப்பற்றித் தீவலம் வந்தான்.

அவ்வழி,
முரசியம்பின, முருடதிர்ந்தன,
 முறையெழுந்தன, பணிலவெண்குடை
அரசெழுந்ததொர் படியெழுந்தன,
 அகலுள்மங்கல அணியெழுந்தது.

கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் பூட்டினன். பின்பு, பெருமுது மங்கல மகளிர்,

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதைய(ராய்ச்)

சுண்ணமும், விளக்கும், பூம்பாலிகையும், முளைக்குடமும் கொணர்ந்து மங்கலம் பொலிவித்து, சில மண மலர்களைத் தூவி, “இமயத்தில் இப்பால் புலியைப் பொறித்த எங்கள் கரிகாலன், தன் திகிரியை எப்பாலும் உருட்டுவானாக; அவன் பொறித்த புலிப் பொறி அவ்விமயத்துக்கு அப்பாலும் நிலை பெற நிற்பதாக” என அரசனை வாழ்த்தி,

காதலற் பிரியாமல், 1கவவுக்கை ஞெகிழாமல்,
தீதறுக என ஏத்திச், சின்மலர் கொடுதூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை,
2மங்கல நல்லமளி ஏற்றினார்.


மனையறம் படுத்த காதை

குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் மக்களாகிய கோவலனும் கண்ணகியும் புதுமணத் தேறல் மாந்தி இன்புற்றிருந் தனர். ஒருநாள், அவர்கள், மயன் என்னும் தேவ தச்சனால் செய்யப் பெற்றது போன்றதொரு மணிக்கால் அமளியினை, நெடுநிலைமாடத்து இடைநிலத்தேயிட்டு அதன் மேல் இனிதிருந்தனர். அதுபோது,

கழுநீர், ஆம்பல், 1முழுநெறிக் குவளை,
அரும்பு 2பொதி யவிழ்ந்த 3சுரும்பிமிர் தாமரை,
வயற்பூ, வாசம் 4அளைஇ அயற்பூ
மேதகு தாழை, 5விரியல்வெண் தோட்டுக்
6கோதை மாதவி, சண்பகப் 7பொதும்பர்த்
8தாதுதேர்ந் துண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் 9புகலேக் கற்றுத்
திரிதரு சுரும்பொடு 10செவ்வி பார்த்து
மாலைத் 11தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க 12மணவாய்த் தென்றல்

மெய்க்கினிதாக வீசிற்று. அது கண்டு, இருவரும் பெருமகிழ் வெய்தி, காதல் சிறந்து நிரைநிலைமாடத்து நிலாமுற்ற மேறி இன்புறுவா ராயினர்.

அங்கே கண்ணகியின் நலங்களை ஐவகைக் கருவிகளாலும் ஆர நுகர்ந்த கோவலன், தீராக் காதலால் அவள் திருமுக நோக்கிச் சில கூறலுற்றான். தொடக்கத்தே, அவன், கண்ணகியின் நுதல், புருவம், கண், சாயல், நடை, சொல் முதலியவற்றின் நலம் புனைந்து கூறி மகிழ்கின்றான்; பின்பு, கண்ணகிக்குச் செய்யப்பெற்றிருக்கும் ஒப்பனையைக் கண்டு, பெரிதும் வியந்து,

நறுமலர்க் 1கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல வணியே அன்றியும்,
2பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்?
3பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும்,
4எல்லவிழ் மாலையொடு 5என் உற்றனர் கொல்?
6நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்,
7மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
8திங்கள் முத்தரும்பவும் சிறுகிடை வருந்தவும்
இங்கிவை அணிந்தனர் என் உற்றனர் கொல்?

என்று, கூறுகின்றான். அதற்குப்பின்,

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
9காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ;
1அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ;
யாழிடைப் பிறவா இசையே என்கோ,
2தாழிருங் கூந்தல் தையால்! நின்னை

எனப் பலவாறு பாராட்டி இன்புற்று மகிழ்ந்து வரலாயினன். இவ் வண்ணம் சில நாட்கள் சென்றன. கோவலன் தாயாகிய பேரியற் கிழத்தி அவனையும் கண்ணகியையும் மனையறம் படுக்க விரும்பி, பல்வேறு வகைச் செல்வமும், உரிமைச் சுற்றமும் உவந்தளித்துத் தனியே இருந்து மனைவாழ்க்கை நடத்த விடுத்தனள். அவ் வண்ணமே இருவரும் தாம் மேற் கொண்ட இல்லறத்தை இனிது செய்து வந்தனர்; யாண்டுகளும் சில கழிந்தன.


அரங்கேற்று காதை

அக் காலத்தே காவிரிப்பூம் பட்டினத்தில் நாடகக் கணிகையர் பலர் வாழ்ந்திருந்தனர். அவருள் சித்திராபதி என்பாள் சீரும் திருவுமுடையளாய் இருந்தாள். அவட்கு மாதவி யென்னும் மகளொருத்தி உண்டு. அவள் பெரிய தோளும் கடைகுழன்று சுருண்ட கூந்தலும் உடையள்; ஆடல், பாடல், அழகு என்ற இம் மூன்றில் ஒன்றும் குறைவு படாமல் நாடக நலம் பெற்றவள். இவள் ஐந்தாம் ஆண்டில் ஆடல் பாடல்களைப் பயிலத் தொடங்கி, மேல் ஏழாண்டு அவற்றை நன்கு பயின்று, பன்னிரண்டாமாண்டை எய்தினாள். அவளது கல்வித் துறையும் நிறைவெய்திற்று. அவள் தாயர் முதலியோர் அவள் கற்றவற்றை ஒரு நல்ல நாளிலே, அரசர் பெருமானான கரிகாற்பெருவளத்தானுக்கு அவனது அவைக் களத்தே அரங்கேற்றிக் காட்டவிரும்பினர்.

கூத்தின் இலக்கணங்களை முற்றக் கற்று, ஆடவும் ஆட்டு விக்கவும் வல்ல ஆடலாசிரியனும், கூத்தும் இசையும் பொருந்தப் புணர்க்கும் புலமை மிக்க இசையாசிரியனும், கூத்தும் பாட்டும் இனிது அமைய நாடகங்கள் எழுத வல்ல நாடகக் கவிஞனும், தண்ணுமையாசிரியனும், குழலியம்புவோனும், யாழாசிரியனும், பிறகும் அரங்கேற்றுதற்கு வேண்டியவற்றைச் செய்தனர். சிற்பநூலா சிரியர் வகுத்துள்ள இயல்பு வழுவாதவாறு தக்க இடத்தே அரங்கு வகுக்கப் பெற்றது. அதன்கண், ஒரு முகவெழினி, பொருமுகவெழினி, கரந்து வரல் எழினி என்பனவாகிய திரைகள் அமைக்கப் பெற்றன. தங்கள் அரசற்குத் தோற்றோடிய மாற்றரசரது வெண்குடையின் காம்பைத் தலைக்கோலாக நிறுத்தி, அதனை இந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, ஆடலாசிரியன் முதலாயினோர், புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடத்திற் கொணர்ந்த நன்னீரால் நீராட்டி மாலை சூட்டி வழிபட்டனர். இவ்வாறு,

1இந்திரன் சிறுவன் சயந்த னாகஎன,
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
2மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம்தரு நாளால், 3பொலம்பூண் ஓடை
4அரசுவாத் தடக்கையில் பரசினர் கொண்டு,
முரசுஎழுந் தியம்பப் 5பல்இயம் ஆர்ப்ப,
அரசொடு பட்ட 6ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து 7கவிகைக் கொடுப்ப,
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து

அரங்கிலே புகுந்து ஆடுதற்குரிய நெறியிலே யாவரும் அமைந்தனர். அங்கே, ஆடல் மகளிர், 8வாரம் பாடுவோர், இசைக் கருவியாளர், ஆசிரியன்மார் பலரும் தத்தமக்கு உரிய இருக்கைகளை அடைந் தனர். மாதவியும், “வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து, வலத்தூண் சேர்தல் வழக்கு” என்பது கொண்டு, அம் முறையே அரங்கேறினள். அவட்குப் பின் ஆடி முதிர்ந்த 9தோரிய மடந்தையர் இடத்தூண் பக்கலில் இருந்தனர். ஆடல் தொடக்கத்தே, தோரிய மடந்தையர் வாரம் பாடினர்; இசைக்கருவிகள் யாவும் இனிது இசைத்தன. அவற்றுள்,

குழல்வழி நின்றது யாழே; யாழ்வழித்
1தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடிநின்று இசைத்தது 2ஆமந் திரிகை.

பின்னர், மாதவி ஆடரங்கின் முற்போந்து,

3பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள்; ஆதலின், காவல் வேந்தன்
4இலைப்பூங் கோதை இயல்பினின் 5வழாஅமைத்
தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி
6விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
7ஒருமுறை யாகப் பெற்றனள்; அதுவே,
நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை;
8“மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்கு” என
9மானமர் நோக்கி ஓர் கூனிகைக் கொடுத்து
1நகர நம்பியர் திரிதரும் 2மறுகில்
3பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த

அத் தெருவழியே சென்ற கோவலன், அம் மாலையின் விலை, மாதவியின் பரியமாதல் கண்டு, ஆயிரத் தெண்கழஞ்சு பொன்னையும் கொடுத்து அம் மாதவிக்கு அமைவானாயினன்.

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
4அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
5விடுத லறியா விருப்பின னாயினன்;

அன்றியும், வடு நீங்கிய சிறப்புப் பொருந்திய தன் மனைய கத்தையும் மறந்தொழிந்தான்.


அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

கோவலன் தன் மனையகத்தை மறந்து, மாதவியின் மனைக் கண்ணே மயங்கிக் கிடக்க நாட்கள் பல கழிந்தொழிந்தன. தன்னை அவன் பிரியாமல் ஒழுகுவதால் மாதவிக்கு மகிழ்வு மிகுவதாயிற்று; அவன் பிரிவாற்றாத கண்ணகிக்கு உண்டான துயர் அளப்பரிதா யிற்று. காதலரைப் பிரிந்தவர்க்கு மாலைப்போது பொறுத்தற்கரிய துன்பம் தருவதாதலால், ஒரு நாளைய அந்திமாலையின் சிறப்பு இங்கே கூறப்படுகிறது.

பகற்பொழுது கழிய அந்திமாலை வந்தது. பகலவன் மேலைத் திசையில் மறைந்தான். எங்கும் பசுவெயில் பரந்தது; மாலையில் மலரும் பூக்களிடத்தே பனிநீர் தங்கித் துளிக்கலுற்றது; எங்கும் குளிர்ச்சி நிலவத் தொடங்கிற்று.

“விரிகதிர் பரப்பி உலகமுழு தாண்ட
1ஒருதனித் திகிரி உரவோற் காணேன்;
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்களஞ் செல்வன் யாண்டுளன்கொல்?” எனத்
திசைமுகம் பசந்து, 2செம்மலர்க் கண்கள்
3முழுநீர் வார, முழுமெயும் பனித்துத்,
4திரைநீர் ஆடை இருநில மடந்தை,
5அரைசு கெடுத்து அலமரும் 6அல்லற் காலையே

இவ்வந்தி மாலையாகும். சிறிது போதில் 1மயங்கிருள் வருவ தாயிற்று.

2கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
3அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
4வலம்படு தானை மன்னர் இல்வழிப்
5புலம்பட இறுத்த 6விருந்தின் மன்னரின்
7தாழ்துணை துறந்தோர் 8தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக்
9சூழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
10மழலைத் தும்பி வாய்வைத் தூத;
11அறுகாற் குறும்பெறிந்து அரும்புபொதி வாசம்
12சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற
13எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
14மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தது.

இந்நிலையில் தென்னவர் குல முதலான பிறைத் திங்கள் தோன்றியது. பகைவர் இளையராயினும் அவரை முளையிலே களையும் அரசு முறை அத் தென்னவர்க்கு இயல்பாக உண்டு; அதனால், அத் தென்னர் குலத் திங்கள், அந்தி மாலைப் போதில் அடைந்த மயங்கிருளை மாற்றிப் பால் போன்ற தன் வெண் கதிரைப் பரப்பிற்று. நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்தில், மாதவி, கோவலனை எதிரேற்று, அவனுக்குக் கலவியும் புலவியும் நல்கிக் களி கொண்டனள். மாதவியைப் போலவே காதலரைக் கூடிய மகளிரும் 1செழும்பூஞ் சேக்கைக் கண்ணே,

மந்த மாருதத்து மயங்கினர் 2மலிந்தாங்கு
3ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கிக்
4காவியங் கண்ணால் களித்துயில் எய்த,

தம் மனம் பொருந்திய காதலரைக் கூடுதற்கின்றித் தமித் திருக்கும் மகளிர் சிலர் பெருந்துயர் உழந்தனர். அவருள் கண்ணகி,

அம்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
மெல்துகில் 5அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்;
மங்கல அணியின் பிறிதணி மகிழான்;
6கொடுங்குழை துறந்து 7வடிந்துவீழ் காதினள்;
திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்
8செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
9பவள வாய்நுதல் திலகம் இழப்ப,
தவள வாள் நகை கோவலன் இழப்ப
10மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறும் நெஞ்சமொடு கலக்கம் உற்றனள். அவளை ஒத்த ஏனை மகளிர், 1ஊதுலைக் குருகு போல வெய்துயிர்த்து, வேனிற் காலத்து எய்தும் பள்ளியிடத்தை மேவாது குளிர் காலத்துப் பள்ளியை மேவினர்; அங்கே, நிலாவொளியும் தென்றலும் புகாவண்ணம் 2குறுங் கண் சாளரங்களை அடைத்துக் கொண்டு ஒடுங்கிக் கிடந்தனர். காதலரைக் கூடிய காலமெல்லாம் கலங்கி யறியாத அவர் உள்ளம், இதுபோது கலங்குவதாயிற்று; கடைக் கண்ணும் சிவப்பதாயிற்று. ஆகவே; அவர்கள் நள்ளிருள் யாமத்தும் பகலும் துஞ்சாது வருந்தினர். காமனும் மலரம்பும் கரும்பு வில்லும் ஏந்தி நகர்க் காவல் புரியலானான்.

இவ்வண்ணம் இரவுப் போது கழிதலும், அதன் இறுதியாகிய விடியற் காலம்,

அன்ன மெல்நடை நன்னீர்ப் பொய்கை
3ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் 4தண்ணறல் கூந்தல்
பாண்வாய் வண்டு 5நோதிறம் பாடக்
6காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு 7பொறிமயிர் வாரணத்து
8முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
9உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயில் எடுப்பி எய்திற்று.


இந்திர விழ ஊரெடுத்த காதை

1அலைநீ ராடை மலைமுலை யாகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
2கண்ணகன் பரப்பின் 3மண்ணக மடந்தை
4புதையிருட் படாஅம் போக நீக்கி
5உதைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு 6அவிரொளி மலர்கதிர் பரப்பி

வெயில் விளங்கும் நண்பகற் போதினைச் செய்ய, சித்திரை மாதத்துச் சித்திரா பூரணை வந்தது. அந் நாள் தொடங்கி இருபத் தெட்டு நாள்காறும் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரனுக்கு விழா அயர்வது வழக்கம். அக் காலத்தே, 7வேயாமாடம், 8வியன்கல இருக்கை, மாளிகை இடங்கள் முதலாகப் 9பெரும்பாணிருக்கை, பிற 10சிறு குறுங்கை வினையாளர் இருக்கை ஈறாகப் பொருந்திய மருவூர்ப் பாக்கமும், கோவியல் வீதி, கொடித்தேர் வீதிகள் முதலாக, குதிரை, களிறு, தேர் என்ற இவற்றின் பாகரும், போர் வீரரும் இருக்கும் 11பெரும்பா யிருக்கை, பீடுகெழு திருவின் பெரியோர் இருக்கை ஈறாகவுள்ள பட்டினப் பாக்கமும் என இரு பகுதிப் பட இருந்தது இக் காவிரிப் பூம்பட்டினம். இவ்விரு பாக்கங்கட்கும் இடையே பல்வகை மரம் செறிந்த சோலை யொன்று உண்டு. அம் மரங்களின் அடியில் கடைகள் கட்டப் பெற்றிருந்தன. அவ்விடம் நாளங்காடி என்பது.

இந் நாளங்காடியில், காவற் பூதத்துப் பலி பீடிகை, உயிர்ப்பலி வழங்கும் முழுப்பலி பீடிகை, கொற்றப் பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில், உணர்ந்தோர் மண்டபம், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் முதலிய பல சீரிய இடங்கள் இருந்தன.

இந்திரவிழா அயர்தற்குரிய சித்திரை சேர்ந்த சித்திரைத் திங்களில் உயர்ந்தோர்கள் ஒன்று கூடி,

மெய்வகை யுணர்ந்த 1விழுமியோர் ஏத்தும்
2ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ
3வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
4கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
5வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்
6கால்கோள் விழவின் 7கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் 8தருநிலை கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து

வேதிகை, நெடுநிலை மாளிகை முதலியன பொருந்திய தெருக்களைத் தோரணம் நாற்றி, பூரண கும்பம், பொற் பாலிகை, பாவை விளக்கு, பொற் படாகை, கவரி, சுண்ணம் முதலியவற்றால் அழகுறுத்தினர். பின்பு, ஐம்பெருங் குழுவும், 9எண்பேராயமும், அரச குமரரும், 1பரத குமரரும், புரவி, களிறு, தேர் என்ற இவற்றின் மேல் இவர்ந்து வந்து ஒருங்கு கூடி,

அரைசு 2மேம்படீஇய 3அகல்நிலை மருங்கின்
4உரைசால் மன்னன் 5கொற்றம் கொள்கஎன,
மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்
ஆயிரத் தோரெட் 6டரசு தலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
7மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டி

விழா அயரலாயினர். ஒருபக்கத்தே,

8பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்,
9வால்வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும்,
10மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்

ஆகிய இக் கோயில்களில் நான்மறையிற் கூறிய முறையில் தப்பாது தீ வளர்க்கப் பெற்றன. ஒரு பக்கத்தே, நால் வகைத் தேவர், பதினெண் கணங்கள் என்ற வேறு வேறு கடவுளர்க்கும் விழாச் செய்யப்பட்டன. அறவோர் பள்ளியில் அறவுரையும், புண்ணியத் தானங்களில் திறவோர் உரைக்கும் நற்செயலும் *நிகழ்ந்தன; ஒரு பால், சிறைப்பட்ட மன்னரது அடித்தளை நீக்கிச் 1சிறைவீடு செய்யும் அருட் செயல் நிகழ்ந்தது; ஒருபக்கத்தே, 2கண்ணுளர், 3குயிலுவர், யாழ்ப்புலவர், பாடற்பாணர் முதலியோர் எண்ணருஞ் சிறப்புடன் இசையிசைத்துச் சிறந்தனர்; இரவும் பகலும் மாடவீதி, குறுந்தெரு, மூலைமுடுக்கர் என்ற எல்லா இடங்களிலும் முழவு முழக்கம் இடையறாது இந்திர விழா இனிது நடை பெற்றது. இவ்வண்ணம்.

விழவுக்களி சிறந்த 4வியலுளாங்கண்,
காதற் கொழுநனைப் பிரிந்து அலரெய்தா
5மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு

காமக்களி மகிழ்வெய்தி, நறுவிரைப் பொழிலில் விளை யாட்டமர்ந்து, நாளங்காடியிலுள்ள பூமலி கானத்துப் புது மணம் நுகர்ந்து, புகையும் சாந்தும் கொண்டு, நகையாடாயத்தாரின் நன்மொழியில் திளைத்துக் குரல்வாய்ப் பாணர், நகரப் பரத்தர் என்ற இவரொடு கூடித் திரிந்தனன் கோவலன்; இவனைப்போல இளவேனிற் பருவத்து இனிது வரும் தென்றல், மாடவீதிகளில் மணங் கமழ்ந்து உலவிற்று.

இங்ஙனம் மாலைப்போது கழியவே, நள்ளிரவு எய்திற்று. அக் காலைப் பொதுமகளிர் உறையும் தெருக்களிலும் குலமகளிர் உறையும் தெருக்களிலும் முறையே காமுகர் புகழ்ச்சியும் இல்லற வுயர்ச்சியும் எழுந்தன. அவற்றுள், காமுகர்,

‘இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி யாம்’ என
6எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் 7குமிழும் பூத்துஆங்கு
1உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்
2கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!
மன்னவன் செங்கோல் மறுத்த லஞ்சிப்
பல்லுயிர் பருகும் 3பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் 4அருந்தொழில் திரியாது
நாணுடைக் கோலத்து நகைமுகம் 5கோட்டிப்
பண்மொழி நரம்பின் 6திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுகொல்!

எனப் பொதுமகளிரைப் புகழ்ந்து கூறி மகிழ்ந்தனர். இவ்வாறு பொது மகளிரை ஊடல் தீர்த்துக் கூடிய ஆடவர். அவர் பூசிய சாந்தும், சூடிய மாலையும் கூடிய குறியுமுடை யராய்த் தம் மனைக்கண், விழவிற்கு வந்த விருந்தினரோடு சென்றனர். அவர் செயல் கண்டு புலத்தற்குரிய அவர்தம் குலமகளிர் புலத்தலினும் வந்த விருந்தோம்பல் பேரறம் என்று உட்கொண்டு, அவரோடு உடனுறைவு மருவுகின்றனர். அதனை அறிந்து மகிழும் அவர்தம் கொழுநர்,

விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
7உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
1மாதர்வாண் முகத்து 2மணித்தோட்டுக் குவளைப்
போது 3புறங்கொடுத்துப் போகிய 4செங்கடை
5விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்புஎன

மனமாரப் பாராட்டினர். இந்த நள்ளிரவில்,

6உள்ளகம் நறுந்தாது உறைப்ப மீதழிந்து
கள்ளுக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி 7கருங்கணும் மாதவி 8செங்கணும்
உள்நிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன;
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன.


கடலாடு காதை

வெள்ளிமால் வரையின் வடபகுதியில் சேடி என்னும் வித்தியாதர நகரமொன்று உண்டு. ஆங்கு வாழும் விஞ்சையருள் ஒருவன், காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா நடைபெறும் காலத்தை அறிந்து அவ் விழா நிகழ்ச்சியைத் தன் காதலிக்குக் காட்ட விரும்பினான். அதனால், அவன் தன் காதலியை நோக்கி, “துடியிடையாய்!

தென்திசை மருங்கின் 1செழும்பதி தன்னுள்
இந்திரவிழவு கொண்டு எடுக்குநாள் இது”

எனச் சொல்லி, “ஆங்கே நாம் செல்வோம் வருக; மேலும், அச் செழும்பதியில்,

ஐவகை மன்றத் தமைதியும் காண்குதும்;
2நாரதன் வீணை நயந்தெரி பாடலும்,
தோரிய மடந்தை வாரம் பாடலும்,
3மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்கர வல்குல் ஆடலும் காண்குதும்;
அமரர் தலைவனை வணங்குதும் யாம்” என,

அவளும் அதற்கு இசைந்தனள். இருவரும் புறப்பட்டு வருங்கால், அவன் அவளுக்கு, இமய வரையும் கங்கையாறும், உஞ்சைப்பதியும், விந்தமலைக் காடும், வேங்கட மலையும், காவிரி நாடும் காட்டி, புகார் நகர்க்கண் புகுந்து அமரர் தலைவனை வணங்கி நகரிடை எடுக்கும் விழா நலம் காணலுற்றான். இருவரும் தம் விஞ்சையர் உருவை மறைத்துக்கொண்டு, அந் நகர்க்கண் நிகழ்ந்த கூத்தும் பாட்டும் காண்பாராயினர்.

1தேவபாணி யென்னும் இசைப்பாட்டு வகையைப் பாடி,
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவ னாடிய 2கொடுகொட்டி யாடலும்,
பாரதி யாடிய வியன் 3பாண் டரங்கமும்,
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
4அல்லியத் தொகுதியும், அவுணற் கடந்த
5மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய 6துடியும்,
படைவீழ்த் தவுணர் 7பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய 8குடையும்,
நீள்நில மளந்தோன் ஆடிய 9குடமும்,
காம னாடிய 10பேடி யாடலும்
1மாயவ ளாடிய 2மரக்கா லாடலும்
திருவின் செய்யோள் ஆடிய 3பாவையும்
4அயிராணி மடந்தை ஆடிய 5கடையமும்

ஆகிய இவற்றைத் தன் காதலிக்குக் காட்டின அவ் விஞ்சையன், ஆடற்கோலத்தோடு மாதவி தோன்றக் கண்டு,

“தாதவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
6மாதவி மரபின் மாதவி இவள்” எனக்
காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய

காலத்தே, கோவலன், இந்திர விழா முடிவு பெறுதலாலும், மாதவி ஆடலிற் காலம் நீட்டித்தலாலும், பலரும் அவளைப் பரிவாய்ப் பார்த்தலால் வந்த பொறாமையாலும் வெறுப்புற்று ஊடற் கோலத்தோடு இருந்தான். அவன் உவக்குமாறு, மாதவி கோலங் கொள்ளலானாள்: மாதவி தன் கூந்தலில் நறு நெய் தடவி நலம் செய்து கொண்டாள். சிவந்த சிறிய அடிகளில் செம்பஞ்சி யூட்டப்பெற்றன; மெல் விரல்களில் நல்ல அணிகள் செறிந்தன; துடையில் 7குறங்கு செறி, என்னும் பூண் அணியப் பெற்றது. காலுக்குப் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, பாதசாலம் முதலியன அணியப்பட்டன; சீரிய பூந்துகில் உடுத்து, தோளுக்குக் கண்டிகையோடு பின்னிய 8தோள்வளை செறித்துக் கொண்டாள்; முன்கைக்குச் சூடகமும், மெல்விரற்கு மணியாழியும், கழுத்திற்கு முத்தாரமும் தூமணிக் கோவையும், காதிற்குக் கடிப்பிணையும் கவினுற அணிந்துகொண்டாள்.

இவ்வாறு தன்னை ஒப்பனை செய்து கொண்டவள், விழா நாள் முடிந்தபின் வந்த 1உவாநாளில் கடலாடற்கு மக்கள் மிக்க ஆரவாரத்தோடு விரையக் கண்டாள்; உடனே, அவள்,

2பெருநீர் போகும் 3இரியல் மாக்களொடு
மடலவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டின ளாகி,
பொய்கைத் தாமரை 4புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட
5வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத்
தாரணி மார்பனொடு பேரணி யணிந்து

அவன் கோவேறு கழுதைமீதுவர, தான் ஒரு வண்டியிலேறி பட்டினப்பாக்கத்து மாடமலி மறுகும் பீடிகைத் தெருவும், திருமகள் நீங்காதுறையும் ஆவண வீதியும் கடந்து, மருவூர்ப் பாக்கத்து நகர வீதியின் நடுவே சென்று, பரதேசமக்கள் வாழும் 6மாலைச் சேரியின் மருங்கே அடைந்தாள். அங்கே,

வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
7பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
8காழியர் மோதகத் தூழுறு விளக்கமும்,
9கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்,
10நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,
1இலங்குநீர் வரைப்பின் 2கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் 3மீன்திமில் விளக்கமும்,
4மொழிபெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும்,
5கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்,
எண்ணுவரம் பறியா இயைந்தொருங்கு ஈண்டிக்
6கடிப்பகை காணும் காட்சிய தாகிய
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்

நெய்தல் நிலத்துக் கானற் சோலையைக் கண்டாள். அவ் விடத்தில் கடல்படு பொருளும், மலைபடு பொருளும் நிரை நிரையாக மல்கி இருந்தன; கடற்றுறையில் வளம் சுமந்த கலங்கள் அசைந்து கொண்டு நின்றன. பரத குமரரும் பல் வேறு ஆய மகளிரும், ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும் வேறு வேறு கோலத்துடன் மேவி இருந்தனர். காவிரி கடலொடு கலக்குமிடத்து, தாழை வேலியாக வளர்ந்துள்ள அக் கானலையடைந்த மாதவி, அவ்விடத்தே,

புன்னை நீழற் புதுமணல் பரப்பில்
7ஓவிய எழினி சூழவுடன் போக்கி
விதானித்துப் படுத்த 8வெண்கால் அமளிமிசை
9வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் 10கொள்கையின் இருந்தனள்.


கானல் வரி

கட்டுரை
வசந்த மாலை நீட்டித் தந்த குற்றமில்லாத யாழைத்தன் கையால் தொழுது வாங்கி, எண் வகையால் இசை எழுப்பி, பண்வகையால் குற்றம் களைந்து, “மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள், பயிர் வண்டின் கிளை போலப் பன்னரம்பின் மிசைப்படர” வார்தல் முதலாக ஓதப்படும் எட்டு வகை இசைக் கரணத்துப்பட்ட இசையினைச் செவியால் ஓர்ந் துணர்ந்து, “இப்பொழுது இதனை வாசி, என்று விதிக்கின்றேனல் லேன்; ‘வாசிக்கும் பாணி யாது?’ என்று அறியலுறுகின்றேன்” என்பவளைப் போல, மாதவி, அவ் யாழைக் கோவலன் கை நீட்டினள் “நீட்ட அவனும், காவிரியை நோக்கினவும், கடற் கானல் வரிப்பாணியும், மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்.”

ஆற்று வரி
திங்கள்1 மாலை வெண்குடையான்
 சென்னி செங்கோ லது 2வோச்சிக்
கங்கை தன்னைப் 3புணர்ந்தாலும்
 4புலவாய், வாழி காவேரி;
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
 புலவா தொழிதல், 5கயற் கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற் பென்று
 அறிந்தேன் வாழி காவேரி.

உழவரோதை மதகோதை உடை நீரோதை 1தண்பதங்கொள்
விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி!
விழவரோதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் 2வாய்காவா
மழவரோதை வளவன்தன் வளனே வாழி காவேரி!

முகச்சார்த்து வரி
3கரிய மலர்நெடுங்கண் காரிகைமுன்
 கடல்தெய்வம் காட்டிக் காட்டி4
அரிய சூள்5 பொய்த்தார் அறனிலர்என்று
 ஏழையம் யாங்கு அறிவோம், ஐய,
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
 ஆமென்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு 6ஆம்பல்
 பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர்.
மோது முதுதிரையால் மொத்துண்டு
 போந்தசைந்த 7முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் 8வண்டல்
 உழுதழிப்ப 9மாழ்கி, ஐய,
கோதை 10பரிந்தசைய மெல்விரலால்
 கொண்டோச்சும் குவளை மாலைப்
1போது சிறங் கணிப்பப் 2போவார் கண்
 போகாப் புகாரே எம்மூர்.

கானல் வரி
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத
 தோற்றம் 3மாய்வான்
4பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
 போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்கயற்கண்
 செய்த
5உறைமலி உய்யாநோய் 6ஊர்சுணங்கு
 மென்முலையே தீர்க்கும் போலும்.
7வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றில்
 மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுருவம்
 கொண்டு, வேறோர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம்
 வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன்; அறிவேனேல்
 அடையேன் மன்னோ.

நிலைவரி
கயலேழுதி வில்லெழுதிக் காரெழுதிக் *காமன்
செயலெழுதித் 1தீர்ந்த முகம் திங்களோ, காணீர்;
திங்களோ காணீர், 2திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கண்நேர் வானத்து 3அரவுஅஞ்சி வாழ்வதுவே.

புலவுமீன் வெள்ளுணங்கல்
 புள்ளோர்ப்பிக் கண்டார்க்கு
4அலவநோய் செய்யும் 5அணங்கு
 இதுவோ, காணீர்;
அணங்கு இதுவோ, காணீர்,
 6அடும்புஅமர் தண்கானல்
7பிணங்குநேர் ஐம்பாலோர்
 பெண்கொண் டதுவே.

முரிவரி
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே,
பழுதறு திருமொழியே, 8பணையிள வனமுலையே,
முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்இணையே
எழுதரு மின்இடையே, எனைஇடர் செய்தவையே.

வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே,
9தளைஅவிழ் நறுமலரே, தனியவள் திரிஇடமே,
10முறைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே,
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே.

திணை நிலைவரி
கடல்புக்கு 1உயிர் கொன்று வாழ்வர்நின் 2ஐயர்;
உடல்புக்கு உயிர்கொன்று வாழ்வைமன், நீயும்;
3மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்;
4இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
ஓடும் திமில்கொண்டு உயிர்கொல்வர் நின் ஐயர்;
5கோடும் புருவத்து உயிர்கொல்வை நீயும்;
பீடும் 6பிறர் எவ்வம் பாராய், முலைசுமந்து
வாடும் சிறுமென் 7மருங்குஇழவல் கண்டாய்.

வேறு
8பவள உலக்கை கையால் பற்றித்
9தவள முத்தம் குறுவாள் செங்கண்;
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய.

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
10புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்;
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
11வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.

வேறு
சேரல், மடவன்னம்! சேரல்; நடை ஒவ்வாய்
சேரல், மடவன்னம்! சேரல்; நடை ஒவ்வாய்;
1ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல், மடஅன்னம்! சேரல்; நடை ஒவ்வாய்.

(இவ்வண்ணம் கோவலன்) கானல்வரிப் பாடல் (பாடக்) கேட்ட மான்நெடுங்கண் மாதவியும், (இவன்பால் மன்னிய தொரு) குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான் என (உட்கொண்டு) கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ் வாங்கி, தானும் ஒர் குறிப்பினள்போல் கானல் வரிப் பாடற் பாணி, நிலத்தெய்வம் வியப்பெய்த, நீள்நிலத்தோர் மனம் மகிழக் 2கலத்தொடு புணர்ந்த மைந்த 3கண்டத்தால் பாடத் தொடங்குமன்.

ஆற்றுவரி
4மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
 மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி
 நடந்தாய்; வாழி காவேரி!
கருங்கயற்கண் விழித்தொல்கி
 நடந்த எல்லாம் நின்கணவன்
5திருந்து செங்கோல் வளையாமை
 அறிந்தேன் வாழி காவேரி!
வாழி அவன்தன் வளநாடு
 மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
 ஒழியாய் வாழி காவேரி,
ஊழி யுய்க்கும் பேருதவி
 ஒழியாது ஒழுகல் உயிரோம்பும்
1ஆழியாள்வான் பகல்வெய்யோன்
 அருளே வாழி காவேரி.

சார்த்து வரி
2தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய்
 மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும்
 3மால்மகன்போல் வருதிர், ஐய,
4வீங்கோதம் தந்து விளங்கொளிய
 வெண்முத்தம் 5விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு 6விலைஞர்போல்
 மீளும் புகாரே எம்மூர்.
உண்டாரை 7வெல்நறா 8ஊண் ஒளியாப்
 பாக்கத்துள் 9உறைஒன் றின்றித்
10தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பது
 யாங்கு அறிகோம், ஐய,
11வண்டால் திரைஅழிப்பக் கையால்
 மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய் 12வேல் நீர்மல்க மாதர்
 கடல்தூர்க்கும் புகாரே எம்மூர்.

திணைநிலை வரி
1புணர்துணையோடு 2ஆடும் பொறிஅலவன் நோக்கி
3இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
4வணர்சுரி ஐம்பாலோய்! 5வண்ணம் உணரேனால்.

6புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் 7உழவாய், துயிலப் பெறுதியால்.
8இன்கள்வாய் நெய்தால்! நீஎய்தும் கனவினுள்
9வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ.

வேறு
10புள்ளியல்மான் தேராழி போன வழியெல்லாம்
தெள்ளுநீர் ஓதம்! சிதைத்தாய்மற்று என்செய்கோ
11தெள்ளுநீர் ஓதம்! சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
12உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று என்செய்கோ.

நேர்ந்தநம் காதலர் 13நேமி நெடுந்திண்தேர்
ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்!
ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு
14தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால், வாழி கடலோதம்.

மயங்குதிணை நிலைவரி
நல் 1நித் திலத்தின் பூண் அணிந்து
 நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் 2பழனக் கழனிதொறும்
 திரையுலாவு கடல் சேர்ப்ப
புன்னைப் 3பொதும்பர் 4மகரத்திண்
 கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறைத்தால்
 அன்னை காணின், என்செய்கோ.

5புலவுற் றிரங்கி யதுநீங்கப்
 6பொழில் தண்டலையில் புகுந்துதிர்ந்த
கலவைச் 7செம்மல் மணம்கமழத்
 திரைஉ லாவு கடல்சேர்ப்ப,
பலவுற் றொருநோய் துணியாத
 8படர்நோய் மடவாள் தனிஉழப்ப
9அலவுற் றிரங்கி அறியாநோய்
 அன்னை அறியின் என்செய்கோ.

வேறு
10இளையிருள் பரந்ததுவே 11எல்செய்வான் மறைந்தனனே;
12களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளையவிழ் மலர்க்குழலாய் 1தணந்தார்நாட்டு உளதாம்கொல்.
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை!

பறவைபாட் டடங்கினவே,
 பகல்செய்வான் மறைந்தனனே;
2நிறைநிலா நோய்கூர
 நெடுங்கண்நீர் உகுத்தனவே.
3துறுமலர் அவிழ்குழலாய்!
 துறந்தார் நாட்டு உளதாம்கொல்,
4மறவையாய் என்உயிர்மேல்
 வந்தஇம் மருள்மாலை!

சாயல் வரி
5கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
6பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்;
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
7மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
8நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்;
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
9பொன்னேர் சுணங்கின் போவா ரல்லர்.

திணை நிலைவரி
அடையல், 10குருகே! அடையல் எம்கானல்;
அடையல், குருகே! அடையல் எம்கானல்;
உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு 1உறுநோய் உரையாய்
அடையல் குருகே! அடையல் எம்கானல்.

இவ்வாறு பாடிப் போந்த மாதவி மீட்டும் தன் மெல் விரலால் செவ்வழிப் பாலைப்பண்ணை இசைத்து வரிப் பாட்டுப் பாடினாள்.

முகமில் வரி
2நுளையர் விளரி 3நொடிதரும்தீம் பாலை
4இளிகிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
5கொளைவல்லாய் என்ஆவி கொள், வாழி, மாலை!!
6பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
7வையமோ கண்புதைப்ப வந்தாய், மருள்மாலை!
மாலைநீ ஆயின், மணந்தார் அவராயின்
8ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி, மாலை!!

வேறு
9தீத்துழைஇ வந்தஇச் 10செல்லல் மருள்மாலை
11தூக்காது துணிந்தஇத் 12துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கஎன்று
மாக்கடல் தெய்வம்! நின் மலரடி வணங்குதும்.

கட்டுரை
(என்று மாதவி பாடக் கேட்டு), யாழ் இசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்ததாகலின், (கோவலன்) யான் கானல் வரி பாட, (இவள்) தான் ஒன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள்; (இவள்) 1மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என, உவவுற்ற திங்கள் முகத்தா(ளாகிய அவளைக்) 2கவவுக்கை நெகிழ்ந்தனனாய், “ஈங்கும் பொழுது கழிந்தது; ஆதலின், எழுதும்” என்று (அவ)ளுடன் எழாது, (தான்மட்டில்) ஏவலாளர் உடன்சூழ்தரப் (போயினன்;) போன பின்னர், தாதவிழ் மலர்ச்சோலை 3ஒதையாய்த்து ஒலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக் காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள்.


வேனிற் காதை

“1நெடியோன் குன்றமும் 2தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் 3உறந்தையும்
4கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் 5மாரன் மகிழ்துணை யாகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்” என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
6இளங்கால் தூதன் இசைத்தனன்; ஆதலின்,
7மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகரறு கோலம் கொள்ளும்என் பதுபோல்,
கொடிமிடை சோலைக் 8குயிலோன் என்னும்
9படையுள் படுவோன் 10பணிமொழி கூற,
மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக், கூடாது ஏகிய
மாமலர் நெடுங்கண் மாதவி, விரும்பி,
வானுற நிவந்த மேல்நிலை மருங்கின்
1வேனிற் பள்ளி ஏறி, மாணிழை,
தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்,
கொங்கை முன்றில் குங்கும 2வளாகத்து
மையறு சிறப்பின் 3கையுறை ஏந்தி
4அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள்.

இந்த மதுர கீதம் செம்பாலை யென்னும் பண் என்பர். இதனை முதற்கண் கண்டத்தால் பாடி மயங்கி அதனையே யாழினும் பாடினள்; அதனாலும், தான் கோவலனைப் பிரிந்த துயர் வேனில் விருப்பால் மிகுவதால், ஆற்றாளாய், பலவகைப் பண்களையும் பாடினள். அவற்றாலும் அவளது துயர் நீங்கவில்லை. பின்பு ஒருவாறு தேறி, கோவலனுக்குத் திருமுக மொன்றெழுத மனத்தால் எண்ணினாள். உடனே, தாழைப் பூவினது வெள்ளியமடலை ஓலை நறுக்காகவும் 5பித்திகையின் கூறிய அரும்பை எழுத்தாணியாகவும் கொண்டு, செம்பஞ்சின் குழம்பில் தோய்த்து உதறி எழுதலானாள்.

மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
6அந்திப் போதகத்து 7அரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனும் 8செவ்விய னல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்
9தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ 10வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூ தன்றுஇஃது அறிந்தீ மின்எனத்

தன் ஆற்றாமைக்குறிப்பையும், தான் கற்ற நாடகக் கலைவகைகளுள் கோவலனோடுதான் கூறி இருந்தபோது அவன்பால் நிகழ்த்திக் காட்டிய 1வரிவகைகளையும் வாயாற் சொல்லிச் சொல்லி,

2விளையா மழலையின் விரித்துரை எழுதிப்
பசந்த மேனியள் படருறு மாலையின்
வசந்த மாலையை வருகஎனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்துக் 3கொணர்க ஈங்குஎன,

அவள் அதனை எடுத்துச் சென்றனள். கோவலன் கூலவீதியில் இருப்பக் கண்டு, அவள் அத் திருமுகத்தை அவன்பால் கொடுத்தாள். அவன் அதனைப் படித்து, வசந்தமாலையை நோக்கி, “நங்காய், இதனுட் கூறியுள்ள,

காதலில் தோன்றிய 4கண்கூடு வரியும்,
கருநெடுங் கண்ணி 5காண்வரிக் கோலமும்,
செருவேல் நெடுங்கண் 6சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த 7உள்வரி யாடலும்,
புறத்துநின் றாடிய 8புன்புற வரியும்,
கிளர்ந்துவே றாகிய 9கிளர்வரிக் கோலமும்,
தேர்ந்துதேர்ந் துரைத்த 10தேர்ச்சிவரி யன்றியும்,
கண்டவர்க் குரைத்த 1காட்சி வரியும்,
எடுத்தவர் தீர்த்த 2எடுத்துக்கோள் வரியும்
ஆடல் மகளே யாதலின், ஆயிழை!
3பாடு பெற்றனஅப் பைந்தொடி தனக்கு”

என உரைத்துத் தன் வாராமையும் சொல்லி விட்டான். அவன் மறுத்தது கண்ட வசந்தமாலை செயலற்று, மெலிவுமுற்றாள். பின்பு அவள் வாடிய உள்ளமுடன் விரைந்த மாதவிபால் சென்று, கோவலன் கூறியதும், மறுத்ததும் விரியக் கூறி, அவனை “அன்பில்லாதவன், கொடியன்; இனி, அவன் வாரான்” எனப் பழித்துரைத்தாள். அது கேட்கப் பொறாத மாதவி, நாடகக் கணிகை யாயினும் கற்பும் பொற்பும் சிறக்கப்பெற்றவளாதலால், வசந்த மாலைக்குத் “தோழி, அவரைக் கொடுமை கூறாதே; அருட் செல்வர்; அவர்,

மாலை வாரா ராயினும் மாணிழை,
காலைகாண் குவம்” எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்.


கனாத்திறம் உரைத்த காதை

மாலதி என்னுமொரு பார்ப்பனி தன் மாற்றாள் குழந்தைக்கு ஒரு நாள் சங்கு கொண்டு பால் ஊட்ட, அக் குழந்தை பால் விக்கி இறந்தது. அது கண்டு அஞ்சின அவள், சட்டென அதனை எடுத்துக் கொண்டு அமரர் தருக் கோட்டம் முதலாகப் பல்வகைக் கோட்டங் கட்கும் சென்று முடிவில் சாத்தனார் கோட்டத்தில் பாடு கிடந்தாள். அது காலை, இடாகினி என்னும் பேய் அக் குழந்தையை எடுத்து விழுங்கி ஒழிந்தது. மனம் இரங்கிய சாத்தனார் அவளைத் தேற்றிப் போகச் சொல்லி வழியில் தானே அக் குழந்தை உருவாய்க் கிடந்தார். அவள் மனத் துயர் நீங்கிற்று. அக் குழந்தையான சாத்தனார் வளர்ந்து கல்வி நிரம்பி, பெற்றோர்க்கு இறுதிக் கடன் செய்து, தேவந்தி என்னும் பெண்ணை மணந்து எட்டியாண்டு தன் மனைவியொடு வாழ்ந்து பழையபடியே தேவவுருக் கொண்டார். தேவந்தி அன்று முதலே அச் சாத்தனார் கோயிலை வழிபட்டு வருவாளாயினாள். இவளுக்கு கண்ணகி தன் கொழுநனைப் பிரிந்த தனால் துன்புறுவது தெரிந்தது. அதனால், அவளோடு நட்புற்று அவட்குத் தோழியாய் இருந்து வந்தாள். ஒரு நாள் தேவந்தி கண்ணகியின் முகம் நோக்கி, “நீ நின் கணவனது கூட்டம் பெறுக” என்று வாழ்த்தினாள். அதனால் கண்ணகிக்கு உவகையுண்டாயிற்றா யினும், “நீ கூறுமாறு யான் என் கணவனைப் பெறுவேன்; ஆனால்,

1கடுக்கும்என் நெஞ்சம் கனவினால்; என்கை
2பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுட் பட்டேம்;
பட்ட பதியில் படாத தொருவார்த்தை
இட்டனர் ஊரார், 3இடுதேள்இட்டு என்தன்மேல்,
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று; அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு
ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுஉண்டால்; 1உரையாடேன்;
2தீக்குற்றம் போலும், செறிதொடீஇ! தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற 3உறுவனோடு யான்உற்ற
4நற்றிறம் கேட்கின் நகையாகும்”

என்று தான் கண்ட கனாவின் திறத்தைக் கட்டுரைத்தாள்.
அதனைக் கேட்ட தேவந்தி,

5கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாள் பழம்பிறப்பில்; 6போய்க்கெடுக; உய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கும் 7முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானல் 8தடமுள;
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்;
9போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள் ஆடுதும்,

என்று சொன்னாள். அதற்கு, கண்ணகி, கற்புடை மகளிர் தம் கணவரை அன்றிப் பிற தெய்வங்களைக் கை தொழுதல் இலர் என்ற கருத்தால், அது “பீடன்று” என மறுத்திருந்தாள். இவ்வாறு இருக்கையில், வாயிலில் இருந்த ஏவலாட்டி வந்து, “காவலனாகிய கோவலன் வந்து நம் கடையகத்துள்ளான்” என்றாள். கண்ணகியும் விரைந்து சென்று முகமலர்ந்து வரவேற்றாள். அவளோடு இனிதிருந்த கோவலன், கண்ணகியின் வருந்திய நிலையும் வாடிய மேனியும் கண்டு பெரு வருத்தம் கொண்டு, நெஞ்சு கலுழ்ந்து,

1சலம்புணர் கொள்கைச் 2சலதியொ டாடிக்
குலம்தரு 3வான்பொருட் குன்றம் தொலைந்த
4இலம்பாடு நாணுத் தரும்எனக்கு

என்றான். மாதவிக்குக் கொடுக்கும் பொருள் குறைந்ததனால் இவ்வாறு இவன் தளர்ந்து கூறினான் என்று கொண்டு, கண்ணகி, “ஏனை அணிகலமெல்லாம் ஒழியினும், யான் அணியாது வைத் திருக்கும் சிலம்புகள் உள; அவற்றைக் கொண்டு செல்க” என்று பரிந்து கூறினாள். கோவலன் மனம் புண்பட்டு, “சேயிழை, கேள்: இச்

“சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
5உலந்தபொருள் 6ஈட்டுத லுற்றேன்; மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச் சென்று”

என்று சொல்லி, “பொழுது விடிதற்குள் போதற்கு நினைந்தேன்; நீயும் என்னோடு எழுக” என மொழிந்தான்.

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - 7மூதை
வினை கடைக் கூட்ட 8வியம்கொண்டான் கங்குல்
கனை 9சுடர் கால்சீயா முன்.


நாடுகாண் காதை

1வான்கண் விழியா வைகறை யாமத்து
2மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற 3கடைநாட் கங்குல்
ஊழ்வினை 4கடைஇ உள்ளம் 5துரப்பக்

கோவலன், கண்ணகி நல்லாளுடன் புகார் நகரத்தின் தோரண வாயிலைக் கடந்து, மணிவண்ணன் கோயிலை அடைந்து அவனை வலம் செய்து வணங்கி, புத்த தருமங்களை அந்தர சாரிகள் மறைய இருந்து ஓதுதற்காக இந்திரன் நிருமித்த இந்திர விகாரம் ஏழும் பொருந்திய புத்த சைத்தியத்தை அடைந்தான். அதன்பின் அருகன் கோயிலில் உள்ள பெருமன்றத்தில் நின்ற அசோக மரத்தின் நிழலில் 6உலக நோன்பிகள் இட்ட சிலாதலத்தைக் கண்டு தொழுது வலம் செய்து கொண்டு, ஊர் வாயிலைக் கடந்து, இருவரும்,

7கலையி லாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் 8மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
9இலவந் திகையின் எயிற்புறம் போகிக்

காவிரிக்குச் செல்லும் பெரு வழியைத் தொடர்ந்து சென்று, அதன் கரை வாயிலைச் சேர்ந்தனர்; பின்னர், காவிரியின் வடகரை வழியாக மேற்குத் திக்குநோக்கி ஆங்கே செறிந்திருந்த மலர்ப் பொழில்களினூடே ஒரு காவதம் நடந்து கவுந்திப் பள்ளியைக் கண்டடைந்தனர். அப் பள்ளியிற்சிறிதுபோது இருப்ப, கண்ணகி, கோவலனை நோக்கி, புன்முறுவலுடன், “மதுரை மூதூர் யாது?” என வினவ, அவன், “நல்லாய்! அது ஆறைங்காத அளவில் (முப்பது காத தூரத்தில்) உளது; சேய்த்தன்று, நணித்தே” என்றான். அவள் நகைத்து மகிழ, இருவரும் அப் பள்ளியின்கண் வாழ்ந்த கவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழுதனர். அவர்களைக் கண்ட கவுந்தி, மகிழ்ந்த உள்ளத்தளாய்,

உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும்
1பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர்! என்னோ, 2உறுக ணாளரின்
3கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறு?

என்று கேட்டனள். கோவலன், “உறுதவத்தீர், உரையாட்டு ஒன்றும் இல்லை. மதுரை மூதூர் சென்று பொருள் ஈட்டும் வேட்கை யுடையேன்” என்றான். “அது கருத்தாயின், நீவிர் நெறியின் அருமை அறிந்திலீர்; அது காடும் நாடும் இடையிட்டுப் பருக்கைகள் நிறைந்திருக்கும்; இவள் அதனைக் கடந்து போதற்கு வேண்டும் தன்மையுடையவளல்லள்; இனி ஊழ் என் செய்து முடிக்குமோ? அதனை அறிவார் யார்? அன்றியும் உயர்குடிப் பிறந்த நீ இவளை ஒருங்கு கொண்டு செல்வது ஏலாது, ஆதலால் செல்வதை ஒழிக எனின், நீவிர் ஒழிகின்றிலீர்” என்று முதற்கண் மொழிந்து, பின்பு,

“4மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டுஆங்கு 5அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
6ஒன்றிய உள்ள முடையேன்; ஆகலின்,
1போதுவல் யானும்; போதுமின்” என்ற
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
“அடிகள் நீரே அருளுதி ராயின், இத்
2தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேன்”

எனக் கோவலன் உவகை மிகுந்து கூறலும், கவுந்தி, “கோவல, நீ செல்லுதற்கு மேற்கொண்ட வழியின்கண் துன்பம் தருவன பலவும் உண்டு; கேள்” என்று வழியின் அருமைகளை எடுத்துக் கூறலானாள்.

3வெயில்நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப் 4படர்குவ மெனினே,
மண் 5பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த 6தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் 7போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் 8பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்தேம் 9பழம்பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் 10மயங்கரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் 11பரல்பகை உறுக்கும்;
கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ!
12வயலுழைப் படர்குவம் எனினே, ஆங்குப்
13பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி
நீர்நாய் கௌவிய 1நெடும்புற வாளை
2மலங்குமிளிர் 3செறுவில் விலங்கப் பாயின்
கலங்கலும் உண்டுஇக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் 4அறிவஞர் எய்திக்
குடங்கையின் 5நொண்டு கொள்ளவும் கூடும்;
6குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்;
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
7பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
8ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணில்
9தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா;
வயலும் சோலையு மல்லது யாங்கணும்
10அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை
11நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறியறிந்து அவையவை குறுகாது ஓம்புஎனச்

சொல்லித் தோளில் துகிலும், கையில் பிச்சைப் பாத்திரமும் மயிற்பீலியும் கொண்டு “12மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாக” என்று புறப்பட்டனர்.
வழியில், காவிரியின் புதுநீர்ப் பெருக்கு மதகுகளில் முடுகி யேகும் ஓசையும், வயல்களில் கம்புட்கோழியும், நாரையும் பிறவுமாகிய புள்ளினங்களின் ஒலியும்,

1கருங்கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்குநின் றார்க்கும் ஒலியே அன்றியும்,
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் 2கடைசியர்
வெங்கள் 3தொலைச்சிய விருந்திற் பாணியும்,
பார்உடைப் பனர்போல் 4பழிச்சினர் கைதொழ
ஏரோடு நின்றோர் 5ஏர்மங் கலமும்,
6பெருஞ்செய்ந் நெல்லின் 7முகவைப் பாட்டும்,
தெண் 8கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
9மண்கனை முழவின் மகிழிசை யோதையும்,

கேட்டவண்ணம் சென்ற இம் மூவரும் சில ஊர்களைக் கடந்து சென்றனர். அங்கே, மறையோர் இருக்கையும்,

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் 10புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்

கண்டு மகிழ்ந்தனர். ஆயினும், இவ்வாற்றால் இவர்கள் ஒரு காவதமே செல்ல முடிந்தது. முடிவில் ஆற்றிடைக்குறை ஒன்று இவர்கள் முன் தோன்றிற்று. அதனருகே வானவர் உறையும் பொழிலொன்று இருந்தது. அதன்கண், உலக நோன்பிகள் இட்ட சிலாதலம் ஒன்று காணப்பட்டது. அதன் மேல் தருமம் உரைக்கும் சாரணர் தோன்ற, அவர் திருவடிகளில் இம் மூவரும் வீழ்ந்து வணங்கினர். இவருள் கோவலனும் கண்ணகியும்,

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
1சிந்தை விளக்கில் தெரிந்தோ னாயினும்
ஆர்வமும் 2தெற்றமும் 3அகல நீக்கிய
வீரனாகலின் 4விழுமம் கொள்ளான்;
கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி! காணாய்.
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை,
5இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா;
6கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்

என்று மொழிந்து, அருக தேவனது பலவேறு சிறப்பியல்பு உரைக்கும் பெயர்களைப் பலபட ஓதிப் புகழ்ந்து, “அப்பெருமான் ஓதிய வேதவொளி உறின் அல்லது, பிறவியாகிய இருட்டறைப் பட்டவர் அதனினின்றும் விடுபட்டுப் போதார்” என்று கூறினர்.

சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி, கைதன் தலைமேற் கொண்டு,
ஒரு 7மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லது என் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா;
8ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
9கைவரைக் காணினும் காணா என்கண்;
அருள் அறம் பூண்டோன் திருமெய்க் கல்லதுஎன்
1பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது;
அருகர் அறவன் அறிவோற் கல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா;
2மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதுஎன்
தலைமிசை யுச்சி தான் 3அணிப் பொறாஅது;
இறுதியில் இன்பத்து இறைமொழிக் கல்லது
4மறுதர வோதிஎன் மனம்புடை பெயராது,

என்று கவுந்தியடிகள் பரவிக் கூறவே, சாரணர் நிலத்திலிருந்து ஒரு முழ வுயரம் அந்தரத்தே நின்று, “பவந் தருபாசம் கவுந்தி கெடுக” என்று உரைத்துவிட்டு வானவீதியிற் படர்ந்தனர்.

பின்னர், கவுந்தியடிகளொடு கோவலனும் கண்ணகியும் ஓடமேறி ஆற்றைக் கடந்து காவிரியின் தென்கரையை அடைந்து, ஒரு பூம் பொழிலில் இருந்தனர். அங்கே, வம்பப் பரத்தையொருத்தி யுடன் வறுமொழியாளன் ஒருவன் வந்து, கோவலனையும் கண்ணகி யையும் கண்டு வியந்து,

காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்? எனக் கேட்டு 5ஈங்கு அறிகுவம் என்றே
6நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீர்! உடன்
7ஆற்றுவழிப் பட்டோர் ஆர்? என வினவ, என்
மக்கள்; காணீர், மானிட யாக்கையர்;
8பக்கம் நீங்குமின், 9பரிபுலம் பினர்என,
10உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந் தீர்எனத்
1தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,

கவுந்தியடிகள் கண்டு, “இவர்கள் என் பூங்கோதையாகிய கண்ணகியை இகழ்கின்றார்கள் போலும்; இவர்கள் முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகுக” எனச் சாபம் தந்தார். குறுநரியாகிய அவ்விருவரும் ஊளையிடத் தொடங்கினர். அதனால்,

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
2நெறியின் நீங்கியோர் 3நீரல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய்தவத் தீர்!நும் திருமுன் பிழைத்தோர்க்கு
4உய்திக் காலம் உரையீ ரோ?என,
அறியா மையின்நின்று இழிபிறப் புற்றோர்
உறையூர் 5நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை யுருவம் பெறுகஈங்கு இவர்எனச்

6சாப விடை செய்து இருவரும் பின்தொடர்ந்துவரக் கவுந்தியடிகள் உறையூருக்குப் போய்ச் சேர்ந்தனர்.
முதலாவது புகார்க் காண்டம் முடிந்தது.

மதுரைக் காண்டம்


காடுகாண் காதை

இவ்வாறு உறையூரை யடைந்த கோவலனும் கண்ணகியும், கவுந்தியடிகளும், அங்குள்ள,

1திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் 2திகழொளி சிறந்து,
3கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
4ஆதியில் தோற்றத்து 5அறிவனை வணங்கி,

அவனது கோயிலில் இருந்த சமண முனிவர்களைக் கண்டனர். அவர்கட்கு ஆற்றிடைக் குறையில் சாவகர் இட்ட சிலாதலத்தின் மேல் இருந்துகொண்டு, சாரணர் சொன்ன அறவுரைகளைக் கவுந்தியடிகள் உரைத்தனர். அன்று பகற்போது கழியவே, இம் மூவரும் அப் பள்ளியிலேயே இரவுப் பொழுதையும் கழித்தனர். மறுநாட் காலையில் வெய்யவன் கீழ்த் திசையில் விளங்கித் தோன்ற, இம் மூவரும் செல்லத் தொடங்கி, நெடிது சென்றனர். வழியில், இளமரக் காவொன்று அவர் கண்ணெதிரே தோன்றிற்று. அவ் விடத்தை அடைந்து இவர்கள் இருக்கும்போது, மறையவன் ஒருவன்,

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழி உலகம் காக்க;
1அடியில் தன்அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடிவேல் எறிந்த 2வான்பகை பொறாது
3பஃறுளி யாற்றுடன் பல்மலை யடுக்கத்துக்
4குமரிக் கோடும் 5கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.
6செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்குஒளி மார்பில் 7பூண்டோன் வாழி.
8மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க,

என்று பாண்டி நாட்டு வேந்தனான தென்னவனை வாழ்த்திக் கொண்டே வந்திருப்பதைக் கண்டனர். அவனைக் கோவலன் பார்த்து, “உமது ஊர் யாது? நீவிர் இங்கே வருவானேன்?” என வினவினன். அம் மறையவன்,

நீல மேகம் நெடும்பொன் குன்றத்துப்
9பால்விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்துஎழு 10தலையுடை அருந்திறல்
பாயல் பள்ளிப் பலர்தொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி 11வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்,
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஒங்கிய 1இடைநிலைத் தானத்து
2மின்னுக்கோடி உடுத்து விளங்குவில் பூண்டு
3நல்நிற மேகம் நின்றது போலப்
4பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்,
5தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
6பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

காணவேண்டும் என்னும் ஆசை செலுத்த, யான் குடமலை நாட்டிலிருந்து வருகின்றேன். யான் அந்த நாட்டிலுள்ள மாங்காடு என்னும் ஊரில் இருப்பவன். மேலும்,

தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
7கண்மணி குளிர்ப்பக் கண்டேன்; ஆதலின்
வாழ்த்திவந்து இருந்தேன்; இதுஎன் வரவு,

என்று கூறினன். அது கேட்டுக் கோவலன், “மாமறை முதல்வ, மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறி யாது? கூறுக” என்றான். மறையோன், நெறி கூறலுற்று,

8கோத்தொழி லாளரொடு கொற்றவன் 9கோடி
10வேத்தியல் இழந்த வியல்நிலம் போல
1வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான் 2நலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்த நடுங்குதுயர் 3உறுத்துப்
பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர், 4காரிகை தன்னுடன்;

வழியில் கற்பாறைகளும், பொத்தை மலைகளும், ஊறு செய் விலங்கும், 5ஏற்றிழிவும் உடைய சிறுவழிகளும் உண்டு. இவற்றை முறையே கடந்து சென்றால், கொடும்பாளூர், நெடுங்குளம் என்னும் இரண்டுக்கும் நடுவே ஏரியொன்று இருப்பக் காண்பீர். அவ் வேரியின் கரையைக் கடந்து சென்றால், பிறை யணிந்த இறைவன் கையில் ஏந்திய மூவிலைச் சூலம் போல மூன்று கிளை வழிகள் பிரியக் காணலாம். அவற்றுள் வலம்படக் கிடந்த வழியாகச் செல்வீராயின் அது கடத்தற்கரிய சுரத்திடைக் கொண்டு செல்லும். அதன்பின் அவ்வழியில் சிறிது சேய்மைக்கண் சென்றவிடத்து,

வாழையும் கமுகும் காய்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் 6சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்;
அம்மலை வலம்கொண்டு அகன்பதிச் செல்லுமின்.

அவ் வழியைத் தொடராது, 7இடம்படக் கிடந்த நெறியிற் செல்லின், நீவிர் திருமால் குன்றமாகிய அழகர் மலையை அடைவீர் கள். அவ்விடத்தே,

8பெருமால் கெடுக்கும் 9பிலம்உண்டு; ஆங்கு,
விண்ணோ ரேத்தும் 10வியத்தகு மரபின்
புண்ணிய சரவணம் பவகா ரிணியோடு
இட்ட சித்தி எனும் 1பெயர் போகி,
2முட்டாச் சிறப்பின் மூன்றுஉள; ஆங்கு,

புண்ணிய சரவணத்தைப் பொருந்துவீராயின், இந்திரன் செய்த ஐந்திர வியாகாரணத்தை அறிந்து கொள்வீர்கள்; பவகாரிணியில் மூழ்கினால், நீவிர் நுமது பழம் பிறப்பை அறிவீர்கள்; இட்டசித்தி என்பது மூழ்கினார் விரும்பிய அனைத்தும் விரும்பியவாறே பெறுவிக்கும். பின்பு அங்கே காணப்படும் பிலத்துட் செல்ல விரும்பின், அருகிலுள்ள மலைமேல் இருக்கும் பெரூமான் திருவடி களை மனத்தே கொண்டு, அத் திருமலையை மும்முறை வலம் வருதல் வேண்டும். அவ்வாறு வரின், அங்கே ஓடும் 3சிலம்பாற்றின் கரையில், வரோத்தமை என்பவள் நும் கண் முன்னே தோன்றி,

இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும்,
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றிஒர்
4செம்மையில் நிற்பதும் செப்புமின், நீயிர்; இவ்
5வரைத்தாள் வாழ்வேன்; வரோத்தமை என்பேன்;
6உரைத்தார்க்கு உரியேன்; உரைத்தீ ராயின்,
7திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவு

என்பள். அவட்கு அவள் கேட்ட முறையே பொருள் நலமும் அறவினைச் சிறப்பும், வீடுபேற்றியல்பும் விரித்துக் கூறுவீராயின், பிலவழிக்கு வேண்டும் கதவைத் திறந்து வழி காட்டுவாள். அவ் வழியே செல்லின், சேய்மைக்கண் இரட்டைக் கதவு ஒன்று உங்கட்குத் தோன்றும். அதனை அடையின், ஆங்கே ஒருத்தி தோன்றி,

1இறுதியில் இன்பம் எனக்குஈங்கு உரைத்தால்,
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருள், எனும்;
உரையீ ராயினும் 2உறுகண் செய்யேன்;
3நெடுவழிப் புறத்து நீக்குவன் நும்எனும்.

ஒருகால் யாவரேனும் அவள் கேட்பதனை உரைத்தால் அவர் களை முன்பு கூறிய புண்ணிய சரவணம் முதலிய மூன்றனையும் காட்டி விரும்பியது செய்க என்று சொல்லி நீங்குவள்; நீவிரும் அவளால் அம் மூன்றும் காட்டப்பட்டு, ஐந்தெழுத்தும் எட்டெழுத்து மாகிய மறைமொழிகளுள் விரும்பிய தொன்றை நினைத்து வாயால் மொழிந்து, அவற்றுட் படிவீராயின், மலைமிசை இருக்கும் பெரியோன் திருவடியைப் பொருந்துவீர்கள்.

4உள்ளம் பொருந்துவீ ராயின், மற்றுஅவன்,
5புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றிய பின் அவன் துணைமலர்த் 6தாள்இணை,
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி,
7மாண்புடை மரபின் மதுரைக்கு ஏகுமின்.

என்று சொல்லி, இதுவே அப் பிலவழியின் காட்சி என்று சொன்னான். இதற்கு மேலும் சொல்லலுற்ற அம்மறையவன், “இதனையும் நீவிர் விரும்பீராயின் இடையே யுள்ள வழியே சென்மின்; அதுவே செவ்விய நெறி. வழியில் நாடுகளும் ஊர்களும் பலவுண்டு; அரிய வழிகள் சிலவும் காணப்படும். அவ்வருவழியில், மிக்க துயர் செய்யும் தெய்வமும் ஒன்று உண்டு. அது வழிப்போவார்க்கு வெளிப்படையாக யாதொரு தீங்கும் செய்யாது. நயந்தோன்ற நடித்துப் போகின்றவர்களைப் போகா வண்ணம் செய்துவிடும்; அதனைத் தப்பிச் செல்லின், மதுரைப் பதியை எளிதில் இனிது அடைவீர்கள். யானும், திருமாலை வழிபடச் செல்கின்றேன்,” என்று சொல்லிச் செலவுபெறச் சமைந்தான். அவன் கூறியவற்றை இதுகாறும் மிக்க அமைதியுடன் கேட்டுக் கொண்டே வந்த கவுந்தியடிகள்,

1நலம்புரி கொள்கை நான்மறை யாள,
பிலம்புக வேண்டும் 2பெற்றிஈங்கு இல்லை;
இறந்த பிறப்பில் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பில் காணா யோநீ;
3வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்;
4காமுறு தெய்வம் கண்டு அடிபணிய
நீபோ; யாங்களும் 5நீள்நெறிப் படர்குதும்,

என்று மொழிந்தனர்; மறையவனும் போய்ச் சேர்ந்தான். பின்னர் மூவரும் மதுரைக்குரிய வழியே நடக்கலுற்றனர்; அன்றைய போது வேறோர் அரிய ஊரின்கண் தங்கியிருந்து, அடுத்தநாட் காலையில் செல்வாராயினர். போம் போது வெயில் மிக்கது; ஏனை இருவர்க்கும் நீர் வேட்கை மிக்கது. கிளைவழி ஒன்றைக் கோவலன் பின்பற்றிச் சென்று ஒரு பொய்கைக் கரையை அடைந்தான். அங்கே ஒரு தெய்வம், மாதவியின் தோழியான வசந்தமாலைபோல் உருக்கொண்டு போந்து, மாதவியின் உட்கோளைக் கண்டு கூறுவது போல, நயமொழிகளை முதற்கண் சொல்லி,

“6மேலோ ராயினும் 7நூலோ ராயினும்
8பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு 1பிறக்கிட் டொழியும்
கணிகையர் 2வாழ்க்கை கடையே 3போன்ம்,”

என மாதவி மனம் அழிந்து வாழ்க்கையில் வெறுப்படைந்து என்னையும் விலக்கிவிட்டாள்; யானும் நீவிர் மதுரைக் கேகுவது கேள்வியுற்று, வாணிகச் சாத்தோடு தனியே வந்து துயருழந்தேன்; எனக்கு யாது பணிக்கின்றாய்? என்று கேட்டது. “இது ஒருகால் அம் மறையோன் சொன்ன மயக்கும் தெய்வமோ” எனக் கோவலன் ஐயுற்றுத் தன் நாவினால் ஒரு மறைமொழியைச் சொல்லவே, தெய்வம் தன் உண்மை வடிவு காட்டி,

4வனசா ரிணியான்; மயக்கம் செய்தேன்;
5புனமயில் சாயற்கும் 6புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையாது எகுக,

என்று சொல்லிவிட்டு ஏகியது. கோவலன், அப் பொய்கை நீரைக் கவுந்தியடிகட்கும், கண்ணகிக்கும் கொடுத்து நீர் வேட்கையைப் போக்கினன். பின்னர், வேனில் வெப்பம் மிகுவது கண்டு, “இக் கொடிய சுரத்தில் இனிச் செல்வது பொருந்தாது” என்று தேர்ந்து,

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்,
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
7ஆரிடை அத்தத்து இயங்குநர் அல்லது,
மாரி வளம்பெறாஅ 8வில்லேர் உழவர்
1கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
2வேற்றுப் புலம்போகிநல் 3வெற்றம் கொடுத்து,
4கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
5விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,
மையறு சிறப்பின் 6வான நாடி

யாகிய 7ஐயைக் கோட்ட மடைந்து அங்கே தங்குவாராயினர்.


வேட்டுவ வரி

கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியுமாகிய மூவரும் ஐயைக் கோட்டத்தில் ஒரு புறத்தே தங்கியிருந்தனர். அக்காலம் வேனிற்காலம். வெயிலவனது வெப்பம் தாங்குதற்கு அரிதாயிருந்தது. வழிப்பறி செய்யுங் கள்வர் கூட்டமும் வழிச்செல்வோர் இல்லாமை யால் தத்தம் சேரியில் மடிந்து கிடந்தது. களவே புரிந்து வாழும் வேட்டுவர், தமக்குக் களவு வாய்க்காமையால் வறுமை மிக்கு வருந்துவாராயினர். அதுபோது,

1வழங்குவில் தடக்கை 2மறக்குடித் தாயத்துப்
3பழங்கடன் உற்ற 4முழங்குவாய்ச் சாலினி
தெய்வம் உற்று 5மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப
1இடுமுள் வேலி எயினர்கூட்டு உண்ணும்
நடுவூர் மன்றத்து 2அடிபெயர்த்து ஆடி,

“எயினர்களே, ஆறலைத்தல், சூறையாடுதல், ஆகோடல் முதலிய உங்கட்கு முறைமையான தொழில்கள் இப்போது வாய்க்காமை யால் நீவிர் வறுமையுற்றீர்கள். உங்கள் சிலைக்கு வெற்றி தந்த கலையூர் செல்விக்கு நீவிர் உயிர்ப்பலி தாரா தொழிந்தீர்கள். உங்களுடைய 3களவேர் வாழ்க்கை முன் போல வளம் பெற வேண்டுமாயின், இப்போதே அவட்குரிய கடனைக் கொடுமின்” என்று சொன்னாள். அது கேட்ட எயினர் அதற்கு உடம்பட்டு, அச் சாலினியின் கூந்தலைச் சடையாகப் பின்னி, வெள்ளிய கயிற்றால் கட்டி, பன்றியின் கடைவாய்ப் பல்லைப் பிறைபோலச் சூட்டி, கழுத்திற்குப் புலிப்பல் கோத்த தாலியணிந்து, புலித்தோலை மேகலையாக உடுத்து, வலிய வில்லொன்றை அவள் கையில் கொடுத்து, முறுக்குண்ட கொம்பையுடைய கலைமான்மீது ஏற்றி, கொட்டும், பறையும், கொம்பும், குழலும் முழங்கி, முன் செல்ல, அவர் நடுவே, அச் சாலினி, கலைமான்மீது ஏறிவர,

4வண்ணமும் சுண்ணமும் தண்நறும் சாந்தமும்
5புழுக்கலும் 6நோலையும் 7விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய 8விரையும்

எயினர் மகளிரான எயிற்றியர் ஏந்திக்கொண்டு பின்னே வர, ஐயைக்கோட்டம் அடைந்தனர். அங்கேயுள்ள பலி பீடிகையின் முன் அவளைக் கொணர்ந்து நிறுத்தித் தாம் கொண்டு போந்த பொருள்களை அப் பீடிகையில் வைத்து எயினர் அனைவரும் ஐயையைக் கைதொழுது ஏத்தினர். அப்போது, கலையேறி வந்த சாலினி, தெய்வ மருள்கொண்டு ஒருபுறத்தே இருந்த கண்ணகியைக் கண்டு, அங்கு நின்ற எயினர்க்குக் காட்டி,
இவளோ,

1கொங்கச் செல்வி, 2குடமலை யாட்டி
3தென்தமிழ்ப் பாவை செய்ததவக் கொழுந்து,
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
4திருமா மணி

என்று உரைத்தனள். அதனைக் கேட்டதும் கண்ணகி நாணி, “5பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி” என்று தன் கணவனது பின்புறத்தே ஒடுங்கித் தலைகவிழ்ந்து புன்னகை செய்து நின்றாள். இனி, அச் சாலினியைச் சூழநின்ற எயினர் அவள் பூண்ட ஐயைக் கோலம் நன்கு பொருந்தி இருப்பக் கண்டு வியந்து, அவளை ஐயையாகவே கருதி, அச் செல்வியின் பலவகைப் புகழையும் எடுத்தோதி,

“6வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை,
7இரண்டுவேறு உருவின் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல், பலர்தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, 8மாலவற்கு இளங்கிளை,
9ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்
1பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை,
2ஆய்கலைப் பாவை, 3அருங்கலப் பாவை

இவ்வெயின இளமகள்மீது எழுந்தருளி எமக்கு அருளினள்” என்று மிக்க வியப்போடு சொல்லிக்கொண்டனர். பின்பு அவர்கள் பல பாட்டுக்களைப் பாடலாயினர்.

முன்றிற் சிறப்பு
4நாகம் நாறும் 5நரந்தை 6நிரந்தன;
7ஆவும் ஆரமும் ஓங்கின; எங்கணும்
8சேவும் மாவும் செறிந்தன; கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பவி முன்றிலே.
9செம்பொன் வேங்கை சொரிந்தன; சேயிதழ்
கொம்பர் நல்இல வங்கள் குவிந்தன;
10பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு ; இளம்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே.

11வள்ளிக் கூத்து
கொற்றவை கொண்ட 12ஆணிகொண்டு நின்றஇப்
13பொற்றொடி மாதர் தவம்என்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
வில்தொழில் வேடர் குலனே குலனும்.

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றஇவ்
1ஆய்தொடி நல்லாள் தவம்என்னை கொல்லோ,
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
2வேய்வில் எயினர் குலனே குலனும்.

3முன்னிலைப் பரவல்
ஆனைத்தோல் போர்த்துப் 4புலியின் உரிஉடுத்துக்
கானத்து 5எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்;
வானோர் வணங்க 6மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் 7நடுக்கின்றி யேநிற்பாய்.

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
8செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்;
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் 9மறைஏத்த வேநிற்பாய்.

இவ்வண்ணம் கொற்றவையைப் பரவிய எயினர், இனிக் கூத்து வகையால் அவளைப் பரவத் தொடங்கி 10வென்றிக்கூத்து, 11கூத்துள்படுதல் முதலியன பாடி, பின் வரும் கொற்றவைநிலை முதலியவற்றைப் பாடினர்.

1கொற்றவை நிலை
2உட்குடைச் சீறூர் ஒருமகன்
 ஆனிரைகொள்ள உற்ற காலை
வெட்சி மலர்புனைய 3வெள்வாள்
 உழத்தியும் வேண்டும் போலும்.
வெட்சி மலர்புனைய வெள்வாய்
 உழத்தியும் வேண்டின், வேற்றூர்க்
கட்சியுள் 4காரி கடியகுரல்
 இசைத்துக் காட்டும் போலும்.
5கள்விலை யாட்டி மறுப்பப் 6பொறாமறவன்
 கைவில் ஏந்திப்
7புள்ளும் வழிப்படரப் 8புல்லார் நிரைகருதிப்
 போகும் போலும்;
புள்ளும் வழிப்படரப் புல்லார்
 நிரைகருதிப் போகும் காலைக்
கொள்ளும் கொடிஎடுத்துக் கொற்றவையும்
 9கொடுமரம்முன் செல்லும் போலும்.
10கொடை என்னும்

துறைப்பாட்டு மடை
11முருந்தேர் இளநகை காணாய், நின்ஐயர்
12கரந்தை அலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் 1வேய்தெரி கானவன்
2புள்வாய்ப்பு சொன்ன கணிமுன்றில் நிறைந்தன.

3கயமலர் உண்கண்ணாய், காணாய், நின்ஐயர்,
அயலூர் அலற உறிந்தநல் ஆனிரைகள்
4நயனில் மொழியின் 5நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன.

6அவிப்பலி
7சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
8அடல்வலி எயினர்நின் அடிதொடு கடன்இது
9மிடறுஉகு குருதிகொள் விறல்தரு விலையே.

துடியொடு சிறுபறை 10வயிரொடு துவைசெய
11வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி அனையவர் குமரிநின் 12அடிதொடு
படுகடன் இஃதுஒரு பலிமுக 13மடையே.

1பலிக்கொடை
துண்ணென் துடியொடு 2துஞ்சூர் எறிதரு
3கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்;
4விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்.

5பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும்
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்;
6மருதில் நடந்துநின் மாமன் செய் 7வஞ்ச
உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்.

இவ்வாறு கொற்றவையைப் பரவிய வேட்டுவர் முடிவில் தங்கள் பாண்டிநாட்டு வேந்தனான பாண்டியன், “வெட்சி சூடி மேம்படுவானாக” என வேண்டி நின்றனர்.


புறஞ்சேரி இறுத்த காதை

கொற்றவைக் கோலம் பூண்டு வேட்டுவ மகள் கூத்தாடிப் பல பாட்டுப் பாடி, வேட்டுவர் சூழ அக் கொற்றவையைப் பரவி நீங்கிய பின்பு, கோவலன் கவுந்தியடிகளை வணங்கி, “இக் கண்ணகி, கடு வெயில் நின்ற இவ் வேனில் வெப்பத்தைப் பொறாள்; இவளுடைய மெல்லிய அடிகள் இத்தகைய வழிகளை நடந்தறியாதவை.

வெங்கானத்துக்
1கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா;
2வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா;
அரவும் 3சூரும் இரைதேர் முதலையும்
4உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா;
செங்கோல் தென்னவர் காக்கும் நாடுஎன
5எங்கணும் போகிய இசையோ பெரிதே;

ஆதலால், பகற்போதிற் செல்வதிலும் இரவுப்போதிற் செல்வது நன்று” என்று இரந்து கூறினன். கவுந்தியடிகளும் அதற்கு இசைந்தனர். பகற்போது மெல்லக் கழிவதாயிற்று,

கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
1படுங்கதிர் அமயம் பார்த்திருந் தோர்க்குப்
2பன்மீன் தானையொடு பால்கதிர் பரப்பித்
3தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
மலையத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால்நிலா வெண்கதிர் 4பாவைமேல் சொரிய

மூவரும் மதுரைக்கேகும் வழியைப்பற்றிச் செல்லத் தொடங்கினர். வழியில், கூகைகள் குழறின; கொடுவரிப் புலிகள் குழுமித் திரிந்தன. ‘அவற்றிற்கு அஞ்சவேண்டா’ எனத் தகுவன கூறிக் கண்ணகியைத் தெருட்டி, கோவலன், கவுந்தியடிகள் அருளிய அறவுரைகளைக் கேட்டுக்கொண்டே இனிது சென்றனன். விடியற்போதில், மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரின் புறத்தே இருந்த தக்க இடத்தை அடைந்து தங்கினர். அது நல்ல சேமமுள்ளதோர் இடமாதல் கண்டு தெளிந்த கோவலன், அவர்களை அவ்விடத்தே இருத்தி, தான்மட்டில் காலைக்கடன் கழிப்பது குறித்து, அவர் இருந்த இடத்தைச் சூழவிருந்த முள் வேலியை நீக்கிக்கொண்டு நீர் நிலை யொன்றை நாடிச் சென்றான். அவன் சென்றவிடத்தே, கவுசிகன் என்னுமொரு பார்ப்பான் கோவலனைக் கண்டான். அவன் கோவலனைக் காவிரிப்பூம் பட்டினத்தே நன்கு அறிந்தவன்; மாதவியால் கோவலன் இருக்கை நாடி அறிந்துவரும் பொருட்டுச் செலுத்தப்பட்டவன். அவன் கோவலனைக் கண்டதும், அவனது மேனி வேறுபாட்டால் முதற்கண் மயங்கி, உண்மை அறிதல் வேண்டி, அங்கேயிருந்த மாதவிக் கொடியை நோக்கி, தான் சொல்வது அக்கோவலன் செவியிற் படுமாறு,

கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
1மாமலர் நெடுங்கண் மாதவி போன்றுஇவ்
2அருந்திறல் வேனிற்கு அலர்களைந்து உடனே
வருந்தினை போலும், நீ, மாதவி!

என்று கூறினன். அது கேட்டு வியப்புக் கொண்ட கோவலன், “நீ யாது கூறினை?” என்றனன். எனவே, கோசிகன், கோவலனை உண்மைக் கோவலனே எனத் தெளிந்து, கோவலன் பிரிந்து வந்தபின் காவிரிப்பூம் பட்டினத்து நிகழ்ந்தது கூறலுற்று, கோவலனது பெற்றோர் துயர்நிலை, சுற்றத்தவர் நிலை, ஊரவர்நிலை, மாதவியின் துயர்நிலை ஆகிய இவற்றைக் கூறி, “வயந்த மாலையால் நின் பிரிவு அறிந்ததும், மாதவி 3சேக்கைப் பள்ளியில் மயங்கி வீழ்ந்தாள். அதனைக் கேள்வி யுற்ற யான் விரையச் சென்று அவள் திருவடி தொழுதேன்; ‘கண்மணியனையாற்குக் காட்டுக’ என்று முடங்கல் ஒன்று எழுதி என் கையில் தந்து நின்னிடம் சேர்க்க எனக் கொடுத் தாள்” என்று சொல்லி, அம் முடங்கலையும் கோவலன் கையில் நீட்டினன். அதன்பால் மாதவி இட்டிருந்த கூந்தற் பொறியால் அவளது மனத்தூய்மையை உணர்ந்து, கோவலன், அதனைக் கை நெகிழாது விரித்துக் காணலுற்றான். அதன்கண்,

அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்;
4வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
5குரவர்பணி யன்றியும் 6குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் 7கழிதற்கு என்பிழைப்பு; அறியாது
கையறும் நெஞ்சம்; 1கடியல் வேண்டும்;
2பொய்தீர் காட்சிப் புரையோய்! போற்றி

என்று மாதவி எழுதிய எழுத்து இருப்பக் கண்டு, “மாதவி சிறிதும் தீதிலள்; யானே தீதுடையேன்; மேலும், என் பெற்றோர்க்கு யான் எழுதவேண்டிய பொருளுரையும் இதன்கண் 3பொருந்தியுளது; இதனை இவர்பால் சென்று காட்டுக; மாசில் குரவர் மலரடி தொழுதேன்” என்றும் பிற தகுவனவும் சொல்ல, அக் கோசிகன் விடைபெற்று நீங்கினன். கோவலன் கண்ணகியும் கவுந்தியடிகளு மிருந்த சூழலுக்கு வந்தான். அவ்விடத்தே கொற்றவையைப் பரவிப் பாடும் அம்பணவர் என்னும் ஒருவகை இசைப்பாணர் வந்திருந்தனர். அவரோடு தானும் ஒருவனாக இருந்து, காந்தாரம் என்னும் பண்ணும் திறமும் பொருந்தப் பாடி, “இவ்விடத்திற்கு மதுரை இனியும் எத்துணைக் காவதம்?” என்று வினவினன். அவர்கள், “மதுரை நகர்க்கண் அகில் சந்தனம் முதலியவற்றின் சேற்றில் படிந்து, சண்பகம், கழுநீர் முதலிய பூ விரித்த பூவணையிற் பொருந்தி, அட்டிற்புகை, அங்காடியில் எழும் 4மோதகப் புகை, மாட மாளிகைகளில் மைந்தரும் மகளிரும் எடுத்த தீம்புகை, ஆகுதிப் புகை முதலாய பல வேறு பூம்புகை விரவி, பாண்டியன் கோயிலில் கூட்டப்படும் கலவைச் சாந்தின் நறுமணங் கமழ்ந்து,

புலவர் செந்நாப் பொருந்திய 1நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது, காணீர்!
நனிசேய்த் தன்றுஅவன் 2திருமலி மூதூர்;
3தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்”

என்று மொழிந்து நீங்கினர். அற்றைப் பகற்போதை அங்கே கழித்த இம் மூவரும் இரவில் செல்லத் தொடங்கினர். மதுரை மூதூரெல்லையைக் குறுகுங்கால், இரவும் குன்றத் தலைப்பட்டது. கடவுளர் கோயில், மன்னவன் கோயில் முதலிய பேரிடங்களில் ஓசை எழுவதாயிற்று. அந்தணர் ஓதும் நான்மறை முழக்கமும், மாதவரது மறைமொழி யோதையும், வாள்வீரர் எடுக்கும் முழவு முழக்கமும், யானை பரி என்ற இவற்றின் ஒசையும், 4கிணைப் பொருநர் வைகறையிற் பாடும் 5துயிலெடைப் பாட்டும் பிறவும் இம் மூவரையும் வரவேற்பன போல இருந்தன. இவற்றைக் கேட்டுக்கொண்டே இவர்கள் வையைக் கரையை அடைந்து,

கரைநின் றுஉதிர்த்த 6கவிர்இதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
7விலங்குநிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா 8அவிர்அறல் கூந்தல்
உலகுபுரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
9புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடியைக்

கண்டனர் அவ் யாற்றின் அழகைக் கண்டு வியந்து கொண்டே சென்றவர்,

1பரிமுக அம்பியும் 2கரிமுக அம்பியும்
3அரிமுக அம்பியும் 4அருந்துறை இயக்கும்
பெருந்துறை மருங்கில் பெயராது, ஆங்கண்,
மாதவத் தாட்டியொடு 5மரப்புணை போகி

அதன் தென்கரைக்கண் இருந்த நறும்பொழிலைச் சேர்ந்தனர். பின்பு, “இம் மதுரைமா நகர்க்கண் வானவர் உறைவர்; அதனால் இதனை வலங்கொண்டு போவது மிகவும் தக்கது” என்று கருதிக் காவற்காடும் அகழியும் சூழ்ந்த கரைவழியே சென்றனர். அங்கே,

6கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் 7தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போல,
8பண்நீர் வண்டு பரிந்துஇனைந்து ஏங்கிக்
9கண்ணீர் கொண்டு 10காலுற நடுங்கப்
போர்உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
1வாரல்என் பனபோல் மறித்துக்

கைகாட்டுபவைபோல இருந்தன. அதனை அவ்வாறு உணராத கோவலன் கண்ணகி தன்னைத் தொடர, கவுந்தியடிகளைப் பின்பற்றி,

காய்க்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
2வேய்த்திரட் பந்தரும் விளங்கிய இருக்கை
3அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
4புறஞ்சிறை மூதூர் அடைந்தான்.


ஊர்காண் காதை

கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் மதுரை மூதூரின் புறஞ்சிறைப் பொழிலை யடுத்த மாதவர் உறையும் சேரியை அடைந்த அளவில் விடியல் வருவதாயிற்று. கூம்பி இருந்த தாமரைகள் பொதி அவிழத் தொடங்கின; சோலையிலும், கழனியிலும், பொய்கையிலும் புள்ளினம் எழுந்து ஆர்க்கத் தொடங்கின; செஞ்ஞாயிறு செங்கதிரைப் பரப்பிக் கீழைத் திசையில் எழத் தொடங்கினன். மதுரையில் உள்ள

1நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்,
2உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,
3மேழி வலன்உயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச் சேவல் 4கொடியோன் கோட்டமும்,
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,
5மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,
வால்வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய
காலை முரசம்.

கனைகுரல் எடுத்து இயம்பின. கோவலன் கவுந்தியடிகளைத் தொழுது, “தவத்தீர், இல்லற நெறியிலிருந்து நீங்கியோர் கொள்ளும் தன்மையுடையேனாய், முன்னறியாத நாட்டிற்குப் பல வழிகளை நடந்து கடந்து, இம் மெல்லியல் நல்லாளைத் துன்புறுத்திச் சிறுமை யுற்றேன். இந் நகர்க்கண் புகுந்து இங்குள்ள வணிகர்க்கு என் நிலைமையினை உணர்த்தி, யான் மீண்டு வருங்காலும், இவள் தங்கள் திருவடிக் காப்பினளாதல்வேண்டும், இதனால் தங்கட்கு ஏதேனும் ஏத முண்டோ?” என வேண்டினன். அது கேட்ட கவுந்தியடிகள், “நீ முற்பிறப்பில் பெரிதும் நல்வினையே செய்து, சிறிது தீவினை செய்தனை; அதனால் இத் துயர் உழந்தாய். அன்றியும் இதனைக் கேள்,”

1மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
2அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
3நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும்
4யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்;
தீதுடை வெவ்வினை 5உருத்த காலைப்
6பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர்;
7ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலைக்
8கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,
9உருவி லாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது
10ஒருதனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம்என்று உலகில்
கொண்டோர் உறூஉம் 1கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் 2கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்துஆங்கு
3ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் 4இறந்தோர் பலரால்,
5தொன்று பட வரூஉம் தொன்மைத்து,

என்று விரியக் கூறி, இவற்றிற்கு எடுத்துக் காட்டாக, காட்டில் தன் காதலியை இழந்து வருந்திய இராமன் கதை, சூதாடி நாடிழந்து உடவியில் நடுவியாமத்தே தன் காதலியைக் கைவிட்டகன்ற நளன் கதை ஆகிய இவற்றை எடுத்தோதி, இந் நிகழ்ச்சிகளுள், நளன், தன் காதலியைக் கைவிட்டு நீங்கியதற்கு அடிப்படையாக இருப்பது,

வல்வினை யன்றோ! மடந்தைதன் பிழைஎனச்
6சொல்லலும் உண்டேல், சொல்லா யோநீ;
7அனையையும் அல்லை; ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே!

ஆதலால், ‘நீ சிறு வருத்தமும் கொள்ளாது சென்று, பொருந்துவன செய்து கொண்டு ஈங்கு வருக” என்றனள். பின்பு அவர்பால் விடைபெற்றுப் பெயர்ந்த கோவலன், அகழியைக் கடந்து,

பெருங்கை யானை இனநிரை பெயரும்
1சுருங்கை வீதி மருங்கில் போகி,
கடிமதில் வாயில் 2காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு 3அயிராது புக்குஆங்கு
4ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
5குடகாற்று எறிந்து கொடிநுடங்கு மறுகில்

நடந்து சென்று, செழுங்குடிச் செல்வரும் காவலரும் வாழும் வீதியும், பரத்தையர் தெருவும், பல்வகை வண்டிகளும் தேர்களும் செல்லும் பெருவீதிகளும், பல வகை மருந்துகள் விற்கும் வீதிகளும்,

செம்பிற் செய்நவும் 6கஞ்சத் தொழிலவும்
7வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
8வேதினத் துப்பவும் 9கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் 10பூவில் புனைநவும்
வகைதெரிவு அறியா 11வளம்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்

ஒன்பது மணிகளையும் ஆராய்ந்து குற்றம் களைந்து நலம் துணிந்து விற்பதோடு அவற்றின்,

1வகைதெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிய
பகைதெறல் அறியாப் 2பயம்கெழு வீதியும்,
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
3பொலம்தெரி மாக்கள் 4கலங்குஅஞர் ஒழித்துஆங்கு
இலங்குகொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்,
5நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்,
6பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
கால மன்றியும் 7கருங்கறி மூடையொடு
8கூலம் குவித்த கூல வீதியும்
9பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
10அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் 11கவலையும் 12மறுகும்.

கண்டு பெருமகிழ்ச்சி எய்தி, மீண்டு, கவுந்தியடிகள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.


அடைக்கலக் காதை

மதுரை மூதூரின் பல நலங்களையும் கண்டு போந்த கோவலன், கவுந்தியடிகளை நோக்கி, அந் நகரின் சிறப்பையும், அதன்கண் இருந்து ஆட்சி புரியும் பாண்டி வேந்தரின் கோலின் செம்மையும், குடையின் தண்மையும், வேலின் கொற்றமும் விளங்கக் கூறினன். அப்போது மாடலன் என்னும் மறையவன் ஒருவன் அங்கே வந்திருந்தான். அவன் காவிரிப்பூம் பட்டினத்துக்கருகிலுள்ள தலைச்செங்கானத்தைச் சேர்ந்தனன். அவன் பொதியில் மலைக்குச் சென்று அதனை வலங்கொண்டு, குமரியம் பெருந்துறைக்குச் சென்று நீராடி வந்துகொண்டிருந்தான். வழியில் நடந்து போந்த வருத்தம் நீங்க, அறவோர் வைகும் இப் பூம்பொழிலிடத்தே தங்கியிருந்தான். அவனைக் கோவலன் கண்டதும், அவனடியில் வீழ்ந்து வணங்கினன். மாடலன், கோவலனை வாழ்த்தி, “கோவல, நினக்கு மாதவி பயந்த மகளுக்கு மணிமேகலை என்று பெயரிட்ட காலை, நீ பெரும் பொருள் வழங்கினை; அதுபோது அங்கு வந்த பெரு முது வேதியனை மதம் பட்ட யானையொன்று பற்றிக் கொள்ளக் கண்டு, அதனை அடக்கி, அவனை எயிர் காத்தாய். பார்ப்பனி ஒருத்தி அறியாது செய்த பிழைக்காக அவளைக் கைவிட்டு அவள் கணவன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து வருந்திய அவள் பொருட்டுப் பெரும் பொருள் நல்கி, அவள் தன் கணவனுடன் அறம் பல புரிந்து இனிது வாழச் செய்தாய். பத்தினி ஒருத்தியின் பொருட்டுத் தீங்கு செய்த ஒருவனை அறி கரி பொய்த்தவரை அறைந்துண்ணும் பூதம் பற்றிக் கொள்ள, அவனது தாய் அது கண்டு மிக்க துயர் எய்துவதை நீ கண்டு அவன் பொருட்டு அப் பூதத்தின்பாற் சென்று, “என் உயிரைக் கொண்டு இவன் உயிரைத் தருக” எனக் கேட்டனை; நினக்கு, அது,

1நரகன் உயிர்க்கு நல்உயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பு 2ஈங்கு இல்லை;

என்று மறுத்து அவனைக் கொன்றுவிடலும், நீ அவன் தாய்க்கும் அவனுடைய சுற்றத்தோர்க்கும் மிக்க பொருள் நல்கிக் காத்து ஓம்பினை. இவ்வாறு பலரையும்

பல்லாண்டு புரந்த 1இல்லோர் செம்மல்!
இம்மைச் செய்தன யான்அறி நல்வினை;
2உம்மைப் பயன்கொல்! ஒருதனி உழந்துஇத்
3திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது,

என்று மொழிந்தான். அவனுக்குக் கோவலன், தான் கண்ட தொரு கனவைக் கூறலுற்று,

. . . . . . . . ஓர் 4குறுமகன் தன்னால்,
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்,
நாறு 5ஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
6கூறைகோட் பட்டுக் 7கோட்டுமா ஊரவும்,
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
8பிணிப்புஅறுத் தோர்தம் பெற்றி எய்தவும்,
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க,
அணிதிகழ் 9போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
நனவு போல 1நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன்,

என்று கூறினன். அது கேட்ட மாடலனும் கவுந்தியடிகளும், “கோவல, இவ்விடத்தே துறவு பூண்டோரல்லது பிறர் இருத்தலாகாது; நீவிர் நகர்க்குட் புகுந்து, நும் பெற்றோர் 2பெயர் விளக்கம் கூறின், அங்குள்ள வணிகர் நும்மைத் தம் அக நகர்க்கண்ணே இருத்துவர்; கதிர் சென்று மறைவதன்முன் செல்க” என்றனர். அக் காலத்தே, புறஞ்சிறைப் பள்ளியிலுள்ள 3இயக்கிக்குப் பாற்சோறு படைத்து வழி பட்டுவந்த மாதரி என்னும் இடைச்சி அவ்வழியே வந்தாள். அவள் கவுந்தியடிகளைக் கண்டதும் அடிவணங்கி நிற்ப, அவ்வடிகள்,

ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் 4கொடும்பாடு இல்லை;
தீதிலள்; 5முதுமகள்; 6செவ்வியள்; அளியள்;
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று,

என எண்ணி, அம் மாதரியை நோக்கி,

மாதரி, கேள்: இம் மடந்தைதன் கணவன்
தாதையைக் கேட்கின், 7தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு 8கடிமனைப் படுத்துவர்.

1உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
2இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்.

மங்கல மடந்தையை நல்நீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டித்
தேமென் கூந்தல் சில்மலர் பெய்து
3தூமடி உடீஇத் 4தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு,

என்று மொழிந்து, மீட்டும் கூறலுற்று,

இன்துணை மகளிர்க்கு, இன்றி யமையாக்
5கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்.

“6வானம் பொய்யாது, வளம்பிழைப்பு அறியாது,
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது,
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு,” என்னும்
அத்தகு நல்உரை அறியா யோ, நீ,

எனச்சொல்லி, தான் சொல்லும் இதனைக் கடைப்பிடித்தால் அம் மாதரிக்கு வரக்கடவதொரு பயன் கூறுவாளாய்,

தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தரும்; அது கேளாய்,

என்று முன் மொழிந்து, இதற்கு எடுத்துக்காட்டாக, சாயலன் என்னும் வணிகன் வரலாற்றினையும் உரைத்தார். மாதரி, அவ் வண்ணமே அடிகளின் நல்லுரையை ஏற்றுக் கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக்கொண்டு நீட்டியாது சென்று,

1மிளையும், கிடங்கும், 2வளைவிற் பொறியும்,
3கருவிரல் ஊகமும், கல்உமிழ் கவணும்.
4பரிவுறு வெந்நெயும், 5பாகடு குழிசியும்,
6காய்பொன் உலையும், கல்லிடு கூடையும்,
7தூண்டிலும் 8தொடக்கும் 9ஆண்டலை யடுப்பும்,
10கவையும் கழுவும் 11புதையும் 12புழையும்
13ஐயவித் துலாமும் 14கைபெயர் ஊசியும்
சென்றெறி 15சிரலும் 16பன்றியும் 17பணையும்
18எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும்
19கோலும் 20குந்தமும் வேலும் 21பிறவும்
22ஞாயிலும் சிறந்து 23நாள்கொடி நுடங்கும்
வாயில் கழிந்து தன் வளமனையை அடைந்தாள்.


கொலைக்களக் காதை

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, அவளைக் கோவலனுடன் தன் சேரிக்குக் கொண்டுசென்று, தனித்த தொரு காவல் நன்கு அமைந்த குடியிருக்கை நல்கி, அதன் கண் இருந்துவர விடுத்தாள். கண்ணகியும் அங்கே தனக்குத் துணையாக வந்த இடையர் மகளிருடன் நீராடி, நல்லுடை உடுத்து, அழகிய அணி பூண்டு விளங்கினள். மாதரிக்கு ஐயை என்றொரு மகள் உள்ளாள். அம் மகளை மாதரி கண்ணகிக்கு அடித்தொழில் செய்யப் பணிக்க, கண்ணகியும் அவளைத் தன்னுடன் இருக்கவென வைத்துக்கொண் டனள். கோவலனும் கண்ணகியும் சாவக நோன்பிகளாதலால், இரவு வரின் உணவு கொள்ளார் என்று கொண்டு, உரிய காலத்தே அடிசில் ஆக்குவதற்கு, மாதரியின் குறிப்புப்படியே, அட்டிலுக்கு வேண்டும் கலங்களும் பிறவும் ஐயை கொணர்ந்து உதவினள். அவற்றோடு அமையாது, உணவின்பொருட்டு,

1கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
2வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய்,
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
3சாலி யரிசி தம்பால் பயனொடு
கோல்வளை மாதே! கொள்கஎனக் கொடுப்ப,

கண்ணகியும் மகிழ்ச்சியுடன் ஏற்று, தன் கணவனுக்கு இனிய உணவைச் சமைப்பாளாயினள். காய்கறிகளைப் பாகம் பண்ணு மிடத்து அவளது மெல் விரல்கள் சிவந்தன; புகையால் திருமுகம் வியர்த்தது; செவ்விய கண்களும் சிவந்தன. இவ் வண்ணம் உணவு சமைத்தானபின், கோவலனை உண்டற்கழைப்ப, அவன் போந்து ஆங்கே மகளிரால் தொடுக்கப் பெற்ற பனந்தடுக்கு ஒன்றனை விரிப்பாகக்கொண்டு அதன் மேல் அமர்ந்தனன். கண்ணகி,

கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர்
1சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை 2மயக்குஒழிப் பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி,
குமரி வாழையின் குருத்துஅகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க, அடிகள்!.

என வேண்டினள். கோவலனும் இனிது அவ்வுணவை உண்டனன். இவர்தம் நல்லொழுக்கத்தைக் கண்ட ஐயை முதலாயினோர் மிக்க வியப்புக் கொண்டு,

ஆயர் பாடியில் அசோதைபெற் றெடுத்த
3பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்அமு துண்ணும் நம்பி; ஈங்கு,
பல்வளைத் தோளியும், பண்டுநம் குலத்துத்
4தொழுநை யாற்றினுள் தூமணி வண்ணனை
5விழுமம் தீர்த்த விளக்குக் கொல்!

என விம்மிதத்தோடு விளம்பி மகிழ்ந்தனர். இதற்குள் உணவு கொண்ட கோவலன் இனிதிருப்பக் கண்ணகி, “அம்மென் 6திரையலோடு அடைக்காய் ஈந்தனள்.” அவள் செய்யும் அரும்பணிகளைக் கண்ட கோவலன் நெஞ்சு கலங்கி, பலபட நினைந்து, அவளைத் தன் அருகில் அழைத்து இருத்தி, “நல்லாய், கல்லும் முள்ளும் காடும் செறிந்த அருவழிகளைக் கடத்தற்கு நின் மெல்லடிகள் பொருந்துவன அல்ல; இருப்பினும் நீ என்னுடன் இந்த நெடுவழி வந்ததற்கு எம் முதுகுரவர் எத்துணைத் துயரம் எய்தினரோ! இவ் வளவிற்கும் காரணம் தெரியேன்; மாயமோ, அன்றி வல்வினையோ, யான் யாவதும் அறியேன், யான் இது காறும் 1பொச்சாப்புண்டு, பொருளுரை இகழ்ந்து, தேற்றா ஒழுக்கத் தால் தீ நெறிப்பட்டேன்; எனக்கு இனி நன்னெறியுண்டோ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்;
2சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
3வழுவெனும் பாரேன்; மாநகர் மருங்குஈண்டு
எழுகஎன எழுந்தாய்; என்செய்தனை!

எனக் கலங்கிக் கூறினானாக, அவற்குக் கண்ணகி நல்லாளும் தான் சிறு தடையும் நிகழ்த்தாது உடன்போந்தற்குக் காரணம் கூறுவாளாய்,

அறவோர்க் களித்தலும் 4அந்தண ரோம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை,

தங்கள் பெற்றோர் அன்பு சிறந்து அருள்மொழியாற் கலந்து பாராட்டினர். அவர்கட்கு வருத்தமுண்டாகாகவாறு யானும் தங்கள் பிரிவால் உளதாய வருத்தத்ததைப் புறத்தே சிறிதும் காட்டாது கரந்து ஒழுகினேன். அது தானும் அவர்கட்கு வருத்தமே தந்தது, நீவிரும் 5போற்றா ஒழுக்கமே புரிந்து ஒழுகினீர். தங்கள்பால் மாற்றாத உள்ளமுடையே னாதலால், யான் உடன்பட்டுப் போந் தேன்” என்றனள். என்றலும் கோவலன் தன் போற்றா வொழுக்கத்தின் புன்மையும், கண்ணகியின் மாற்றா உள்ளத்தின் மாண்பையும் நினைந்து,

1குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
2அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி,
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
3பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
4நாணின் பாவாய்! 5நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! 6பொற்பின் செல்வி!

“நீ நின் காற் சிலம்புகளுள் ஒன்றைக் கொடு; அதனைக் கொண்டு போய் யான் விற்றுவருவேன்; அதுவரையில் நீ சிறிதும் மயங்கற்க” என்று கூறினன். கண்ணகியும் உடனே அதனை அவன் கையிற் கொடுப்ப, அவன் அதனைக் கொண்ட அரிதிற் பிரிந்து போயினன். அவனை அறியாதே நெஞ்சு கலங்கிற்று; கண்களில் நீர் ததும்பிற்று. அதனைக் கண்ணகியோ, பிறரோ, அறியாதபடி மறைத்துக்கொண்டு சொல்லத் தொடங்கிய கோவலன், ஆய்ச்சியர் தெருவே போகின்றவன், வழியில், 7இமில் ஏறு ஒன்று எதிலே தன்னைப் பாய வரக் கண்டு விலகிச் சென்றான். அது தீக்குறி என்பது இடையர் வழக்கு. அதனால், வணிகனாகிய கோவலன் அதனைப் பொருட்படுத்தாது ஆயர் சேரி கடந்து, பல்வேறு தெருக்களைத் தாண்டிப் பீடிகைத் தெருவை அடைந்தான். அங்கே, நுண்வினைக் கொல்லர் ஒரு நூறு பேர் பின் வர, பொற்கொல்லன் ஒருவன் வரக் கண்டான் கோவலன். அவனை அணுகி, “ஐய, காவலன் தேவிக்குத் தகுதியாயதொரு காற்சிலம்பு என்பால் உளது; அதனை நீ விலையிட்டுத் தருவையோ?” என்று கோவலன் கேட்க, அக் கொல்லன், “அடியேன் அறியேன்; ஆயினும், யான் வேந்தர் 1முடி முதற் கலன்கள் சமைப்பேன்” என்று கைகூப்பித் தொழுது ஏத்திக் கூறினன். கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பைக் காட்டினன்.

சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் 2புரிந்துடன் நோக்கிக்
கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
3யாப்புற வில்லை எனமுன் போந்து,
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வர, என்
சிறுகுடில் அங்கண் இருமின் நீர்என

மொழிந்தான். கோவலனும் அவ்வாறே சென்று, அவனது மனைக்கருகிருந்த 4கோயிலில் இருந்தான். பொற் கொல்லன், சிலம்பு கொண்டு செல்லும்போது தனக்குள்ளே,

கரந்துயான் கொண்ட 5காலணி, ஈங்குப்
பரந்து வெளிப் படாமுன்னம், மன்னற்குப்
6புலம்பெயர் புதுவனில் போக்குவன், யான்

என்று எண்ணமிட்டுக்கொண்டே அரசன் அரண்மனைக்குச் சென்றான். ஆங்கே, அரசன் தேவி,

கூடல் மகளிர் 7ஆடல் தோற்றமும்,
8பாடல் பகுதியும், 9பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன, என்று, தன்
ஊடல் உள்ளம் 1உள்கரந்து ஒளித்து,
2தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

புலந்து நீங்கினள். அதனை ஆற்றாத அரசன் அமைச்சர் குழுவிலி ருந்து நீங்கி, ஏனை மகளிர் புடைசூழ அரசியின் இருக்கைக்குச் சென்று அதன் வாயிலை யடைந்தான். அந் நிலையில் பொற் கொல்லன் புகுந்து, அரசன் திருவடியில் வீழ்ந்து வணங்கி,

3கன்னகம் இன்றியும் 4கவைக்கோல் இன்றியும்
5துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு
வாயி லாளரை 6மயக்குதுயில் உறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்துஎன்
7சில்லைச் சிறுகுடில் அகத்திருந்த தான்

என்று கூறினன். அதனைக் கேட்டதும்,

வினைவிளை கால மாதலின், யாவதும்
8சினையலர் வேம்பன் தேரா னாகி
ஊர்காப் பாளரைக் கூவி, ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
9கன்றிய கள்வன் கைய தாகின்
கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு

என்று கட்டளையிட்டான். பொற்கொல்லன், ஊர்க் காப்பாளர் பின்வர, கோவலன் இருந்த இடத்திற்குப் போந்து, அவனுக்கு அவர்களைக் காட்டி, “இவர்கள் மன்னவன் ஏவலால் சிலம்பு காண வந்தவர்” என்றான். கோவலன் சிலம்பினைக் காட்டி அதன் செய்திகளையும் கூறினன். வந்தவருள், சிலர், கோவலனது தோற்றமும், மொழியும், ஒழுக்கமும் கண்டு, “1இலக்கண முறைமையின் இருந்தோன், கொலைப்படு மகன் அலன்” என்று இயம்பினர். உடனே பொற்கொல்லன், நகைத்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு தக்க சான்றுகளால் உண்மை காட்டி உறுதி செய்ய முற்பட்டுப் பல கூறலுற்றான்: முதலில்,

மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவிஎன்று
எட்டுடன் அன்றே, 2இழுக்குடை மரபின்
கட்டுண் மாக்கள், துணையெனத் திரிவது,

எனப் பொதுவாகக் கள்வருக்குரிய எண்வகை இயல்புகளைத் தொகுத்துக் கூறி, பின் ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கி,

மந்திரம் நாவிடை வழுத்துவ ராயின்
3இந்திர குமரரின் யாம்காண் குவமோ!
தெய்வத் தோற்றம் 4தெளிகுவ ராயின்,
கையகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர்;
மருந்தின் நம்கண் மயக்குவ ராயின்,
5இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது 1யாவதும்
புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகுதினும்;
2தந்திர கரணம் எண்ணுவ ராயின்,
இந்திரன் மார்பத்து ஆரமும் 3எய்துவர்;
இவ்விடம் இப்பொருள் கோடற்கு இடம்எனின்,
அவ்விடத்து அவரை யார்காண் கிற்பார்?
காலம் கருதி அவர்பொருள் கையுறின்
4மேலோ ராயினும் விலக்கலும் உண்டோ?
5கருவி கொண்டுஅவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கில் யார் காண்கிற்பார்?
இரவே பகலே என்றுஇரண்டு இல்லை;
6கரவிடம் கேட்பின்ஓர் புகலிடம் இல்லை;

என்று முறையாகச் சொல்லி, கள்வரது அருஞ்செயற்குச் சான்றாக, தென்னவன் தம்பியாகிய இளங்கோ வேந்தன் தோளிலணிந்த வயிர ஆரத்தை ஒரு கள்வன் திருடியதாகப் பொய் புனைந்து கேட்போர் உட்கும் வியப்பும் கொள்ளுமாறு கூறினன். இவற்றை உடனிருந்து கேட்டோருள் ஒருவன், தானும் ஒரு களவு நிகழ்ச்சி கூறி,

அரிதுஇவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்;
உரியதுஒன்று உரைமின் 7உறுபடை யீர்என

வினவினன்; அப்போழ்தில், கல்லாக் களிமகனொருவன் தன் கை வாளை உருவி வீசினன்; அது கோவலனது கழுத்தில் குறுக்கே வீழ்ந்து ஊடறுத்தது;

புண்ணுமிழ் குருதி பொழிந்து 8உடன் பரப்ப,
மண்ணக மடந்தை 9வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் 1வளைஇய வீழ்ந்தனன்
கோவலன்.

“காதலியைக் கொண்டு, கவுந்தியொடு கூடி,
மாதரிக்குக் காட்டி, மனையின் அகன்றுபோய்க்,
கோதில் இறைவனது கூடற்கண், கோவலன்சென்று
ஏதம் உறுதல் 2வினை.”

தொல்.சொல்.தெய்வ.மேற்கோள்.


ஆய்ச்சியர் குரவை

கருப்பம்
பாண்டியன் கோயிலில் காலை முரசு முழங்கிற்று; அது கேட்ட மாதரி, “இன்று அரண்மனைக்கு நெய்யளக்கும் முறை நமக்கு வந்துளது; ஆதலால் விரைய வருக” எனத்தன் மகள் ஐயையை அழைத்துக்கொண்டே கடைகயிறும் மத்தும் கொண்டு வந்தாள். வந்தவள் பிரையிட்ட குடப்பால் தோயாமல் இருப்பதை யும், வெண்ணெய் உருகாமையும் கண்டு அஞ்சி, “நிகழ்வது ஏதோ ஒன்று உண்டு” என்று சொன்னாள். அதன்மேல்,

1கொளு
குடத்துப் பால் உறையாமை(யாலும்), 2குவி இமிலேற்றின் மடக்கண்ணீர் சோர்த(லாலும்), உறியில் வெண்ணெய் உருகாமை (யாலும்), 3மறி முடங்கி ஆடாமை(யாலும்), மான் மணி நிலத்து அற்று வீழ்த(லாலும்), வருவதோர் துன்பம் உண்டு என (மாதரி தன் மகள் ஐயைக்குச் சொல்லி, அவளை நோக்கி) மனம் மயங்காதே; மண்ணில் மாதர்க்கு அணியாகிய கண்ணகியும் காண, ஆயர்பாடி யில் எரு மன்றத்து மாயவனுடன் 4தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில், வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம், கறவை கன்று துயர் நீங்குக என, என்றாள் (மாதரி).

1எடுத்துக்காட்டு - சுட்டு.
2நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொற்றொடி மாதராள் தோள்.
3நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண்கொடி மாதர்தன் தோள்.
வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்இக்
4கொன்றையம் பூங்குழ லாள்.

5பெயரீடு
ஆய மகளிர் எழுவரை நிறுத்தி, இவ்வேற்றை ஊர்ந்தானுக்கு இம் மகள் உரியள் என எடுத்துக் காட்டியதற்கேற்ப, அவர் எழு வரையும் வட்டமாக நிறுத்தி, மேற்கிலிருந்து, ஒவ்வொருத்திக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்டனர். இவ்வாறு பெயர் பெற்ற மகளிருள் குரல் என்பாளை மாயவன் என்றும், இளி என்பாளைப் பலதேவன் என்றும், துத்தம் என்ற பெயருடையாளைப் பின்னை என்றும் கொண்டனர். அதன் பின், மாயவன் பக்கத்தே பின்னையான துத்தமும் தாரமும் நின்றனர்; பலதேவனைச் சேர, உழையும் விளரியும் நின்றனர்; கைக்கிளை பின்னைக்கு இடப்பக்கத்தும், விளரி தாரத்துக்கு வலப்பக்கத்தும் நின்றனர். இவ்வாறே யாழிடத்தும் எழுவகை நரம்புகளும் இயைக்கப்பெற்றன. இந் நிலையில் பின்னையின் இடத்தே மாதரி நின்று, தன்னையே பின்னை எனக் கருதி வியப்புற்றாள்.

1கூத்துள் படுதல்
பின்னர், இம் மகளிர் எழுவரும் வட்டமாகக் கைகோத்து நிற்ப, குரலிடத்தே நின்ற மாயவனாகிய ஆய மகள்,

கொல்லைப் புனத்துக் 2குருந்தொசித்தாற் பாடுதும்
3முல்லைத்தீம் பாணி என்றாள்.

இனி, இவருள், பாட்டெடுப்பவள் குரல் மந்த சுரமாகவும், இளி சம சுரமாகவும் நிற்க, துத்தம் வலிய சுரமாகப் பாடினள். விளரி மந்த சுரமாக எடுத்து, துத்தமாகியவட்குத் துணையாய்ப் பற்றிப் பாடினள். இவர்கள் பாடிய பாட்டு.

பாட்டு
கன்று 4குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
5கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழீ.
கொல்லையம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
6முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழீ.

குரவை மகளிர் கூற்று
இவ்வாறு பாடி ஆடிய மகளிர் பின்னைப்பிராட்டியின் சிறப்பை எடுத்து ஓதுதற்கு முற்பட்டுச் சில பாடினர்.

வஞ்சம் செய்தான் 7தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை8என் கோயாம்;
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவுஎன் கோயாம்.

தையல் 1கலையும் வளையும் இழந்தே
2கையில் ஒளித்தாள் முகம்என் கோயாம்;
கையில் ஒளித்தாள் முகம்கண்டு அழுங்கி
3மையல் உழந்தான் வடிவுஎன் கோயாம்.

4ஒன்றன் பகுதி
5கதிர்திகிரி யால்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்,
6மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்,
7பொதிஅவிழ் மலர்க்கூந்தல் பின்னைசீர் புறங்காப்பார்,
8முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புஉளர்வார்.

9ஆடுநர்ப் புகழ்தல்
மாயவன் தம் 10முன்னினொடும்
 வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தம் சிறுமியர்கள்
 குழற்கோதை 11புறஞ்சோர,
ஆய்வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு
 அசோதையார் தொழுதேத்தத்
12தாதெருமன் றத்தாடும்
 குரவையோ தகவுடைத்தே.

இவ்வாறு ஆடியபின், அம் மகளிர் அனைவரும், “இனி நாம், 1உள்வரிப் பாணிகொண்டு அம் மாயவனைப் போற்று வோம், வம்மின்” என்று கூறிக்கொண்டு, அதனைப் பாடினர்.

2உள்வரி வாழ்த்து
3கோவா மலையாரம், 4கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே;
தேவர்கோன் பூணாரம் பூண்டான் 5செழுந்துவரைக்
6கோகுல மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்.

பொன் 7இமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னம் திகிரிப் பொருபடையான் என்பரால்.

8முந்நீரினுள் புக்கு
 9மூவாக் கடம்புஎறிந்தான்
மன்னர்கோச் சேரன்
 10வளவஞ்சி வாழ்வேந்தன்,
மன்னர்கோச் சேரன்
 வளவஞ்சி வாழ்வேந்தன்,
1கன்னவில்தோள் ஓச்சிக்
 கடல் கடைந்தான் என்பரால்.

2முன்னிலைப் பரவல்
3வடவரையை மத்தாக்கி
 வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள்
 கடல்வயிறு கலக்கினையே;
கலக்கியகை, அசோதையார்
 கடைகயிற்றால் கட்டுண்கை,
4மலர்க்கமல உந்தியாய்,
 மாயமோ, மருட்கைத்தே.
திரண்டு அமரர் தொழுதேத்தும்
 திருமால்நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும்
 5இருள்தீர நடந்தனையே;
நடந்த அடி, பஞ்சவர்க்குத்
 தூதாக நடந்த அடி,
6மடங்கலாய் மாறு அட்டாய்,
 மாயமோ, மருட்கைத்தே.

படர்க்கைப் பரவல்
மூவுலகும் ஈரடியால்
 1முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசேவடி 2சேப்பத்
 தம்பியொடும் கான்போந்து
3சோவரணும் போர்மடியத்
 தொல் இலங்கை 4கட்டழித்த
சேவகன்சீர் கேளாத
 செவி என்னசெவியே;
திருமால்சீர் கேளாத
 செவிஎன்ன செவியே.

5மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
6படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே;
நாராயணா என்னா நாஎன்ன நாவே.

இவ்வண்ணம் குரவை பாடிய ஆயமகளிர், ஒன்றுகூடி, நின்று,
யாம்,

7கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம்நம்
8ஆத்தலைப் பட்டதுயர் தீர்க்க; 9வேந்தர்
மருள வைகல் வைகல்மாறு அட்டு
வெற்றி விளைப்பது மன்னோ; கொற்றத்து
10இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த
11தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகும் முரசே

என்று பரவி நீங்கினர்.


துன்ப மாலை

இவ்வண்ணம், ஆனிரைகட்குண்டாய தீக்குறி கண்டு குரவை யாடிய ஆய்ச்சியர் வையைக்கு நீராடப் போயினர்; மாதரியும் நீராடிப், பூவும் புகையும் கொண்டு திருமாலின் திருவடி பரவப் போனாள். அப்போது அந் நகர்க்குச் சென்றிருந்த ஆயர்மகள் ஒருத்தி, கோவலனுக்குற்ற தீங்கு கண்டு அதனைத் தெரிவிக்க மிக்க விரைவாக வந்தாள். வரும் போது, ஆய்ச்சியர் கூட்டத்தே கண்ணகி நிற்ப, அவளது அழகும் இளமையும், தனிமையும் கண்டு நெஞ்சழிந்து ஆற்றாது, வாயாற் சொல்லமாட்டாது, நீராடிப் போந்த மகளிர்க்குக் குறிப்பாகக் கூறினள். அதன் உண்மை கண்ணகிக்குத் தெரிந்தது. உடனே,

1எல்லாவோ,
காதலற் காண்கிலேன், கலங்கி 2நோய் கைம்மிகும்;
3ஊதுலை தோற்க உயிர்க்கும் என்நெஞ்சு, அன்றே;
ஊதுலை தோற்க உயிர்க்கும் என்நெஞ்சு ஆயின்,
4ஏதிலார் சொன்னது எவன் வாழியோ, தோழீ.

5தஞ்சமோ தோழீ, தலைவன்வரக் காணேன்;
வஞ்சமோ உண்டு, மயங்கும் என்நெஞ்சு அன்றே;
வஞ்சமோ உண்டு, மயங்கும் என்நெஞ்சு, ஆயின்,
6எஞ்சலார் சொன்னது எவன்வாழியோ, தோழீ.

என்று கண்ணகி கதறிக் கூறினள். அது கேட்ட அவ்வாயர் மகள் பேரவலம் உற்று,

அரசுறை கோயில் அணியார் 1ஞெசிழம்
2கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே;
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
3குரைகழல் மாக்கள் 4கொலைகுறித் தனரே;

என்று சொன்னாள். அதனைக் கேட்டாளோ இல்லையோ, கண்ணகி,

பொங்கி எழுந்தாள், விழுந்தாள், 5பொழிகதிர்த்
திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்; தன் 6கேள்வனை
7எங்கணா என்னா இனைந்து ஏங்கி 8மாழ்குவாள்.

இன்புறுதம் கணவா
 9இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறுவன நோற்றுத்
 துயர்உறு மகளிரைப்போல்
10மன்பதை அலர்தூற்ற
 மன்னவன் தவறிழைப்ப
அன்பனை அழந்தேன்யான்
 11அவலம்கொண்டு அழிவலோ.

தம்முறு பெருங்கணவன்
 தழல்எரி அகமூழ்கக்
1கைம்மைகூர் துறைமூழ்கும்
 2கவலைய மகளிரைப்போல்,
3செம்மையின் இகந்தகோல்
 தென்னவன் தவறிழைப்ப,
இம்மையும் 4இசைஒரீஇ
 இனைந்து ஏங்கி அழிவலோ.

இவ்வண்ணம் வாய்விட்டுக் கதறிப் புலம்பிய கண்ணகி, ஏனைமகளிர் அனைவரையும் அழைத்து, “ஆயர்மகளிரே, கேண்மின்” என்று சொல்லி, வானத்தைச் சுட்டிப் பகலவனை அழைத்து,

5பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
6காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என்கணவன்?

என்றாள். உடனே, அங்கே இருந்தவர் அனைவரும் தெளியக் கேட்கும்படியாக,

கள்வனோ அல்லன்; கருங்கயல்கண் மாதராய்!
7ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்

என்று வானத்தே ஒரு குரல் எழுந்து இசைத்தது.


ஊர்சூழ் வரி

இவ்வண்ணம் பகலோன், “நின் கணவன் கள்வன் அல்லன்” என்று சொன்னது கேட்டதும், கண்ணகி, அவ்விடத்து நில்லாது, தன்னிடத்தே இருந்த மற்றைச் சிலம்பைக் கையில் ஏந்திக்கொண்டு,

முறையில் அரசன்தன் ஊர்இருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள், 1ஈதுஒன்று;
பட்டேன் படாத துயரம்; படுகாலை
உற்றேன் 2உறாதது உறுவனே, ஈதுஒன்று;
கள்வனோ அல்லன் கணவன், என் காற்சிலம்பு

கொள்ளும் விலைப்பொருட்டால் 3கொன்றாரே, ஈழஒன்று;
என்று அரற்றிப் பின்னும் கூறுவாள், “இம் மகளிர் கண்ணெதிரே யான் இப்போதே சென்று என் காதற் கணவனைக் காண்பேன்; கண்டு, அவன் வாயால் தான் தீதிலன் என்ற நல்லுரையைக் கேட்பேன்; கேளாது போவேனேல், நீவிர், நும்மை யான் வறிதே பழிதூற்றினேன் என்று என்னை இகழ்மின்” என்று சொல்லிப் புலம்பினாள். இவ்வாறு அழுது செல்லும் இவளை மதுரை நகரத்து மக்கள் கண்டு கழிபேர் இரக்கம் கொண்டு,

1களையாத துன்பம்
 இக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல்
 வளைந்தது இதுஎன்கொல்?
மன்னவர் மன்னன்
 2மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் 3கொற்றம்
 சிதைந்தது இதுஎன்கொல்?
செம்பொன் சிலம்புஒன்று
 கையேந்தி நம்பொருட்டால்
4வம்பப் பெருந்தெய்வம்
 வந்தது இதுஎன்கொல்?
5ஐயரி உண்கண்
 அழுதேங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள்போலும்
 6தகையள் இது என்கொல்

என்பன பல சொல்லி ஏங்கி வருந்தினர். கண்ணகி, தன் கணவன் உடலைக் காண்டற்குச் செல்ல, சிலர் அவட்கு அவன் வெட்டுண்டு கிடந்த இடத்தையும், அவனது உடலையும் காட்டினர். கண்ணகி அதனைக் கண்டாள்; செங்கதிரோன் மேலைத் திசையில் மறைந் தான்; மெல்லிய இருள் பரந்தது. கோவலன் வீழ்ந்து கிடந்த இடம், அவன் உடலிலிருந்து ஒழுகிய குருதியால் நனைந்து கிடந்தது. காலையில் தன் கணவனைத் தழுவி, அவன் தந்த மாலையைத் தன் கூந்தலில் சூடிக்கொண்ட கண்ணகி, அன்று மாலையில் மெய் யெல்லாம் குருதிவார வெட்டுண்டிருந்த அவனைக் கண்டு காணாக் கடுந்துயரம் கண்டாள். பின்பு, அவனைத் தழுவி, ஓவெனக்கதறி,

என்உறு துயர்கண்டும் 1இடர்உறும் இவள்என்னீர்,
2பொன்னுறு நறுமேனி 3பொடிஆடிக் கிடப்பதோ!
4மன்னுறு துயர்செய்த 5மறவினை அறியாதேற்(கு)
6என்உறு வினைகாணா இதுஎன உரையாரோ!
யாரும்இல் மருள்மாலை இடர்உறு தமியேன்முன்,
7தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ!
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப,
8ஈர்வதோர் வினைகாணா இதுஎன உரையாரோ!

இவ்வாறு புலம்பினவள், நாட்டில் செங்கோல் பிழையா தாயின் அந் நாட்டில் நிறையுடைய பெண்டிரும், சான்றோரும் தெய்வமும் இருப்பர்; இந் நாட்டில் அவர்கள் இல்லையோ அல்லது உண்டோ என்பாள்போலப் “பெண்டிரும் உண்டு கொல்? சான்றோரும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்” எனச் சொல்லி அழுதாள். பின்பு, அவன் உடலை எடுத்துத் தன் மார்போடு தழுவினபோது, அவன் உயிர் பெற்றான்போலத் தெளிந்து நின்று, அவள் முகத்தைத் தடவி, “மிகவும் 9கன்றியது” என அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். கண்ணகி அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி, அவன் அடிகளைக் கையால் பற்றினள். அவன் தான் இருந்த உடலிலிருந்து நீங்கிச் சூழ நின்ற இறையவரோடு தான் ஓர் இறையவனாய் நின்று, “உண்கண்ணாய், நீ ஈண்டே இருக்க” எனச் சொல்லிவிட்டுப் போனான். கண்ணகி ஆற்றாளாய்,

மாயம்கொல், மற்றுஎன்கொல்,
 1மருட்டி யதோர் தெய்வம்கொல்
போய்எங்கு நாடுகேன்;
 2பொருளுரையோ, இதுஅன்று;
3காய்சினம் தணிந்தன்றிக்
 கணவனைக் கைகூடேன்;
4தீவேந்தன் தனைக்கண்டு
 இத்திறம்கேட்பல் யான்என்றாள்.

என்று இவ்வகையில் தனக்குள் சொல்லியவள் எழுந்து நின்றாள். முன்பு காவிரிப்பூம் பட்டினத்துத் தான் கண்ட கனவு அவள் நினைவிற்கு வந்தது. தன் கண்ணீரை மீட்டும் துடைத்துக் கொண்டு அவள் பாண்டிவேந்தன் கோயில் வாயிலை யடைந்தாள்.


வழக்குரை காதை

கோப்பெருந்தேவி அன்றிரவு ஒரு தீக்கனாக் கண்டாள். அதன்கண், அரசர் பெருமானது செங்கோலும் வெண்குடையும் நிலத்தே மறிந்து வீழ்ந்தன; அரசவாயிலில் உள்ள மணியோசை கேட்க உள்ளம் நடுங்கிற்று; நான்கு திசையும் அதிர்ந்தன; இரவில் வானவில்லிட்டது; பகலில் விண்மீன்கள் தோன்றின. ஆகவே, இதனால் வருவதோர் துன்பம் உண்டு என அரசமா தேவி உணர்ந்து, இதனை வேந்தனுக்கு உணர்த்த வேண்டும் என்றாள். என்றதும்,

1ஆடி ஏந்தினர்; கலன் ஏந்தினர்
 2அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
3கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்;
 4கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்;
5வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
 6மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், 7பிணையல் ஏந்தினர்,
 கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்;

இவ்வண்ணம் மங்கலமகளிர் மங்கலம் ஏந்திவர, வேறுபலர், “ஈண்டு நீர் வையம் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க” என வாழ்த்து இயம்ப, ஆயத்தாரும் காவலரும் அவள் திருவடி பரவிவர,

கோப்பெருந்தேவி சென்றுதன்
தீக்கனாத் திறம்உரைப்ப,
1அரிமான் ஏநதிய அமளிமிசை இருந்தனன்,
2திருவீழ் மார்பின் தென்னவர் கோவே.

இஃது இங்ஙனம் இருக்க, வேந்தன் கோயில் வாயிலில் வந்து நின்ற கண்ணகி, வாயிலோனை நோக்கி,

வாயிலோயே, வாயிலோயே,
3அறிவு அறைபோகிய 4பொறிஅறு நெஞ்சத்து
5இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே.
6இணையரிச் சிலம்புஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடையகத்தாள், என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே

என்று சொன்னாள். அது கேட்ட வாயிலோன் அரசன் திருமுன் சென்று, அடி வணங்கி நின்று,

வாழிஎம் கொற்கை வேந்தே வாழி,
7தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி,
பழியொடு படராப் 8பஞ்சவ வாழி

எனப் பலமுறையும் வணங்கி வாழ்த்தி, கண்ணகியின் தோற்றம் அவன் நெஞ்சில் கொற்றவையை நினைப்பித்தமையின், மருண்டு தெளிந்து,

9செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொன்தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள் 1கடையகத்தாளே,
கணவனை இழந்தாள் கடையகத்தாளே

என்று தெரிவித்தான். அற்றேல், அவளை ஈண்டுவர விடுவிக்க என அரசன் பணித்தனன். வாயிலோன் வந்து, கோயிலைக் காட்டினன். கண்ணகி அரசன் திருமுன் சென்று சேர்ந்தனள். அவளது அழுகைக் கோலத்தைக் கண்ட அரசர் பெருமான்,

2நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்,
யாரையோநீ 3மடக்கொடியோய், என

வினவினன். அதுகேட்ட கண்ணகி, சினம் மாறாது.

4தேரா மன்னா! செப்புவது உடையேன்:
5எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
6புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடைமணி நடுநா நடுங்க
7ஆவின் கடைமணி உகும்நீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை 8ஆழியில் மடித்தோன்
9பெரும்பெயர்ப் புகார் என்பதியே; அவ்வூர்
10ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி,
வாழ்தல் வேண்டி, 11ஊழ்வினை துரப்ப,
சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்து இங்கு
என்காற் சிலம்பு 12பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே

என்று மொழிந்தாள். அம் மொழியின் திட்பமும் பெண்மை நலமும் உள்ளவாறு உணர்ந்த பாண்டியன், மீட்டும், அவளை நோக்கி,

              . . . . . . பெண் அணங்கே,  

கள்வனைக் 1கோறல் கடுங்கோல் அன்று,
2வெள்வேல் கொற்றம் காண்

என்றான். அச் சுடுசொல் செவிப்புலம் புகுதலும் உளம் வெதும்பிய கண்ணகி,

3நல்திறம் படராக் கொற்கை வேந்தே
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே

என்றாள். உடனே அரசன் மருண்டு,

தேமொழி! உரைத்தது 4செவ்வை நன்மொழி!
5யாம்உடைச் சிலம்பு முத்துடை அரியே

எனச் சொல்லி அதனைக் கொணர்ந்து தருக என ஏவலாளரைப் பணித்தான். சிறிதுபோதில் அச் சிலம்பு கொணர்ந்து வைக்கப் பட்டது. கண்ணகி தன் சிலம்பை எடுத்து நிலத்தில் எறிந்து உடைத் தாள். அதனுள் இருந்த மணி தெறித்து அரசன் வாய்முதல் பட்டு விழுந்தது. கண்டான் அரசன். வெண்குடை தாழ, செங்கோல் தளர, தமிழே மொழியும் தன் வாயைத் திறந்து,

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;
6மன்பதை காக்கும் தென்புலம் காவல்

1என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்” என மயங்கி வீழ்ந்தான். அது கண்ட கோப்பெருந்தேவி உள்ளம் குலைந்து நடுநடுங்கி, “2கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று தன் கணவன் திருவடியிணைகளைத் தொழுது சோர்ந்து வீழ்ந்தாள்.


வஞ்சின மாலை

மன்னவன் மயங்கி வீழக்கண்டு சோர்ந்து வீழ்ந்த கோப்பெருந் தேவி ஒருவாறு தெளிவடைந்தாள். அவளைக் கண்ட கண்ணகி,

கோப்பெருந் தேவி, 1கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன்; ஆயினும்
2முற்பகல் செய்தான் பிறன் கேடு, தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்

என்று சொல்லி, பின்பு தான் பிறந்த காவிரிப்பூம் பட்டினத்துக் கற்புடைய மகளிர் எழுவர் வரலாற்றுக் குறிப்பினை யுரைத்து,

3மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்;
4பட்டாங்கு யானும்ஒர் பத்தினியே யாமாகில்,
5ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும், என்
6பட்டிமையும் காண்குறுவாய் நீ

என்றாள். அதனாலும், சீற்றம் தணியாது, மதுரை நகரத்து மக்களை நோக்கிக் கண் சிவந்து,

7நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் 8கேட்டீமின்;
1யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றம்இலேன், யான்

என்று தன் இடமார்பைக் கையால் திருகி, மதுரையை வலமாக மும்முறை வந்து, சுழன்று, அம் மார்பினையும் உருட்டி நகர்மீது விட்டெறிந்தாள். எறிந்ததும், அழற்கடவுள், நீல மேனியும், முறுக்கிய சடையும், வெள்ளிய பற்களும் உடைய ஒரு பார்ப்பன வடிவுதாங்கி அவள் எதிரே வந்து நின்று,

மாபத் தினிநின்னை 2மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதிஊட்டப், பண்டே ஓர்
3ஏவல் உடையேனால்,

என்று சொல்லி இறைஞ்சி நிற்பவன், மறுபடியும், அக் கண்ணகியை நோக்கி, “அன்னாய், இனி இந் நகரை எரியூட்டுங்கால் விலக்குதற் குரியார் யாவர்?” என்று கேட்க, அவள்,

பார்ப்பார் 4அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனும்இவரைக் கைவிட்டுத்
5தீத்திறத்தார் பக்கமே சேர்க

என்றாள். அவ்வண்ணமே,

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
6நல்தேரான் கூடல் நகர்.


அழற்படு காதை

இவ்வாறு கண்ணகியின் ஏவல் பெற்றுப் போந்த அழற் கடவுள், மதுரை நகரைப் பற்றியதும் எங்கும் எரி எழுந்து கொழுந்து விட்டு எரியலுற்றது. நகரைக் காக்கும் காவற் கடவுளர் தத்தம் காவல் தொழிலை விட்டு நீங்கினர்; அரசர் கோமானான பாண்டியன் நெடுஞ்செழியன், தன் தேவியுடன் அரசு கட்டிலில் துஞ்சினன் என்பதை அறியாமல்,

ஆசான், 1பெருங்கணி, 2அறக்களத்து அந்தணர்,
3காவிதி, 4மந்திரக் கணக்கர் தம்மொடு
5கோயில் மாக்களும், 6குறுந்தொடி மகளிரும்

ஓவியம்போல உரையாடாது இருந்து விட்டனர். 7காழோரும், 8வாதுவரும், தேரூர்பவரும், வாள் மறவரும் செய்வதறியாது மயங்கி அரசர் கோயிலைத் தீப்பற்றக் கண்டு தாம் நீங்கி யேகினர். அக் காலை அந்தணர் மரபைக் காக்கும் கடவுட்பூதம்,

விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்,
9நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்,
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
1வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

வந்து நின்றது; அதற்பின், அரசர் மரபுகாக்கும் பூதம்,

எண் அரும் சிறப்பின் மன்னரை ஒட்டி,
2மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந்தொழில் கடிந்து, 3கொற்றம் கொண்டு,
நடும்புகழ் வளர்த்து, நால்நிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன

இயல்புதாங்கி அருகே வந்து நின்றது. பின்னர், வணிகர் மரபு காக்கும் கடவுட் பூதம்,

நாஞ்சிலம் படையும் 4வாய்ந்துறை துலா5முன்
சூழ் ஒளித் தாலும் யாழும் ஏந்தி
விளைந்து 6பதம்மிகுந்து விருந்து பதம்தந்து
மலையவும் கடலவும் 7அரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு
உழவு தொழில் உதவும் பழுதில் வாழ்க்கைக்
கிழவன் என்போன் 8கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன்

வடிவுகொண்டு வந்து நின்றது. இறுதியாக,

9ஆடற்கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற்கு அமைந்த 10பலதுறை போகி,
கலிகெழு கூடல் பலிபேறு பூதத்
தலைவன் என்போன் தானும்

வந்து நின்று கண்ணகியைக் கண்டு, “இந் நகர்க்கண் அரசு முறை கெடும்போது, இதனைத் தீயுண்ணும் என்பதனை யாம் நெறியாக அறிந்தனம்; அதனால், யாம் இப்போது இந் நகரை விட்டு நீங்குவது இயல்பு” என்று சொல்லிவிட்டு நீங்கியது. ஏனைப் பூதங்களும் இவ்வண்ணமே நீங்கின.

கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
1பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
2உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
3காஎரி யூட்டிய நாள்போல் கலங்க
அறவோர் மருங்கின் 4அழல்கொடி விடாது,
5மறவோர் சேரி மயங்குஎரி மண்டக்
கறவையும் கன்றும் கனல் எரிசேரா,
6அறவை யாயர் அகன்தெரு அடைந்தன;
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறம்தில் பெயர்ந்தன;

இனி, இல்லிருந்து நல்லறம் புரியும் நங்கையர் தெருவில் கண்ணகியின் செயலைப் பாராட்டி, அழற்கடவுளை அந்த நங்கையர் பரவினர்; விலைமாதர் தெருவில், அத் தீ வெதுப்பக் கண்ட அம் மடந்தையரில் முதியோர், ஆடரங்கும், நாடகக் கருவியும், பிறவும் அழலால் கெடுவது கண்டு,

எந்நாட்டாள் கொல்? யார்மகள் கொல்லோ?
இந்நாட்டு இவ்வூர் 7இறைவனை இழந்து,
8தேரா மன்னனைச் சிலம்பின் வென்றுஇவ்
ஊர்தீ மூட்டிய ஒருமகள்

எனப் பேசிக் கொண்டனர். நகரில்,

அந்தி விழவும், ஆரண ஒதையும்,
செந்தீ வேட்டலும், தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும், மாலை அயர்தலும்,

முரசு முழக்குதலும் பிறவும் இலவாயின. கண்ணகிக்குத் தன் காதலனை இழந்ததனால் உண்டாய துன்பத்தால் உள்ளம் கொதித்தது; அதனால் அவள் வெய்துயிர்த்து மறுகிடை மறுகினள்; கவலையில் கவன்றாள்; இயங்கியும், மயங்கியும் எல்லையில்லாத் துயரமுற்றாள். இவ்வாறு திரியும், அவள்பால், மதுராபதி என்னும் நகர தேவதை வந்து நின்றாள்.


கட்டுரை காதை

தெருவில் அலமந்து திரியும் கண்ணகிபால் வந்த மதுராபதி, அவள் முகத்தெதிர் தோன்ற நாணி, பின்னே இருந்து கொண்டு, “திருமாபத்தினி, நங்காய், என் குறையைக் கேள்” என்றாள். எனவே, கண்ணகி “என் பின்னே வரும் நீ யார்? என் துயர் நிலை அறிவாயோ?” என்று கேட்க, மதுராபதி,

1ஆரஞர் எவ்வம் அறிந்தேன், அணியிழாய்!
மாபெருங் கூடல் மதுராபதி என்பேன்;
2கட்டுரை யாட்டியேன்; யான்நின் 3கணவற்குப்
பட்ட கவற்சியேன், பைந்தொடி, கேட்டி,

என்று தொடங்கி, பாண்டியன் செங்கோல் வளைந்ததும், கோ வலனுக்குத் தீது வந்ததும் ஊழ்வினையால் ஆயின என்று சொன்னாள். அதன்பின் பாண்டியனது செம்மைப் பண்பு கூறலுற்று “எம் கோமானாகிய பாண்டியன்

4மறைநா ஓசை அல்லது 5யாவதும்
மணிநா ஓசை கேட்டதும் இலனே;
அடிதொழுது 6இறைஞ்சா மன்னர் அல்லது,
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்

என்று சொன்னாள். பின்னர், பொற்கைப் பாண்டியன் வரலாறும், தங்கால் என்னுமிடத்து வார்த்திகன் என்னும் மறையவன் புதல் வனைக் காவலர் அறியாது சிறையிட்டதனைப் பின்னர் அறிந்து அது குறித்து, அவனை யடைந்து

அறியா மாக்களின் 1முறைநிலை திரிந்தஎன்
இறைமுறை பிழைத்தது; பொறுத்தல்நும் கடன்எனத்
தடம்புனல் கழனித் 2தங்கால் தன்னுடன்
3மடங்கா விளையுள் வயலூர் நல்கி,
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
4இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கிஅவள்
தணியா வேட்கையும் சிறிது

தணித்த பாண்டியனது வரலாறும் எடுத்தோதினள். முடிவில், கோவலன் கண்ணகி என்ற இருவரது பழம் பிறப்புக் கூறலுற்று, முதற்கண்,

ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
5அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசுகேடுறும் எனும்
6உரையும் உண்டே, 7நிரைதொடி யோயே,

என்று மொழிந்து, பின்னர்க் கூறுவாள்: “கலிங்கநாட்டில் சிங்க புரத்தே வசு என்பவனும், கபிலபுரத்தே குமரன் என்பவனும் ஆட்சிபுரிகையில் இருவர்க்கும் பகைமை யுண்டாயிற்று; அதனால் இருவர் நாட்டினும் நேரிய முறையில் போக்கு வரவு இலவாயின. அந் நாளில் நின் கணவனாகிய கோவலன் பரதன் என்னும் பெயருடன் சிங்கபுரத்தரசன் பால் தொழில் பூண்டிருந்தான். அந் நாளில் சங்கமன் என்னும் வணிகனொருவன் தன் மனைவி நீலி யென்பவளுடன் வந்திருப்ப, அவனைக் கபிலபுரத்து ஒற்றன் எனக் காட்டி அப் பரதன் கொலைபுரிவித்தான். அவன் பிரிவாற்றாது அலமந்த அவன் மனைவி நீலி, பதினான்கு நாள்காறும், பல விடங்களிலும் திரிந்து, ஒரு மலை மீதேறித் தன் கணவனொடு விண்ணுலகு புகுந்தாள். அக் காலத்தே,

எம்முறு துயரம செய்தோர், யாவதும்
1தம்முறு துயரம் இற்றுஆகுக என்றே
2விழுவோள் இட்ட வழுவில் சாபம்
பட்டனிர்;

ஆதலால், நீவிர் இத் துயரம் உற்றீர்; இனி, நீ பதினான்கு நாள் கழிந்தபின் நின் கணவனை வானவர் வடிவில் கண்டு கூடுவை” என்று இவ்வாறு அம் மதுராபதி கூறிவிட்டு, நகரைப் பற்றி எரியும் அழற்கு 3வீடுபெற்றுச் சென்றாள். கண்ணகி, தன் கை வளையை ஐயை கோயில் வாயிலில் உடைத்தெறிந்து விட்டு,

கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் 4வறியேன் பெயர்குஎன

இரவும் பகலும் நடந்து திரிந்து, வையையாற்றின் கரை வழியே சென்றாள். செல்லுங்கால்,

5அவல என்னாள் அவலித்து இழிதலின்;
6மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின்;
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்துஆங்கு
அவுணரைக் கடந்த சுடர்இலை நெடுவேல்
1நெடுவேள் குன்றம் 2அடிவைத்து ஏறிப்
3பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்

நின்றாள். அங்கிருந்தோர், “நீவிர் யார்” என்று வினவ, அவர்கட்கு “யான் ஒரு 4தீத்தொழிலாட்டியேன்” என்று செப்பினள். இதற்குள் பதினான்குநாள் எல்லை கழிந்தது. பகற்போது கழிய இரவும் வந்தது. அப்போது,

5பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி,
6வாடா மாமலர் மாரிபெய்து, ஆங்கு,
7அமரர்க்கு அரசன்தமர் வந்து ஏத்தக்
8கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு

கண்ணகி நல்லாளும் வானவூர்தி ஏறிச் சென்று விண்ணக மாதர்க்கு விருந்தாயினாள்.

வெண்பா
9தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணகமா தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து.

மதுரைக் காண்டம் முடிந்தது.

வஞ்சிக் காண்டம்


குன்றக் குரவை

யாங்கள் முன்னைநாள் 1நெடுவேள் குன்றத்துக்குச் சென்று, அங்கே தங்கிக் “2குருவியோப்பியும், கிளி கடிந்தும், அருவியாடியும், 3சுனைகுடைந்தும்” வந்துகொண்டிருந்தேம்; அதுபோது, அம் மலையிடத்தே ஒரு வேங்கை மரத்தின்கீழ் ஒரு நங்கை நிற்பக் கண்டேம்; அவளை அணுகி, “4வள்ளி போல்வீர், நும்மைக் கண்ட எம் மனம் நடுங்க, முலையிழந்து நிற்கின்ற நீவிர் யாவிரோ?” என வினவினேம். அவள், எம்மைச் சிறிதும் முனியாது,

“மணமதுரையோடு அரசு கேடுற
 வல்வினை வந்து உருத்த காலை,
கணவனை அங்கு இழந்து போந்த
 கடுவினை யேன், யான்”

என்றாள். இது கேட்டதும் யாங்கள் மிகவும் அஞ்சி, இருகையும் கூப்பி வணங்கி நின்றேம். அக்காலையில், வானவர் போந்து மலர்மாரி பொழிந்து, குன்றவர் அனைவரும் கண்டு வியந்து நிற்ப, அவளை அவளுடைய கொழுநனுடன் வானுலகு கொண்டு போயினர். “இவள் போலும் ஒரு பெரிய தெய்வம் நம் குலத்துக்கு இல்லை; ஆதலால், இவளை இவ்வேங்கையின் கீழே 5தெய்வம் கொள்ள வேண்டும்”
என்று எண்ணி, எம் சிறு குடியில் வாழ்வார்க்கு எம் எண்ணத்தைத் தெரிவித்தேம்.

சிறு குடியீரே, சிறு குடியீரே,
தெய்வம் கொள்ளுமின், சிறு குடியீரே,
நறுஞ்சினை வேங்கை நல்நிழற் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடி யீரே,
1தொண்டகம் தொடுமின் 2சிறுபறை தொடுமின்,
3கோடுவாய் வைம்மின், 4கொடுமணி இயக்குமின்
5குறிஞ்சி பாடுமின், நறும்புகை எடுமின்,
பூப்பலி செய்ம்மின் 6காப்புக்கடை நிறுமின்,
பரவலும் பரவுமின்; விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை 7துஞ்சாது வளம்சுரக்க எனவே.

கொளுச் சொல்
ஆங்குஒன்று காணாய்,
 அணியிழாய், ஈங்கிதுகாண்,
8அஞ்சனப் பூழி
 அரிதாரத்தின் இடியல்,
9சிந்துரச் சுண்ணம்
 செறியத்தூய்த் தேங்கமழ்ந்து
1இந்திரவில்லின் எழில்
 கொண்டு இழும்என்று
வந்தீங் கிழியும்
 மலையருவி ஆடுதுமே,
ஆடுதுமே தோழி
 ஆடுதுமே தோழி
2அஞ்சல் ஓம்பென்று
 நலன்உண்டு நல்காதான்
3மஞ்சு சூழ் சோலை
 மலையருவி ஆடுதுமே.

(புதுப்புனல்)
யாதொன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
4போதாடி வந்த புதுப்புனல்;
போதாடி வந்த புதுப்புனல் 5மற்றையார்
மீதாடின் நோம் தோழி நெஞ்சன்றே.

பாட்டு மடை
உரைஇனி; மாதராய், 6உண்கண் சிவப்பப்
7புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்,
8உரவுநீர் மாகொன்ற வேல்ஏந்தி, ஏத்திக்
9குரவை தொடுத்தொன்று பாடுகம் வாதோழி.

(வேல் பாடுதல்)
சீர்கெழு செந்திலும் 1செங்கோடும் 2வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா 3இறைவன்கை வேல்அன்றே;
4பார்இரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த 5சுடர்இலைய வெள்வேலே.

பாட்டு மடை
6இறைவளை நல்லாய்!
 இது நகையாகின்றே;
7கறிவளர் தண்சிலம்பன்
 செய்த நோய்தீர்க்க
அறியாள் மற்றன்னை;
 8அலர்கடம்பன் என்றே
9வெறியாடல் தான்விரும்பி
 வேலன் வருகஎன்றாள்.

(வெறிவிலக்குப் பாடல்)
செறிவளைக்கை நல்லாய்! இதுநகை யாகின்றே;
10வெறிகமழ் வெற்பன் நோய்தீர்க்க வரும் வேலன்,
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்;
11ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்.

பாட்டு மடை
வேலனார் வந்து வெறியாடும் 1வெங்களத்து
2நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்,
3மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.

(மணம் பாடுதல்)
கயிலைநன் மலைஇறை மகனைநின் மதிநுதல்
மயில்இயல் மடவரல் 4மலையர்தம் மகளார்
5செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
6அயல்மணம் ஒழி;அருள் அவர்மணம் எனவே.

பாட்டு மடை
என்று யாம்பாட 7மறைநின்று கேட்டருளி
8மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன், அவன்றன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்,வாழி, தோழி.

9கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்;
அறுமுகம் இல்லை; அணிமயில் இல்லை;
குறமகள் இல்லை; 10செறிதோள் இல்லை;
11கடம்பூண் தெய்வ மாக நேரார்,
12மடவர் மன்றஇச் சிறுகுடி யோரே.

பாட்டு மடை
என்று ஈங்கு,

1அலர்பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டுப்
2புலர்வாடு நெஞ்சம் 3புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்.

முலையினால் மாமதுரை 4கோளிழைத்தாள் காதல்
தலைவனை, 5வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்.

பாடுகம் வா, வாழி தோழி, யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி தோழி யாம்பாடுகம்
6கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
7தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்;
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே.

8பாடுற்று
9வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாள்ஓர் காரிகையே;
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை 10மறுதரவோ இல்லாளே;
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம்பாடப்
பெறுகதில் அம்ம1இவ் வூரும் ஓர்பெற்றி.

பெற்றி யுடையதே, பெற்றி யுடையதே
2பொற்றொடி மாதர் கணவன் மனம்காணப்
பெற்றி யுடையது இவ்வூர்.

இவ்வாறு யாம் நம் தலைவர் விரைய வரையும் பொருளை யுட்கொண்டு, பாடியாடும் குரவையைக் கண்டு, “3வில்லெழுதிய இமயத்தொடு கொல்லி யாண்ட குடவர்கோ” 4ஆனாது உண்டு மகிழ்ந்து பல்லாண்டு வாழ்வானாக என, அவர் நின்னை வரைதற்கு வந்தனர்காண் என்று தோழி தலைமகட்குக் கூறுகின்றாள்.


காட்சிக் காதை

1மாநீர் வேலிக் கடம்பெறிந்து 2இமயத்து
வானவர் மருள மலைவில் பூட்டிய
வானவர் தோன்றல்

சேரன் செங்குட்டுவன், வஞ்சிமா நகரத்தே இலவந்தி வெள்ளி மாடத்தின்கண் தன்தேவி இளங்கோ வேண்மாளுடன் இனிதிருக்கும் ஒருநாள், “மஞ்சுசூழ் சோலை மலைவளம் காண்குவம்” எனக் கருதி உரிமை மகளிரும், ஏனை ஆயத்தவரும் ஒருபுடையே சூழ்ந்துவர, படைவீரரும் பிறரும் மற்றொருபுடையே அணிபெறவர, வஞ்சி நகரத்தை விட்டு நீங்கிச் சென்றனன். அச் செலவு,

வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய 3விறல்வேல் வானவன்
4பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த் 5துருத்தியும் இளமரக் காவும்
6அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த
7பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று

இருந்தது. இவ்வாறு சென்ற குட்டுவன் மலைச்சரிவில், திருமாலின் மார்பில் விளங்கும் முத்துமாலை போலக் கிடந்து தன் தெளிந்த நீரால் இனிய காட்சி வழங்கும் பேரியாற்றின் மணல் பரந்த அடைகரையை அடைந்தான். ஆங்கு, நாகம், சந்தனம் முதலிய பலவகை மரங்கள் செறிந்திருந்தன. நறுமணம் கமழும் பூக்கள் தேன்மிக்குத் திகழ்ந்தன. அத் தேனை யுண்ணும் வண்டும், ஞிமிரும், மதுகரமும் மொய்த்து இனிது பாடின. மேலும்,

குன்றக் குரவையொடு 1கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் 2வேலன் பாணியும்,
3தினைக்குறு வள்ளையும், புனத்துஎழு 4விளியும்,
5நறவுக்கள் நொடைத்த குறவர் ஓதையும்,
6பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் 7புகர்முக ஓதையும்,
கலிகெழு மீமிசைச் 8சேணோன் ஓதையும்
9பயம்பில் வீழ்யானைப் பாகர் ஓதையும்

நால்வகைப் படைகளும் இயங்கும் ஓதையும் எனப் பல வகை ஓதை யாங்கணும் ஒலித்தன. இன்ன இன்பக் காட்சியும் இனிய ஓதையும் எங்கும் விளங்கக் கேட்டும் கண்டும் இனிதிருந்த வேந்தர் பெருந்தகையின் திருமுன், குன்றங்களில் உள்ள குறிச்சிகளில் வாழ்ந்த குறவர்கள், தங்கள் அரசர் பெருமானைக் காண்பது குறித்து,

யானை வெண்கோடும், அகிலின் 10குப்பையும்
மான்மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
11சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி யரிதாரமும்,
1ஏல வல்லியும், இருங்கறி வல்லியும்,
2கூவை நூறும், கொழுங்கொடிக் 3கவலையும்;
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
4பைங்கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
5காயமும், கரும்பும், பூமலி கொடியும்,
கொழுந்தாட் கமுகின் கொழுங்குலைத் தாறும்,
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்;
6ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
7வாள்வரிப் பறழும், 8மதகரிக் களபமும்,
குரங்கின் குட்டியும் 9குடாவடி உளியமும்
வரையாடு 10வருடையும் மட11மான் மறியும்
12காசறைக் கருவும் ஆசறு 13நகுலமும்
பீலி மஞ்ஞையும் 14நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்

ஆகிய இவற்றைத் தம் தலைமேல் சுமந்துவந்து, அவன் திருவடியில் வைத்து, நிலத்தே வீழ்ந்து வணங்கி, “ஏழ் பிறப்படியேம், வாழ்கநின் கொற்றம்” என வழிபட்டு நின்றனர். அவர்களை அருளொழுக நோக்கிய செங்குட்டுவன், இனிய சொற்களை வழங்கினன். பின்பு, அக்குறவர்கள் கண்ணகி வானநாடு சென்ற செய்தியைத் தெரிவிக்கலுற்று,

“கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற 1மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்!
எந்நாட் டாள்கொல்? யார்மகள் கொல்லோ?
நின்நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பன்னூ றாயிரத் தாண்டு வாழியர்,

என்று மொழிந்தனர். அப்போழ்து, அரசன் அருகே தண்டமிழ் ஆசானாகிய சாத்தனார் வந்து அவனது ஆட்சி நலத்தைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டு உடனிருந்தார். அவர், இக் குறவர் தெரிவித்ததைக் கேட்டு அரசன் வியந்து நோக்கக் கண்டு, கண்ணகி தன் காதலனுடன் மதுரைக்குப் போந்ததும், ஆங்கே சிலம்பு காரணமாகக் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி பாண்டியன் முன் தன் செவ்விய சிலம்பு காட்டி வழக்குரைத்து வஞ்சினம் சாற்றியதும், மதுரை மூதூர் தீக்கிரையானதும், பிறவும் கூறி,

அரிமான் ஏந்திய அமளிமிசை யிருந்த
2திருவீழ் மார்பின் தென்னவர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்துயர் பொறான்
மயங்கினன் கொல்என மலரடி வருடித்
3தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந்துயர் பொறாள்,
மன்னவன் செல்வுழிச் செல்கயான் எனத்
தன்உயிர் கொண்டு அவனுயிர் தேடினள்போல்
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;

அவனது கொடுங்கோலின் தன்மை இத்தன்மைத்து எனத் தலைமை வேந்தனாகிய நின்பால் முறையிடுவாள்போல, அப் பத்தினி நங்கை நின் நாட்டிற்குப் போந்து, வானக வாழ்க்கை பெற்றாள்; நின் வலம்படு கொற்றம் வழிவழிச் சிறக்க” என மொழிந்து வாழ்த்தினர்.

இதைக் கேட்ட செங்குட்டுவன், பாண்டி வேந்தன் உயிர் விட்டது குறித்து மனம் வருந்திப் பின் தெளிந்து,

எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற
1செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
2உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன
வல்வினை வளைத்த கோலை, மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது;
மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;
3பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
4குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி
5மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பமல்லது 6தொழுதகவு இல் எனத்

தனக்குச் செய்திகளை யுரைத்த தண்டமிழ் ஆசானுக்கு உரைத்தான். இப் பேச்சுக்களைக் கேட்டு வியப்புற்றிருந்த தன் தேவியை நோக்கி, “தன் கணவன் உயிர் விடவே அவன் உயிரைத் தொடர்ந்து உயிர் துறந்த பாண்டிமா தேவியோ, நம் நாடு போந்து வானநா டடைந்த கண்ணகி யாரோ; இவருள், “நீ வியக்கும் நலமுடையோர் யாவர்?” என உசாவினன். அவனுக்கு வேண்மாள் மிக்க மகிழ்ச்சியுடன் விடை கூறலுற்று,

காதலன் துன்பம் காணாது கழிந்த
7மாதரோ பெருந்திரு உறுக வானகத்து;
அத்திறம் நிற்க,நம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் 8பரசல் வேண்டும்”

என்றனள். அரசற்கும் அதுவே கருத்தாதலால், அவன் அமைச்சரை நோக்கினன். அக்குறிப்பறிந்த அமைச்சர்,

1ஒற்கா மரபின் பொதியி லன்றியும்,
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவு ளாகும்;
கங்கைப் பேர்யாற்றினும், காவிரிப் புனலினும்
தங்கிய 2நீர்ப்படை தகவோ உடைத்து எனக்(கூறினர்.)

உடனே செங்குட்டுவன் முற்பட்டுக் கூறத் தொடங்கி,

பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு
முதுநீர்க் 3காவிரி முன்துறைப் படுத்தல்
4மறத்தகை நெடுவாள் எம் குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;

இனி, அவ்விமய மலையரசன் நம் மாபெரும் பத்தினியின் படிமம் சமைத்தற்கு வேண்டும் கல்லைத் தாரானாயின், நிலையாமைப் பொருட்டாகிய காஞ்சியும், மகட்பாற்காஞ்சி a, பெருங்காஞ்சி b, என்பனவும், குடைநிலைவஞ்சி c, கொற்றவஞ்சி d, மாராயவஞ்சி e, பெருவஞ்சி f, பெருஞ்சோற்றுவஞ்சி g, கொற்றவள்ளை h என்பனவும்,

5வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்
6பூட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
1பூவா வஞ்சிப் பொன்நகர்ப் புறத்துஎன்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்

என்று மொழிந்தான்.

இதன்பின் வில்லவன்கோதை என்னும் அமைச்சன், “பல்யாண்டு வாழ் நின் கொற்றம்” என்த தொடங்கி, கொங்கு நாட்டில் சோழ பாண்டியரொடு பொருதுபெற்ற வெற்றியும், கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர் முதலிய வட ஆரிய மன்னர் எதிர்ந்த செருக்களத்தில், குட்டுவன் தன் யானைப் படையைச் செலுத்தி வாகை சூடிய திறமும் எடுத்துக் கூறினன். அதன்மேலும் அமையாது,

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
2எம்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
3ஒருநீ ஆகிய செருவெம் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்;
4இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின், ஏற்பவர்
5முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
இமயமால் வரைக்கு எங்கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே;

ஆதலால், வடநாட்டு வாழும் மன்னர்கட்கு வில்லும் மீனும் புலியும் எழுதிய தமிழ் இலச்சினையிட்ட ஓலை வரைந்து விடுதல் ஒன்றே அமையும்; அது செய்க என்று உரைத்தான்.

அவனுக்குப்பின் அழும்பில் வேள் என்பவன், எழுந்து வணங்கி நின்று,

1நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்று,நம்
காவல் வஞ்சிக் 2கடைமுகம் பிரியா;
3வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தம்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?

ஆதலால், நம் செலவினை நம் வஞ்சிமா நகர்க்கண் பறை யறைவித்துத் தெரிவித்தல் ஒன்றே சாலும் என்றான். அரசனும் அதனை யுடன்பட்டு நேர்ந்து, பேரியாற்றங்கரையின் நீங்கி வஞ்சிநகர்க்குத் திரும்பிச் சென்று, மேலே தான் முடிவு செய்தவாறே பறை அறைவித்தான்.

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோறு ஊழி உலகம் காக்கஎன;
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துஓர்
கற்கொண்டு பெயரும் எம்காவலன்; ஆதலின்,
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
4இடுதிறை கொடுவந்து எதிரீ ராயின்,
5கடற்கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின்; கேளீ ராயின்,
6தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்;
தாழ்கழல் மன்னன் தன் 7திருமேனி
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி,

யானை எருத்தத்திருந்து, நகர் முழுதும் பறை அறைவிக்கப் பெற்றது.


கால்கோட் காதை

செங்குட்டுவன் கண்ணகிக்குப் படிமம் சமைப்பதற்காகக் கல் கொணர்வது குறித்து வடநாட்டிற்குச் செல்லக் கருதிய செய்தியை வஞ்சி நகர மக்கட்குப் பறையறைவித்துத் தன் அரசவையில் இருப்ப, ஆசான் பெருங்கணி, அமைச்சர், தானைத் தலைவர் முதலாயினார் அவற்கு, வடநாட்டுச் செலவின்கண் செய்ய வேண்டிய முறைகள் சிலவற்றை எடுத்து மொழிந்தனர். அவற்றைக் கேட்ட அவனுக்கு முன்பு ஒருகால், இமயவரை யிடத்திருந்து சில முனிவர் வந்து வடநாட்டில் நிகழ்ந்ததாகக் கூறிற நிகழ்ச்சி யொன்று அவன் நினைவிற்கு வந்தது. அதனால், அவன்,

இமையத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
1அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி
2நம்பால் ஒழிகுவதாயின், ஆங்கு, அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும் 3என்வாய் வாளாகின்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது 4பயங்கெழு வைப்பின்
5குடிநடுக்கு றூஉம் கோலேன் ஆகஎனத்

தன் வெகுட்சி தோன்றக் கண் சிவந்து கூறினான். உடனே ஆசான் பெருங்கணி எழுந்து, “பெரும், அவ் வட வாரிய மன்னர் சோழ பாண்டியரை யல்லது நின்னை இகழ்ந்து கூறினாரல்லர்; நீ இவ்வாறு வஞ்சினங் கூறற்கு நின்னை எதிர்க்கும் மன்னரும் உளரோ? ஆதலால், நின் சினந்தணிக” என்று கூறினன். காலக்கணக்கன், செல்லு தற்குரிய காலத்தை யறிந்து, “அரசே, நின் திருமலர்த் தாமரைச் சேவடிக்கண் எல்லா வரசும் பணிதற்கேற்ற நாழிகை இதுவே; ஆதலின், இதுபோதே சேறற்கு எழுவாயாக” என்று மொழிந்தான். அரசனும் அதற்குடன்பட்டு அக்காலம் தவறா வண்ணம் முன்னதாக, வாளும் குடையும் நாட்கொள்ளுமாறு பணித்தான். பொருநர் ஆர்த்தனர்; முரசங்கள் முழங்கின; கொடிகள் மிகப் பல நிரை நிரையாக எடுக்கப்பெற்றன; பல்வகைத் தானைகளும் கடல்போல் பரந்து எழுந்தன.

ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
வெம் பரியானை வேந்தற் கோங்கிய
1கரும வினைஞரும் 2கணக்கியல் வினைஞரும்
3தரும வினைஞரும் 4தந்திர வினைஞரும்

பட்டத்தி யானையின் எருத்தின்மேல் வாளும் குடையும் ஏற்றி, பல்வகைச் சிறப்பும் விளங்கப் புறமதில் வழியே புறப்பாடு செய்தனர். பின்னர் அரசன் பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ் சோற்று விருந்தளித்து, காலை முரசம் கடை வாயிலில் எழலும், செய்வன செய்துகொண்டு, பிறை முடித்த இறைவன் கோயிற்குச் சென்று அவன் திருவடிக்கண் இறைஞ்சி வலங்கொண்டு, கடக்களி யானை யின் கழுத்தின்மேல் இவர்ந்து செல்லத் தொடங்கினான். வழியில்,

5ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்
6சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்த,
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின் செல்வுழி,

நாடக மடந்தையர் நலங்கொளப் பரவினர்; 1மாகதரும் 2வைதாளி கரும், 3சூதரும் கூடிச் சூழ்ந்து ஏத்தினர்; யானை வீரரும் குதிரை வீரரும் வாள் மறவரும் செங்குட்டுவனது தாள்வலம் புகழ்ந்தனர். இவ் வேத்தொலியின் இடையே சென்ற சேரன் செங்குட்டுவன் கடல்போல் பரந்து வரும் தானையுடன் நீலகிரி என்னும் மலையடி யடைந்து, ஆங்கே சமைக்கப்பெற்றிருந்த பாடி யிருக்கையில் தங்கினன்.

அக்காலை, அவனது தானையின் பேரோசை கேட்ட விசும் பிலியங்கும் முனிவர் சிலர், நிலத்திடை யிழிந்து வந்து மன்னவன் முன் நின்றனர்.அவர்களைக் கண்டதும் சேரமான் பொருக்கென எழுந்து அவர்கள் திருவடியில் வணக்கம் செய்ய, அவர்கள் மகிழ்ந்து,

செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ, கேளாய்
4மலயத்து ஏகுதும்; வான்பேர் 5இமய
நிலயத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்
அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்,
பெருநில மன்ன! காத்தல் நின்கடன்

என்று உரைத்து, அவனை வாழ்த்திவிட்டுச் சென்றனர். பின்பு, கொங்கணக் கூத்தரும் கருநாடரும் பிறரும் வந்து. “மறவாள் வேந்தே, ஊழி வாழி” எனப் பரவிப் பரிசு பெற்றனர். ஏத்தாளர் அவன் புகழை யேத்தினர். அதுபோது, நாடக மகளிரும், குயிலு வரும், வேழம்பரும், பிறரும் அளவிலராய்ப் போதர, ஐஞ்ஞூறு யானையும், பதினாயிரம் குதிரையும், இருபதினாயிரம் தேரும் கொண்டு, சஞ்சயன் என்னும் தூதுவனைத் தலைவனாகக் கொண்ட கஞ்சுக முதல்வர் ஆயிரவர் வந்து பாடி யிருக்கையின் வாயிலை யடைந்தனர். வாயிலாளர் அவர் வரவைச் சேரனுக்குத் தெரிவித்து, அவன் அருள் பெற்று அவருட் சஞ்சயனை அரசன்முன் வரவிடுத் தனர். உள்ளே புகுந்த சஞ்சயன், அரசனை வணங்கி, தன்னொடு போந்தாரையும், போந்த படையையும் காட்டி, “அரசே, யாம் வடநாட்டு நூற்றுவர் கன்னர் வரவிட்ட தூதரேம். அவர்கள்,

வடதிசை மருங்கின் 1வானவன் பெயர்வது
கடவுள் எழுதஓர் கற்கே, ஆயின்,
ஓங்கிய இமயத்துக் 2கற்கால் கொண்டு
3வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்துஆங்கு
யாந்தரும் 4ஆற்றலம் என்றனர்”

என்று கூறினர். அதுகேட்டு உவகை பூத்த செங்குட்டுவன்,

“பால குமரன் மக்கள் மற்றவர்,
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
5அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
6கூற்றக் கொண்டிச் சேனை செல்வது,
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
7வங்கப் பெருநிரை செய்க தாம்”

எனச் சொல்லிவிட, சஞ்சயன் பணிந்து விடைபெற்றேகினன். பின்பு, தென்னர் விட்ட திறையாகிய சந்தனமும் முத்தும் கொண்டு முன் வைப்ப, அத்தென்னவர்க்கு, முடங்கலெழுதி வந்தார்க்கு வழங்கினன்; அம் முடங்கலைப் பெற்று அவர் சென்றபின், சேரமான் தன் பாடியிருக்கை நீங்கி, கன்னர் காக்கும் கங்கைப் பேர் யாறு அடைந்து, அவரால் பெற்ற வங்கத்தின் வழியாக அவ்யாற்றைக் கடந்து, வடமருங்கு எய்தினன். அங்கே, கன்னர் பலரும் எதிர் கொண்டு சிறப்புச் செய்தனர். பின்பு, அவர் பக்கல் நீங்கி, வடநாடு அடைந்து, வடவாரியப் பகைவேந்தர் புலத்தே பாசறை சமைத்துத் தன் தானையுடன் செங்குட்டுவன் தங்கி யிருந்தான். இதனை யறிந்த வடவாரியப் பகை மன்னரான கனகவிசயர் என்பார், உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்ற வேறு பல ஆரிய வேந்தரின் துணை கொண்டு, பெரும் படையுடன் போந்து போர் எதிர்ந்தனர்.

இரைதேர் வேட்டத்து எழுந்த 1அரிமா
2கரிமாப் பெருநிரை கண்டு உளம்சிறந்து
பாய்ந்த பண்பின், பல்வேல் மன்னர்
3காஞ்சித் தானையொடு காவலன் 4மலைப்ப,

போர்ப்பறை எங்கும் ஒலித்தது; மயிர்க்கண் முரசம் மாதிரத் திசைத்தது.

சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர்
5கறைத்தோல் மறவர் கடுந்தேர் ஊருநர்
வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர்

இருமருங்கும் பெரும்போர் உடற்றினர். 6தாரும் தாரும் தம் முள் பொருதன; தோளும் தோளும் துணிந்து வேறாயின. எங்கும் வேலும் வாளும் துணிபட்டுக் குவிந்தன. குறையுடற் பிணங்கள் மலைபோல் பிறங்கின; குருதி வெள்ளம் பெருக்கெடுத் தோடிற்று.

அடுந்தேர்த் தானை ஆரிய அரசர்
7கடும்படை மாக்களைக் கொன்றுகளம் குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் 1வெரிநும் பாழ்பட
2எருமைக் கடும்பரி யூர்வோன் 3உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையில் உண்ணும் என்பது
ஆரிய வரசர் அமர்க்களத்து அறிய

4நூழிலாட்டி வெற்றி மேம்பட்டுச் செங்குட்டுவன் செருச்செய்வது கண்ட ஆரிய வேந்தரான கனக விசயர்கள், போருக்கு ஆற்றாது அஞ்சி ஓடத் தலைப்பட்டனர். அவர்தம் படையினருள், பலர்,

சடையினர், 5உடையினர், சாம்பற் பூச்சினர்,
6பீடிகைப் பீலிப் பெரு நோன்பாளர்,
7பாடு பாணியர், 8பல்லியத் தோளினர்,
ஆடு கூத்த ராகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாம்9துறை போகிய

விச்சைக் கோலம் பூண்டு வீற்றுவீற்றாகச் சிதறிப் போயினர். ஏனையோர்போரிற் பட்டழிந்தனர். பின்பு செங்குட்டுவன், தன் வீரர்பால், முன்பு முனிவர்கள் செய்து கொண்ட முறைக்கேற்ப, வடநாட்டு மறையவர்களைக் காத்தோம்புமாறு கட்டளையிட்டு, வில்லவன்கோதை யென்னும் அமைச்சனுடன் பல்வகைப் படைகளையும் விடுத்து, “பொற் கோட்டிமயத்துப் பொருவறு பத்தினிக்குக்” கற் செய்தலைக் கால் கொண்டான்.


நீர்ப்படைக் காதை

கண்ணகியாகிய கற்புக்கடவுட்குக் கற்கோடல் வேண்டி, வடவிமயம் போந்த தமிழ் வேந்தனுடன் ஆரிய மன்னரான கனக விசயர்கள் செய்த போர் பதினெட்டு நாழிகையில் முடிந்தது. இதனால், இமையவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர் பதினெட்டி யாண்டும், இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்தது பதினெட்டுத் திங்களும், பாரதப் போர் பதினெட்டு நாளும் நடந்ததுபோல, கனக விசயர் போர் பதினெட்டு நாழிகையில் முடிந்தது என உலகர் கூறுலுற்றனர். தோல்வியுற்ற கனக விசயர் முடிமீது கண்ணகிக் கடவுட் பொருட்டு எடுத்த கல்லை யேற்றிக் கங்கைப் பேர் யாற்றுக்கு நீர்ப்படை செய்வான் வரலாயினன்.

செறிகழல் வேந்தன் தென்தமி ழாற்றல்
அறியாது மலைந்து ஆரிய மன்னரை
வருபெருந்த தானை 1மறக்கள மருங்கின்
2ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து

வடகரையில் தங்கி, அக் கல்லை நூலோர் கூறிய நெறிப்படி நீராட்டுமாறு பணித்தான். அவ்வாறே, கல்லும் செவ்வே நீராட்டப் பட்டது. பின்னர், நூற்றுவர் கன்னர் அமைத்த நாவாய்களில் செங்குட்டுவன் தன் சுற்றமும் தானையுமாகக் கடந்து சென்று, கங்கையின் தென்கரையை அடைந்தான். அங்கேயிருந்த பரந்த வெளியில் அவனும் அவன் தானையும் தங்குதற்காக,

மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்
பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்
1உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும்
2திருமலர்ப் பொய்கையும் 3வரிகாண் அரங்கமும்
பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்

ஆரிய மன்னரால் அழகுற அமைக்கப்பெற்றிருந்தன. அப் பாடியின் கண் இனிதிருந்த வேந்தன், தான் செய்த போரில் உயிர் கொடுத்துப் புகழ்பெற்ற தன் தானை வீரர் கட்குச் சிறப்புச் செய்து, உயிர் துறவாதே வெற்றி கொண்டு நின்ற வீரர்கட்கு, வெற்றிக் குறியாகப் பொன்னாற் செய்த வாகைப் பூக்களைத் தந்து, தான் தன் பிறந்த நாள் விழாவிற் செய்யும் கொடையினும் சாலச் சிறந்த கொடை யினை வழங்கிப் புலவர் பாடும் புகழ் படைத்து விளங்கி யிருந்தான். அப்போது மாடலன் என்னும் மறையோன் அவன்பால் வந்து, வாழ்த்தி நின்று,

வாழ்க எம்கோ, மாதவி மடந்தை
4கானற் பாணி கனக விசயர்தம்
5முடித்தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
6அடிப்படுத் தாண்ட அரசே வாழ்க

என்று மொழிந்தான். இது கேட்ட சேரர் பெருமான் அவன் கருத்தை அறியானானய்,

பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா
7நகைத்திறம் கூறினை; நான்மறை யாள,
யாதுநீ கூறிய உரைப் பொருள்?

என்று வினவினன். மாடல மறையோன், அதனைக் கூறலுற்று, கண்ணகி கோவலனுடன் மதுரைக்குப் போந்ததும், கோவலன் கொலையுண்டதும், கண்ணகி வழக்குரைத்து நகரைத் தீக்கிரையாக்கி யதும், பின் சேரநாடு போந்து வேங்கை நீழலில் விண்ணவர் தோன்றத் தோன்றிய கோவலனுடன் விண்ணாடு புக்கதும் பிறவும் கூறி,

1மாமுனி பொதியில் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்
வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன்;
2வலம்படு தானை மன்னவன் தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்,
3தாதெரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீதிலன், கோமகன் பிழைத்தான்,
அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மாக்கான்,
குடையும் கோலும் பிழைத்த வோஎன

இடையிருளில் எரிமூட்டி அதன்கண் வீழ்ந்து இறந்தாள். இச் செய்திகளைக் கேள்வியுற்ற கவுந்தியடிகள், பாண்டி வேந்தன்பால் மிக்க சினங் கொண்டாள். ஆனால், அவன் அவளது சாபம் பெறாதபடி உயிர் இழந்துவிட்டதனால், இக் கோவலன் முதலா யினார்க்கு வரக்கடவ இத் தீவினைப் பயன் என் வாயிலாக வந்தது என்றெண்ணி, உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறந்தனள். பின் யான் என் ஊர்க்குச் சென்று, அங்கே கோவலன் கண்ணகி என்ற இருவரது பெற்றோரையும் கண்டேன்.

மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதும் கேட்டுக்
கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி
4மாபெருந் தானமா வான்பொருள் ஈத்துஆங்கு
5இந்திர விகாரம் ஏழுடன்புக்கு ஆங்கு
6அந்தர சாரிகள் 7ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் 1துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
2இறந்த துயர் எய்தி இரங்கி

இன்னுயிர் விட்டாள். கண்ணகியின் தந்தை ஆசீவகர் பள்ளி யடைந்து அவர் கொளுத்திய அறவுரை கேட்டு அருந்தவம் பூண்டு நிற்ப, அவன் பிரிவாற்றாத அவன் மனைக்கிழத்தியும் உயிர் துறந்தாள். மாதவி மடந்தை, கோவலன் உற்ற கொடுந்துயர் கேட்டுப் பொறாளாய்த் தன் நற்றாயாகிய சித்திராபதியை நோக்கி, “யான் நற்றிறம் படரத் துணிந்தேன்; மணிமேகலையை அருந்தவம் படுப்பதல்லது, கணிகையர் கோலம் காணவிடுவது கூடாது” என்று உரைத்துத் தன் கோதைத் தாமம் களைந்து புத்தப் பள்ளி யடைந்து, அவர் வழங்கும் அறநெறி மேற்கொண்டனள். இவ்வாறு என்வாய்ச் சொல்லால் பலர் இறந்தமையால் இத் தீமையைக் கழுவுதல் வேண்டிக் கங்கையாடப் போந்தேன்” என்று அந்த மாடலன் கூறி முடித்தான்.

உடனே செங்குட்டுவன் அம் மாடலனை நோக்கி, “பாண்டி நாட்டு வேந்தன் இறந்தபின், அந்நாடு உற்ற திறம் என்னை?” என்று கேட்க, மாடலன், “3போந்தைக் கண்ணிப் பொறைய, கேட்டருள்” எனக் கூறலுற்று,

4கொற்கையில் இருந்த 5வெற்றிவேற் செழியன்
பொன்தொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
6ஒருபகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி,
7உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் 1முறைமுதல் கட்டிலின்
நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட
2ஒருதனி யாழிக் கடவுள் தேர்மிசைக்
3காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன்என
மாலைத் 4திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதோ றூழி உலகம் காத்து
வாழ்க எங்கோ வாழிய பெரிது

என்று கூறி முடித்தான். அற்றைப் போதும் கழிந்தது. மண்ணுலக முழுதும் இருள் பரவிற்று. சிறிது போதில் செக்கர்வானத்தில் வெண்பிறை தோன்றியது. அதனை அரசர் பெருமான் கூர்ந்து நோக்கக் கண்ட காலக் கணக்கர், “யாம் வஞ்சிநகர் நீங்கியது இப்போதைக்கு எண்னான்கு திங்கள் ஆகின்றது” என்றனர், என்று சொல்லக் கேட்டவன், அக் கங்கைக் கரையில் அமைக்கப்பெற் றிருந்த பாடியில்,

5வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
6சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயில் இருக்கை

அடைந்து, ஏவலரை விடுத்து அம் மாடலனை வருமாறு அழைத் தான். அவனும் அவன்முன் வந்து நின்றான். செங்குட்டுவன், அம் மறையவனை நோக்கி, “சோணாட்டில் 7என்மைத்துன வளவனைப் பகைத்த இளங்கோ வேந்தர் ஒன்பதின்மரும் இறந்த பின்னர், அவன் நாட்டு அரசியல் எத்திறம் உளது?” என்று வினவினன். மாடலனும் பெருமகிழ்வு கொண்டு, “எங்கோ வேந்தே வாழ்க” எனத் தொடங்கி,

1வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் 2கொற்றமும்
குறுநடைப் 3புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் 4இடும்பை நீங்க
அரிந்துடம்பு 5இட்டோன் அறம்தரு கோலும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, 6செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு

என்று சொன்னான். செங்குட்டுவனுக்கு அச்சொல் தீவிய அமிழ்து போல் இன்பம் செய்தது. அதனால், அவன் மாடலனுக்குத் தன் நிறையளவு ஐம்பது துலாபாரம் பொன்னைப் பரிசாக நல்கினான்; தனக்குத் துணையாய் இருந்த நூற்றுவர் கன்னரையும் தம் நாடு செல்லுமாறு விடுத்தான். தனக்குத் தோற்று அஞ்சித் தாபதக் கோலம் பூண்டு திரிந்த ஆரிய வரச குமரர்களையும்,

7எஞ்சா மன்னர் 8இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்
9அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை(யும்)
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்

தான் தன் இளைப்பு நீங்கச் சென்று பள்ளி கொள்வானாயினன்.

கனக விசயரொடு தன் தானைப் பகுதி முன்பே புறப்பட்டுச் செல்லச் செங்குட்டுவன் பின்பே புறப்பட்டுத் தன் வஞ்சிமா நகர் நோக்கித் திரும்ப வரலாயினன்.

இவ்வாறு அவன் வடநாடு சென்று நீட்டித்த பிரிவையுடை யனாகவே, அப் பிரிவு அவன் தேவி இருங்கோ வேண்மாளுக்கு மிக்க துயரத்தைச் செய்வதாயிற்று. அவளும் பிரிவாற்றாது மெலிந்து, நல்ல உறக்கம் பெறாது வருந்திக் கிடப்ப, அவன் வடநாட்டில் பெற்ற வெற்றிச் செய்தியை முன்பாகப் போந்த தூதரால் அவளது ஆயச் செவிலியர் அறிந்து, “தோள் துணை துறந்த துயர்ஈங்கு ஒழிக” என வாழ்த்திக் கூறி ஆற்றுவித்தனர். ஆனால், அவளோ,

குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்,
1தொடுப்பேர் உழவர் ஓதைப் பாணியும்
கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண்திரை பொருத வேலை 2வாலுகத்துக்
3குண்டுநீ ரடைகரைக் 4குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
5கழங்காடு மகளிர் ஓதை யாயத்து
வழங்கு தொடி முன்கை மலரவேந்தி
வானவன் வந்தான் வளர்இள வனமுலை
தோள்நலம் 6உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாம்எனும்
அஞ்சொற் கிளவியர் 7அம்தீம் பாணியும்

செவியுறக் கேட்டுப் பிரிவுத் துயர் வருத்தக் கண்ணுறங்காதே கிடந்தனள். சிறிது போதில், செங்குட்டுவன், வலம்புரி முழங்க,

மாலைவெண் குடைக்கீழ் 8வாகைச் சென்னியன்
9வேக யானையின் மீமிசைப் பொலிந்து
10குஞ்சர வொழுகையில் கோநகர் எதிர்கொள்ள
வஞ்சியும் புகுந்தனன்.


நடுகற் காதை

நெடுநகர் மக்கள் பேரார்வம் பொங்க, நெடுநாட் பிரிந்திருந்து போதரும் தங்கள் வேந்தர் பெருமானான செங்குட்டுவன், தமிழரது ஆற்றலறியாது எதிர்த்துத் தோல்வி யெய்திச் சிறைப்பட்ட கனக விசயரென்ற ஆரிய மன்னரைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை யறிந்து மிக்க சிறப்புடன் வரவேற்றனர். வஞ்சிநகர் எங்கும் மகிழ்ச்சியாரவாரம் மலிந்திருந்தது. இவ்வாறு நாட்கள் சில செல்ல வேனிற்காலத்து இன்ப மாலைப் போது வந்தது.

ஒண்தொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய்
வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்கஎன்று ஏத்திப்
பலர்தொழ வந்த 1மலரவிழ் மாலைப்
2போந்தைக் கண்ணிப் 3பொலம்பூந் தெரியல்
வேந்து வினைமுடித்த 4ஏந்துவாள் வலத்தர்
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்,
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்,
எய்கணை கிழித்த 5பகட்டெழில் ஆகமும்
6வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்

அவர்தம் காதலன்பு மிக்க கற்புடை மனைவியரின் இன்ப வழி பாட்டால் இனிதே நலம் சிறந்தன. இவ்வாறு சிறந்த ஆடவரும் மகளிரும் இன்பம் மிகச் சிறக்குமாறு வந்த மாலைப் போது,

1முடிபுறம் உரிஞ்சும் கழற்கால் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் 2திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய 3மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்கும் காட்டி நீங்க,

இரவுப் போதில் யாவரும் தண் மதியினது வெண்ணிலவின் இன்பக் காட்சியினைத் துய்ப்பக் கருதி, நிலா முன்றில், 4சேக்கைப்பள்ளி, 5மண்ணீட்டரங்கம், மலர்ப்பூம்பந்தர் முதலிய இடங்களை அடைந்து மகிழ்ந்தனர்.

6படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து
இடைநின் றோங்கிய 7நெடுநிலை மேருவின்
கொடிமதில் மூதூர் நடுநின் றோங்கிய
8தமனிய மாளிகைப் புனைமணி அரங்கில்

இருங்கோவேண்மாள் ஆகிய கோப்பெருந்தேவி, தானும் வெண்மதி யின் வண்ணம் காண விழைந்து வந்தாள். அது போது விளக்கேந்தி வந்த மகளிர், பல்லாண்டிசைத்தனர். ஒருசார், முழவு முழங்கிற்று; யாழ் இசைத்தது; பாடுநர் பண்கனிந்த பாடல் பாடினர். ஒரு சார் கூனரும் குறளரும் மான்மதச்சாந்தும் வெண்சாந்தும் கொணர்ந்தனர்; பேடியர் வண்ணமும் சுண்ணமும் மலர்ப் பிணையலும் சுமந்து வந்தனர். இன்ன சிறப்போடு வரும் தேவியுடன், செங்குட்டுவனும், அப் புனைமணி யரங்கிற்குப் போந்து, ஆங்கே இருந்த பொற்கால் அமளி பொலிய வீற்றிருந்தான். அவன் திருமுன், சாக்கையர் என்னும் கூத்தர் மரபிற்குத் தலைவனான சாக்கையன் ஒருவன் வந்து,

1திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
2பரிதரு செங்கையில் படுபறை யார்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்,
செஞ்சடை சென்று 3திசைமுகம் அலம்பவும்
4பாடகம் பதையாது 5சூடகம் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒரு திறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய 6கொட்டிச் சேதம்

என்னும் கொடுகொட்டிக் கூத்தினை யாடி அரங்கில் உள்ளாரைப் பெரிதும் மகிழ்வித்தான். பின்பு அரசன் அவன் வேண்டும் பரிசில் நல்க, பெற்ற அவன் அரசனை வாழ்த்திவிட்டேகினன். யாவரும் தத்தம் இருக்கையேக விடை நல்கிய வேந்தர் பெருமான், தானும் உவளகம் புகுந்து இனிய உறக்கம் கொண்டான்.

மறுநாள் செங்குட்டுவன் திருவோலக்க மண்டபத்தையடைந்து அரசு வீற்றிருந்தான். அப்போது நீலன் முதலிய கஞ்சுக வீரர்கள் மாடலன் என்னும் மறையவனுடன் வந்தனர். மாடலன் அரசனை வாழ்த்தி “அரசே, யாங்கள், நாம் கைப்பற்றிக் கொணர்ந்த ஆரிய மன்னரை எம்முடன் கொண்டு சென்று, சோழ நாட்டு வேந்தன் திருமுன் நிறுத்தி, நிகழ்ந்தது கூறிநின்றேம், அதற்கு அச் சோழர் பெருமான்,

7நீளமர் அழுவத்து நெடும்பே ராண்மையொடு
வாளும் குடையும் மறக்களத் தொழித்துக்
1கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று

எனத் தன் தானைத் தலைவற்குக் கூறி யொழிந்தான்” என்று மொழிந்தான். பின்பு, தான் பாண்டிநாட்டு மதுரையடைந்து, அந்நாட்டு மன்னற்கு ஆரிய மன்னரைக் காட்டி நின்ற செய்தியைக் கூறத் தொடங்கி, “நம் செயல் நிலை யறிந்த அத்தென்னவர் பெருமான்,

ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த
2சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
3சயந்தன் வடிவின் தலைக்கோ லாங்குக்
4கயந்தலை யானையின் 5கவிகையிற் காட்டி
இமையச் சிமயத் 6திருங்குயி லாலுவத்து
உமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
7தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
1கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன்”

என்று கூறினன். இச்சொற்கள் செங்குட்டுவன் செவியிற் புகுதலும், அவனது கண்கள் சிவந்தன; பற்கள் கடிப்புண்டன; புருவம் நெரிப்புண்டன; வந்தது வெகுளி; நகையும் பிறந்தது. போர்க்கு எழுவான் தொடங்கினன். அக் கருத்தை யறிந்த மாடலன் பொருக் கென எழுந்து பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

2கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின்
3சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்,
4ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று,
நெடுந்தேர்த் தானையோடு இடும்பிற் புறத்து 5இறுத்துக்
கொடும்போர் கடந்து, நெடுங்கட லோட்டி,
6உடன்று மேல்வந்த ஆரிய மன்னரைக்
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்!
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே!
7புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த
அரசர் ஏறே! அமைகநின் சீற்றம்;
மண்ணாள் வேந்தே! நின்வாழ் நாட்கள்
8தண்ணான் பொருநை மணலினும் சிறக்க
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய்! வாழி;
இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்;
வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;

நின் முன்னோாருள்ளும் கடற்கடம்பெறிந்த காவலன் எனவும், இமயத்தில் சிலைபொறித்த விறலோன் எனவும், கூற்று வரை நிறுத்த கொற்றவன் எனவும், யவனர் நாடாண்ட இரும்பொறை எனவும், 1அகப்பா எறிந்த அருந்திறல் எனவும், இருகடலாடிய சேரல் இரும்பொறை யெனவும், மதுக்கொள் வேள்வி வேட்ட சேரமான் எனவும் புகழ் மேம்பட்டோர் பலருண்டு. அவருள் ஒருவரும் இன்றுகாறும் இருந்ததில்லை; யாவரும் மாய்ந்தனர். இதனால், யாக்கை நிலையாது என்பதை நீ இனிதறிந்தாய்; தமிழரை யிகழ்ந்த ஆரிய மன்னரது வீழ்ச்சியால் செல்வம் நில்லாதென்பது தெளிந்தாய்; நின் யாக்கையும் நரைத்து முதிர்ந்தமையின், இளமை யும் நிலையாதென்பது இனிது உணர்ந்தாய்.

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் 2மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடுங் கூத்தர்போல், ஆருயிர், ஒருவழிக்
3கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது,
செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது
4பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின். . . .
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்;
நாளைச் செய்குவம் அறமெனின், இன்றே
5கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முழுநீர் உலகில் முழுவதும் இல்லை;
1வேள்விக் கிழத்தி இவளொடும் கூடித்
தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற
நீடு வாழியரோ, நெடுந்தகை! என்று

மாடலன் கூறினன். கேட்டதும் செங்குட்டுவன் சிறிதும் நீட்டியாது வில்லவன் கோதையை ஏவி, வேள்வி வேட்டற்கு வேண்டுவனவற்றை விரையச் செய்வித்து, அம் மாடலன் கூறி முறைமைப்படி வேள்வி யும் செய்து முடிக்கத் தொடங்கி, ஆரிய வரசரைச் சிறை நீக்கி, வேள்வி முடியுந் துணையும் தனது வேளாவிக்கோ மாளிகையில் இருந்து, முடிந்தபின் தத்தம் நாடு செல்லுமாறு பணித்தான். பின்பு அழும்பில்வேள் என்னும் அமைச்சனுடன் ஆயக்கணக்கர் சிலரை ஏவி, நாட்டில் சிறைப்பட்டுக் கிடந்தோரைச் சிறை வீடு செய்தும், திறை செலுத்தாது நின்று அத் திறையின் தொகை மிகுந்து சுமந்து நின்ற சிற்றரசர்கட்குக் 2கறை வீடு செய்தும் வருமாறு பணித்து, முடிவில் வேள்வியும் செய்து முடித்தான்.

3அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
4பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த 5தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி 6அரசற்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர்வா ழாமை
7தென்புலங் காவல் 8மன்னவற் களித்து,
1வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்
குடதிசை வாழும் 2கொற்றவற் களித்து,
மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து,
நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப்
பொன்னணி புதுநிழல் பொருந்திய

கங்கையாகிய கண்ணகிப் படிமத்தைப் பரவுதல் வேண்டிச் செங் குட்டுவன், சிறப்புடைய கம்மியர் பலருடன், சிற்ப நூற் புலவர் சூழச் சென்று பத்தினிக் கோட்டத்தை யடைந்து, அங்கே கைத்தொழில் நலம் சிறப்பச் செய்தமைத்திருந்த கண்ணகிப் படிமத்துக்குச் சீரிய இழைகளும் நன் கலங்களும் பூட்டி,

3பூப்பலி செய்து 4காப்புக் கடைநிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
5கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்.


வாழ்த்துக் காதை

உரைப்பாட்டு மடை
குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், (கண்ணகிப் படி மத்துக்குக்) கடவுள் மங்கலம் செய்த பின்னாள், (மாடலன் கூறியவற்றால்). . . பெருந் துன்பம் எய்திக் காவற் பெண்டும் அடித் தோழியும், கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் ‘சேயிழையைக் காண்டும்’ என்று மதுரைமாநகர் புகுந்து. . . அடைக்கலம் இழந்து உயிரிழந்த இடைக்குல மகளிடம் எய்தி, ஐயை (என்னும்) அவள் மகளோடும் வையை ஒருவழிக் கொண்டு மாமலைமிசை யேறிக் கோமகள் தன் கோயில் புக்கு, நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டு வற்குத் திறம் உரைப்பர்மன்.

தேவந்தி சொல்
முடிமன்னர் மூவரும் காத்தோம்பும் தெய்வ
வடபே ரிமய மலையிற் பிறந்து
1கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத் தோளிக்குத் தோழிநான், கண்டீர்;
2சோணாட்டார் பாவைக்குத் தோழிநான், கண்டீர்.

காவற்பெண்டு சொல்
3மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
4கடம்படாள் காதல் கணவன்கைப் பற்றிக்
1குடம்புகாக் கூவல் கொடுங்கானம் போந்த
தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான், கண்டீர்;
தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான், கண்டீர்.

அடித்தோழி சொல்
2தற்பயந்தாட் கில்லைத் தன்னைப் புறங்காத்த
எற்பயந் தாட்கும் எனக்கும்ஓர் சொல்இல்லை;
3கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த
பொன்தொடி நங்கைக்குத் தோழிநான், கண்டீர்;
பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான், கண்டீர்.

தேவந்தி அரற்று
செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
4எய்த உணரா திருந்தேன்; மற்று என்செய்தேன்!
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்,
5அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ, தோழீ;
6அம்மாமி தன்வீவும் கேட்டாயோ, தோழீ.

காவற் பெண்டு அரற்று
கோவலன் தன்னைக் 7குறுமகன் கோள்இழைப்பக்
காவலன் தன்உயிர் நீத்ததுதான் கேட்டுஏங்கிச்
சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை;
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ, அன்னை.

அடித்தோழி அரற்று
காதலன் தன்வீவும் காதலிநீ பட்டதூஉம்
8ஏதிலார் தாம்கூறும் ஏச்சுரையும் கேட்டுஏங்கி,
1போதியின்கீழ் மாதவர்முன் 2புண்ணியதானம் புரிந்த
மாதவி தன்துறவும் கேட்டாயோ? தோழீ;
மணிமேகலை துறவும் கேட்டாயோ? தோழீ.

தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது
3ஐயம்தீர் காட்சி அடைக்கலம் காத்தோம்ப
வல்லாதேன், பெற்றேன் மயல்என் றுயிர்நீத்த
அவ்வை மகள் இவள்தான் 4அம்மணம் பட்டிலா
வையெயிற்று ஐயையைக் கண்டாயோ? தோழீ;
5மாமி மடமகளைக் கண்டாயோ? தோழீ.

இவ்வண்ணம் கண்ணகிக் கோட்டத்தில், அவள் திருமுன் நின்று, தேவந்தி முதலாயினார் தம் ஆற்றாமையைச் சொல்லியும் அரற்றியும் துயருறுங் காலத்தில், விண்ணிடத்தே மின்னற்கொடி போலக் கண்ணகியார் கடவுள் வடிவில் செங்குட்டுவன் காணத் தோன்றியருளினார். அது கண்டதும் அவன் மிக்க வியப்புற்றுக் கூறுவான்.

செங்குட்டுவன் கூற்று
என்னே இஃது! என்னே இஃது!
 என்னே இஃது! என்னே கொல்!
6பொன்னம் சிலம்பின்
 புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொன்தோட்டு
 7நாவலம் பொன் இழைசேர்
மின்னுக் கொடிஒன்று
 8மீவிசும்பில் தோன்றுமால்.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டியது!

தென்னவன் தீதிலன்: தேவர்கோன் றன்கோயில்
நல்விருந் தாயினான்; நான்அவன் றன்மகள்;
வென்வேலான் குன்றில் விளையாட்டு 1யான்அகலேன்:
என்னோடும் தோழிமீர் எல்லீரும் 2வம்எல்லாம்.

இது நிகழ்கின்ற காலத்தே, இவரைக் கண்டும் வியந்தும் செங்குட்டு வன் கோயில் மகளிர் பலர் கண்ணகியார் கோட்டத்தின் முன் வந்திருந்தனர்; அவர்கள் இனிக் கூறுகின்றனர்.

வஞ்சி மகளிர் சொல்
3வஞ்சியீர்! 4வஞ்சி யிடையீர்! மறவேலான்
5பஞ்சடி ஆயத்தீர்! எல்லீரும் வம்எல்லாம்;
செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று
6எம்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த
பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்எல்லாம்
பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்எல்லாம்.

ஆயத்தார் சொல்
7வானவன்எங் கோமகள் என்றாம்; 8வையையார்
கோனவன் தான்பெற்ற கொடிஎன்றாள் - வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் 9தேவ மகள்.

வாழ்த்து
1தொல்லை வினையால் துயருந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ;
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்தன் தொல்குலமே;
2மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீள்முடிமேல் ஏற்றினான் வாழியரோ;
வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே.
எல்லாநாம்
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
3பூவிரி கூந்தல் புகார்.

அம்மானை வரி
வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்கரணம் காத்த 4உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில்மூன் றெறிந்த சோழன்காண் அம்மானை
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை.

கந்துக வரி
பின்னு முன்னும் எங்கணும்
 5பெயர்ந்துவந் தெழுந்துலாய்
மின்னும் மின் இளங்கொடி
 வியல் நிலத் திழிந்தெனத்
தென்னன் வாழ்க வாழ்க என்று
 சென்றுபந் தடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க
 என்றுபந் தடித்துமே.

ஊசல் வரி
ஓரைவர் ஈரைம் பதின்மர் 1உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன் 2பொறையன் 3மலையன் திறம்பாடிக்
4கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
5கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்.

வள்ளைப் பாட்டு
தீங்கரும்பு நல்லுலக்கையாகச் செழுமுத்தம்
6பூங்காஞ்சி நீழல் 7அவைப் பார்புகார் மகளிர்;
8ஆழிக் கொடித் திண்டேர்ச் செம்பியன் 9வம்பலர்தார்ப்
10பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் 11ஆரிக்கும் பாடலே பாடல்.

12பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் 13குறுவரே;
14வானவர்கோன் ஆரம் வயங்கியதோள் 15பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்
16வேப்பந்தார் 17நெஞ்சுணக்கும் பாடலே பாடல்.

1சந்துரல் பெய்து 2தகைசால் அணிமுத்தம்
வஞ்சிமகளிர் குறுவரே 3வான்கோட்டால்;
4கடந்தடு தார்ச்சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்;
பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்.

ஆங்கு,
நீள்நில மன்னர் நெடுவில் பொறையன்நல்
5தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது; 6சூழ்ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடூழி
செங்குட்டுவன் வாழ்க என்று.


வரந்தரு காதை

1வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை
2கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்
தேவந்தி கையைச் செவ்விதின் நோக்கி
3வாய்எடுத் தரற்றிய மணிமே கலையார்?
யாதுஅவள் துறத்தற்கு ஏது? ஈங்கு உரைஎன

விருப்பத்தோடு வினவினன். அவற்கு, அத் தேவந்தி, “அரசே, மணிமேகலை யென்பவள் கோவலனுக்கு மாதவி வயிற்றில் பிறந்த மகளாவாள். அவள் வளர்ந்து காமக் குறிப்பு நிகழும் பருவம் எய்தியபோதும் அக் குறிப்பு இன்றியிருந்தனள்; அதனால், செல்வர் எவரும் அவளைக் கொள்ளக் கருதிற்றிலர்; கூத்து முதலாயினவும் அவள் பயிலவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி என்பாள் இதனை மாதவி பால் சொல்லி வருந்த, அம் மாதவி தானும் அதற்கிணங்காது, மணிமேகலையைக் கணிகையர் கோலத்தே விடக் கருதாது, அவள் கூந்தலைக் களைந்து இந்திர விகாரமடைந்து பௌத்த தருமத்தை மேற்கொள்ளச் செய்தனள். அவளும் பௌத்த தருமம் உரைக்கும் அறவண அடிகளிடம் அறமறிந்து பௌத்த பிக்குணியாயினள்; இச் செய்தியை எனக்கு அவ்வறவண வடிகளே யுரைத்தார்; இவ்வாறு அறம் கொள்ளுதற்குரிய பருவம் இல்லாத காலத்தே, அவள் அது கொண்டு மாறினளே, என்று கருதியே யான் அரற்றினேன்” எனக் கூறினள். பின்பு அவள் பேரில் பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் ஏறி நின்றது. அவள் கூந்தல் குலைந்தது.

துடித்தனள் புருவம்; 4துவர் இதழ்ச் செவ்வாய்
5மடித்தெயி றரும்பினள்; வருமொழி மயங்கினள்;
திருமுகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு 1ஓச்சினள்; கால்பெயர்ந்து எழுந்தனள்;
பலர்2அறி வாராத் தெருட்சியள்; 3மருட்சியள்;
4உலறிய நாவினள்; உயர்மொழி கூறி,

“மாடல, யான் பாசண்டச் சாத்தன்; கண்ணகிக் கடவுளைப் பரவுதற்கு இங்கே வந்துள்ள மகளிருள் அரட்டன் என்னும் செட்டியின் இரட்டைப் பெண்களும், ஆடக மாடத்தில் உள்ள திருமாலுக்கு வழிபாடுபுரியும் 5சேடக் குடும்பியின் சிறுமியும் வந்திருக்கின்றனர். அம் மூவர் பேரிலும் உன் 6கரகத்தில் இருக்கும் நீரைத் தெளிப்பாயாக; அது நீ மங்கலா தேவி கோயிற்கு வந்து அதன் வாயிலில் நின்றபோது என்னாற் கொடுக்கப்பட்டதன்றோ? இந்நீர் அம் மங்கல மடந்தையின் கோட்டத்தருகிலுள்ள மலை யிடத்தே இருக்கும் சுனைகள் பலவற்றுள் இடையே காணப்படும் சுனைநீர்; வெண்கடுகும் முருக்கம்பூவும் போன்ற நுண்ணிய கற்களோடு மாவைக் கரைத்தாற்போன்ற தன்மையுடையது; அதன் கண் மூழ்கியாடுவோர் பண்டைப் பிறப்பின் செய்திகளை யறிவர்; இந்நீரை அவர்மேல் தெளிப்பின், மழலை மொழி வழங்கும் அம் மகளிர், பண்டைப் பிறப்புணர் வுடையராவர்; நீயே அதனைச் செய்து, காண்” என்றாள். செங்குட்டுவன் இது கேட்டு வியந்து மாடலனை நோக்க, அவனும், தேவந்திகையின் பண்டை வரலாற்றினைக் கூறி, “பாசண்டச் சாத்தன்;

7மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
அங்குறை மறையோ னாகத் தோன்றி,
8உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து
9குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்;
ஆங்கது கொண்டு போந்தேன், ஆதலின்
ஈங்கு 1இம் மறையோள் தன்மேல் தோன்றி
அந்நீர் தெளிஎன்று 2அறிந்தோன் கூறினன்;
மன்னர் கோவே! மடந்தையர் தம்மேல்
தெளித்து ஈங்கு அறிகுவம்”

என்று சொல்லித் தெளித்தான். உடனே அச் சிறுமியர் மூவருள், ஒருத்தி பண்டைப் பிறவியில் கண்ணகிக்குத் தாயாகியவ ளாதலால், அந்நிலை யுணர்வே கொண்டு,

புகழ்ந்த காதலன் 3போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்;
4ஏதில் நன்னாட்டு யாருமில் ஒருதனிக்
காதலன் தன்னொடு கடுந்துய ருழந்தாய்;
யான்பெறு மகளே, என்துணைத் தோழீ,
5வான்துயர் நீக்கும் மாதே! வாராய்,

என்று உரைத்தாள். மற்றொருத்தி முன்னைப் பிறவியில் கோவலனுக் குத் தாயாகியவ ளாதலால், அவ்வுணர்வே கொண்டு,

என்னோ டிருந்த 6இலங்கிழை நங்கை
தன்னோடு 7இடையிருள் தனித்துய ருழந்து
போனதற் கிரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என்மகன், வாராய்,

என்று வருந்தினாள். மூன்றாமவள் பழம்பிறப்பில் மாதரி யாதலால், அவளது உணர்வே தலைக்கொண்டு,

வருபுனல் வையை 8வான்துறைப் பெயர்ந்தேன்;
9உருகெழு மூதூர் 10ஊர்க்குறு மாக்களின்
வந்தேன், கேட்டேன், மனையிற் காணேன்
எந்தாய், இளையாய், யாங்கு ஒளித்தாயோ?

என்று சொல்லிப் புலம்பினள். இவ்வாறு இம்மொழி நிரம்பாச் சிறுமியர் முதியோர்போல மொழிந்து அரற்றக் கண்டு வியப்புற்ற குட்டுவன், மீட்டும் மாடலன் முகத்தை நோக்க, அவன், தன் உண்மை யுணர்வால் உற்றதை யுணர்ந்து, “இச் சிறுமியர் மூவரும் முன்னைப் பிறவியில், கோவலன் மனைவியாகிய கண்ணகியார்பால் பேரன்பு கொண்டிருந்தவர்; ஆயினும், விண்ணுலகு புக்க அவரோடு தாமும் செல்வதற்கேற்ற நல்லறத்தைச் செய்யாமையால், இம் மகளிர் இருவரும் அரட்டன் செட்டிபால் இரட்டைப் பெண் களாய்ப் பிறந்தனர். மாதரி, கோவலன் கண்ணகி என்ற அவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்ததோடு, திருமால் பொருட்டுக் குரவைக் கூத்தாடிய நல்வினை யுடையவளாய் இருந்ததனால், அத் திருமாலின் திருவடி பிடிப்பான் குடியில் பிறந்தாள். இவர் பிறப்பால்,

நல்திறம் புரிந்தோர் 1பொற்படி எய்தலும்,
2அற்புளம் சிறந்தோர் 3பற்றுவழிச் சேறலும்,
அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவ தன்றே; 4தொன்றியல் வாழ்க்கை;
ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி,
மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய்தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
5கையகத் தனபோல் கண்டனை யன்றே;
ஊழிதோ றூழி உலகம் காத்து
நீடு வாழியரோ, நெடுந்தகை!”

என்று சொல்லி முடித்தான். இது கேட்டு மகிழ்ந்த செங்குட்டுவன், கண்ணகிக் கடவுட்கு நாடோறும் பூசனைக்கேற்ற ஏற்பாடுகளையும் விழாவுக்குரியவற்றையும் மேதகச் செய்து, பூவும் புகையும் விரையும் தேவந்திகையைச் செய்யுமாறு பணித்துத் தானும் அக் கோட்டத்தை மும்முறை வலம்வந்து வணங்கி நின்றான். அவன் முன்பு,

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
1பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

கண்ணகியாரை வணங்கிப் பரவி, “இச் சேரமான் செய்யும் நாளணிபோல, யாம் செய்யும் நாளணி வேள்வியிலும் எழுந்தருளி வரம்தர வேண்டும்” என வேண்டினர். அப் போழ்தில் வானத்தே ஒரு குரல் எழுந்து, “தந்தேன் வரம்” என்று மொழிந்தது. இக்குரல் கேட்ட மன்னர் கூட்டத்தே பெரு மகிழ்ச்சிப் பேரொலி யெழுந்தது. பின்பு மன்னர் அனைவரும், மாடல மறையோனுடன் கண்ணகியின் திருவடியில் வீழ்ந்து பரவினர். அவருடன் (இந்நூலை யெழுதும் இளங்கோ ஆகிய) யானும் சென்றிருந்தேன். என் எதிரே, தேவந்தி கைமேல் கண்ணகித் தெய்வம் தோன்றி,

வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை 2தாள்நிழல் இருந்தோய், நின்னை
அரைசு வீற்றிருக்கும் 3திருப்பொறி உண்டுஎன்று
4உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கி,
5கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட்டுவன்தன் 6செல்லல் நீங்க
7பகல்செல் வாயில் 8படியோர் தம்முன்
அகலிடப் 9பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து! என

என் திறம் உரைத்தனள்; யானும் இந்நூலால் அவள் திறமும் இதுகாறும் உரைத்துப் போந்தேன். யான் கூறிய இத் திறத்தைக் கேட்ட,

1திருத்தகு நல்லீர்,
2பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; 3புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
த்ானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
4பொய்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
5பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; 6பிழையுயிர் ஓம்புமின்;
7அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
8வெள்ளைக் கோட்டியும் 9விரகினில் ஒழிமின்;
இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா;
10உளநாள் வரையாது, 11ஒல்லுவது ஒழியாது,
செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்.

நூற் கட்டுரை
குமரி வேங்கடம் குணகுட 1கடலா
2மண்திணி மருங்கின் 3தண்தமிழ் வரைப்பில்
4செந்தமிழ் 5கொடுந்தமிழ் என்று 6இருபகுதியின்
7ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த 8மரபின் 9ஒழுக்கொடு 10புணர
11எழுத்தொடு புணர்ந்த சொல்அகத் தெழுபொருளை
12இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படும் 13செவ்விசிறந் தோங்கிய
14பாடலும் 15எழாலும் 16பண்ணும் 17பாணியும்
1அரங்கு 2விலக்கே 3ஆடல்என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ 4உடம்படக் கிடந்த
5வரியும் 6குரவையும் 7சேதமும் என்றுஇவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் 8இயற்கையில்
9ஆடிநன் 10னிழலில் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்து வெளிப்படுத்து
11மணிமேகலை மேல் 12உரைப்பொருள் முற்றிய

சிலப்பதிகாரம் முற்றும்.

-   macaulay on milton.
-   இச் சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தை இளங் கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாரும் பலதிறத்து ஆராய்ச்சியாளர் உளர். - History of the Tamils by P.T.S. Ayyangar.

-   இதனை டிரைடன் (Dryden) என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர். † இதனை இம்முகவுரைக்குப் பின் காண்க.
-   கண்ணகி யென்னும் பெயர் பண்டைத் தமிழ் மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுள் ஒன்று. வையாவிக்கோப் பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது. ஒருகால், இக்கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில்சிழார், கபிலர், பரணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப் பட்டனர்.

இனி, நம் கண்ணகியார் தம் மார்பொன்றைத் திருகியெறிந்த செய்தி போல்வதொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனிளநாகனாரால் குறிக்கப்பெறுகின்றது. “இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுத்த திருமா வுண்ணிக் கேட்டோ ரனைய ராயினும், வேட்டோரல்லது பிறர் இன்னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகி யாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராய்தற்குரியது.

1.  கொங்கு - தேன். தார் - மாலை. சென்னி - சோழன்.
2.  அம்கண் - அழகிய இடத்தையுடைய.
3.  திகிரி - ஆக்கினா சக்கரம்.
4.  பொன்கோடு - அழகிய சிகரம்.
5.  நாமநீர் - அச்சம் தரும் கடல்.
6.  மேல் நின்று - எல்லாப் பொருட்கும் மேலாக நின்று.
7.  வீங்குநீர் - மிக்க கடல்; நிறைந்த நீரையுடைய கடல்.

8.  பதி எழுவறியா - பகை காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இருக்கும் இடத்தைவிட்டு நீங்குவதை அறியாத.
9.  கெழீஇய - பொருந்தின.
10. பொதுவறு சிறப்பு - தனக்கே உரிய சிறப்பு.
11. நடுக்கின்றி - சலிப்பின்றி. நிலைஇய - நிலைபெற்றன.
12. ஒடுக்கம் கூறார் - முடிவு உண்டு என்று கூறார்.
13. முடித்த கேள்வி - கரைகண்ட கல்வி கேள்வி.
14. போதில் ஆர் திருவினாள் - தாமரைப் பூவில் பொருந்திய திருமகள்; தாமரைப் பூவை இல்லமாகக் கொண்ட திருமகள்.
15. வடமீனின் திறம் - அருந்ததியினுடைய கற்பு. தீது - பழுது.

16. ஏத்த வயங்கிய - ஏத்தும்படி விளங்கின.
17. உயர்ந்தோங்கு செல்வம் - மிகவோங்கிய செல்வம்.
18. மண் தேய்த்த புகழ் - மண்ணுலகம் சிறுத்துத் தனக்குள் அடங்கும்படி விரிந்த புகழ்.
19. பண் தேய்த்த மொழி - இனிமையால் பண்ணின் இசையும் கேட்க உவர்க்கும் படியான சொல். ஆயம் - பெண் கூட்டம்.
20. செவ்வேள் - முருகன்.
21. இசை போக்கி - சிறப்பைப் பாராட்டி.
22. கிழமையான் - உரிமையுடையவன்.

23. கவவுக்கை ஞெகிழாமல் - தழுவிய கை தளராமல்; இணைபிரியாமல் என்றபடி.
24. மங்கல அமளி - மணப் பள்ளி.

25. முழுநெறிக் குவளை - இதழ் ஒடியாத குவளைப் பூ.
26. பொதி அவிழ்ந்த - இதழ் விரிந்த.
27. சுரும்பு இமிர் தாமரை - வண்டு இசைக்கும் தாமரை.
28. அளைஇ - கலந்து உண்டு.
29. விரியல் வெண்தோடு - விரிந்த வெண்மையான இதழ்.
30. கோதை மாதவி - மாலைபோன்ற குருக்கத்திக் கொடி.
31. பொதும்பர் - மரங்களின் செறிவு.
32. தாது - தேன்.
33. புகல் ஏக்கற்று - புகுவதற்காக ஏக்கமுற்று.
34. செல்வி - சமயம்; காலம்.
35. தாமம் - மாலை: ஈண்டு மணிமாலை.
36. மணவாய்த் தென்றல் - மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்.

37. கோதை - மாலையையுடையாய்.
38. பிறிது அணி அணியப் பெற்றதை - வேறே சில அணிகளை அணிந்ததனால் பெற்ற பயன்.
39. பல் இருங் கூந்தல் - பலவகைத்தாகிய கூந்தல்.
40. எல் அவிழ் மாலை - ஒளி விளங்க மலர்ந்த பூமாலை.
41. என் உற்றனர் - என்ன உறவு உடையவர்கள்.
42. நானம் - எண்ணெய் (வாசனை யெண்ணெயுமாம்).
43. மான்மதம் - கஸ்தூரி
44. திங்கள் முத்து அரும்ப - சந்திரன் போன்ற முகத்தில் முத்துப் போல வியர்வை துளிக்க.
45. காசு அறு விரையே - குற்றமற்ற வாசனைப்பொருளை யொப்பாய்.

46. அலை - கடல்.
47. தாழ் இருங் கூந்தல் - நீண்டு தாழ்ந்த கரிய தலைமயிர்.
48. இந்திரன் சபையில் ஒருகால் இந்திரன் மகன் சயந்தன் என்பவன் அங்கே வந்து நடித்த உருப்பசியின்மேல் காமுற்றான்; அதனை அறிந்த அகத்தியன் அவ்விருவரை யும் நோக்கி, “நீங்கள் இருவரும் மண்ணுலகம் அடைந்து, உங்களில் சயந்தன் விந்தியமலையில் மூங்கிலாகவும், உருப்பசி நாடகக் கணிகையாகவும் பிறப்பீர்களாக” எனச் சபித்தான், சயந்தன் பணிந்து, “சாபவிடை எப்போது?” என்று கேட்டனன். அவற்கு முனிவன், “நீ மூங்கிலாய், நாடகமகளிர் முதலரங்கேறும்போது, அரங்கத்தில் முன்னதாக நிறுத்தி வழிபடப்படும் தலைக்கோலாக இருந்து சாபம் நீங்குவாய்” என்றான். இது வரலாறு.

49. மண்ணிய - நீராட்டிய.
50. பொலம் பூண் - பொன்னால் செய்த. ஒடை - பட்டம்.
51. அரசு உவா - பட்டத்து யானை.
52. பல் இயம் - பல வாத்தியங்கள்.
53. ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், ஒற்றர், தூதுவர்.
54. கவி கைக் கொடுப்ப - தேர்மேல் நின்ற பாடலாசிரியன் கையில் கொடுக்க.
55. ஏகம், சாப்பு என்ற இருவரைத் தாளத்திற் பாடப்படும் பாட்டுகள் வாரம் என்பர்.
56. தோரிய மடந்தை - வயது முதிர்ந்த ஆடல் மகள்.

57. தண்ணுமை - மத்தளம்.
58. ஆமந்திரிகை - இடக்கை என்னும் இசைக்கருவி.
59. பொன் …. வகுத்தென: பொன்னால் செய்ததொரு பூங்கொடி கூத்து நடித்தது போல.
60. இலைப்பூங்கோதை - பசும்பொன்மாலை; இது அரசனுடைய மாலை. இதனோடு தலைக்கோல் எய்தித் தலையரங்கேறினாள் என்க.
61. இயல்பினின் வழாஅமை - கூத்து, பாட்டு, அழகு என்ற இவற்றிற்கு ஏற்ற முறைமையில் ஒன்றும் வழுவாமல்.
62. விதிமுறைக் கொள்கை - நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் என்னும் விதிமுறை.
    “முட்டில் பாணரும் ஆடியல் மகளிரும், எட்டொடு புணர்ந்த
    ஆயிரம் பொன்பெறும்” என்பது அந்த விதி.
63. ஒரு முறையாகப் பெற்றனள்: ஒரு நாளைக்குப் பரிசம் இது என்று அரசனால் பெற்றாள்.
64. மாலை - அரசன் தந்த இலைப்பூங்கோதை.
65. மான் அமர்நோக்கி ஓர் கூனி - மான் போன்ற கண்களையுடைய ஒரு கூனி; ஏவல் மகளுமாம்.

66. நகரநம்பியர் : நகரத்துச் செல்வ இளைஞர்.
67. மறுகு - தெரு.
68. பகர்வனர் - விலைக்கு விற்பவர்.
69. அணைவுறு வைகலின் - சேர்ந்த அந்த ஒரு நாளிலேயே.
70. விடுதல் அறியா - நீங்க முடியாத.

71. ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற தேரினுடைய ஒற்றைச் சக்கரம். உரவோன் - சூரியன்.
72. செம்மலர்க் கண்கள் - செவ்விய மலர்களாகிய கண்; பசந்து - பொன்நிறம் கொண்டு.
73. முழுநீர் - துளிக்கின்றநீர். முழுமெயும் பனித்து - மெய் முழுதும் பனிகொண்டு. (பனிமூடி என்றுமாம்).
74. திரைநீர் ஆடை - கடலை ஆடையாகவுடைய.
75. அரைசு - அரசனாகிய சூரியன்.
76. அல்லற்காலை - துன்பக்காலம்.

77. மயங்கு இருள் - மாலையில் படரும் மெல்லிய இருள்.
78. கறை - கடமை (வரி).
79. அறைபோகு குடிகள் - அரசனுக்கு விரோதமான மனப்பான்மை கொள்ளும்படி கொடுக்கப்பட்ட வீரர்கள்.
80. வலம் - வெற்றி.
81. புலம்பட இறுத்த - அவர் நிலத்தே வந்து விட்ட.
82. விருந்தின் மன்னர் - புதிய வேந்தர்.
83. தாழ்துணை - தங்கள் மனதில் தங்கின காதலர் (கணவர்).
84. தனித்துயர் - பிரிவுத் துன்பம்.
85. கோவலர் குழல் வளர் முல்லையில் வாய் வைத்து ஊத - இடையர் ஊது குழலில் முல்லைப்பண் உண்டாகத் தம் வாயை வைத்து ஊத; தும்பி கோவலர் குழல் வளர் முல்லையில் வாய் வைத்து ஊத - வண்டுகள் இடையர் தலையில் சூடிய முல்லைப் பூவில் மொய்த்து ஊத.
86. மழலைத் தும்பி - எழுத்து விளங்காத ஓசையைச் செய்யும் தும்பி.
87. அறுகாற் குறும்பு - ஆறுகால்களையுடைய வண்டு. தென்றலால் தளிர்த்துப் பூத்த பூக்களின் தேனை வண்டு புகுந்து உண்பதால், அந்த வண்டு “குறும்பு” எனப்பட்டது. குறும்பு செய்தல் - பிறர்க்குரியதைத் தான் அக்கிரமமாகப் புகுந்து கவர்ந்து கொள்ளுதல்.
88. சிறுகாற் செல்வன் - தென்றற் காற்று.
89. எல்வளை - விளங்குகின்ற வளையல்.
90. மல்லல் - வளம்.

91. செழும் பூஞ் சேக்கை - செழித்த பூக்கள் பரப்பிய படுக்கை.
92. மலிந்து - மகிழ்ந்து.
93. ஆவியங் கொழுநர் - உயிர் போன்ற கணவன்மார். அகலம் - மார்பு.
94. காவி - நீலோற்பலம்.
95. அல்குல் - அரை.
96. கொடுங்குழை - வளைந்த காதணி.
97. வடிந்து வீழ் காதினள் என்றது அணியாத போதும் அழகு விளங்குவதைக் காட்டுகிறது. வடிதல் - அழகு வடிதல்.
98. செங்கயல் - செவ்விய கயல்மீன்.
99. பவளத் திலகம் - சிவந்த பொட்டு.
100. மையிருங் கூந்தல் - மிகக் கரிய கூந்தல்.

101. ஊதுலைக் குருகு - கருமான் உலைக்களத்துக்காற்றெழுப்பும் துருத்தி.
102. குறுங்கண் - சிறு துவாரம்.
103. அன்னமாகிய மென்னடையையும், ஆம்பல் நாறும் நறுவிரையையும் தாமரை யாகிய செவ்வாயையும் அறலாகிய கூந்தலையுமுடைய பொய்கையாகிய பெண்.
104. தண் அறல் - குளிர்ந்த கருமணல்.
105. நோதிறம் - ஒருவகைப் பாலைப்பண்; இதனைப் புறநீர்மை என்றும் கூறுவர்.
106. காண்வரு - விழிப்ப: அழகிய, குவளையாகிய கள்ளையுடைய மலர் மலர; குவளைப் பூவாகிய கண்கள் விழிக்க என்று இருபொருள் கொள்க.
107. பொறி மயிர் வாரணம் - வரி பொருந்திய சிறகுளையுடைய சேவற் கோழி.
108. முள்வாய் - கூர்மையாகக் குவிந்த.
109. உரவு நீர்ப் பரப்பின் - பரந்த கடல் போன்ற.

110. அலைநீர் - கடல்
111. கண் அகல் பரப்பின் - இடம் விரிந்த நிலமாகிய.
112. அலை நீரை ஆடையாகவும், மலையை முலையாகவும், யாற்றை ஆரமாகவும், மாரியைக் கூந்தலாகவுமுடைய மண்ணக மடந்தை.
113. புதை இருள்படாம் - புதைந்த இருளாகிய போர்வை.
114. உதைய மால் வரை - உதய கிரி.
115. அவிர் ஒளி - விளங்குகின்ற ஒளியையுடைய சூரியன்.
116. வேயாமாடம் - கூரையின்றித் தட்டோடிட்டுச் சாந்து பூசிய பெருவீடு.
117. வியன்கல இருக்கை - அகன்ற பண்டசாலை.
118. பெரும்பாண் இருக்கை - பெரும் பாணர்கள் வசிக்குமிடம்.
119. சிறு குறுங்கை வினையாளர் - சிறு சிறு கைத்தொழில்களைச் செய்பவர்.
120. பெரும்பாய் இருக்கை - பெரிய பரந்த இருப்பிடம்.

121. விழுமியோர் - உயர்ந்தோர்.
122. ஐவகை மன்றம் - வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங் கால் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்.
123. வச்சிரக் கோட்டம் - வச்சிராயுதம் நிறுத்தப்பட்ட கோயில்.
124. கச்சை - யானையின் கீழ் வயிற்றிற் கட்டிய கச்சை.
125. வால் வெண்களிற்றரசு - ஐராவதம்.
126. கால்கோள் - தொடக்கம்.
127. கடைநிலை - முடிவு.
128. தருநிலைக் கோட்டம் - கற்பகமரம் நிற்கும் கோயில்.
129. எண்பேராயம் - கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளி படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர்.

130. பரத குமரர் - வணிக குமரர்.
131. மேம்படீஇய - மேம்படுவது குறித்து.
132. அகல்நிலை மருங்கின் - மிகப்பெரிய நிலவுலகின் கண்ணே.
133. உரை - புகழ்.
134. கொற்றம் - வெற்றி.
135. அரசு தலைக்கொண்ட - அரசர் தலையில் சுமப்பித்துக்கொண்ட.
136. மண்ணகம் மருள - மண்ணுலகம் விண்ணுலகமாய் மாறுபட.
137. பிறவா யாக்கைப் பெரியோன் - சிவன்.
138. வாய்வளை மேனி வாலியோன் - வெள்ளிய சங்கு போன்ற வெள்ளை மேனி யனாகிய பலராமன்.
139. மாலை வெண்குடை மன்னவன் - இந்திரன், மாலை - முத்துமாலை.

-   திறவோர் உரைக்கும் செயல் - புராணம் படித்தல் என்பர் அடியார்க்கு நல்லார்.

1.  சிறைவீடு - சிறை விடுதலை.
2.  கண்ணுளர் - கூத்தர்; மதங்கர் என்றும் கூறப்படுவர்.
3.  குயிலுவர் - தோற் கருவி வாசிப்பவர்.
4.  வியலுள் - அகன்ற தெரு.
5.  மாதர் - காதல், அழகுமாம்.
6.  எரிநிறத்து இலவம் - நெருப்புப் போன்ற நிறத்தையுடைய இலவம் பூ.
7.  குமிழ் - குமிழம்பூ.

8.  உள்வரிக் கோலம் - வேற்றுருக் கொண்டு நடிப்பது.
9.  கள்ளக் கமலம் - கள்ளையுடைய அந்தத் தாமரைப் பூ. மன்னனுக்குப் பெருவளம் காட்டவேண்டித் திருமகள் இச் செழும்பதி புகுந்தாளாம் என இலவமும் முல்லையு மே அன்றிக் குவளையும் குமிழமும் பூத்துக் கமலம், தன் துணைதேடி, உள்வரிக் கோலத்துடன் திரிவதாயிற்றோ என்க.
10. பகுவாய் - திறந்த வாய்.
11. அருந்தொழில் - தடுத்தற் கரிய உயிர் கொள்ளும் தொழில்.
12. நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டி - உண்மையுருவை விட்டு வேற்றுருக் கொள்ளுமிடத்துப் பெண்ணுருவும் அதற்கேற்ப நாணுடைமையும் கொள்ளுதல் அரிதாதலால் அதனை முதலில் கொண்டு, அதன் பின் சிரித்த முகம் மேற்கொண்டு.
13. திவவு யாழ் - செங்கோட்டு யாழ்; யாழிசைபோலப் பேசி என்க. கூற்றம், மறுத்தல் அஞ்சி, தொழில் திரியாது, முகம் கோட்டி, யாழ் மிழற்றி, பெண்ணுருவில் திரியும் பெற்றியும் உண்டாயிற்றோ என்க. பெற்றி - தன்மை.
14. உடனுறைவு - உடன் இருப்பது.

15. மாதர் - காதல்
16. மணித் தோட்டுக் குவளைப் போது - நீலமணி போன்ற இதழை யுடைய குவளைப் பூ.
17. புறங்கொடுத்து - நிகராகமாட்டாமல் தோற்று.
18. செங்கடை - கடைக்கண் சிவந்து தோன்றல்; (மகளிர் கோபித்துக் கண் சிவந்து காட்டும் பார்வை என்பதாம்.)
19. விருந்தின் - விருந்தினால்; நிலவரைப்பு - நிலவுலகம்.
20. உள்ளகம் - உள்ளே யிருக்கின்ற. மீது அழிந்து - மேலே மிகுந்து வழிந்து.
21. கருங்கண் - காதலனோடு கூடாமையால் கரிதாகிய கண்.
22. செங்கண் - காதலனோடு கூடினதால் சிவந்த கண்.

23. செழும்பதி - காவிரிப்பூம் பட்டினம்.
24. நாரதன் - யாழ் வல்லவனாகிய நாரத முனிவன். ஊர்வசி மாதவியாகப் பிறப்பதற்கு உண்டான சாபம் இவன் கலகத்தினால்தான் ஆயிற்று. நயம் தெரி பாடல் - ஏழிசையின்பமும் இனிது தெரியப் பாடுதல்.
25. மங்கை மாதவி - மங்கையாகிய ஊர்வசி. அரவு அல்குல் - மாதவி.

26. தேவபாணி - ஒன்பது வகை இசைப்பாட்டுகளில் ஒன்று. இது பெருந்தேவபாணி, சிறுதேவபாணி எனவரும்; இவ்விரண்டும் பலதேவன் முதல் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகை வருணத்தாரையும் பாடிப் பரவுதல். இங்கே முதலில் பாடியது திருமாலைப் பாடிய தேவபாணி; இது கடவுள் வாழ்த்துப் போல்வது.
27. கொடுகொட்டி: திரிபுரம் எரித்த வெற்றி மகிழ்ச்சியால் சிவன் உமாதேவியை ஒரு பங்கிலே கொண்டு ஆடியது.
28. பாண்டரங்கமும் - வேதக் குதிரை பூண்ட தேரில் தேரோட்டிய பிரமன் எதிரே வாணியின் உருக்கொண்டு சிவன் ஆடிய கூத்து.
29. அல்லியக் கூத்து - கஞ்சன் விடுத்த யானையின் கொம்பை முறிப்பதற்காகக் கண்ணன் ஆடிய கூத்து.
30. மல்லின் ஆடல்: வாணனை வெல்வதற்காகக் கண்ணன் அவனோடு ஆடிய மற்கூத்து.
31. துடி - சூரனைக் கடலின் நடுவே புகுந்து வென்ற முருகன் ஆடிய துடிகொட்டி என்னும் கூத்து.
32. பையுள் - துன்பம்.
33. குடை - சூரனுடைய அசுர வீரர்கள் தோற்றுத் தம் படைகளைக் கைவிட்ட போது முருகன் குடையை முன்னே சாய்த்துக்கொண்டு ஆடிய கூத்து.
34. குடம் - கண்ணன் வாணனுடைய சோ என்னும் அரண் சூழ்ந்த வீதியில் குடம் கொண்டு ஆடியது.
35. காமன், சிறைபட்டிருந்த மகன் அநிருத்தன் சிறை மீட்கப் பெற்ற போது. பேடியுருவுடன் ஆடியது.

36. மாயவள் - துர்க்கை
37. மரக்காலாடல் - அவுணர்கள் வஞ்சனையால் பாம்பும் தேளுமாய் உருக்கொண்டு வந்த போது துர்க்கை மரக்கால் கொண்டு ஆடிய கூத்து. மரக்கால் - மரத்தால் ஆகிய கால்.
38. பாவைக் கூத்து - அவுணர் தம் போர்க் கோலத்துடன் மோகித்து விழும்படி திருமகள் கொல்லிப்பாவை வடிவத்துடன் ஆடியது.
39. அயிராணி - இந்திரன் மனைவி.
40. கடையம் - வாணன் நகரத்து வடக்கு வாயிலில் உள்ள வயலில் நின்றுகொண்டு அயிராணி ஆடிய கூத்து. உழவர் மகளிராகிய கடைசியர் ஆடும் கூத்தாதலால் இது கடையம் எனப்படுகிறது.
41. உருப்பசி அகத்தியனால் சபிக்கப் பெற்று மண்ணுலகு வந்து மாதவியாகப் பிறந்தாள். மாதவி - ஊர்வசி.
42. குறங்கு செறி - துடையில் அணியும் ஒருவகை அணி.
43. தோள் வளை - வாகுவலயம்.

44. உவா - பூர்ணிமை.
45. பெருநீர் - கடல்.
46. இரியல் மாக்கள் - விரைந்து செல்லும் மக்கள்.
47. புள்வாய் புலம்ப - அன்னப் பறவை தங்கிய இடமாகிய பூ தனிப் பட.
48. வெள்ளி - சுக்கிரன். தாரணி மார்பன் - கோவலன்.
49. மாலைச் சேரி - ஒழுங்குபட்ட சேரி. (சேர இருக்குமிடம் சேரி)
50. பண்ணியப் பகுதி - பண்ணிகாரம்.
51. காழியர் - பிட்டு வாணிகர். மோதகம் - பிட்டு.
52. கூவியர் - அப்பம் விற்பவர் . காரகல் குடக்கால் விளக்கு - கரிய அகல் வைத்த குடவிளக்கு.
53. நொடை - பல பண்டங்களின் விலை.

54. இலங்கு நீர் - விளங்குகின்ற கடல்.
55. கலங்கரை விளக்கம் - கப்பல்களைக் கரைக்கழைக்கும் தூண் விளக்கு.
56. மீன் திமில் - மீன் பிடிக்கும் படகு.
57. மொழிபெயர் தேஎத்தோர் - வேறுவேறு வேற்றுமொழி பேசுபவர்,
58. கழிபெரும் பண்டம் - மிக்க பெரிய பண்டங்கள்.
59. கடிப் பகை காணும் காட்சி - கடுகு வீழ்ந்தால் சிறுவருத்தமும் இன்றி எடுக்கக் கூடிய அவ்வளவு வெளிச்சம் அமைந்த காட்சி.
60. ஓவிய எழினி - சித்திரமெழுதிய திரை; சித்திரத் திரை.
61. வெண்கால் அமளி - யானைக் கோட்டினால் கடைந்து செய்த வெண்மையான கால்களை யுடைய கட்டில்.
62. வருந்துபு நின்ற - மக்கட் கூட்டத்தின் இடையே நெருங்கி விரைய வந்ததனால் வருந்தி நின்ற,
63. கொள்கையின் இருந்தனள் - மனங் கொள்ளுவதால் சேரக் கூடியிருந்தாள்.

64. திங்கள் மாலை - திங்களின் தன்மையுடைய (மங்க. 1. காண்க).
65. ஓச்சி - செலுத்தி
66. புணர்ந்தாலும் - அரசாட்சியைப் பரப்பினாலும்; கலந்தாலும்.
67. புலவாய் - வற்றுவதில்லை; பிணங்குவதும் செய்யாய்.
68. கயற்கண்ணாய் - கயல் மீனாகிய கண்ணையுடையாய், கயல் போன்ற கண்ணை யுடையாய்.

69. தண்பதங் கொள் விழவர் - புதுப்புனல் ஆடுபவர்.
70. வாய் காவா மழவர் - நான் நான் எனத் தலைவனை நெருங்குகின்ற வீரர். போரில் தமக்குள்ள விருப்ப மிகுதி தோன்றத் தருக்கிக் கூறுவதால் “வாய்காவா மழவர்” என்றார்.
71. கரியமலர் நெடுங்கண் காரிகை - கருமையான குவளை போன்ற நீண்ட கண்ணையும் அழகையும் உடையவள்.
72. காட்டிக் காட்டிப் பல முறையும் செய்த, பொய்யாக்கக் கூடாத சூள் (சபதம்: ஆணை)
73. எதிரிலே நிற்கும் அவனைப் பிறன்போலக் கூறுகின்றாள்; அதனால் “பொய்த் தார்; அறன் இலர்” என்று சொல்லுகிறாள்.
74. ஆம்பல் வளையையும் முத்துக்களையும் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்று கொண்டு அரும்பு மலரும்; வளை - சங்கு. கணம் - கூட்டம்.
75. முரல்வாய்ச் சங்கம் - முழங்குகின்ற வாயையுடைய சங்கு.
76. வண்டல் - கடற்கரை மணலில் மகளிர் வைத்தாடும் பாவை விளையாட்டு.
77. மாழ்கி - மயங்கி.
78. பரிந்து - அறுத்து, கோதையைக் கொண்டு ஓச்சும் (ஓட்டும்)

79. குவளைமாலைப்போது சிறங்கணிப்ப - குவளை மாலையிலுள்ள பூக்கள் சிதறிக் கடைக்கணித்துப் பார்ப்பது போலக் கிடக்க. “சிறக்கணித் தாள்போல நகும்”
80. போவார்கண் போகார் புகார் - போகின்றவர் அவைகளைக் கண் என்று கருதிப் போகாது நிற்கும் புகார்.
81. மாய்வான் - மறைப்பதற்காக
82. பொறை மலி புன்னை - தழையும், அரும்பும், பூவும் நிரம்பி நிற்கும் புன்னை.
83. மலி உறை உய்யா நோய் - தாங்க முடியாதபடி மிகுவதால் வேறு மருந்துகளால் போக்க முடியாத நோய்.
84. ஊர் சுணங்கு - பரந்த தேமல், வலம்புரி மணலில் தோய்ந்து செய்த தோற்றம் மறையும்படியாகப் புன்னை நுண் தாது போர்க்கும்; அதுபோல, கயற்கண் செய்த நோயை முலையே தீர்க்கும், போலும், அசை.
85. வலை வாழ்நர் - செம்படவர், உணங்கும் - புலரவிட்டிருக்கும்.

-   காமன் செயல் எழுதி - பிறரை வருத்தக் கூடிய காமச் செயல்களை எழுதி.

1.  தீர்ந்த முகம் - அழகு முழுதும் பொருந்த அமைத்துவிட்ட முகம்.
2.  திமில் - படகு.
3.  அரவு - இராகு.
4.  அலவ - மனம் வருந்த.
5.  அணங்கு - தெய்வம்.
6.  அடும்பு - ஒருவகைக் கொடி.
7.  பிணங்கு நேர் ஐம்பால் - செறிந்து நீண்ட கூந்தல். பெண் - பெண் வடிவு.
8.  பணை - பருத்த, வனமுலை - அழகிய முலை,
9.  தளை - முறுக்கு, (அரும்பு).
10. முளை நகை - முளைபோலும் பல்.

11. உயிர் - மீன்வகை.
12. ஐயர் - தந்தை, உடன்பிறந்தோர் முதலியோர்.
13. மிடல் - வலிமை.
14. இடர்புக்கு இடுகும் இடை இழவல் - இடரிலே கிடந்து சிறுகுகின்ற இடை யினை இழந்து விடாதே.
15. கோடும் - வளைந்த.
16. பிறர் எவ்வம் பார்த்தல் பீடு - பிறர்க்கு உண்டாகும் துன்பத்தைப் பார்த்து இரங்கு வது உனக்குப் பெருமை; நீ அதனைப் பார்ப்பாயாக.
17. மருங்கு - இடை.
18. பவள உலக்கை - பவளத் துண்டத்தை உலக்கையாக.
19. தவள முத்தம் - வெண்மையான முத்து. குறுவாள் - குற்றுகிறவள்.
20. புள் வாய் உணங்கல் - உணங்கல் வாய் புள்; உலருகின்ற மீன்களைக் கவரி வரும் பறவைகளை. கடிவாள் - ஓப்புபவள்.
21. வெள்வேல் - வெண்மையான வேல்.

22. ஊர் திரை - பரந்து வருகின்ற அலை. உழக்கி - அலைத்து.
23. கலம் - யாழ்
24. கண்டம் - மிடறு (அடித்தொண்டை).
25. மருங்கு - பக்கம், வண்டு - வண்டுகள், வளையல். ஒல்கி - ஒதுங்கி.
26. திருந்து செங்கோல் - நேர்மையால் அழகிய செங்கோல்.

27. ஆழியாள்வான் - ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர் செலுத்தும் சூரியன். பகல் வெய்யோன் - பகற்பொழுது செய்பவன்; நீதியையே விரும்புபவன்.
28. தீங்கதிர் - இனிய கதிர். மணி முறுவல் - நல்ல நகை.
29. மால் மகன் - மயங்கின மகன்; காமன் என்றுமாம்.
30. வீங்கு ஓதம் - பெரிய கடல். ஓதம் முத்தைத் தந்து கோதை கொண்டு மீளும் புகார் என்க.
31. விரை - மணம்.
32. விலைஞர் - விலை கொடுத்து ஒன்றை வாங்குபவர்.
33. வெல்நறா - மயங்கச் செய்யும் கள்.
34. ஊண் ஒளியா - உண்ட வூனை மறையாத.
35. உறை - உறுத்தல்.
36. தண்டா நோய் - நீங்காத நோய்.
37. வண்டால் - வண்டற்பாவை; விகாரம்.
38. வேல் - வேல் போன்ற கண்.

39. புணர் துணை - கூடுகின்ற பெண் நண்டு.
40. ஆடும் பொறி அலவன் - விளையாடும் பொறிகளையுடைய நண்டு.
41. இணர் ததையும் - பூங்கொத்துக்கள் நெருங்குகின்ற.
42. வணர் சுரி ஐம்பால் - கடைகுழன்று சுரிந்த கூந்தல்.
43. வண்ணம் - மனக் கருத்து.
44. புன்கண் - துன்பம்.
45. உழவாய் - வருந்துவது இல்லாய்,
46. இன் கள் வாய் நெய்தால் - இனிய தேனையுடைய நெய்தற் பூவே,
47. வன்கணார் - அன்பில்லாமையையுடைய காதலர்.
48. புள் இயல் மான் - பறவைபோல் விரைந்து செல்லும் இயல்பையுடைய குதிரை.
49. தெள்ளு நீர் - தெளிந்த நீர்.
50. உள்ளாரோடு உள்ளாய் - நினையாத காதலரோடு சேர்ந்து கொண்டு என் நோயை அறியாதிருக்கின்றாய்.
51. நேமி - சக்கரம்.
52. தீர்ந்தாய்போல் தீர்ந்திலை - உறவுபோல் இருந்து உறவாய் இல்லை; காரியத்தில் வேறுபடுகின்றாய்.

53. நித்திலம் - முத்து.
54. பழனம் - பொய்கை யருகுள்ள கழனி.
55. பொதும்பர் - சோலை.
56. மகரத் திண் கொடியோன் - மகரமீன் எழுதிய வலிய கொடியை யுடைய மன்மதன்.
57. புலவுற்று இரங்கியது - புலால் நாற்றம் உற்று வருந்தியது.
58. பொழில் தண்டலையில் - சோலையில்.
59. செம்மல் - பழைய பூக்கள்.
60. பல துன்பங்களை உற்றதனால் நினைந்து பெற்ற வருத்தம்.
61. அலவுற்று - துயரமுற்று.
    10.இளை இருள் - மெல்லிய இருள்.
62. எல் - பகற் காலம்.
63. களைவரும் - நீக்குதற்கு அரிய. புலம்பு - வருத்தம்.

64. தணந்தார் - பிரிந்தவர்.
65. நிறை நிலா நோய் - நிறுத்தினால் நிறுத்தியவழி நில்லாது பெருகுகின்ற நோய். கூர - உண்டாக.
66. துறுமலர் - செறிந்த பூ.
67. மறவையாய் - மறம் உடையதாய்.
68. கைதை - தாழம்பூ. (தாழம்புதர்).
69. பொய்தல் - மகளிராடும் விளையாட்டு. அழித்து - கைவிடும்படி செய்து.
70. மையல் - மயக்கம்.
71. நென்னல் - நேற்று.
72. பொன் நேர் சுணங்கு - பொன்போன்ற தேமல். இன் - போல.
73. குருகு - நீர்ப்பறவை.

74. உறுநோய் - யான் உற்ற வருத்தத்தை.
75. நுளையர் - செம்படவர். விளரி - அழுகிறவர் பாடும் பண்.
76. நொடிதரும் - பாடும்.
77. இளி கிளையில் கொள்ள - மயக்கத்தால் யாழ் வாசிப்பவர் விரல் சென்று பகை நரம்பில் தடவ.
78. கொளை வல்லாய் - கொள்ளல் வல்லாய்!
79. பையுள் நோய் - வருத்தம் மிக்க நோய்.
80. வையம் - நிலத்தில் வாழ்பவர்.
81. ஞாலம் நல்கூர்ந்தது - உலகு வறுமை உற்றது; அஃதாவது. தனக்குண்டானது போல எல்லார்க்கும் வருத்த முண்டாகியதாக நினைத்து “ஞாலமோ நல்கூர்ந்தது” என்கின்றாள்.
82. தீத்துழைஇ - நெருப்பைத் துழவிக்கொண்டு
83. செல்லல் - வருத்தம்.
84. தூக்காது - நம்மை வருத்துமென்று கருதாமல்.
85. துயரெஞ்சு கிளவி - நல்ல வார்த்தை.

86. மாயப் பொய் - வியக்கத் தகுந்த பொய்.
87. கவவுக்கை - இறுகத் தழுவிய கை.
88. ஒதை ஆய்த்து - ஓசையாகியது.

89. நெடியோன் - திருமால். குன்றம் - வேங்கடம்.
90. தொடியோள் - கன்னியாகுமரி.
91. உறந்தை - உறையூர்.
92. கலி - ஆரவாரம்.
93. மாரன் - காமன்.
94. இளங்கால் தூதன் - தென்றற் காற்று ஆகிய தூதுவன்.
95. மகரவெல் கொடிமைந்தன் - காமன். அவனது சேனை - மகளிர் கூட்டம். புகர் - குற்றம்.
96. குயிலோன் - குயில்.
97. படையுள் படுவோன் - படையில் சிறியவனாய், கானம் ஊதுபவன்.
98. பணிமொழி - கட்டளை; பணித்த சொல்.

99. வேனிற் பள்ளி - வேனிற்காலத்தே கொள்ளுகின்ற படுக்கையறை.
100. வளாகம் - இடம்.
101. கையுறை - காணிக்கை.
102. அதிராமரபு - தன் ஓசையில் அபசுரம் படுவதில்லாத.
103. பித்திகை - பிச்சியென்னும் பூ.
104. அந்திப் போதகம் - அந்திமாலையாகிய யானை.
105. அரும்பிடர் - ஏறுதற்கரிய கழுத்தின்மேல்.
106. செவ்வியனல்லன் - நேர்மையின்றி உடலாலும் கோணியிருப்பவன்; அதனால் இன்பம் செய்யான்.
107. தணந்த மாக்கள் - பிரிந்தவர்கள்.
108. வாளி - அம்பு.

109. வரிவகைகள் - நடிப்பு வகைகள்.
110. விளையா மழலை - முதிராத இளமை கனிந்த சொல்.
111. கொணர்க - அழைத்துக்கொண்டு வருக.
112. கண்கூடு வரி - பிறர் சொல்லாமலே தானே விரும்பி முன்நின்று நடிப்பது.
113. காண்வரிக் கோலம் - நகைத்துக்கொண்டே வாவென வருதலும் போஎனப் போதலும் ஆக நடிப்பது.
114. சிலதியர் - ஏவற் பெண்கள்.
115. உள்வரி யாடல் - சேடிப் பெண்களைப்போல உருக்கொண்டு நடித்து இன்பம் செய்தல்.
116. புன்புறவரி - காதல் மிகவுடையவள்போல அருகில் வந்து பின் புறத்தே சென்று நடிப்பது.
117. கிளர்வரி - தனக்கும் காதலனுக்கும் சேடியர் தூது சொல்ல நெருங்குவதும் போவதுமாக நடிப்பது.
118. தேர்ச்சிவரி - காதலன் பிரிந்தானாகக்கொண்டு, அவனது கிளைஞருக்குத் தன் துன்பத்தைச் சொல்லுவதுபோல நடித்தல்.

119. காட்சிவரி - தன்னைப் பார்ப்பவர் அனைவருக்கும் தன் துன்பங்கள் தெரியக் காண நடித்தல்.
120. எடுத்துக் கோள்வரி - தான் காமத்தால் துன்புற்று மயங்கி வீழ்ந்ததாகவும், பியர் எடுத்துத் தேற்றியதாகவும் நடித்தல்.
121. பாடு பெற்றன - பெருமை பெற்றன.

122. கடுக்கும் - ஐயப்படுகிறது.
123. பிடித்தனன் - என் கணவன் என் கையைப் பற்றிக்கொண்டு போக.
124. இடுதேள் இட்டு - தேள் கொட்டப்படுபவர் தெரியாவகை, தேளல்லாத ஒன்றை மறைத்துக்கொண்டு வந்து அவர் மேலே போட்டுப் பய முறுத்துதல்.

125. உரையாடேன் - இழிவான கனாக் கண்டால் பிறர்க்குச் சொல்லலாகாது என்ற கொள்கையால் சொல்லிற்றிலேன்.
126. தீக்குற்றம் - கடிதான குற்றம் (முலை திருகி யெறிதல்). உற்றேன் - செய்தேன்.
127. உறுவன் - மிக்கவனாகிய கோவலன்.
128. நற்றிறம் - இருவரும் சுவர்க்கம் புகுந்தது.
129. கைத்தாயும் அல்லை - நின் கணவனால் நீ வெறுக்கப்படவில்லை.
130. போய்க் கெடுக - உன்னைப் பற்றிய தீங்குகள் எல்லாம் அழிக.
131. முன்றில் - முன்னேயுள்ள இடம்.
132. தடம் - தடாகம்.
133. போகம் செய்பூமி - போகபூமி.

134. சலம் - பொய்.
135. சலதி - பொய் பேசுபவள்; பொய்யொழுக்க முடையவள்.
136. வான் பொருள் - மிகுந்த செல்வம்.
137. இலம்பாடு - இல்லாமை (வறுமை).
138. உலந்த - கெட்ட.
139. ஈட்டுதலுற்றேன் - தேடிச் சேர்க்கத் துணிந்தேன்.
140. மூதை - பழைய.
141. வியம் கொண்டான் - வினையின் ஏவலை மேற்கொண்டான்.
142. சுடர் கங்குல் கால்சீயாமுன் - சுடர் இருளை அதன் இடத்தினின்று போக்காத முன்பே; விடியுமுன்பே என்றபடி.

143. வான்கண் - சூரியன்,
144. மீன் - நட்சத்திரம்.
145. கடைநாட்கங்குல் - கடையாமத்தில் இருள் நின்ற இரவு.
146. கடைஇ - செலுத்தி.
147. துரப்ப - முடுக்க.
148. உலக நோன்பிகள் - சிராவகர். (இல்லிருந்து வாழும் சைனர்).
149. கலையிலாளன் - உடலுருவில்லாத காமன்.
150. மன்னவன் - சோழன். காமன் சோழனுக்கு வேனிலையும், மாரு தத்தையும் திறையாக இறுக்கும்,
151. இலவந்திகை - வசந்தச் சோலை, எயில் - மதில்.

152. பெருமகன் - அருகதேவன்.
153. உறுகணாளர் - துன்பமுறும் பாவிகள்.
154. கடைகழிந்து - வீடுவாசலைவிட்டு.
155. மற உரை நீத்த மாசறு கேள்வியர் - பாவம் உண்டு பண்ணும் சொற்களைச் சொல்லுதல் குற்றமற்ற ஞானிகள்.
156. அறிவனை - அருகதேவனை.
157. ஒன்றிய உள்ளம் - போவதற்கு ஒருப்பட்ட கருத்து.

158. போதுவல் - வருவேன்.
159. தொடிவளைத் தோளி - தொடியும் வளையும் அணிந்த தோள்களை யுடைய இக் கண்ணகி.
160. வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் - வெயிலின் வெளிச்சத்தைக் கண்ணால் பார்க்கவும் பொறுக்காத மென்மையான தன்மையையுடைய கண்ணகி.
161. படர்குவம் - செல்வோம்.
162. பக வீழ்ந்த - வெடிப்புண்டாகக் கீழே உண்டாகிய.
163. தாது - சண்பகமரத்தின் பூந்தாது.
164. போற்றா மாக்கட்கு - தெரியாமல் நடந்து செல்லுபவருக்கு.
165. பூஞ் செம்மல் - உதிர்ந்து கிடந்த பழம் பூக்களில்.
166. பழம் பகை முட்டும் - பலாப்பழம் பகைபோல முட்டும்.
167. மயங்கு அரில் வலயம் - ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு கிடக்கும் பாத்தி.
168. பல் - பலாக்கொட்டை, பகை உறுக்கும் - பகையாய்க் காலை உறுத்தும்.
169. வயலுழை - வயல்களின் வழியாக.
170. பூ நாறு இலஞ்சி - பூக்களின் மணம் கமழும் குளம்.

171. நெடும் புற வாளை - நீண்ட முதுகையுடைய வாளை,
172. மலங்கு - ஒருவகை மீன்.
173. செறுவில் - வயலில்.
174. அறிவஞர் - அறிவு கலக்கம்.
175. நொண்டு - முகந்துகொண்டு.
176. குறுநர் - களை பறிப்பவர்.
177. பொறிமாண் அலவன் - புள்ளியால் மாட்சிமைப் பட்ட நண்டு.
178. ஊழடி யொதுக்கம் - முறையே அடிமேல் அடி வைத்து நடக்கும் நடை.
179. தாழ்தரு - தங்கும்.
180. அயல்பட - வேறாக.
181. நெறியிருங்குஞ்சி - நெறித்த கரிய தலைமயிர்.
182. மொழிப் பொருள் தெய்வம் - உபதேச மந்திரம்.

183. கருங்கை வினைஞர் - பள்ளர்; பறையர். களமர் - உழவர்.
184. கடைசியர் - உழவர் மகளிர்.
185. தொலைச்சிய - தொலைத்த. விருந்திற் பாணி - பழகாத பாட்டு.
186. பழிச்சினர் - போற்றி.
187. ஏர் மங்கலம் - ஏர் உழுவார் பாடும் பாட்டு.
188. பெருஞ்செய் - பெரிய வயல்.
189. முகவைப் பாட்டு - நீர் இறைப்பவர் பாட்டு. ஏற்றப் பாட்டு.
190. கிணைப் பொருநர் - தடாரி என்னும் வாத்தியத்தை இசைக்கும் பாடகர்.
191. மண்கனை முழவு - வாரால் இறுகக்கட்டி மார்ச்சனை அமைக்கப் பெற்ற முழா. மார்ச்சனை - தட்டினால் கும்கும் என்று ஓசை எழுப்புவது.
192. புரப்போர் - அரசர். கொற்றம் - வெற்றி.

193. சிந்தை விளக்கு - அவதி ஞானம்; திரிகால உணர்வு.
194. செற்றம் - பகை.
195. அகல - நீங்க.
196. விழுமம் - வருத்தம்.
197. இட்டவித்தின் - விளையக்கூடிய நிலத்தில் விதைத்த விதை போல.
198. கடுங்கால் நெடுவெளி - கடிய காற்று வீசும் வெளியிடத்தில் (மைதானத்தில்).
199. மூன்று - காமம், கோபம், மயக்கம்.
200. ஐவர் - இந்திரியம் (ஐம்புலன்கள்.)
201. கைவரை - கைமேலே.

202. பொருளில் - பயனில்லாத.
203. மலர்மிசை நடந்தோன் - தாமரைப் பூவின்மேல் நடந்தவனாகிய அருகதேவன்.
204. அணிப் பொறாது - அணிவதற்கு உடன்படாது.
205. மறு தர ஓதி - உருவேற ஓதி.
206. ஈங்கு - இவ்விடத்தே.
207. நோற்றுணல் - விரத நாட்களில் பட்டினிகிடந்து உண்பது. யாக்கை நொசி தவத்தீர் - உடல் மெலிந்த தவசியே.
208. ஆற்று வழிப்பட்டோர் - வழியில் கூடி வந்த இவர்.
209. பக்கம் நீங்குமின்; அவர் பக்கம் போகாமல் விலகிச் செல்லுங்கள்.
210. பரிபுலம்பினர் - மிகவும் வருந்தி இருக்கின்றனர்.
211. உடன் வயிற்றோர்கள் - ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்.

212. தீமொழி - இகழ்ந்த சொல்.
213. நெறியின் நீங்கியோர் - நல்லொழுக்கத்தில் தவறி நடப்பவர்கள்.
214. நீர் அல - தகாதவற்றை.
215. உய்திக் காலம் - சாபம் நீங்கும் காலம்.
216. நொச்சி - மதிற்புறம்.
217. சாபவிடை - சாப விடுதலை.

218. திங்கள் மூன்று அடுக்கிய திரு முக்குடை: மூன்று முழு மதியை ஒன்றன்கீழ் ஒன்று அடுக்கினால் ஒத்த சிறந்த மூன்று குடை: அவை, சந்திராதித்தம், நித்தியவினோ தம், சகலபாசனம் என்பன.
219. திகழ் ஒளி - விளங்கும் ஒளி.
220. கோதை தாழ் பிண்டி - கடவுள் தன்மையால் தொடுத்த மாலையாகவே பூத்துத் தொங்கும் அசோக மரம்.
221. ஆதியில் தோற்றம் - ஆதியும் அந்தமும் இல்லாத தோற்றம்.
222. அறிவன் - உறையூரில் கோயில் கொண்டிருக்கும் அருகன்.

223. தன் அளவு அடியில் உணர்த்தி - தன் பெருமையினது அளவைக் காலால் மிதித்து உணர்த்தி.
224. வான் பகை பொறாது - (கடல்) பழம்பகையைப் பொறுக்காது.
225. பஃறுளி யாறு - குமரிமலைக்குத் தெற்கில் அதன் அடியில் ஓடிய யாறு.
226. குமரிக்கோடு - குமரிமலை. இஃது இப்போதிருக்கும் குமரி முனைக்குத் தெற்கில் இருந்ததென்பர்.
227. கொடுங்கடல் - யாற்றையும், பலமலையடுக்கத்தையும் விழுங்க நின்ற கொடுங்கடல்; இது தென்பெருங்கடல்.
228. செங்கண் ஆயிரத்தோன் - மெய்யெங்கும் பல கண்களையுடைய இந்திரன். திறல் - வலி.
229. பூண்டோன் அணிந்துகொண்டவனாகிய பாண்டியன்.
230. மழை பிணித்து ஆண்ட மன்னவன் - மழை பெய்யாது ஒழிந்த முகிலினத்தைப் பற்றி நீங்காதவாறு விலங்கிட்டு மழை பெய்வித்துக் கொண்டவனாகிய பாண்டியன். (இச் செயல்கள் திருவிளையாடற் புராணத்து விரியக் காணப்படுகின்றன.)
231. பால் விரிந்து அகலாது - எல்லாப் பக்கமும் விரியப் படர்ந்து நீங்காமல்.
232. தலையுடை அருந்திறல் - தலைகளையுடைய கிட்டுதற்கு அரிய வலிமை கொண்ட ஆதிசேடன்.
233. வியன்பெரும் துருத்தி - அகன்ற பெரிய ஆற்றிடக்குறை.

234. இடைநிலைத் தானத்து - இடைப்பட்ட இடத்தே.
235. மின்னுக் கோடி - மின்னாகிய புதுவுடை.
    3.நல் நிற மேகம் - நல்ல கரிய நிறத்தையுடைய மேகம்.
236. பகை அணங்கு ஆழி - பகைவரை வருத்தும் ஆழிப் படை.
237. தகை - அழகு.
238. பொலம்பூ ஆடை - பூ வேலை செய்யப்பட்ட பொன்னாடை (பீதாம்பரம்.)
239. கண்மணி குளிர்ப்ப - கண்ணின் மணி குளிர, கண்குளிர.
240. கோத்தொழிலாளர் - அமைச்சர்.
241. கோடி - செங்கோல் முறை தவறி.
242. வேத்தியல் - அரச இயல்.

243. வேனலம் கிழவன் - வேனிற்காலமாகிய அமைச்சன், வெங்கதிராகிய வேந்தன்.
244. நலம் திருக - நவம் கெடுமாறு பண்ண.
245. உறுத்து - அடைவித்து, படிவம் - வடிவு.
246. காரிகை - அழகுடையவன்; ஈண்டுக் கண்ணகி மேற்று.
247. ஏற்றிழிவு - உயர்ச்சியும், தாழ்வும் சரிவுமாம்.
248. சூழ் அடுத்து ஓங்கிய - சுற்று முற்றும் சூழக்கொண்டு உயர்ந்த.
249. இடம் படக் கிடந்த - இடப்பக்கமாக இருந்த.
250. பெரு மால் - மிக்க மயக்கம்.
251. பிலம் - பாதல வழி.
252. வியத்தகு மரபு - வியக்கத்தக்க தன்மை.

253. பெயர் போகி - நாற்புறமும் பெயர் சிறந்துள்ள.
254. முட்டாச் சிறப்பு - இடையறாத சிறப்பு.
255. சிலம்பாறு - இஃது ஒர் யாற்றின் பெயர்.
256. செம்மையில் நிற்பது - அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடு.
257. வரைத்தாள் - மலையின் அடி.
258. உரைத்தார்க்கு உரியேன் - உரைத்தவர் யாவராயினும் அவர்கட்கு அடித் தொண்டு புரிவேன்.
259. திருத்தக்கீர் - திருவாளர்களே. திறப்பேன் கதவு என்ன வேண்டியவள், திறப்பதன் விரைவு தோன்றத் திறந்தேன் என்றாள், இது கால மயக்கம்.

260. இறுதி இல் இன்பம் - வீடுபேறு.
261. உறுகண் - வருத்தம்.
262. நெடுவழிப் புறத்து நும் நீக்குவன் எனும் - நீவிர் போக வேண்டிய வழியின் கண்ணே நும்மைச் செலுத்துவேன் என்று சொல்வாள்.
263. உள்ளம் பொருந்துவீராயின் - திருவடிகளை உள்ளத்தில் நினைப் பீராயின்.
264. புள் அணி நீள் கொடி புணர்நிலை - கருடப் புள்ளின் வடிவெழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடம்.
265. தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் - திருவடிகள் உம்மைத் தாங்கிக்கொண்டு பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்.
266. மாண்பு உடை மரபு - மாட்சிமை பொருந்திய முறைகள்.

267. நலம் புரி கொள்கை - நல்ல ஒழுக்கத்தை விரும்பும் கோட்பாடு.
268. பெற்றி ஈங்கு இல்லை - தன்மை எமக்குக் கிடையாது.
269. வாய்மையின் வழாஅது - வாய்மை என்னும் அறத்தில் தவறாமல்.
270. காமுறு தெய்வம் - காண்பதற்காக விரும்பிய தெய்வமே.
271. நீள்நெறிப் படர்குதும் - நீண்ட வழியைச் செல்கின்றோம்.
272. மேலோர் - முனிவர்.
273. நூலோர் - கற்றோர்.
274. பால் வகை தெரிந்த பகுதியோர் - நூல்களைக் கல்லாது இயல்பாகவே நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் பகுத்தறிந்து ஒழுகும் மதி நுட்பமுடையவர்.

275. பிறக்கிட்டு ஒழியும் - புறக்கணித்து நீக்கும்.
276. வாழ்க்கை - பொய் யொழுக்கம்
277. போன்ம் - போலும். இஃது அசைநிலை.
278. வனசாரிணி - வனத்தில் திரியும் இயக்கி.
279. புனமயில் சாயல் - புனத்தல் வாழும் மயிலின் சாயலையுடைய கண்ணகி.
280. புண்ணிய முதல்வி - கவுந்தியடிகள், தவத்தினும், கற்பு சிறந்தது; அதனால், கண்ணகியை முற்கூறி, புண்ணிய முதல்வியைப் பின்னர்க் கூறினார். இருவர் பாலும் முறையே சாயமும் அறமும் இருப்பினும், “தவறு கண்டுழிக் கணத்தில் வெகுண்டு சவிப்பர் என்று அஞ்சி அவர்கட்கு உரையாதொழிக” என்று இயக்கி இரந்து கேட்டாள்.
281. ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - செல்லுதற்கு அருமை யாகிய வழிகளிலே செல்லுபவர் கையில் உள்ள பொருள் கவர்வது தவிர.
282. வில் ஏர் உழவர் - வில் கொண்டு செய்யும் தொழிலையே உழவுத் தொழிலாக வுடைய மறவர்.

283. கூற்று உறழ் முன்பு - யமனை ஒத்த வலிமை.
284. வேற்றுப்புலம் - பகைவரது போர் முனை.
285. வெற்றம் - வெற்றி.
286. கழி பேர் ஆண்மைக் கடன் - தன்னையே உயிர்ப்பலியாக இடும் பலிக்கடன்.
287. விழிநுதல்; நுதல் விழிக் குமரி - நெற்றிக்கண்ணை யுடைய குமரி.
288. வான நாடி - துறக்க நாட்டையுடையவளான கொற்றவை.
289. ஐயைக் கோட்டம் - கொற்றவையின் கோயில்.

வேட்டுவ வரி என்பது, வேட்டுவர் கொற்றவை, வள்ளி நாயகி முதலியோர் வேடம் பூண்டு கூத்தாடிப் பல பாட்டுப் பாடிப் பலி கொடுத்துப் பரவுவதைக் கூறுவது. இவ்வாறு வேற்றுருவம் தாங்கி ஆடும் கூத்து உள்வரி எனப்படும், அதனால் இக் காதை வேட்டுவ வரி எனப்பட்டது. அடியார்க்கு நல்லாரும் “இது கூத்தாற் பெற்ற பெயர்” என்று கூறுவர். வேட்டுவ வரி என்பதில் வரியாவது கண்கூடு வரி முதலாகக் கூறப்படும் வரிக் கூத்தையும் குறிக்குமாயினும், ஈண்டு உள்வரிக் கூத்தே குறித்து நிற்கிறது. கானல்வரி என்ற விடத்து வரி என்பது இசைத்தமிழ் வகையிற் கூறப்படும் வரிப் பாட்டுக்களைக் குறித்து நிற்பது.
1. வழங்கு வில் தடக் கை - அம்பைச் செலுத்தும் வில்லேந்திய பெரிய கை.
2. மறக்குடித் தாயம் - மறவர் குடியில் பிறந்த உரிமை.
3. பழங்கடன் - இன்னபடியே ஆயின் இன்ன பலி இடுவேம் என முன்பே நேர்ந்துள்ள கடன்.
4. முழங்கு வாய்ச் சாலினி - கொக்கரிக்கும் வாயையுடைய சாலினி. சாலினி - தெய்வ மருள் ஏறி ஆடுபவள்; பூசாரிச்சி என்பர்.
5. மெய்ம்மயிர் நிறுத்து - மெய்ம்மயிர் சிலிர்த்து.

1.  இடு முள்வேலி - முட்களைக்கொண்டு நட்டுவைத்த வேலி.
2.  அடிபெயர்த்து ஆடி - தாளத்துக்கு ஒப்ப அடியிட்டு ஆடி, எயினரூர்நடுவே உள்ள மன்றத்து, சாலினி, கானவர் வியப்பக் கையெடுத்து ஓச்சி அடிபெயர்த்து ஆடினள் என்க.
3.  களவு ஏர் வாழ்க்கை - களவு செய்தலையே தொழிலாகவுடைய வாழ்க்கை.
4.  வண்ணம் - தோளிலும் மார்பிலும் நிறம் தீட்டும் வண்ணம். (நிறம்).
5.  புழுக்கல் - அவரை, துவரை, முதலியன (சுண்டல்).
6.  நோலை - எள்ளுருண்டை.
7.  விழுக்கு உடை மடை - நிணம் கலந்த சோறு. இஃது இக் காலத்தே வழங்கும் பிரியாணி போல்வது.
8.  விரை - நறுமணப் பொருள்.

9.  கொங்கச் செல்வி - கொங்க நாட்டினை ஆளும் செல்வி.
10. குடமலையாட்டி - குடநாட்டையாளும் செல்வி.
11. தென் தமிழ்ப்பாவை - தென் தமிழ் நாட்டையாளும் பாவை போல்வாள். செய்த தவக் கொழுந்து - இவ்வாறு இம் மூன்று நாட்டையும் ஆள்வதற்காக முற்பிறப்பிலே செய்த நல்வினைக்கண் முளைத்த கொழுந்து போல்பவள்.
12. திரு மா மணி - சீரிய பெரிய மணி.
13. பேதுறவு - தெய்வ மருளால் உண்டான மயக்கம்.
14. வலம்படு கொற்றம் - மேலான வெற்றி.
15. இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - தலை வேறு, உடல் வேறாக உள்ள உருவமும் திரண்ட தோளும் உடைய அசுரன்; இவனை விக்கிரமாசுரன், மயிடாசுரன் என்றும் கூறுவர். தலை - எருமைத் தலை; உடல் - மக்கள் உடல்.
16. மாலவற்கு இளங் கிளை - திருமாலுக்குத் தங்கை.
17. ஐயை - வெற்றித் திருமகள், செய்யவள் - செல்வத்திருமகள்.

18. பாய்கலைப் பாவை - பாய்ந்து ஒடும் மான் ஊரும் பாவை. (மலைமகள்).
19. ஆய்கலைப் பாவை - அறிஞர் ஆராயும் அறுபத்து நான்கு கலைகளையு முடைய பாவை. (கலைமகள்)
20. அருங்கலப் பாவை - தொடி முதலிய அரிய அணிகலன்களை உடைய பாவை. (திருமகள்)
21. நாகம் - சுரபுன்னை.
22. நரந்தை ; நாரத்த மரம்.
23. நிரந்தன - வரிசையுற நின்றன.
24. ஆ - ஆச்சா மரம்.
25. சே - அழிஞ்சில்.
26. செம்பொன் - செவ்விய பொன்னின் நிறத்தை உடைய பூ.
27. பொங்கர் வெண்பொரி - கொம்புகளில் பூத்த வெண்மையான பொரி போன்ற பூ, புன்கு பொரி சிந்தின என்க.
28. வள்ளிக்கூத்து - வள்ளி நாயகியே போல் வேடம் புனைந்து குற மகளிர் ஆடும் கூத்து.
29. அணி - வேடம்.
30. பொற்றொடி மாதர் - பொன்னாலாகிய தொடி அணிந்த பெண்.

31. ஆய்தொடி - அழகிய தொடி.
32. வேய் வில் - மூங்கிலால் சமைத்த வில்.
33. முன்னிலைப் பரவல் - பாடப்படுவோரைக் கேட்போர் போல முன்னிலைப் படுத்திப் பாடிப் பரவுதல்.
34. புலியின் உரி - புலியின் தோல்.
35. எருமைக் கருந்தலை - மயிடாசூரனது பசுந்தலை.
36. மறைமேல் மறையாகி - நான்கு மறைக்கும் மறைப் பொருளாய்.
37. நடுக்கின்றி நிற்பாய் - சலிப்பின்றி நிற்கும் நீ.
38. செங்கண் அரிமான் சினவிடை - சிவந்த கண்ணையுடைய அரிமாவாகிய சினம் பொருந்திய ஏறு. (ஆண் சிங்கம்)
39. மறை - நான்கு மறைகளும்.
40. வென்றிக் கூத்து - போர் செய்து பெற்ற வெற்றி குறித்து அப்போர்க்களத்தே ஆடும் கூத்து.
41. கூத்துள் படுதல் - கூத்து நிகழ்ச்சியில் நிகழ்வது செய்து அதற்கேற்ப ஆடிப் பாடுதல்.

42. கொற்றi9 வ நிலை - கொற்றவையைப் பரவிப் பாடுவது.
43. உட்கு - பகைவர்க்கு அச்சம் தரும்.
44. வெள் வாள் உழத்தி - வெள்ளிய வாட்படை ஏந்தும் கொற்றவை. வேற்றூர்க் கட்சி - பகைவர் ஊர் சூழ்ந்த காடு.
45. காரி - கரியன் என்னும் ஒருவகைப் புள்.
46. கள் விலையாட்டி - கள் விற்பவள்.
47. பொறா மறவன் - மானம் பொறுக்கமாட்டாத வீரன்.
48. புள்ளும் வழிப்படர - அவன் கருத்திற்கு ஏற்ப நற்குறி செய்ய.
49. புல்லார் நிரை - பகைவரது ஆனிரை.
50. கொடுமரம் - வில். வில்லின்முன் கொற்றவை செல்லும் போலும் என்க.
51. கொடை என்னும் துறைப்பாட்டு மடை - பகைவரிடத்தே கொண்ட ஆனிரை களைப் பலர்க்கும் பகுத்து வழங்குவதைப் பொருளாகக் கொண்ட பாட்டுக்களை இடையே தொடுத்துப் பாடுதல்.
52. முருந்து - மயில் இறகின் அடி.
53. கரந்தை - நிறை மீட்க வந்த பகைவர்.

54. வேய் - வேய் பார்த்தல்: அஃதாவது, பகைவர் செயலை மறைவாக அறிந்து வந்தோர் கூறுவது கேட்டல்.
55. புள் வாய்ப்புச் சொன்ன கணி - புள்ளின் நற்குறி கண்டு சொன்ன கணி கூறுவோன்.
56. கயமலர் - பெரிய பூ.
57. நயன் இல் மொழி - ஈரமில்லாத சொல்.
58. நரை முது தாடி - நரைத்து நீண்ட தாடி.
59. அவிப்பலி - செய்த சூள் பொய்யாதவாறு உயிர்ப்பலியிடுதல்.
60. கடரொடு திரிதரும் முனிவர் - “ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தல் ஆற்றா என்று கருதித் தமது அருளினால், அந்த ஞாயிற்றோடு திரிந்து அவ் வெம்மையைப் பொறுக்கின்ற முனிவர்.”
61. அடல் வலி எயினர் - கொலையையும் வலியையுமுடைய எயினர்.
62. மிடறு உகு குருதி - தமது கழுத்தைத் தாமே அறுத்தலால் சொரியும் குருதி. கொள் - கொள்வாயாக. விறல் - வெற்றி.
63. வயிர் - கொம்பு என்னும் ஊது கருவி.
64. வெடிபட - நிலம் பிளக்கும்படியாக முழங்க.
65. அடி தொடு படு கடன் - திருவடியைத் தொட்டுச் சூள் செய்த கடன்.
66. மடை - பலி உணவு.

67. பலிக் கொடை - கொடுத்த பலியை உண்ணுமாறு வேண்டுதல்.
68. துஞ்சு ஊர் எறிதரும் - உறங்குகின்ற பொழுதில் பகைவர் ஊர்க்குள் நுழைந்து கொலை புரியும்.
69. கண் இல் எயினர் - இரக்கமில்லாத எயினர்.
70. விண்ணோர் . . . செய்குவாய் - விண்ணவர் சாவாமையைத் தரும் அதுமுண்டும் ஒருகால் சாகின்றவராக, உண்டபொழுதே உண்டார் உயிருண்பதால் எத்தகை யோரும் உண்டற்காகாத நஞ்சை உண்டு எக்காலத்தும் அழிவின்றி இருந்து உயிர்கட்கு அருள் செய்குவாய்.
71. பொருள் கொண்டு புண் செயினல்லது - வழிப்போவார் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்க்குத் தம் வாளால் புண்ணைக் கொடுப்பதன்றி.
72. மருதில் நடந்து - ஆயர்பாடியில் மருதமரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்று. மாமன் - கஞ்சன்.
73. வஞ்ச உருளும் சகடம் - வஞ்சனையால் உருண்டோடும் சகடமாய் வந்த அசுரன்.

74. கோள் வல் உளியம் - நேர்பட்டாரைக் கைக்கொள்ளுதல் வல்ல கரடி.
75. வாள் வரி வேங்கை - ஒளியும் நிறமும் பொருந்திய புலி, மறலா - மாறுபட்டுக் கொள்வது இல்லையாம்.
76. சூர் - உயிர்கட்கு வருத்தம் செய்யும் காட்டுத் தெய்வம்; பேயுமாம்.
77. உரும் - இடி.
78. எங்கணும் போகிய இசை - எல்லா நாட்டினும் பரந்து விளங்கும் புகழ்.
    குறிப்பு:- “இவற்றால், தென்னவன் ஆணையும் ஐவகை நிலத்திற்கு உரிமையும் கூறினார். ஐவகை நிலன் என்றது எவற்றாற் பெறுதும் எனின், - கானம் என்பதனால் முல்லையும், சூர், கரடி என்பவற்றால் குறிஞ்சியும், வேங்கை என்பதனால் பாலையும், உருமு என்பதனால் மருதமும், முதலை என்பதனால் நெய்தலும் பெறுதும். இவ் வகையால், இவன் நாட்டு இக் காலத்து வருவது இவ்வெயில் ஒன்றுமே என்பதாயிற்று” - அடியார்க்கு நல்லார்.

79. படுங்கதிர் அமயம் பார்த்திருந்தோர் - ஞாயிறு மறையும் பொழுதையும், திங்கள் எழும் பொழுதையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இவர்களுக்கு.
80. பல் மீன் தானை - பல விண்மீன்களாகிய தானையுடன்.
81. தென்னவன் குலமுதல் செல்வன் - பாண்டியர் குலத்துக்கு முதல்வனான திங்கட்செல்வன். மலையம் - பொதிய மலை.
82. பாவை - நிலமகளாகிய பாவை.

83. மா மலர் நெடுங்கண் மாதவிபோன்று - “காமத் தீயால் துயர முற்று அலரை (ஊரார் தூற்றிப்பேசும் அலரை)ப் பொறாது, அப்பொழுதே வருந்தி நின்ற மாதவியைப் போன்று.”
84. அருந்திறல் வேனிற்கு - “இளவேனில் நீங்க அப்பொழுதே அதற்கு ஆற்றாது பொறுத்தற்கு அரிய வெம்மையையுடைய முதுவேனிற் காலத்து வெயிலால் துயரமுற்று.” அலர் களைந்து - பூக்களைத் தாங்காது உதிர்த்து.
85. சேக்கைப் பள்ளி - பூக்களைச் சொரிந்து அமைத்த படுக்கைப்பள்ளி.
86. வடியாக் கிளவி - குற்றம் திருந்தாத சொற்கள்.
87. குரவர் பணி அன்றியும் - பெற்றோர்க்குச் செய்யும் பணிவிடையைக் கைவிட்டதே அன்றி.
88. குலப்பிறப்பாட்டி - நற்குலத்தில் பிறந்து கற்பை ஆளும் தன்மையுடைய கண்ணகி நல்லாள்.
89. கழிதற்கு என் பிழைப்பு - நீங்குவதற்கு உண்டான குற்றம் என்னை? நெஞ்சம் அறியாது கையறும் என் நெஞ்சம் அதனை அறியாமையால் செயலற்று வருந்துகிறது.

90. கடியல் வேண்டும் - என்னுடைய குற்றமாயினும் திருவுளம் கொள்ளாது அருளவேண்டும்; இதுவேயுமன்றி. இவ்வாறு செல்வது நன்றன்று; ஆதலால். அதனை விலக்கி மீளுதல் வேண்டும்.
91. பொய் தீர் காட்சிப் புரையோய் - குற்றம் தீர்ந்த நல்லறிவு உடைய உயர்ந்தோய். போற்றி - நின்புகழ்க்குக் குறைபாடு நிகழாது காப்பாயாக.
    குறிப்பு:- இருவரது பெற்றோரும், ஏவலாளர் தாம் தேடிக் காணாமையோ பிறிதோ கூறின் இறந்து படுவர் என்றும், ஆகவே, தேசுடைக் குலத்துக்கு மாசு வரும் என்றும், மாதவியாகிய தான் இறந்துபடின் சிறிது புகழே குறைபடு மென்றும் கூறினாளாம்.
92. பெற்றோர்க்கும் பொருந்துமாறு:- அடிகள் திருமுன் வணங்கினேன். குரவர் பணிவிடைகளைத் தவிர்ந்தது ஒரு தவறு; அன்றியும், குலப் பிறப்பாட்டியாகிய கண்ணகியோடு இரவில் நகர் நீங்கி வந்தது ஒரு தவறு; இவை இரண்டாலும் வரக்கூடிய துன்பத்தால் திருவுளத்தில் தளர்ச்சி சிறிது உண்டாயினும் அதனைக் கடிந்தருள்க; இங்ஙனம் என் பிழையாகச் சொல்லிய இவற்றை “ஏறா விண்ணப்ப மாகத் திருவுளம் பற்றாது ஒழிக; பேதைமைச் சொல்லென்றே திருவுளம் பற்றல் வேண்டும்; போற்றி.”
93. மோதகப் புகை - அப்பம் சுடும் புகை.

94. நிவப்பு - சிறப்பு. போலாது - நிகராகாதபடி.
95. திருமலி மூதூர் - செல்வம் மிக்க பழைய வூராகிய மதுரை.
96. தனி நீர் கழியினும் - உம்மைப் போல்பவரே அன்றி வேறுபட்ட தன்மையுடைய ராய் ஒருவர் சென்றாலும். தகைக்குநர் - நில்லென்று தடுப்பார்.
97. மருதப் பறைகொண்டு பாடியாடும் கூத்தர் கிணைப்பொருநர்.
98. துயிலெடைப் பாட்டு - திருப்பள்ளி எழுச்சி பாடுதல்.
99. கவிர் - முருக்கம் பூ.
100. விலங்கு . . . . நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக வோடியும் திரிகின்ற கயல் மீனாகிய நெடிய கண்.
101. அவிர் அறல் கூந்தல் - விளங்குகின்ற கருமணலாகிய கூந்தல்,
102. புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - புலவர் பாடும் புகழ் படைத்த திருமகளை யொப்பவள்.

103. பரிமுக அம்பி - குதிரையின் முகம்போல முகமமைத்த ஓடம்.
104. கரிமுக அம்பி - யானை முகவோடம்.
105. அரிமுகம் - அரிமாவின் முகம்.
106. அருந்துறை இயக்கும் பெருந்துறை - ஓடக் கோல் நிலைக்காத ஆழமுடைய முறையில் செல்வோரைக் கொண்டு செலுத்தும் மக்கள் பலராகச் செல்லும் நீர்த்துறை. அருந்துறையில் பரிமுக அம்பி முதலியன இயக்கும் பெருந்துறை என முடிவு காண்க.
107. மரப்புணை - சிறு துறையில் செலுத்தப்படும் மரத்தோணி. (பரிசில் என்ப).
108. கரு நெடுங் குவளை - கரிய புற இதழையுடைய குவளைப் பூ.
109. தனித்து உறுதுயரம் - தனியாகப் பிரிந்து அடையவிருக்கும் மிக்க துன்பத்தை.
    குறிப்பு:- செவ்வாயும், முல்லை நகையும், கயல் நெடுங்கண்ணும், அறல் கூந்தலும், உடைய பூங்கொடி; வையை என்று பெயர் பெற்ற குலக்கொடி. காலந்தோறும் பொய்க்காது நீர்வளம் சுரப்பதால் வையையாற்றைப் பொய்யாக் குலக்கொடி என்றார்.
110. பண் நீர் வண்டு - பாட்டிசைக்கும் தன்மையையுடைய வண்டு; நோதிறம் என்னும் அவலப் பண்ணைப் பாடும் வண்டு.
111. கண்ணீர், கண் + நீர் - கண்களிடத்துச் சொரியும் நீர்; கள் + நீர் - பூவில் தேனாகிய நீர்.
112. காலுற நடுங்க - காலில் மிதிப்புண்ணும்படி. வீழ; காற்று அலைத்தலால் அசைந்து தாழ. ஆர் எயில் - பகைவர் பற்றுதற்கு அரிய நெடிய மதில்.

113. வாரல் - வாராது ஒழிக.
114. வேய்த்திரள் பந்தர் - கொறுக்கச்சித் தட்டால் சமைக்கப்பட்ட பந்தல். (கொறுக்கச்சி - கொறுக்கந்தட்டு என்றும் கூறுப.)
115. அறம்புரி மாந்தர் - தவம் செய்பவர்.
116. புறம் சிறை - நகர்க்குப் புறத்தே அதனைச் சேர உள்ளதொரு இடம். இதுவே “புறஞ்சேரி” *எனப்பட்டது.

117. நுதல் விழி நாட்டத்து இறையோன் - நெற்றியில் கண்ணையுடைய சிவ பெருமான்.
118. உவணச் சேவல் - கருடப்புள், நியமம் - கோயில்.
119. மேழி வலன் உயர்த்த வெள்ளை - பலதேவன். மேழி - ஈண்டுக் கலப்பையை உணர்த்திற்று. வலன் - வெற்றிக்கொடி. நகரம் - கோயில்.
120. கொடியோன் - முருகன்.
121. மறத்துறை - வீரத்தின் துறைகள்; அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை என இவை.
    அறத்துறை - இல்லறம், துறவறம் என இவை. ஈண்டு அறவோர் என்றது துறவறத்தாரை.

122. மறத்துறை - தீவினை செய்தல்.
123. அறத்துறை - நல்வினை செய்தல்.
    அறத்துறை மாக்கள், மறத்துறை நீங்குமின்; நீங்கீராயின், வல்வினை துன்பத்தை ஊட்டும் என்று சாற்றி என முடிக்க. திறத்தின் சாற்றி - கேட்போர் மனம் கொள்ளும் வகையில் எல்லாம் சொல்லி.
124. நா கடிப்பாக வாய் பறை அறையினும் - வாயைப் பறையாகவும் அதனை அடித்து முழக்கும் குச்சி நாவாகவும் கொண்டு உரைப்பினும்.
125. யாப்பு அறை மாக்கள் - நல்வினையாகிய உறுதித் துணை இல்லாத பேதைகள்.
126. உருத்த காலை - தோன்றித் துன்புறுத்தியபோது.
127. பேதைமை கந்தா - மடமையே பற்றுக்கோடாக.
128. ஒய்யா வினைப் பயன் - போக்கமுடியாத தீவினைப் பயனான துன்பம்.
129. கையாறு - செய்வதறியாது மயங்குதல். கையாறு கொள்ளார் எனவே, இது நாம் நுகரக்கடவதென்று கொள்வர் என்பதாம்.
130. உருவிலாளன் - காமன்.
131. ஒரு தனி வாழ்க்கை உரவோர் - முற்றத் துறந்து தனித்து வாழும் உயர்ந்தோ ராகிய முனிவர்.

132. கொள்ளாத் துன்பம் - அளவு கொள்ளாத துன்பம்.
133. கடவுளர் . . . . உழந்து - முனிவர்களால் நீக்கப்பட்ட காமமே சார்பாகப் பற்றிக் கடும்பற்றுக்கொண்டு துயர்க்கடல் மூழ்கி.
    3.ஏமம் சாரா இடும்பை - கரை காணப்படாத நோய்.
134. இறந்தோர் - கழிந்தவர். மண்ணுலகத்தே யன்றி விண்ணுலகத்தும் இவ்வாறு கழிந்தோர் உளர் என்றற்குப் “பலர்” என்றார்.
135. தொன்று பட வரூஉம் தொன்மைத்து - பழகிப் போந்த முறைமையுடையது.
136. சொல்லலும் நீ - சொல்லுதற்கு வேறு காரணமுண்டாயின் நீயே சொல்; இல்லை என்பது கருத்து.
137. நீ வல்வினையால் ஏவப்படலாலும், இராமனைத் தாதை ஏவுதலாலும், நளனைப் புட்கரன் ஏவுதலாலும். அறியாத் தேயத்து உழத்தலும். சிறுமையுறுதலும் ஒத்தலால் அவரோடு ஒப்பாய் எனினும், அவரைவிட நீ வேறுபட்ட பெரிய நன்மையையு டையை. அவர் தம் காதலியைப் பிரிந்து வாழ்ந்தனர்; நீ பிரியா வாழ்க்கை பெற்றாய்.
    குறிப்பு:- “பிரிதல் துன்பமும்” என்பது முதல் “தொன்மைத்து” என்பது ஈறாகவுள்ள பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மிக அழகிய தொருபொருள் உரைத்துள்ளார்; அதனை முதனூலில் அவர் உரையிற் காண்க.

138. சுருங்கை வீதி -படைகள் மறைந்து செல்லும் வழி.
139. காவலில் சிறந்த - இளங்கோவடிகள் காலத்தும், அவர்க்கு முன்னும் இவ்விடத்தே காவல் தொழிற்கு யவனர்களே பெரிதும் ஆளப்பட்டனர் என்பது தமிழ் நாட்டு வரலாற்று முடிவு. அதனால் அவர் பயிற்சி மிக வுடையராய்ச் சிறந்து இருந்தனர் என்றற்குக் காத்தல் தொழிலில் மேம் பட்ட என்றார். “மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து, வலிபுணர் யாக்கை வன்கண் யவனர், புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில், திருமணி விளக்கம் காட்டித் திண்ஞாண், எழினி வாங்கிய ஈரறைப் பள்ளி” (முல்லை 60 - 4) என வருதல் காண்க.
140. அயிராது - ஐயுறாதபடி.
141. ஆயிரம் கண்ணோன் . . . . செப்பு: இந்திரனது மணிக்கலன்கள் பெய்த அணிகலப் பெட்டி.
142. குடகாற்று - மேற்றிசைக் காற்று.
143. கஞ்சத் தொழில் - வெண்கலத்தால் கலம் முதலியவை செய்தல்.
144. வம்பின் முடிந - அல்லி நார், கற்றாழை நார் முதலிய நார்களைக் கொண்டு செய்தல். வம்பு - கயிறுமாம்.
145. வேதினத் துப்பு - ஈர்வாள் முதலிய படைக் கருவிகள்.
146. கோடு கடைதல் - யானைக்கோடு, சங்கு முதலியவற்றை அறுத்தலும் கடைதலும்.
147. பூவில் புனைதல் - பூவால் மாலை, செண்டு முதலிய தொடுத்தல்.
148. வளம் தலைமயங்கிய - வளங்கள் மிக மலிந்துள்ள. அரசு விழை திரு - அரசரும் கண்டால் விரும்பத்தக்க செல்வம்.

149. வகை:- வயிரமணி, குணத்தால் ஐந்தும், நிறத்தால் நான்குமாகிய வகைப்படும்; மரகதமணி, குணத்தால் எண்வகைப்படும்; மாணிக்கம், பதும முதலாக நால் நகையும், இவ்வாறே புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம் என்ற இவற்றின் பிறப்பு முதல் சிறப்பு ஈறாகவுள்ள பல வேறு வகை.
150. பயம் கெழு வீதி - பயன் பொருந்திய மணி விற்கும் தெரு.
151. பொலம் - பொன் வகை.
152. கலங்கு அஞர் - எப் பொன் எவ்விடத்துக் கிடைக்குமோ என ஐயுற்று வருந்தும்.
153. நூல் - பருத்தி நூல். மயிர் - எலி மயிர், நுழை நூல் - நுண்ணிய நூல்.
154. பால் வகை தெரியா பல் நூறு அடுக்கம் - அவ்வப்பகுதியைத் தெரிந்து எடுத்து, நூறு நூறாகப் பல அடுக்குகளாக அடுக்கி உள்ள.
155. கருங்கறி மூடை - பெரிய மிளகு மூட்டை.
156. கூலம் - எண்வகைக் கூலம். அவை, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பன. இவற்றோடு நெல்முதலாக எட்டு வகைகளைக் கூறி, இரண்டையும் ஈரெண்கூலம் என்றும் சொல்லுவதுண்டு.
157. பால் வேறு தெரிந்த நால் வேறு தெரு - அந்தணர் முதலாக நால் வகை மரபினர் இருக்கும் நால்வகைத் தெரு. ஒவ்வொரு மரபினும் குலவகை பலவுண்டாதலால் “பால்வேறு தெரிந்த” என்றார்.
158. அந்தி - மூன்று தெருக்கள் கூடுமிடம். சதுக்கம் - நான்கு தெருக்கள் கூடுமிடம்.
159. கவலை - முடுக்கு வழி.
160. மறுகு - தேர் செல்லும் தெரு.

161. நரகன் உயிர்க்கு - நரகத்திற்குரிய தீவினையைச் செய்த கீழ் மகன் உடம்பின் பொருட்டு. உயிர் ஈண்டு ஆகுபெயர்.
162. ஈங்கு - என்னிடம். பண்பு – முறை

163. இல்லோர் செம்மல் - இல்லிருந்து வாழ்வோர்க்குத் தலைவன்; வறியவர்க்கு அருளும் தலைவன் என்றுமாம்.
164. உம்மை - முன்னைப் பிறப்பிற் செய்த வினை.
165. திருத்தகு மா மணிக் கொழுந்து - முழு மாணிக்கம் போன்ற கண்ணகி. அவளது இளமை குறித்து, “கொழுந்து” என்றார்.
166. குறுமகன் - கீழ்மகன். “குறுமை ஈண்டுப் பண்பன்று, சிறுமை யென்னும் பொருட்டாய்க் குலத்திற்கு அடையாய், அதன் உயர்பின்மை உணர்த்தி நின்றது” என்பர் அடியார்க்கு நல்லார்.
167. ஐங்கூந்தல் - ஐந்து வகை பெற வகுத்த கூந்தலையுடைய இக் கண்ணகி.
168. கூறை கோட்பட்டு - உடுத்த உடை பிறரால் கவரப்பட்டு.
169. கோட்டு மா - எருமைக் கடா.
170. பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி - பற்றற்றோர் பெறும் பேறு. “பிணிப்பு, பற்று; அஃதாவது அன்பாகிய ஒரு தளை; அதனை அறுத்தோர் அருளுடையோர்; அவர் பெற்றியாவது. சுவர்க்கம் எனக் கொள்க” - அடி. நல்லார்.
171. போதி அறவோன் - புத்தன்.

172. நள்ளிருள் யாமம் - வைகறை யாமம். “நள் நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின்கண் வந்தது; எனவே, வைகறை யாமம் என்பதாயிற்று.” - அடி நல்லார்.
173. பெயர் விளக்கம் - பெயர், குடிப்பிறப்பு, வாணிபப் பரப்பு முதலியன.
174. இயக்கி - சைன சமயத்துத் தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்கும் தொண்டு புரியும் ஒரு தேவதை; கணவன் இருக்கும்போதே துறவு பூண்ட பெண் துறவி என்றும் கூறுவர்.
175. கொடும்பாடு - கொடுமைப்பாடு, ஆப் பயன் - பால், நெய் முதலியன. அளிக்கும் கோவலர் - கன்று அருத்தி மிக்கதனை யாவருக்கும் அளித்து வாழும் கோவலர்.
176. முதுமகள் - யாண்டு முதிர்ந்தவள்.
177. செவ்வியள் - மனத்தில் கோட்டம் இல்லாதவள்; நேர்மையுடையவள். அளியள் - அளிக்கும் தன்மையுடையவள்.
    குறிப்பு:- மாதரியின் முகத்தையும் பார்வையையும் கண்டு கவுந்தியடிகள், அவளது மனப் பண்பை அறியும் திறம் காண்க.
178. தன் குல வாணர் - இவனது குலத்தவரான வணிகர். அரும் பொருள் பெறுநரின் - பெறுதற்கரிய உயர்ந்த பொருள் ஒன்றைப் பெற்றவரைப்போல.
179. கடி மனைப் படுத்துவர் - காவலையுடைய தங்கள் மனையகத்தே வைத்துக் கொள்வார்கள்.

180. உடைப்பெருஞ் செல்வர் - வழி வழியாகச் செல்வம் இடையறாது வந்த பெருஞ் செல்வர்.
181. இடைக்குல மடந்தைக்கு - இடையர் குலத்து மங்கையே! உனக்கு.
182. தூ மடி உடீஇ - தூய மடிப்புடைவை உடுத்து.
183. தொல்லோர் சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்துச் சொல்லப்பட்ட ஆய மகளிர்.
184. கற்புக் கடம் பூண்ட - கற்பையே உயிர்க்கடனாகக்கொண்டு ஒழுகுகின்ற.
185. வானம் - மழை.

186. மிளை - காவற்காடு. கிடங்கு - அகழி.
187. வளை விற் பொறி - வளைந்து தானே அம்பை எய்யும் எந்திர வில்.
188. கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய கருங்குரங்குபோல இருந்து நெருங் கினாரைக் கடிக்கும் பொறி.
189. பரிவுறு வெம் நெய் - காய்ந்து இறைத்தலால் சேர்ந்தாரை வருத்துவதாய நெய்.
190. பாகு அடு குழிசி - செம்பை நீராக உருக்கும் மிடா.
191. காய் பொன் உலை - உருகக் காய்ச்சி எறிவதற்காக அமைந்துள்ள உலைகள்.
192. தூண்டில் - மதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் கருவி.
193. தொடக்கு - கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.
194. ஆண்டலை அடுப்பு - உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி வரிசை.
195. கவை - கவைமுள். கழு - கழுக்கோல்.
196. புதை - அம்புக் கட்டு.
197. புழை - அம்பு செலுத்தும் அறைகள்.
198. ஐயவித் துலாம் - சிற்றம்புகள் வைத்து எறியும் எந்திரம்.
199. கை பெயர் ஊசி - பற்றினார் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறி.
200. சிரல் - கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி.
201. பன்றி - பன்றிப் பொறி.
202. பணை - மூங்கில்போல் இரும்பால் செய்த பொறி.
203. எழுவும் சீப்பும் - கதவுக்கு வலியாக உட்புறத்தே மேலும் கீழுமாக விடப்பட்ட மரங்கள்.
204. கோல் - விட்டேறு.
205. குந்தம் - சவளம் என்னும் கருவி.
206. பிறவாவன, தள்ளிவெட்டி, நூற்றுவரைக் கொல்லி, அரிநூல் முதலியன.
207. ஞாயில் - மதிலின் உறுப்புக்கள்.
208. நாள் கொடி - நாடோறும் வெற்றி குறித்து நாட்டிய கொடி.

209. கோளிப் பாகல் - பலா. கோளி - பூவாது காய்க்கும் மரம். கொழுங்கனித் திரள்காய் - கொழுவிய கனிக்காய்.
210. வாள் வரிக் கொடுங்காய் - வெள்ளரிக்காய்; வாள் - வளைந்த. மாதுளங்காய் கூறினார், புளித்த கறி பண்ணுதற்கு.
211. சாலியரிசி - செந்நெல்லரிசி. பால் பயன் - பாலும் அதன் பயனாகிய தயிரும் நெய்யும், கோல் வளை - நேரிய வளையல்.

212. சுடுமண் மண்டை - மண்கலம். சுடுமண் மண்டை என்றதனால் புதுக்கலம் என்று அறிகின்றோம். “இதனை மண்டை என இழித்துக் கூறினார், முன்னர்ப் பொன் வெள்ள முதலியன வழங்கினாராதலின்” மண்டை - இழிந்த மக்கள் கையாளுவது. இஃது இக் காலத்தும் பனையோலையால் செய்யப்படும் தொன்னைக்குப் பெயராய் வழங்குகின்றது. இத் தொன்னை கூழ் குடிப்பதற்காகச் செய்யப்படுவது. இம் மட்டை, நடுநாட்டில் மடக்கு என்று சொல்லப்படுகிறது.
213. மயக்கு ஒழிப்பனள்போல் - மண்மகள் தங்களுக்கு நேர இருப்பதை அறிந்து மயங்க, அம் மயக்கத்தை ஒழிப்பவளைப் போல.
214. பூவைப் புதுமலர் - காயாம் பூவின் புதிய பூ.
215. தொழுநை - யமுனை.
216. விழுமம் - வேட்கையால் கொண்ட வருத்தம். விளக்கு - விளக்குப் போன்ற நப்பின்னை.
217. திரையல் - வெற்றிலை; அடைக்காய் – பாக்கு

218. பொச்சாப்புண்டு - நல்லறத்தை மறந்து.
219. சிறு முதுக் குறைவி - சிறு வயதிலே பெரிய அறிவைப் பெற்றவள்.
220. வழு எனும் பாரேன் - இவ்வொழுக்கம் பழிப்பாம் என்பது சிறிதும் பார்த்தி லேன். எனும் - சிறிதும். எழுக என எழுந்தாய் - எழுக என்று சொன்னவுடனே மறுக்காமல் ஒருப்பட்டு எழுந்தாய்.
221. அந்தணர் - முனிவர். அறவோர் - இல்லிருந்து நல்லறம் செய்து வாழும் மக்கள். துறவோர் - துறவறத்தில் இருப்பவர்.
222. போற்றா ஒழுக்கம் - கொள்ளாத புறவொழுக்கம்.

223. குடிமுதல் சுற்றம் - தாய் தந்தை முதலியோர்.
224. அடியோர் பாங்கு - செவிலித்தாய் முதலிய தாயர் ஐவர்.
225. பேணிய கற்பு - சான்றோரால் மிகச் சீரிதாக விதந்து விரும்பப் படும் கற்பு. நல்லோர் என்றது மகளிரையுமாம்.
226. நாணின் பாவாய் - நாணம் என்னும் நற்பண்பு மிகவுடைய பாவையே,
227. நீள் நில விளக்கே - நெடிய நிலவுலகத்து மகளிர்க்கு எல்லாம் தலைவியாம் பண்பால் விளங்கி நிற்பவளே.
228. பொற்பின் செல்வி - அழகையுடைய செல்வியே.
229. இமில் ஏறு - உயர்ந்த கொண்டையையுடைய எருது.

230. முடி முதற் கலன்கள் - மணிமுடி, மார்பணி, தோளணி முதலிய அணிகலன்கள்.
231. புரிந்துடன் நோக்கி - ஆர்வத்தோடு பார்த்து; வேலைப்பாடும் விலையும் நோக்காது, களவுப்பழி சுமத்துதற்கு ஏற்ற வகையைப் பார்த்து என்றும் கூறுவர்.
232. யாப்புறவு - பொருத்தம்.
233. பொற்கொல்லன் மனைக்கு அருகே கோயில் இருந்ததனால், ஆங்கே தங்கினான் கோவலன்.
234. காலணி - சிலம்பு. யான் கரந்து கொண்ட காலணி என்னிடத்தே உளது என்பது வெளிப்படா முன்னம் என இயைக்க.
235. புலம் பெயர் புதுவன் - வேறொரு நாட்டிலிருந்து வந்துள்ள இப்புதியவனாகிய கோவலன்.
236. ஆடல் தோற்றம் - ஆடுங்கால் பிறகுக்கும் முகத்தோற்றம், ஆடல் வகை முதலியன.
237. பாடல் பகுதி - வேறு வேறு பாட்டுகள்.
238. பண்ணின் பயங்கள் - யாழிசையின் பயன்கள்.

239. உள் கரந்து - மனத்தே மறைத்து.
240. தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு - தனக்குத் தலைநோய் வந்ததாகத் தன்மேல் தானே இட்டுக்கொண்டு. (பாசாங்கு கொண்டு என்ற படி.)
241. கன்னகம் - கன்னக்கோல்.
242. கவைக்கோல் - சுவரிலுள்ள கற்களைப் பறிக்கும் கருவி.
243. துன்னிய - பயின்ற.
244. மயக்கு துயில் - உணர்வு அறவே ஒழிந்த தூக்கம்.
245. சில்லைச் சிறுகுடில் - இழிந்த சிறுகுடிசை. விற்க வந்து அகப்பட்டான் என்பது தோன்ற என் “சிறுகுடில் அகத்திருந்தான்” என்றான்.
246. சினையலர் வேம்பன் - கொம்பிடத்தே அலர்ந்த வேப்பமாலையை உடைய பாண்டியன்.
247. கன்றிய கள்வன் - நன்கு பயின்ற திருடன்.

248. இலக்கண முறைமையின் இருந்தோன் கொலைப்படு மகன் அலன் - இங்கே இருந்த இவன் இலக்கணத்தாலும் (மெய் வடிவாலும்) முறைமை யாலும் கள்வனென்று சொல்லப்படுவானுமல்லன்; கொல்லப்படுவானு மல்லன்.
249. இழுக்குடை மரபின் கட்டு உண்மாக்கள் - பொல்லா ஒழுக்கத்தினால் களவு செய்து வாழும் மக்கள். கட்டு - களவுசெய்து.
    குறிப்பு:- “இனி என் கோதை தன் காற்சிலம்பு கள்வன் கையதாயின் கொன்று கொணர்க எனினும் தன்கண் கொடுங்கோன்மை இன்மை யுணர்க” என்றொரு நயம் காட்டுவர்அடியார்க்குநல்லார்.
250. இந்திர குமரர் - தேவர் மக்கள். இந்திரர் - தேவர்.
251. தெளிகுவராயின் - மனத்தே தெளிந்து நினைப்பாராயின்.
252. இருந்தோம் - இருந்த நாம். பெயருமிடம் - புடை பெயருமிடம்.

253. யாவதும் புகற்கிலர் - எளியவிடத்திலும் விரும்பிச் செல்லுவதிலர்.
254. தந்திர கரணம் - களவு நூலில் கூறப்படும் தொழில்கள்.
255. எய்துவர் - எண்ணியவாறே பெறுவர்.
256. மேலோர்- வினை செயல் வகையில் மிக மேம்பட்டோர்.
257. கருவி - கன்னகம், கவைக்கோல், கப்பணம் முதலியன.
258. கரவிடம் - களிவன் வகை. ஒருசொல்; கரவு இடம் எனக் கொள்ளின், “இக்களவு நூலை நாம் கேட்பின் ஒடி ஒளிக்கலாம் இடம் இல்லை என்றுமாம்.”
259. உறுபடையீர் - மிக்க வாட்படையை உடையவர்களே.
260. உடன் பரப்ப - எங்கும் பரவ.
261. வான் துயர் கூர - மிக்க துயரத்தை அடைய.

262. வளைஇய - வளைய.
263. காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.

ஆயர் மகளிர் குரவைக்கூத்து அயரும் பகுதி. ஆய்ச்சியர் குரவை எனப் பெயர் பெற்றது. குரவை என்பது எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கை கோத்தாடும் கூத்து. இங்கே எழுவர் கைகோத்து ஆடுகின்றனர். இப் பகுதியும் கூத்தாற் பெற்ற பெயர் பெற்றது; ஆதலால்தான் அடியார்க்கு நல்லாரும் “இது கூத்தாற் பெற்ற பெயர்” என்றார்.
1. கொளு - குரவைக்கூத்து ஆடுவோரது கருத்து. இக் கருத்து எழுவதற்கு வேண்டிய ஏது நிகழ்ச்சி கூறுவது கருப்பம் எனப்படும்.
2. குவி இமில் ஏறு - குவிந்த கொண்டையையுடைய எருது.
3. மறி - கன்று.
4. தம்முன் - முன்பிறந்தோனான பலதேவன்.

1.  எடுத்துக்காட்டு - கொல்லேறுகளையும், மகளிரையும் காட்டி, இவ் வேறுகளுள் இதனைத் தழுவினவனுக்கு, இம் மகளிருள் இவள் உரியளாவள் என்று எடுத்து மொழிதல். இது சுட்டிக் கூறலும் சுட்டாது மொழிதலும் என இருவகைப்படும் சுட்டு. “கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும், புல்லாளே ஆய மகள்” (கலி. 103) என்பது போல்வன சுட்டாது வருவன.
2.  நெற்றிச் செகில் - நெற்றியொழிந்த செகில். செகில் - சிவந்த சுட்டி. நெற்றி யொழிந்த ஏனை உடற்பகுதி சிவந்திருக்கும் எருதுகளை இக் காலத்தில் செகில் என்று வழங்குகின்றனர்; சில நாடுகளில் இச் சொல் “செகிலை மாடு, செவலை மாடு, செவல் மாடு” எனச் சிதைந்தும் வழங்குகிறது.
3.  நுண்பொறி வெள்ளை - நுண்ணிய வெள்ளைப் புள்ளிகளையுடைய எருது.
4.  கொன்றையம் பூங்குழல் - கொன்றைப் பழம் போலும் கூந்தல்.
5.  பெயரீடு - கூத்தாடற்கு நின்ற மகளிர் எழுவருக்கும் பாடும் பாட்டிற் கேற்ப இசையால் பெயர் இடுதல்.

6.  கூத்துள் படுதல் - கூத்துத் தொடங்கி ஆடலுறுதல்.
7.  குருந்து - குருந்த மரம்.
8.  முல்லைத் தீம் பாணி - முல்லையாகிய இனிய பண்.
9.  குணில் - குறுந்தடி, மரப்புள்ளு,
10. கொன்றையம் தீங்குழல் - ஒருவகை ஊது கருவி.
11. முல்லையம் தீங் குழல் - இதுவுமது.
12. தொழுனை - யமுனை யாறு.
13. என்கோ யாம் - என்று புகழக் கடவேமோ யாம்.

14. கலை - புடைவை.
15. கையில் ஒளித்தாள் முகம் - இரு கையையும் விரித்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.
16. மையல் - வேட்கையால் எய்தும் மயக்கம்.
17. ஒன்றன் பகுதி - ஒற்றைத் தாளத்திற் பாடும் பகுதி.
18. கதிர் - ஞாயிறு. திகிரி - ஆழிப்படை.
19. மதி புரையும் மேனி - திங்களைப்போல வெண்ணிறமுடைய உடம்பு. தம்முனோன் - பலதேவன்.
20. பொதி - அரும்பு. பின்னை சீர் புறம் காப்பார் - பின்னையின் தாளத்தை ஒற்றறுத்துத் துணையாகப் பாடுவது குறித்து.
21. முதுமுறை - பழைய மறை. முந்தை முறை நரம்பு - முதல் நரம்பைப் பின்னையின் ஒற்றைத் தாளப் பண்ணுக்குத் துணையாக நாரதர் நரம்பிசைக்கின்றார் என்பதாம்.
22. ஆடுநர்ப் புகழ்தல் - கூத்தாடுபவரைப் புகழ்தல்.
23. தம் முன்னினொடும் - பலதேவனோடும்.
24. புறம் சோர - முதுகிலே கிடந்தசைய.
25. தாது எரு மன்றம் - நுண்ணிய புழுதி படிந்த மன்றம்.

26. உள் வரிப் பாணி - உள்வரிப் பாட்டு. உள் வரி யாடுவோர் பிறிதோர் உருவம் கொண்டும் கொள்ளாதும் ஆடுவர்; ஈண்டு இவ் வாயர் மகளிர் வேறுருவம் கொள்ளாது நின்றே ஆடி மாயவனை வாழ்த்துகின்ற பாட்டு.
27. உள்வரி வாழ்த்து - “உள்வரிப்பாணி” என்றவிடத்துக் கூறினாம்.
28. கோவா மலையாரம் - பொதியில் மலையிடத்துப் பெற்ற கோக்கலாகாத சந்தனம் ஆரம் - சந்தனம்.
29. கோத்த கடல் ஆரம் - கோக்கக்கூடிய கடலிற் பெற்ற முத்து.
30. செழுந்துவரை - வளம் மிக்க துவரை நகர்.
31. கோகுலம் - ஆநிரை.
32. இமயக் கோடு - இமயவரையின் உச்சி.
33. முந்நீர் - கடல். மண்ணைப் படைத்தலும், அழித்தலும், காத்தலும் செய்யும் கடற்கு ஆகுபெயர்.
34. மூவாக் கடம்பு வஞ்சத்தால் நிற்கின்றதாகலின், மூத்தலின்றி ஒருநாள்போல நின்ற கடம்பு:
35. வளவஞ்சி - வளம் மிகுந்த வஞ்சிமா நகர்.

36. கல்நவில் தோள் - மலையென்று சொல்லப்பட்ட தோள்.
37. முன்னிலைப் பரவல் - மேல் உள்வரிவாழ்த்தில் மாயவனைத் தமிழ் வேந்தரோடு இயைபு படுத்திப் படர்க்கையில் வைத்து வாழ்த்தி, இனி அம் மாயவனை முன்னிலைப்படுத்திப் பரவுவது.
38. வடவரை - மேருமலை.
39. மலர்க்கமல உந்தி - தாமரைப் பூப்போலும் கொப்பூழ்.
40. இருள் - துன்பமாகிய இருள்.
    குறிப்பு:- இவ்வுள்வரி வாழ்த்தினுள், “சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னையெனின், இது மதுரைக்காண்ட மாதலானும், இக் காப்பியம் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனியாதலானும், முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது எனச் சாத்தர் கூறினமையானும் என்க” என்பர் அடியார்க்கு நல்லார்.
41. மடங்கலாய் மாறு அட்டாய் - நரசிங்கமாய் மாறுபட்ட இரணியனைக் கொன்றவனே.

42. முi9 ற நிரம்பாவகை - ஒர் அடி குறைபடும்படியாக. 2. சேப்ப - சிவக்க.
43. சோ அரண் - வாணனது சோ என்னும் அரண். 4. கட்டு - காவல்.
44. மடம் தாழும் - அறிவின்மை பொருந்திய, அறிவின்மை தனக்கே யுரிய இடமாகத் தங்கிய.
45. படர்ந்து - பின்னே தொடர்ந்து. 7. கோத்த குரவை - தொடுத்த குரவைக் கூத்து.
46. ஆதலைப்பட்ட துயர் - ஆனிரைகளைப்பற்றிய பிணி.
47. வேந்தர் மருள - பகையரசர் அறிவு மயங்க. வைகல் வைகல் - நாடோறும்.
48. இடிப்படை வானவன் - இடியைப் படையாகவுடைய இந்திரன்.
49. தொடித்தோள் தென்னவன் - தொடியணிந்த தோளையுடைய பாண்டியன்.

50. எல்லா - ஏடீ தோழி. ஓ - இரக்கக் குறிப்பு.
51. நோய் கைம்மிகும் - நோய் மிகுகின்றது.
52. ஊதுலை தோற்க - கொல்லன் உலையில் ஊதும் துருத்தியும் தோற்கும்படி.
53. ஏதிலார் - இந்த ஆய்ச்சியர். சொன்னவளையும் கேட்கின்ற ஏனை ஆய்ச்சியரையும் ஏதிலார் என்கின்றாள். நெஞ்சு கலங்கி, நோய் கைம்மிகும்; உயிர்க்கும் என்று முடிக்க.
54. தஞ்சமோ - எளிதன்று. தோழி என்றது ஐயையை.
55. எஞ்சலார் - அயலார்.

56. ஞெகிழம் - சிலம்பு.
57. கரையாமல் - சிறிதும் வருத்தமின்றி; ஒசை செய்யாமல் வாங்கிய - தனதாக்கிக் கொண்ட.
58. குரைகழல் மாக்கள் - ஒலிக்கும் வீரக்கழலையுடைய படை வீரர்.
59. கொலை குறித்தனர் - கொலை செய்யக் குறித்துவிட்டார்கள். கொன்றார்கள் எனின் இவளுயிர்க்கு இறுதி பயக்கும் என்று கருதி இவ்வாறு கூறினாள்.
60. முகத்திற்கும் குலைந்த கூந்தலுக்கும் திங்களும் முகிலும் உவமை. சேண்நிலம் - பெரிய நிலம்.
61. கேள்வனை - கொழுநனை.
62. எங்கணா - எவ்விடத்தில் உள்ளாய்.
63. மாழ்குவாள் - மயங்குபவள்.
64. இடர் எரி - துன்பத்தைச் செய்யும் தீ.
    துன்புறுவன - கைம்பெண்கள் மேற்கொள்ளும் நோன்புகள்; பழைய சோறு, எட்சாந்து, புளிச்சோறு, வேளைக்கீரை இவை உணவாக. பரல்கள் பரப்பிப் பாய் இன்றித் துயில்வது முதலாயின.
65. மன்பதை - நன்மக்கள்.
66. அவலம் – துன்பம்

67. கைம்மை - கைம்பெண்கட்குரிய நோன்புகள்.
68. கவலைய மகளிர் - கவலையையுடைய மகளிர்.
69. செம்மை - நடுவுநிலைமை.
70. இசையொரீஇ - நல்ல பெயர் (புகழ்) நீங்கி, இம்மையும் - இப்பிறப்பின் கண்ணும்; இசையொரீஇ எனவே வசைபெற்று அஃதாவது கள்வன் மனைவி என்றும், கைம்பெண் என்றும் இப்பெயர் படைத்து.
71. பரந்த கடலை எல்லையாகவுடைய உலகில் உண்டான பொருள் எல்லாம்.
72. காய்கதிர்ச் செல்வன் - ஞாயிறே.
73. ஒள் எரி - நின் ஏவல் கேட்கும் எரி. இது சொன்ன ஊர்.

ஊர் சூழ்வரி - இதன் கண் வரும் வரி, கூத்தன்று; இசைத்தமிழ் வகையிற் கூறப்படும் வரிப்பாட்டு.
1. ஈது ஒன்று - இது அதன் இணைச்சிலம்பு.
2. உறாதது - இன்னும் எய்தாத சாவு நோய்.
3. கொன்றாரே - கொன்றாரே எனப் பன்மையால் கூறினாள், அரசனோடு அமைச்சரையும் கருதி. ஈண்டு உரைகாரர் ஏகாரத்தின் இசையாற்றலால் (தொனி) பொருள் கூறும் திறம் உணர்க.
“என்காற் சிலம்பு என்றாள்: தான் அரசன், யான் ஒரு வணிகன் மனைவி, என் காலணியின் ஒன்று பெற்ற விலை தராமல் கள்வன் என்று ஒரு பெயரிட்டுக் கொன்றார்களே, இஃதோர் அநியாயம், காண்மின்” - அடி. நல்லார்.

1.  களையாத - நீங்காத.
2.  மதிக்குடை - திங்கள் போன்ற வெண்குடை.
3.  கொற்றம் - வெற்றி.
4.  வம்பப் பெருந்தெய்வம் - புதுமையையுடைய பெரிய தெய்வம்; கற்புக்கடவுள்.
    “ஒன்று கையேந்தி” என்றது. இஃது அதன் இணைபோலும் என்பது கருத்து.
5.  ஐ அரி உண் கண் - வியப்புண்டாகுமாறு செவ்வரி பரந்தமையுண்ட கண்ணை யுடைய இவள்.
6.  தகையள் - தகைமையுடையவள்.

7.  இவள் இடர் உறும் - இவள் துன்ப முறுவாள். என்னீர் - என்று நினைக்கின்றிலீர்.
8.  பொன்னுறுமேனி - பொன்போன்ற மேனி.
9.  பொடி ஆடி - புழுதிபடிந்து.
10. மன்உறு - மன்னனால் செய்யப்பட்ட.
11. மறவினை - கொலைச் செயல்.
12. இது காணா என் உறுவினை என உரையாரோ - யான் எய்தும் இத் துயரைக்கண்டு இதுயான் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன் என்று சொல்லமாட்டார்களோ.
13. தார்மலி மணிபார்பம் - மாலையணிந்த அழகிய மார்பு.
14. ஈர்வதோர் வினை - வெட்டுவிப்பதொரு தீவினை.
15. கன்றியது - கசங்கி வாடியது.

16. மருட்டியது - மயக்கியது; இரு துண்டாகிய உடல்கூடி உயிர்பெற்றது பற்றி “தெய்வம் கொல்” என்கின்றாள்.
17. பொருளுரையோ அன்று - தன் பின் வா என்று சொல்லாமையால் பொருளாகக் கொள்ளக்கூடிய உரையன்று என்றபடி.
18. காய் சினம் - மிக்க சினம்.
19. தீ வேந்தன் - கொடிய வேந்தன்.

20. ஆடி - கண்ணாடி.
21. அவிர்ந்து - ஒளிவிட்டு.
22. கோடி - துகில்.
23. கொழுந் திரையல் - வெற்றிலைச் சுருள். செப்பு - தட்டு.
24. வண்ணம் - வண்ணப் பொடி (மஞ்சட் பொடி)
25. மான்மதம் - கத்தூரி.
26. பிணையல் - பூமாலை.

27. அரிமான் ஏந்திய அமளி - அரியாசனம்.
28. திருவீழ் மார்பின் தென்னவர் - திருமகள் விரும்புகின்ற மார்பினையுடைய பாண்டியர்.
29. அறிவு அறைபோகிய - அறிவு கீழற்றுப்போன.
30. பொறிஅறு - நல்வினையில்லாத.
31. இறை முறை - அரசுமுறை.
32. இணையரிச் சிலம்பு - இரண்டாகிய அரியிட்ட சிலம்புகளுள். இணையரி - இணைத்த அரிகளையிட்ட சிலம்பு என்றுமாம்.
33. தென்னம் பொருப்பு - தெற்கில் உள்ள மலை; பொதியில் மலை.
34. பஞ்சவ - பாண்டியனே.
35. செற்றனள்-முகக் கோட்டம் உடையள். செயிர்த்தனள்-மனத்தே சினம் உடையவள்;
    “செற்றனள் போலும் செயிர்த்தளள் போலும் - மாற்சரிய முடையாள் போலும்; மிக்க கோபமுடையாள் போலும் என்றுமாம்.” - பழையவுரை.

36. கடையகத்தாள் - வாயிற் கடையில் வந்துள்ளாள்.
37. நீர்வார் கண்ணை - நீர் சொரியும் கண்களையுடையாய்.
38. மடக் கொடியோய் - இளைய கொடிபோல்பவளே,
39. தேரா மன்னா - மெய்ம்மையை ஆராயாத மன்னனே.
40. எள் அறு சிறப்பு - குற்றமற்ற சிறப்பு.
41. புள் - புறா. புன்கண்தீர்த்தோன் - துன்பத்தைத் தீர்த்த சிபி மன்னன்.
42. ஆவின் கடைமணி - பசுவின் கண்ணின் மணிக்கடை.
43. ஆழியில் மடித்தோன் - தேராழியின் கீழ்ப்படுத்திக் கொன்று நீதி செய்த மனுவேந்தன்.
44. பெரும் பெயர்ப் புகார் - மிக்க சிறப்பினையுடைய புகார். என்பதி - எனக்குப் பதி.
45. ஏசாச் சிறப்பு - வசையில்லாத புகழ்.
46. ஊழ்வினை துரப்ப - முன்செய்துள்ள ஊழ்வினை செலுத்த.
47. பகர்தல் வேண்டி - விற்றல்வேண்டி வந்து.

48. கோறல் - கொல்லுதல்.
49. வெள்வேல் கொற்றம் - வெள்ளிய வேலேந்தும் அரசரது நீதி முறை.
50. நல்திறம் படரா - நல்ல நீதியின் பக்கத்தில செல்லாத; நல்ல நீதியின் பகுதியை நினையாத என்றுமாம்.
51. செவ்வை நன்மொழி - செவ்விய நல்ல சொல்லாகும்.
52. யாம் உடைச் சிலம்பு - எம்முடைய சிலம்பு. முத்துடை அரி - முத்துக்களைப் பரலாக உடையது.
53. மன்பதை - மக்கள். தென்புலம் - தமிழ்நாடு.

54. என் முதல் - என்னைத் தொடங்கி.
55. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் - தந்தை தாய் முதலாயினாரை இழந்தோர்க்குப் பிறர்தம்மைத் தந்தையென்றோ தாய் என்றோ சொல்லித் தேற்றலாம்; கணவனை இழந்தோர்க்கு அவ்வாறு கூறலாகாது; அதனால் காட்டுவது யாதும் இல்லை என்பதாம்.

56. கொடுவினையாட்டியேன் - தீவினையால் ஆளப்படுவேனாகிய யான் (கண்ணகி).
57. முற்பகல் செய்தான் பிறன் கேடு - முற்பகலில் பிறனுக்குக் கேடு செய்தவன். காண்குறூஉம் பெற்றிய - காணலுறும் தன்மையுடையன.
58. மட்டு ஆர் குழலார் - பூவின் தேன் பொருந்திய கூந்தலையுடைய மகளிர்.
59. பட்டாங்கு - உண்மையாக.
60. ஒட்டேன் - இனிதிருக்க இசையேன்.
61. பட்டிமை - படிறு; அடங்காச் செயல்.
62. நான்மாடக் கூடல் - மதுரை; கன்னி, கரியமால், ஈசன், காளி என்ற நால்வரும் காக்கும் கடிமதில் சூழ்ந்த மதுரை.
63. கேட்டீமின் - கேள்மின்.

64. யான் அமர் காதலன் - யான் விரும்பும் கணவன்.
65. மாணப் பிழைத்த நாள் - திண்ணிதாகப் பிழைசெய்து துன்புறுவித்த காலத்து.
66. ஏவல் உடையேன் - கட்டளை உடையேனாதலால்.
67. அறவோர் - துறவுபூண்டவர்.
68. தீத்திறத்தார் - தீவினைப் பகுதிகளைச் செய்வோர்.
69. நல்தேரான் - நல்ல தேர்ப் படையையுடைய பாண்டியன்.

70. பெருங்கணி - கணித விவர்த்தகன்.
71. அறக்களத்து அந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள்; நீதி மன்றத் தலைவர்கள்.
72. காவிதி - வரியிலார்.
73. மந்திரக் கணக்கர் - அரசனது ஆராய்ச்சிக் களத்து ஓலை எழுதுபவர்.
74. கோயில்மாக்கள் - அரசன் கோயிலில் இருக்கும் அரச சுற்றத்தினர்.
75. குறுந்தொடி மகளிர் - அரசனுடைய உரிமை மகளிர்.
76. காழோர் - யானையைச் செலுத்தும் பரிக்கோற்காரர்.
77. வாதுவர் - குதிரைப்பாகர்.
78. நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் - நாவின் நவின்ற நூலினன்; மார்பில் நவின்ற நூலினன். நாவின் நவின்ற நூல் - நாவால் மொழிந்த நூல்; மார்பில் நவின்ற நூல் - பூQ ல்.

79. வேத முதல்வன் - பிரமன், வேள்விக்கருவி - சுருக்கு, சுருவம், சமிதை முதலியன.
80. மண்ணகம் கொண்டு - மண்ணுலகத்தை வென்றுகொண்டு.
81. கொற்றம் - தீவினை கடிந்து நல்வினையாற்றிப் பெறும் வெற்றிச் சிறப்பு.
82. வாய்ந்து உறை துலாம் - பொருளை நிறுப்பதற்கு முன்னும் பின்னும் சமம் அமைந்து நிற்கும் துலாக்கோல்.
83. முன் சூழ் ஒளித் தால் - நிறுக்கும் பொருளின் சமநிலையை முன் அறிதற்கு நேர் நின்று விளக்கும் துலாத்தின் நாக்கு.
84. பதம் - உணவுப்பொருள்.
85. அரும்பலம் - பெறுதற்கரிய உயரிய பொருள்கள்.
86. கிளர் ஒளிச் சென்னி - விளங்குகின்ற ஒளிபொருந்திய சடையை யுடைய தலை. இறையவன் - சிவன்.
87. ஆடற்கு அமைந்த அவை - கூத்துக்களையாடற்கு வேண்டும் வாச்சியங்கள்.
88. பல துறை - பண்ணும் திறமும்.

89. பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு - சிலப். ஊர்காண் காதை காண்க.
90. உரக்குரங்கு - வலிய குரங்கின் உருவெழுதிய கொடி. உரவோன் - அருச்சுனன்.
91. கா - காண்டாவனம்.
92. அழல்கொடி விடாது - அழற்கொழுந்து செல்லாது.
93. மறவோர் - தீவினையாளர்.
94. அறவை யாயர் - அறத்தையுடைய ஆயர். அறவை x மறவை. கானல் வரி காண்க
95. இறைவன் - கணவன்.
96. தேரா மன்னனை - உண்மை யறியானாகிய பாண்டியனை.

97. ஆர் அஞர் எவ்வம் - பொறுத்தற்கரிதாகிய மிக்க துன்பம்.
98. கட்டுரையாட்டியேன் - சொல்லொன்று சொல்லுதலை யுடையேன்.
99. கணவற்குப்பட்ட கவற்சியேன் - கணவனுக்கு நேர்ந்தது கண்டு வருந்தும் மனக்கவலை யுடையேன்.
100. மறைநா ஓசை - மறையோதுவார் நாவில் எழும் மறையோசை.
101. யாவதும் - ஒருபோதும்.
102. இறைஞ்சா மன்னர் - பகை மன்னர்.

103. முறை நிலை திரிந்த - அரசுமுறை நடுநிலை திரிந்த.
104. தங்கால் - வார்த்திகன் வாழ்ந்த ஊர்.
105. மடங்கா விளையுள் வயலூர் - குன்றாத விளைநிலத்தையுடைய வயலூர் என்னும் ஊர்.
106. இருநில மடந்தைக்கு ….. நல்கி - நிலத்தில் மார்புற வீழ்ந்து வணங்கி. நிலமகளை அரசர்க்கு மனைவியாகக் கூறல் கவிமரபாதலின், ஈண்டுப் பாண்டியன் நிலத்தில் வீழ்ந்து வணங்குவதை, நிலமகளின் வேட்கை தணிய அவளுக்கு அவன் தன் விரிந்த மார்பு தந்ததாகக் கூறுகின்றார்.
107. அழல்சேர் குட்டம் - கார்த்திகை பரணி.
108. உரை - சோதிடமொழி.
109. நிரைதொடியோய் - வரிசையுற அணிந்த வளைகளையுடையாய்.

110. தம்முறு துயரம் இற்று - தமக்கு உண்டாகும் துன்பமும் இத் தன்மைத்தாகுக.
111. விழுவோள் - உயிர்விட்டு விழுபவள்.
112. வீடு - தணிப்பு.
113. வறியேன் - கணவனையின்றித் தனித்துள்ள யான்.
114. அவல - பள்ளங்கள். அவலித்து - அவலமுற்று.
115. மிசைய - மேடுகள். என்னாள் - என்று கருதிலள்.

116. நெடுவேள் குன்றம் - திருச்செங்கோடு.
117. “அடிவைத்து ஏறி என்றார், அதற்கு முன்பு வருத்தத்தால் கால் நிலத்துப் பாவாமையால்.”
118. பூத்த வேங்கைப் போங்கர் - பூத்துத் தழைத்த வேங்கை மரத்தின் கீழ்.
119. தீத்தொழிலாட்டியேன் - தீத்தொழிலைச் செய்பவள்; தீயை நகர்க்கு வைத்து வருபவள்.
120. பீடு - பெருமை.
121. வாடா மாமலர் - வானவர் சொரிந்த வானுலகத்துப் பூ வாடுவ தில்லையாதலால், அவர் சொரிந்த பூவை “வாடா மாமலர்” என்றார்.
122. அமரர்க்கு அரசன் - இந்திரன்.
123. கோநகர் பிழைத்த கோவலன் - மதுரை நகர்க்கண் தீதாகக் கொலையுற்றுத் தன்னை நீங்கிய கோவலனுடன்.
124. கண்ணகி விருந்தானாள்; அதனால் தெய்வம் தொழுகை திண்ணிது என்க.

125. நெடுவேள் குன்றம் - சேரநாட்டு மலைப்பகுதிகளுள் ஒன்று; இதனைத் திருச்செங்கோடு என்று கருதுவாரும் உண்டு.
126. குருவி யோப்பி - குருவிகளை யோட்டி.
127. சுனை குடைந்தும் - சுனைநீரில் மூழ்கி விளையாடியும்.
128. முருகவேள் மனையாட்டியாகிய வள்ளி நாய்ச்சியார்.
129. தெய்வம் கொள்ள - தெய்வமாகப் பண்ணிக்கொண்டு பரவ.

130. தொண்டகம் - ஒருவகைத் துடி.
131. சிறுபறை - குறிஞ்சி நிலத்துப் பறைகளுள் ஒன்று. தொண்டகச் சிறுபறை என்று கூறலும் உண்டு (முருகு 197).
132. கோடு - கடமாக கொம்பு; ஊது கொம்புமாம். வாய்வைம்மின் - வாயில் வைத்து ஊதுமின்.
133. கொடுமணி - ஓசை கடிதான மணி.
134. குறிஞ்சி - குறிஞ்சிப்பண்.
135. காப்புக்கடை நிறுமின். காப்பு - சுற்றுமதில்; கடை - வாயில். காப்பும் கடையும் செய்ம்மின் என்பதாம். பரவலும் பரவுமின் - இனிய பாட்டுககளைச் சொல்லிப் பணிமின்.
136. துஞ்சாது. குன்றாது.
137. அஞ்சனப்பூழி - அஞ்சனத்துக்கு வேண்டும் பொருள்களின் தூள்; வேங்கைமரத்தின் தூள்; வரகின் நொய்; தினை நுறுங்கு முதலியன. இடியல் - இடித்த மா.
138. சிந்துரச் சுண்ணம் - சிந்துரத்தால் செய்த சுண்ணப்பொடி.

139. இந்திரவில் - வானவில்.
140. அஞ்சல் ஓம்பு . அஞ்சுதலை நீக்கு.
141. மஞ்சு - மேகம்.
142. போது ஆடி - பூக்களைச் சுமந்துகொண்டு.
143. மற்றையார்மீது ஆடின் - தன்னை யொழியத் தனக்கு முற்பட ஆடினவர்மீது தோயுமானால்.
144. உண்கண் - மைதீட்டிய கண்.
145. புரைதீர் புனல் - குற்றமில்லாத, கலக்கமின்றித் தெளிந்த நீர்.
146. உரவு நீர் - பரந்த நீர் மிக்க கடல். மா - சூரபன்மா; அவனுக்குத் துணையாய் இருந்த மாமரமுமாம்.
147. குரவை தொடுத்து - குரவைக் கூத்தாடி.

148. செங்கோடு - திருச்செங்கோடு.
149. வெண்குன்று - சுவாமிமலை.
150. இறைவன் - முருகன்.
151. பார்இரும் பௌவம் - பாராகிய நிலத்தைச் சூழ்ந்த கரிய கடல்.
152. சுடர் இலைய வெள்வேல் - ஒளிர்கின்ற இலைபோலும் முகத்தை யுடைய வெள்ளிய வேல்.
153. இறைவளை - சந்து பொருந்திய வளை.
154. கறி - மிளகுக் கொடி.
155. அலர் கடம்பன் - கடப்ப மாலையையுடைய முருகன்.
156. வெறியாடல் - இப்பெண்ணுக்கு இவ்வேறுபாடு முருகனால் நேர்ந்த தென்று, அது நீங்குவதற்காக அவனுக்கு அவனது வேலையேந்தி யாடும் வேலனைக் கொண்டு பரவுக்கடன் செய்தல்.
157. வெறி - நறியமணம்.
158. ஆலமர் செல்வன் - சிவன்.

159. வெம் களம் - கண்டார்க்கு அச்சம் பிறப்பிக்கும் இடம். “முரணினர் உட்க முருகாற்றுப்படுத்த” உருகெழு வியன் களம் ஆதலால், “வெங்களத்தில்” என்றாள்.
160. நீலப்பறவை - மயில்.
161. மால்வரை - பெரியமலை; திருமால் போல் நீண்டு உயர்ந்த கரிய மலை.
162. மலையர்தம் மகள் - மலைவாணரான குறவர்தம் மகள் (வள்ளி)
163. செயலை - அசோகு.
164. அயல் மணம் ஒழி - பிறர் (ஏதிலார்) மணந்து கொள்ளாதவாறு தவிர்க.
165. மறைநின்று - சிறைப்புறமாக மறைந்து நின்று.
166. மன்றல் - நறுமணம்.
167. கடம்பு - கடம்பு மாலை. உடம்பிடி - வேல்,
168. செறிதோள் - பன்னிரண்டாய்ச் செறிந்த தோள்.
169. கடம்பூண் தெய்வம் - பரவுக் கடனை ஏற்றும் குலதெய்வம்.
170. மடவர் - மடமையுடையர்; அறியாதவர்.

171. அலர்பாடு - ஊராரால் அலர் கூறப்படுதல்.
172. புலர்வாடு நெஞ்சம் - புலர்ந்து வாட்டமுறும் நெஞ்சம்; புலர்வாடும் என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு புலரும் நெஞ்சம் என்றும் கூறுப.
173. புறங்கொடுத்துப் போன - தன் பின்னே கிடக்கச் சென்ற.
174. கோள் இழைத்தாள் - தீயூட்டித் தீத்திறத்தாரை இறப்பித்தாள்.
175. வானோர் தமராரும் கூடி - வானோராய தமர் எல்லாரும் கூடி. நிலை - தன்மை.
176. கோமுறை - அரசு முறை.
177. தீ முறை செய்தாள் - தீ யூட்டித் தவறிய அரசு முறையை நேர்மையில் நிறுத்தினாள்.
178. பாடு உற்று - பெருமையுற்று.
179. வானக வாழ்க்கை - வானுலகத்தில் வாழும் வாழ்க்கை.
180. மறுதரவோ இல்லாள் - வானக வாழ்க்கை பெற்றாளாதலால். இனி, இம் மண்ணுலகில் வாழ்தற்கு மீண்டு வருவதிலள்; மீட்டும் பிறவாள் என்றபடி.

181. இவ்வூரும் ஒர் பெற்றி - இவ்வூரும் ஒரு விரதம் பெறுக.
182. பொன் தொடி மாதர் - பொன்னால் ஆகிய வளையணிந்த பெண் என்றது தலைமகளை. தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியுடன் நட்புற்று, விரைய வரைந்து (மணந்து) கொள்ளாமல் களவு ஒழுக்கத்தை நீட்டித்து வந்தான்; அதனால் தோழி அவன் தெருண்டு வரைவது குறித்துப் பல் வேறு வகையால் களவினால் வரும் ஏதத்தை வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அறிவுறுத்தும் குறிப்பால், இங்கே காட்டியவாறெல்லாம் தலைவி யொடும் ஏனை ஆயத்தாரோடும் கூடியாடிப் பாடுகின்றாள்.
183. வில் எழுதிய இமயம் - சேரர் குறியாகிய வில் பொறிக்கப்பட்ட இமயமலை.
184. ஆனாது - குறைவில்லாமல்.

185. மாநீர் வேலி - கரியநீர் மிக்க கடல் சூழ்ந்த ஒரு தீவு.
    கடம்பெறிந்தது. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் மேலைக் கடற்கரைக்கண் உள்ள ஒரு தீவில் இருந்துகொண்டு குறும்பு செய்த பகைவரை வென்று அவர்தம் காவல் மரமான கடம்பு மரத்தைத் தடிந்தான்.
186. இமயத்து வானவர் - இமயமலையில் வாழ்பவர். (முனிவருமாம்).
    குறிப்பு:- மலைவாழ்பவருட் சிறந்த மக்களை வானவர் என்றும் கூறுப போலும். சேரரையும் தமிழ்நாட்டவர் வானவர் என்று வழங்குதலும் இக் குறிப்புக்குச் சான்று பகருகின்றது. வானவர் தோன்றல் - சேரர்குலத் தோன்றல்.
187. விறல் வேல் வானவன் - விறல் பொருந்திய வேலேந்திய இந்திரன்.
188. பொலம் பூங்கா - பொற்பூக்களையுடைய கற்பகச் சோலை.
189. துருத்தி - ஆற்றிடைக் குறை.
190. அரங்கு - நாடகசாலை; பள்ளி - மண்டபம்.
191. பெருமால் களிறு - அயிராவதம் என்னும் வெள்ளை யானை.

192. கொடிச்சியர் - குறவர் மகளிர்.
193. வேலன் பாணி - முருகனது வேலேந்தியாடும் வேலனது பாட்டு.
194. தினைக்குறு வள்ளை - தினையிடிப்போர் பாடும் உலக்கைப்பாட்டு.
195. விளி - ஆலோலவோசை.
196. நறவுக்கள் நொடைத்த குறவர் - நறவாகிய கள்ளை விற்கும் குறவரது ஓதை.
197. பறையிசை அருவி - பறைபோல முழங்கும் அருவி.
198. புகர்முகம் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானை.
199. சேணோன் - பரணின்மேல் இருப்பவன்.
200. பயம்பு - யானையைப் படுக்கும் குழி.
201. அகிலின் குப்பை - அகிற்கட்டையின் திரள்.
202. சந்தனக் குறை - சந்தனக் கட்டை.

203. ஏலவல்லி - ஏலக்கொடி.
204. கூவைநூறு - கூவைக் கிழங்கின் பொடி. (மா)
205. கவலை - கவலைக்கிழங்கு.
206. பைங்கொடிப் படலை - பச்சிலைமாலை.
207. காயம் - வெள்ளுள்ளிக்கிழங்கு.
208. ஆளியின் அணங்கு - ஆளியின் குட்டி.
209. வாள்வரிப் பறழ் - புலிக்குட்டி.
210. மதகரிக் களபம் - யானையின் கன்று.
211. குடாவடி உளியம் - பிள்ளைக்கi, கரடிக்குட்டி யென்றுமாம்.
212. வருடை - ஒருவகை மான்.
213. மான் மறி - மான் கன்று.
214. காசறைக் கரு - கத்தூரிக் குட்டி.
215. நகுலம் - கீரி.
216. நாவியின் பிள்ளை - புழுகுப் பூனைக் குட்டி

217. மன் - கணவன்
218. திருவீழ் மார்பின் தென்னவன் - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியன்.
219. தலைத்தாள் நெடுமொழி - கண்ணகி சொல்லிய வீரமொழி; பாண்டியன் தேவி உடனே உயிர்விட்டதனால், கண்ணகியின் வீரமொழியை முடியக் கேட்டிலள் என்றற்கு. “தன் செவி கேளாள்” என்றார்.

220. செம்மையின் இகந்த சொல் - செங்கோன்மை தவறினான் என்ற சொல். செவிப்புலம் படாமுன் - ஏனை வேந்தர்களின் செவிக்கு எட்டு முன்பே.
221. உயிர்பதிப் பெயர்த்தமை - உடம்பினின்றும் உயிர் நீங்கினமை.
222. பிழை உயிர் எய்தின் - உயிர்கள் யாதானுமொன்றால் வருத்தம் எய்தின்.
223. குடிபுரவுண்டும் - குடிகள் இனிது காக்கப்பட்டவழியும்.
224. மன்பதை - மக்களினம்.
225. தொழுதகவு - யாவரும் பாராட்டத்தக்க சிறப்பு.
226. மாதரோ பெருந்திரு உறுக - அவன் தேவி வானுலகில் சிறப்பெய்துக.
227. பரசல் வேண்டும் - கொண்டாட வேண்டும்.

228. ஒற்கா மரபு - குன்றாத சிறப்பு முறை.
229. நீர்ப்படை - நீராட்டுதல்,
230. காவிரிமுன் துறை - காவிரியாற்றின் நீர்த் துறையில்.
231. மறத்தகை - வீரத்தால் தகுதி மிகவுடைய.

குறிப்பு:- a. பெண் வேண்டிப் போர் உடற்றல்.
b. எதிர்த்துப் போருடற்றல்.
c. குடைநாட் கொள்ளல்.
d. அரசனது வெற்றி மிகுதி.
e. அரசானால் சிறப்பு எய்தும் நிலை.
f. பகைவர் நாட்டைக் கொளுத்துதல்.
g. வீரர்க்குப் பெருஞ்சோ றளித்தல்.
h. அரசன் வெற்றிச் சிறப்புக் கூறிப் பகைவர் நாடு அழிந்தது குறித்து இரங்குதல்.

5.  வட்கர் போகிய - இடையில் முரிதல் இல்லாத.
6.  பூட்கை - மேற்கோள்; (துணிவுமாம்.) இது புட்கை என்பதன் விகாரம் என்பர் அரும்பதவுரைகாரர்.
7.  பூவா வஞ்சி - வஞ்சிமாநகர்.
8.  எம் கோமகள் - செங்குட்டுவன் தாய். அவளையும் செங்குட்டுவன் கொண்டு போய் நீராட்டினன் என்பர்.
9.  ஒரு நீ ஆகிய செருவெங் கோலம் - நீ ஒருவனாகவே செய்த போர்த்திறம்.
10. இமிழ்கடல் வேலி - ஒலிக்கின்ற கடலை எல்லையாகவுடைய மண்ணுலகு ஆக்கிய இது - ஆக்குதற்குத் துணியும் இது.
11. முதுநீர் - கடல்.

12. நாவலந் தண்பொழில் - இமயத்துக்கும் குமரிக்கும் இடைக்கிடந்த நாடு.
13. கடைமுகம் பிரியா - நகரின் கடைப்புறத்தை விட்டு நீங்காது இருக்கின்றன.
14. வம்பணி யானை - கச்சையணிந்த யானை.
15. இடுதிறை - செலுத்துதற்குரிய திறை. எதிரீராயின் - ஏதிரேற்றுக் காணீராயின்.
16. கடற்கடம்பு எறிந்தது - செடுஞ்சேரலாதன் கடம்பர்களை வென்றது. (காதை. 25. காண்க)
17. தோள்துணை - மகளிர்.
18. திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க. சோனமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், ‘திருமேனி’ என்றார்.

19. அமையா வாழ்க்கை - நிரம்பாத உயிர் வாழ்க்கை; பயனில்லாத வாழ்க்கை.
20. நம்பால் ஒழிகுவதாயின் - நம்மிடத்தே கிடந்து விடுமாயின். எம் போல் வேந்தர் - சோழ பாண்டியர்.
21. என் வாய்வாள் வறிது மீளுமாயின் - எனது தப்பாத வாள் வறிதே திரும்புமாயின் கற்கொள்ளாது வறிது மீளுவேனாயின்.
22. பயம் கெழு வைப்பின் - நல்ல பயன் தரும் நிலவுலகில், உயிர்க்கு உறுதி பயக்கும் நல்வினை செய்தற்குரிய இடமாகலின். இவ்வுலகை, “பயங்கெழு வைப்பு” என்பர்.
23. குடி நடுக்குறூஉம்: குடிகளை நடுங்குவிக்கும். (கொடுங்கோலன் ஆகுக.)

24. கரும வினைஞர் - புரோகிதர்.
25. கணக்கியல் வினைஞர் - கணிதநூற் புலவர்.
26. தரும வினைஞர் - அறப் பணியாளர்.
27. தந்திர வினைஞர் - தானைத் தலைவர் முதலாயினார்.
28. ஆடக மாடம்; பொற்கோயில்.
29. சேடம் : படைப்புப் பொருளாய துழாய் முதலியன, இனி, சட கோபம் எனப்படுவதுமாம்.

30. மாகதர் - இருந்தேத்துவோர்.
31. வைதாளிகர் - பலவகைத் தாளத்தில் ஆடுவோர்.
32. சூதர் - நின்றேத்துவோர்.
33. மலயம் - பொதியில் மலை.
34. இமயநிலயம் - இமயவரையின் அடி நிலப்பகுதி.

35. வானவன் - சேரன் செங்குட்டுவன்.
36. கற்கால் கொண்டு - கல் பெயர்த்துக் கொண்டு.
37. வீங்கு நீர் - மிக்க நீர்.
38. ஆற்றலம் - ஆற்றலை யுடையேம்.
39. அருந்தமிழ் ஆற்றல் - அரிய தமிழ் நாட்டவரது ஆற்றலை. அறிந்திலர் - அறியாது சிலர் பிதற்றினர்.
40. கூற்றக் கொண்டிச் சேனை - கூற்றம்போல உயிர்க் கொள்ளை கொள்ளும் சேனை.
41. வங்கப் பெருநிரை - கப்பல்களின் பெரிய நிரை (வரிசை).

42. அரிமா - சிங்கம்.
43. கரிமா - யானை, பாய்ந்த பண்பின் - பாய்ந்த செய்கைபோல.
44. காஞ்சித் தானை - எதிர் ஊன்றிய தானை.
45. மலைப்ப - போர் செய்ய.
46. கறைத்தோல் மறவர் - கருங்கடகு ஏந்திய வீரர். (கடகு - Shield)
47. தார் - தூசிப்படை. (Vanguard of the army)
48. கடும்படை மாக்கள் - ஆரிய வரசரின் கடிய படையேந்திய வீரர்கள்.

49. வெரிந் - முதுகு.
50. எருமைக் கடும்பரி ஊர்வோன் - எருமை யூர்தியையுடைய கூற்றுவன்.
51. உயிர்த்தொகை - உயிர்களின் தொகுதி.
52. நூழிலாட்டி - கொன்று குவித்து.
53. உடையினர் - காஷாய உடையினர்.
54. பீடிகைப் பீலிப் பெரு நோன்பாளர் - பீடிகையிடத்துப் பீலியேந்தித் திரியும் பெரிய நோன்பிகளாகிய புத்த துறவிகள்.
55. பாடு பாணியர் - பாடுதற்கெடுத்த தாளமுடையர்.
56. பல இயம் - பலவாகிய வாச்சியங்கள்.
57. துறை போகிய - வல்லமை பெற்றுள்ள.

58. மறக்களம் - போர்க்களம்.
59. ஒரு பகல் எல்லை - ஒருநாளைப் போதிற்குள்.
60. உரிமைப் பள்ளி - உரிமையோர் இருக்கும் இடம்.
61. திருமலர்ப் பொய்கை - தாமரைப் பூக்கள் நிரம்பவுள்ள பொய்கை.
62. வரிகாண் அரங்கம் - கூத்துக் காணும் அரங்கு.
63. கானற் பாணி - கானல்வரிப் பாட்டுக்கள்.
64. முடித்தலை நெரித்தது - முடிதாங்கிய தலையை நெரித்தது.
65. அடிப்படுத்து - தன் ஆட்சியின் கீழ் நிற்ப.
66. நகைத் திறம் - நகத்தக்கது ஒன்று.

67. மாமுனி - அகத்தியன்.
68. வலம்படு தானை - வெற்றியுடைய சேனை.
69. தாது எரு மன்றம் - புழுதி படிந்த பொதுவிடம்.
70. மாபெருந் தானமா வான்பொருள் ஈத்து - மிக்க பெரிய தானமாக உயர் பொருள்கள் பல வறியோர்க்கு ஈந்து.
71. இந்திர விகாரம் - இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட அரங்கு.
72. அந்தரசாரிகள் - சாரணர்கள்.
73. ஆறைம்பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் - துறவிகள் முந்நூற்றுவர்; இவர்கள் தாம் முன்பு பிறந்து வருகிற யாக்கையது தொடர்பு அறுமாறு முயன்று துறவு பூண்டோர்.

74. துறவி - துறவறம்.
75. இறந்த துயர் - அளவுகடந்த துன்பம்.
76. போந்தை - பனந்தோடு,
77. கொற்கை - பாண்டி நாட்டுப் பட்டினம்.
78. வெற்றிவேற் செழியன் - பாண்டியன் ஒருவன் பெயர்.
79. ஒரு பகல் எல்லை - ஒரு நாளிலே.
80. உரைசெல வெறுத்த மதுரை - புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரை.

81. முறை முதல் கட்டில் - முறையே வருகின்ற அரசு கட்டில்.
82. ஒரு தனி ஆழிக் கடவுள் தேர் - ஒற்றைச் சக்கரத்தையுடைய தெய்வத்தன்மை பொருந்திய தேர்.
83. செங்கதிர்க் கடவுள் - ஞாயிறு.
84. திங்கள் வழியோன் - பாண்டியன்.
85. வித்தகர் - புலவர்.
86. சித்திர விதானம் - ஓவியம் வரையப்பட்ட விதானம்.
87. செங்குட்டுவன் மைத்துனன் கிள்ளிவளவன். அவனை அச் சோழர் குடிக்கு உரியவ ரான ஒன்பதின்மர் அடிக்கடி போர் உடற்றி அலைத்து வந்தனர். அதனால் அவன் அலைப்புண்டு வருந்துகையில் செங்குட்டுவன் அவனுக்குத் துணையாகச் சென்று அவ்வொன்பதின்மரையும் நேரிவாயில் என்னுமிடத்து வென்று வாகை சூடினான்.

88. வெயில் - ஓளி.
89. கொற்றம் - தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் பெற்ற வெற்றி.
90. புறவு - புறா.
91. இடும்பை - பசித்துயர்.
92. இட்டோன் - இட்டவனாகிய சிபி மன்னன்.
93. செல்லற் காலை - இன்னாமைக் காலம்.
94. எஞ்சா மன்னர் - வீரத் தீ அவியாத வேந்தர்.
95. இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் - மேலான சொற்களைப் பொறாது மறுத்து உரைக்கும் தூதர்.
96. அரியில் போந்தை - இனி அரிவது இல்லாத பனந்தோடு; மெல்லிதாய் அழகுற அரிந்து செவ்விதாக்கப்பட்ட பனந்தோடு.

97. தொடுப்பேர் உழவர் - விதைத்தற்கு உழும் ஏருழவர்.
98. வாலுகம் - வெண்மணல்.
99. குண்டுநீர் - ஆழமான நீர்.
100. குவை இரும் புன்னை - குவிந்த பெரிய புன்னை நீழலில்.
101. கழங்காடு மகளிர் தொடி முன்கை மலர முத்தம் ஏந்தி வானவன் வந்தான்… பாடுதும் யாம் எனும் கிளவியர் என இயையும்.
102. உணீஇய - உண்ணும்படி.
103. அம்தீம் பாணி - அழகிய இனிய பாட்டு.
104. வாகைச் சென்னியன் - வெற்றி மாலை சூடிய முடியுடையன்.
105. வேக யானை - சினமுடைய யானை.
106. குஞ்சர ஒழுகை - யானை பூட்டிய தேர்; வண்டியுமாம்.

107. மலர் அவிழ் மாலை - முல்லை முதலிய பூக்கள் மலரும் மாலை.
108. போந்தை - பனந்தோடு,
109. பொலம் பூந் தெரியல் - பொன்னாற்செய்த பூமாலை.
110. ஏந்துவாள் வலத்தர் - கையிலேந்திய வாளால் பெற்ற வெற்றி யுடையர்.
111. பகட்டெழில் ஆகம் - பெரிய அழகிய மார்பு.
112. வைவாள் - கூரிய வாள்.

113. முடிபுறம் உரிஞ்சும் கழல்கால் - வீழ்ந்து வணங்கும் மன்னரது முடி புறத்தேபடு மாறு விளங்கும் கழலணிந்த கால்.
114. திருமுகம் - அருள் ஒளி வீசும் முகம்.
115. மலர்கதிர் மதியம் - விரிந்த கதிர்களையுடை திங்கள்.
116. சேக்கைப் பள்ளி - பூவணை யிருந்த இடம்.
117. மண்ணீட்டரங்கம் - சுதையால் அழகு திகழ அமைத்த அரங்குகள்.
118. படுதிரை - ஒலிக்கின்ற கடல்.
119. நெடுநிலை மேருவின் - நெடிதுயர்ந்த மேருமலைபோல; உலகிற்கு நடுவே மேரு நின்றதுபோல, நகர்க்கு நடுவே அரசன் பெருங்கோயில் நின்றது என்க.
120. தமனிய மாளிகை - பொன் மாளிகை.

121. திருரிலைச் சேவடி - கண்டார் விரும்பும் பேரழகு நிலைபெறுதலுடைய சேவடி; திரு, சிவபோகமுமாம்.
122. பரிதரு செங்கையில் படுபறை - செங்கையில் பரிதரு படுபறை - செங்கையில் தாங்குகின்ற ஒலிக்கின்ற துடி.
123. திசைமுகம் அலம்ப - திசைதோறும் சுழன்று ஆட,
124. பாடகம் - காலணி.
125. சூடகம் - கையில் அணியும் வளைவகை.
126. கொட்டிச் சேகம் - கொடுகொட்டிக் கூத்து.
127. நீளமர் அழுவம் - நெடிய போர்க்களம்.

128. கொல்லாக் கோலம் - தவக்கோலம். தவக்கோலம் பூண்டாரைக் கொல்லல் கூடாதாகலின். அது கொண்டாரைக் “கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோர்” என்றார். “தாபத வேடத்து உயிருய்ந்து பிழைத்த மாபெருந்தானை மன்ன குமரர்” என்று மேலும் கூறினர். (சிலப். 27: 179 - 80).
129. சீரியல் வெண்குடைக் காம்பு - அழகிய இயல்பினையுடைய வெண்கொற்றக் குடையின் காம்பு.
130. சயந்தன் வடிவின் தலைக்கோல் - குடைக்காம்பை அரசன் கோயிலில் காப்பு அமைத்து இருத்தி, இந்திரன் மகனான சயந்தனாகக் குறித்து நீராட்டி ஊர்வலம் செய்வித்து நாடக மகளிர்க்கு நாடக வரங்கின்முன் நிறுத்தும் தலைக்கோல்.
131. கயந்தலை யானை - பெரிய தலையையுடைய யானை. இது பட்டத்தியானை.
132. கவிகையில் காட்டி - அவ் யானையின் தாழ்ந்த கையிலே கொடுத்து ஊர்வலம் செய்வித்து. இவ்வியல்புகள் அரங்கேற்று காதையில் கூறப்படுவன. (சிலப். அரங். 114 - 28)
133. இருங்குயிலாலுவத்து - பெரிய குயிலாலுவம் என்னும் இடம்: நீலகேசி மொக் கலவாதச் சருக்கத்துக் “கதியின வகையவானும்” (425) என்னும் செய்யுளுரையில், “துடித விமானத்தினின்றும் போந்து, குயிலாலபுரத்துத் தோன்றி, உலும்பினி வனத்துப் பிறந்து. கபிலபுரத்துப் புத்தத்வம் பெற்றுத் தர்மோபதேசம் பண்ணி, மஹா போதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி” என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது.
134. தவப் பெருங் கோலம் - மேலே கூறிய கொல்லாக் கோலம்.

135. கொதியழல் சீற்றம் - கொதிக்கும் அழல்போலும் சினம்.
136. கறி - மிளகுக் கொடி.
137. சிறுகுரல் நெய்தல் - சிறு பூங்கொத்துக்களையுடைய நெய்தல் யானையினையும் நெய்தலையுமுடைய வியலூர் என்க.
138. ஆர்புனை தெரியல் - ஆத்திப் பூவால் தொடுத்த மாலை.
139. இறுத்து - தங்கி. (முற்றுகையிட்டு)
140. உடன்று - மாறுபட்டு வெகுண்டு,
141. புரையோர் - நூல்களைக் கற்றுயர்ந்த பெரியோர்.
142. தண் ஆன்பொருநை - குளிர்ந்த பொருநையாறு; இது சேரநாட்டில் உள்ளதொரு யாறு என்பர்.

143. அகப்பா - மதில்.
144. மறிக்கினும் மறிக்கும் - மீளினும் மீளும்.
145. கூடிய கோலத்து - கூடிய பிறப்பில்.
146. பொய்இல் காட்சியோர் - மெய்யுணர்ந்த பெரியோர்.
147. கேள்வி நல்உயிர் - அறவோர் கூறும் அறங்களைக் கேட்டு நலமடைதற்குரிய உயிர்.

148. வேள்விக் கிழத்தி - வேள்வி செய்பவனுக்கு மனைவி; ஈண்டு இருங்கோவேண் மாளைக் குறித்தது. இனி, இல்லிருந்து செய்யும் அறமும் வேள்ளிவயாதலின், அதற்குரிய மனைவியை வேள்விக் கிழத்தி என்றார் எனினுமாம்.
149. கறைவீடு செய்து - கடமையைத் தள்ளிவிட்டு.
150. அருந்திறல் அரசர் - பகைவரால் வெல்லற்கரிய திறல் வாய்ந்த அரசர்.
151. பெரும் பெயர்ப் பெண்டிர் - கற்பால் பெரிய புகழையுடைய பெண்டிர்.
152. தண்டமிழ் நல்லுரை - தண் தமிழ் நாட்டுச் சான்றோர் தெளிந்துரைத்த அழியாத மெய்யுரை.
153. அரசற்கு அளித்தது - அரசர் முறை செயினல்லது பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதென்ற உண்மையைச் சோழ மன்னனால் விளங்கச் செய்தது.
154. தென்புலம் - தென் தமிழ் நாடு.
155. மன்னவற்கு அளித்தது - மண்ணாள் வேந்தர்க்குச் செங்கோல் வளையாமையே உயிராம் என்ற உண்மையைப் பாண்டி மன்னனால் விளங்கச் செய்தது.

156. வஞ்சினம் - சூளுறவு.
157. கொற்றவற்கு அளித்தது - தாம் செய்த வஞ்சினம் முடித்தல்லது வேந்தர் தம் சினம் தணியார் என்ற உண்மையைச் சேர மன்னனால் விளங்கச் செய்தது.
158. பூப்பலி செய்து - பூ இட்டுப் பரவி.
159. காப்புக்கடை நிறுத்தி - மதிலும் வாயிலும் அமைத்து.
160. கடவுள் மங்கலம் - கடவுட்குரிய மங்கல விழா; கடவுட்டன்மை எய்துவித்தல் என்றலும் உண்டு

161. கடுவரல் - விரைந்த நீர் வருகையுடைய.
162. சோணாட்டார் பாவை - சோழநாட்டிற் பிறந்த பாவையாகிய கண்ணகி.
163. மடம்படு சாயலாள் - அழகு பொருந்திய சாயலையுடைய கண்ணகி.
164. கடம்படாள் - சினந்து வெகுளாள்.

165. குடம்புகாக் கூவல் - வறண்ட குளம்.
166. தற்பயந்தாள் - தன்னைப் பயந்த தாய்.
167. கற்புக் கடம்பூண்டு- கற்பைக் கடனாக மேற்கொண்டு.
168. எய்த உணராது - தெளிய அறியாமல்.
169. அவ்வை - அன்னை.
170. அம்மாமி - கணவனைப் பயந்த தாய்.
171. குறுமகன் கோள் இழைப்ப - புல்லிய கொல்லன் கொலை சூழ.
172. ஏதிலார் - அயலார்.

173. போதி - போதி மரம்.
174. புண்ணியதானம் - புண்ணியப் பயன்தரும் அறச்செயல்.
175. ஐயம்தீர் காட்சி - மெய்யுணர்வையுடைய கவுந்தியடிகள்; இஃது அன்மொழித் தொகை.
176. அம் மணம் பட்டிலா - தன் தாயாகிய மாதரி இருந்திருந்தால் செய்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்த அந்த மணம் செய்து கொள்ளாது கழிந்த.
177. மாமி - மாதரி.
178. பொன்னம் சிலம்பு - பொற் சிலம்பு.
179. நாவலம் பொன் - சாம்புநதம் என்னும் பொன் வகை.
180. மீவிசும்பில் - விசும்பின்மேல்.

181. யான் அகலேன் - யான் நீங்கேன்.
182. வம் - வம்மின்.
183. வஞ்சியீர் - வஞ்சிநாட்டு மகளிர்காள்.
184. வஞ்சி இடையீர் - வஞ்சிக்கொடி போலும் இடையினையுடையீர்.
185. பஞ்சடி ஆயத்தீர் - செம்பஞ்சு ஊட்டிய காலையுடைய ஆயமகவீளிரே.
186. எம் கோ - எங்கள் அரசனாகிய சேரன். முறைநா - முறையை யுடைய நா.
187. யாம் எம்கோவாகிய வானவன் மகள் என்றாம்; அவள் தான் வையையார் கோனாகிய அவன் பெற்ற கொடி என்றாள்; வானவளை நாம் வாழ்த்துவோமாக, தேவமகள் வையையார் கோமானை வாழ்த்துவான். வானவன் - சேரன்.
188. வையையார் - பாண்டியர்.
189. தேவ மகள் - கண்ணகி.

190. தொல்லை வினை - பழைய வினை.
191. மலையரையன் பெற்ற பாவை - இமயமலையிடத்துப் பெற்ற கண்ணகிப் படிமம்.
192. பூவிரி கூந்தல் - பூக்களைச் சூடிய விரிந்த கூந்தலை யுடையாய்.
193. உரவோன் - தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.
194. பெயர்ந்து உலாய் - பெயர்ந்து உலாவி.

195. உடன்று எழுந்த - மாறுபட்டெழுந்த.
    2-3. பொறையன், மலையன் என்பன சேரர்க்குரிய பெயர் வகைகள்.
196. கார் செய் குழல் - கரிய கூந்தல்.
197. கடம்பெறிந்த வார்த்தை - நெடுஞ்சேரலாதன் கடம்பரை வென்று அவர் காவல் மரமாகிய கடம்பு மரத்தைத் தடிந்த செய்தி.
198. பூங்காஞ்சி - பூக்களையுடைய காஞ்சி மரம்.
199. அவைப்பார் - சமைப்பர்.
200. ஆழிக்கொடித் திண் தேர் - கொடிகட்டிய ஆழி பூட்டிய தேர். செம்பியன் - சோழன்.
201. வம்பலர் தார் - புதிய பூக்களால் தொடுத்த மாலை.
202. பாழித் தடவரைத் தோள் - வலிய பெரிய மலை போன்ற தோள்.
203. ஆரிக்கும் - ஆர்த்துப் பாடும்.
204. பாடல்சால் முத்தம் - பெருமை பொருந்திய முத்துக்கள்.
205. குறுவர் - குற்றுவர்.
206. வானவர்கோன் - இந்திரன்.
207. பஞ்சவன் - பாண்டியன்.
208. வேப்பந்தார் - வேப்பம்பூவால் தொடுத்த மாலை.
209. நெஞ்சு உணக்கும் - நெஞ்சைப் புலர்விக்கும்; மகிழ்விக்கும் எனினுமாம்.

210. சந்து - சந்தனம்.
211. தகை - அழகு.
212. வான்கோடு - யானையின் வெண்கோடு.
213. கடந்தடுதார்ச் சேரன் - வஞ்சியாது நின்று போருடற்றும் மாலை யணிந்த சேரன்.
214. தாள் தொழார் தமக்கு வாழ்த்தல் அரிது.
215. சூழ் ஒளிய - மிக்க ஒளியினையுடைய.

216. வடதிசை வணக்கிய - வடவாரிய மன்னரை வணங்கச் செய்த.
217. கடவுட் கோலம் - கடவுள் நல்லணி.
218. வாய்எடுத்து அரற்றிய - வாய்விட்டுக் குரலெடுத்து அழுத.
219. துவர் இதழ் - சிவந்த இதழ்.
220. எயிறு அரும்பினள் - எயிறு தோன்ற நகைத்தனள்.

221. ஓச்சினள் - கையை நீட்டி விரித்தனள்.
222. அறிவாராத் தெருட்சியள் - அறிய வாராத அறிவுத்தெளிவு உடையள்.
223. மருட்சியள் - தன் பெண்மை யறியாது பேசுவதால் மருண்டிருந்தவன்.
224. உலறிய நா - வற்றிய நா.
225. சேடக்குடும்பி - திருவடி பிடிப்பான், சடகோபம் எடுப்பவன் என்றும் கூறுவர்.
226. கரகம் - செம்பு.
227. மங்கல மடந்தை - மங்கலா தேவி.
228. உறித்தாழ் கரகம் - உறியிடத்தே தாழ்ந்த செம்பு.
229. குறிக்கோள் கூறி - இதைக் குறிப்பாய் வைத்துக்கொள்; இது கொள்ளத் தக்கது என்று சொல்லி.

230. மறையோள் - பார்ப்பனி.
231. அறிந்தோன் - பாசண்டச் சாத்தன்.
232. போற்றா ஒழுக்கின் - பொருந்தா ஒழுக்கத்தால்.
233. ஏதில் நன்னாடு - அயலதாகிய நல்நாடு; பாண்டி நாடு.
234. வான்துயர் - மிக்க துன்பம்.
235. இலங்கு இழை - விளங்குகின்ற இழை.
236. இடையிருள் - நள்ளிருளில்.
237. வான்துறைப் பெயர்ந்தேன் - பெரிய நீர்த்துறைக்குச் சென்றேன்.
238. உருகெழு மூதூர் - அழகு பொருந்திய மதுரை.
239. ஊர்க்குறு மாக்கள் - ஊர்ச் சிறுவர்கள்.

240. பொற்படி - பொன்னுலகம்.
241. அற்புளம் - அன்புற்ற உள்ளம்.
242. பற்றுவழிச் சேறல் - நிலத்தே பற்றுள்ளவிடத்தே பிறத்தல்.
243. தொன்றியல் வாழ்க்கை - பழையதாகி இயல்கின்ற வாழ்க்கை.
244. கையகத்தனபோல் - கைமேற் கண்டது போல.
    1.பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னர் - பண்டே வஞ்சியில் சிறைப்பட்ட மன்னர்.
245. தாள்நிழல் - ஆதரவில், உடன் (இருந்தபோதில்)
246. திருப்பொறி - அரசாளுதற்குரிய குறிகள்.
247. உரை செய்தவன் - சொன்ன நிமித்திகன்,
248. கொங்கு - தேன்.
249. செல்லல் - துன்பம்.
250. பகல் செல் வாயில் - கிழக்கு வாயில்.
251. படியோர் - நிலத்தவர்.
252. பாரம் - அரசபாரம்.

253. திருத்தகு நல்லீர் - நல்வினைப் பேற்றினையுடைய நல்லோர்களே.
254. பரிவு - துன்பம்
255. புறஞ்சொல் - புறம் கூறும் சொல்.
256. பொய்க்கரி - பொய்ச் சான்று
257. பிறவோர் - அறவுணர்வில்லாத பிறர்.
258. பிழையுயிர் - மரிக்கிற உயிர்.
259. அறமனை - மனையறம்
260. வெள்ளைக் கோட்டி - பயனில்லாத சொற்களைச் சொல்லும் கூட்டம்,
261. விரகினில் - ஒழித்தற்குரிய சூழ்ச்சியால்.
262. உளநாள் - உள்ள நாள்.
263. ஒல்லுவது ஒழியாது - சாரக்கடவவான இன்ப துன்பங்கள் சார்வது நீங்காது.

264. கடலா - கடல் எல்லையாக.
265. மண்திணி மருங்கு - மண்திணிந்த நிலவுலகு.
266. தண் - இனிய.
267. செந்தமிழ் - செந்தமிழ் நாடு.
268. கொடுந்தமிழ் - கொடுந்தமிழ் நாடு.
269. இருபகுதியின் - இரு பகுதியினும் அமைந்த வென்க.
270. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
271. மரபின் - தன்மையினையுடைய.
272. ஒழுக்கு - நல்லொழுக்கம்.
273. புணர - பொருந்த.
274. எழுத்தும் அவ்வெழுத்தினாலாய சொல்லும் என்றற்கு ‘எழுத்தொடு புணர்ந்த சொல்’ எனப்பட்டது.
275. இழுக்கா யாப்பு - எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றினிலக்கணத் தினின்றும் வழுவுதலில்லாத செய்யுட்கள்.
276. செவ்வி - அமைதி.
277. பாடல் - பாட்டு.
278. எழால் - யாழ்.
279. பண் - இசை.
280. பாணி - தாளம்.

281. அரங்கு - ஆடரங்கு.
282. விலக்கு - இசை, நாடக நூல்களில் ஆகாவென விலக்கிய விலக்குகள்.
283. ஆடல் - கூத்து.
284. உடம்பட - ஒற்றுமை யெய்க.
285. வரி - வரிப்பாட்டு.
286. குரவை - குரவைக் கூத்து.
287. சேதம் - கூத்து.
288. இயற்கையில் - மரபால்.
289. ஆடி - கண்ணாடி.
290. நிழல் - ஒளி.
291. நான்கு உறுதிப் பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய மூன்றும் மணிமேகலை வீடுங் கூறுதலின் மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் என்றார்.

-   திருவள்ளுவமாலையில் இவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது.

-   ஆயின் - ஆராய்ந்து நோக்கின்.

*The Journal of Oriental Research, Madras, Vol. XI. part II page 118-128

-   இம் முனிவனைத் தென்னாட்டவர் குறுமுனி யென்றே கூறிவந்தனர். அவன் காலத்தே தென்னாடு போந்த முனிவருள் எவர்க்கும் இவன் வடிவில் குறுகியிருந்ததனால், இவனை அவர்கள் இவ்வாறு கருதிக் கூறுவாராயினர். இவன் தமிழறிவும் குறைந்தவன் என்பது பரஞ்சோதி முனிவர் கூறுதலால் விளங்கும்.

1.  வேணவா-வேட்கை மிகுதியால் உண்டாகும் அவா.
2.  பாடல்சால் சிறப்பு - புலவரால் பாடப்பெறும் சிறப்பு.
3.  பரதம்-பரதகண்டம்.
4.  கோடா-வளையாத, முறை பிழையாத.
5.  கோள்-செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, முதலிய கோள்கள்.
    சோழர் குலக்கொடியும், தண்டமிழ்ப் பாவையும் ஆகிய காவிரி என்க. யாறுகளைப் பெண்களாகக் கூறிப் புகழ்தல் பாவலர் மரபு. அதனால் காவிரியை ஈண்டுச் சோழர்தம் குலக்கொடி யென்றார்; பாண்டி நாட்டு வையையாற்றையும் “வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி” என்பர்.

6.  சமயக்கணக்கர் - சமய நூற் புலவர்.
7.  அமயக்கணக்கர் - காலநிலை யுரைக்கும் சோதிடர்.
8.  ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர்.
9.  எண் பேராயம் - கரணத்தார், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தருட் சிறந்தார். படைத்தலைவர். யானைப்படைத் தலைவர், குதிரைப் படைத் தலைவர்.
10. வசி - மழை. 2. திரியா- திரியாமைக் கேதுவாகிய.
11. தீவகச் சாந்தி - இத் தீவகத்தின் நலத்துக்காகச் செய்யப்படும் விழா. என்றது, இந்திரவிழா.
12. நால்வேறு தேவர் - வசுக்கள், திவாகரர், உருத்திரர், மருத்துவர்.
13. பால்வேறு தேவர் - பதினெண் வகைப்பட்ட கணங்கள்.
14. பொன் நகர் - இந்திரனது தலைநகராகிய அமராவதி.
15. தொல்நிலை யுணர்ந்தோர் - இவ்விழாவின் பண்டைய நிலைமையை உணர்ந்த அறிஞர். 8. தோரண வீதி - பெருவாயில் வீதி. 9. தோமறு கோட்டி - குற்றமற்ற கோயில் வாயில். 10. சமுகு - பாக்குமரம். 11. வேதிகை - திண்ணை. 12. தாமம் - மாலை.

16. கதலிகைக் கொடி, காமூன்று விலோதம் - துகிற்கொடி விசேடங்கள்.
17. பல்வகை வண்ணம் தீட்டிய துகிற்கொடி விலோதம் என்றும், பல வகையாகக் கத்தரிக்கப்பெற்ற துகிற்கொடி கதலிகைக் கொடி என்றும் கூறுவர்.
18. மதலை மாடம் - கொடுங்கை மாடம்.
19. பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் - நகரின் உள்ள சதுக்கப்பூதம். சதுக்கம் - நான்கு தெருக்கள் கூடும் இடம்.
20. ஆறு அறிமரபு - வேறு வேறு செய்வினைகளைச் செய்தற்குரிய நெறியறிந்து செய்யும் முறைமை.
21. தாழ்தரு பொதியில் - தண்ணிய நிகழ் தாழ்ந்த ஊரம்பலம்.
22. புண்ணிய நல்லுரை - தரும் உபதேசம்.
23. ஒட்டிய சமயத்து உறுபொருள் - தாம் மேற்கொண்டொழுகும் சமயத்தின் துணிபொருள்.
24. பட்டி மண்டபம் - கல்விக்கழகம். 10. பற்றாமாக்கள் - அன்பில்லாதவர்
25. துருத்தி - ஆற்றிடையமைந்த தீவு.

26. காதலன் - கோவலன்
27. பொற்கொடி மூதூர் - அழகிய கொடிகள் தூக்கிய காவிரிப்பூம்பட்டினம். பொருளுரை - புகழுரை.
28. கனைஎரி - மிக்க நெருப்பு. பொத்தி - மூட்டி.
29. ஊதுலைக் குருகு - கொல்லன் உலைக்களத்துக் காற்றை யூதும் துருத்தி மூக்கு.
30. பொய்கையின் நளிஎரி புகுவர் - பொய்கைக்கண் இறங்கி மூழ்குவது போலப் பெரிய நெருப்பில் வீழ்வர்.
31. உடனுறை வாழ்க்கை - பிரியாது கூடியிருக்கும் வாழ்க்கை.
32. பரப்புநீர் ஞாலம் - பரந்த கடல்சூழ்ந்த நிலவுகம்.
33. பின்னது…. உறுவது - பின்னே கூறிய பேரின்பம் பற்றற்றோர் எய்துவதாகும்.
34. ஐவகைச் சீலத்து அமைதி - காமம், கொலை, கள், பொய், களவு என்னும் இவ்வைந்து குற்றங்களையும் முற்றவும் கெடுத்தலால் ஆகும் நலம்.
35. மையல் நெஞ்சம் - மயக்கத்தையுடைய நெஞ்சம்.
36. கையற்று - செயலற்று : செய்வது தெரியாது மயங்கி.
37. பெயர்ந்தாள் - நீங்கினாள்.

38. தூநீர் மாலை - தூய தன்மையினையுடைய பூமாலை.
39. தூத்தகை - தூயதாகிய தன் அழகு.
40. ஆருயிர் ஓம்பும் ஒருபெரும் பூட்கை - நிறைந்த உயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோள் (துணிவு). ஒழியா - நீங்காத.
41. உள்ளது - உள்ளே இருப்பது. விளிப்பு அறை போகாது - ஓசை வெளியே செல்லாது.
42. மெய்புறத்து இடூஉம் - உள்ளிருப்பவர் உடலுருவத்தை வெளியே காட்டும்.
43. தாமரைப் பீடிகை - தாமரைப்பூ வடிவாகச் செய்தமைத்த இருக்கை (பீடம்).
44. தொல்யாண்டு கழியினும் அரும்பு அவிழும் (மலரும்); அலர்ந்தன வாடா; சுரும்பினம் மூசுவது இல்லை.

45. வெந்திறல் நோன்பிகள் - சிந்தையின்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் - தம்மையறியாமலே தாம் செய்யும் வினையிடத்தும் அறம்பாவங்கள் பிறக்கும் என்ற கருத்துடைய வெவ்விய திறல் வாய்ந்த விரதிகள்; எனவே, தாம் அறிவு அறியாதே செய்யும் வினையால் பிறக்கும் அறம் பாவம் தம்மைச் சேரா என்று கருதுபவர் உண்டு என்பதும் ‘செய்வினை…ஏதுவாகவும்’ என்பதனால் கூறப்பட்ட தாம்.
46. பயம் - பயன் (தேன்).
47. செவ்வனம் செல்லும் - செவ்வையாக (நேராக)ச் செல்லக்கூடிய (வேறே செல்லக் கூடிய).
48. சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை - செங்கற்களால் எடுக்கப்பட்ட உயர்ந்த நிலைகளையுடைய வீடுகள்.
49. மையறு படிவம் - குற்றமற்ற தெய்வவுருவம்.

50. வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் - வெள்ளிய சுண்ணாம்புச் சாந்தினால் விளக்கமுறச் சிற்பிகளால் செய்யப்பட்ட காண்பார் கண்களைக் கவரும் சித்திரம்.
51. ஆலமர் செல்வன் மகன் - ஆலின்கீழ் மேவும் சிவனுக்கு மகனான முருகன்.
52. திலகம் - மஞ்சாடி மரம்.
53. வகுளம் - மகிழ மரம்.
54. நரந்தம் - நாரத்தை.
55. நாகம் - புன்னை.
56. முடமுள் தாழை - வளைந்த முள்ளையுடைய தாழை.
57. குடசம் - வெட்பாலை மரம். வெதிரம் - மூங்கில்.
58. எரிமார் இலவம் - நெருப்புப்போலச் சிவந்த பூக்களையுடைய இலவமரம்.

59. சித்திரச் செய்கைப்படாம் - சித்திர வேலை செய்யப்பட்ட ஆடை போர்த்தது ஒப்பத் தோன்றிய உவவனம் என்க.
    தெய்வப் பீடிகையுள்ள வனமாதலால் இதனைச் சுதமதி “தொழுது” காட்டினாள் என அறிக.
60. பரிதியஞ் செல்வன்…பொழில் - ஞாயிற்றினது கதிர்களாகிய சேனையின் பொருட்டு. இருட்கூட்டம் வளைந்துகொண்டு தங்கும், ஒளியின்மையால் மயக்கத்தைத் தரும் பூம்பொழில்.
61. தும்பி குழலிசை கொளுத்திக் காட்ட - தும்பிகள் குழலோசையைச் செய்து ஒலிக்க.
62. மயிலாடு அரங்கின் - மயில் தோகையை விரித்து நின்று ஆடும் இடத்தை.
63. மணிநீர் இலஞ்சி - நீல மணி போலும் தெளிவும் நிறமும் ஒளியுமுடைய நீர்நிலை.
64. பாசடைப் பரப்பு - பசிய இலைகள் மூடிய நீர்ப்பரப்பு.
65. கம்புட்சேவல் - சம்பங் கோழி.
66. கனைகுரல் முழவா - கோழிச் சேவலின் கனைப்போசை முழவோசையாக.
67. இயங்கு தேர்வீதி எழு துகள் - தேர் இயங்கு வீதி எழு துகள்; தேர் செல்லுதலால் வீதியில் எழுகின்ற தூசு.

68. கோடு உடைத்தாழை - சங்கு உடைந்தாற்போல நிறத்தையுடைய தாழை.
69. வண்டினம் மீது கடி செங்கை - மேலே மொய்க்கின்ற வண்டினத்தை ஓச்சும் செவ்விய கை.
70. மறிந்து நீங்கும் - திரும்பியேகும்.
71. எட்டி குமரன் - எட்டியென்னும் சிறப்புப் பெயர் அரசனால் கொடுக்கப்பட்ட வணிக குமரன்.

72. வகை வரிச்செப்பு - கூறுபாடு பல கொண்டு வரிகளையுடையதாய செப்பு. செப்பு - பெட்டி.
73. தகை - அழகு.
74. நெஞ்சிறை கொண்ட நீர்மை - நெஞ்சிலே தங்கியிருந்த இசையறிவின் தன்மை.
75. வெம்பகை நரம்பு - நின்ற நரம்பிற்கு மூன்றாவதும் ஆறாவதுமாகிய நரம்பு. கையைச் செலுத்தியது துயரம் என முடிக்க.
76. இடும்பை - துயரம்.
77. என்மேல் வைத்த உள்ளத்தான் - என் மேல் காதல் கொண்டுளன்.
78. கிளந்த மாற்றம் - சொல்லிய சொல்.
79. இசைத்தது - செவியிற் கேட்பதாயிற்று.

80. இளமை… உரவோன்: “தம்முள் மறுதலையாயினார் இருவர் தமக்கு முறைமை செய்ய
    வேண்டி வந்து சில சொன்னால், அச்சொல் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தான்” என்று இகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து, முறை வேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்
    கொண்டு ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்.
81. உரவோன் - கரிகாற் பெருவளத்தான்.
82. வினைவிளங்கு தடக்கை விறலோய் - செய்தற்குரிய செய்கைகளைத் தவறாதே செய்தலால் விளக்க மெய்திய பெரிய கையையுடைய விறலுடைய உதயகுமரனே.
83. விளிவு - சாக்காடு.
84. புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை - நஞ்சுடைய நாகம் அடங்கியிருத்தற்கு இடமாகும் புற்றுப்போலச் செற்றமாகிய தீக்குணம் தங்கியிருத்தற்குரிய இடம். செற்றம்-பகைமை நெடிது தங்குதற்கேதுவாகிய சினம்.
85. அவலக்கவலை - வருத்தமும் அதனால் உளதாகும் மனத்தளர்ச்சியும்.
86. தவலா உள்ளம் - நீங்காத உள்ளம்.
87. புறமறிப் பாராய் - புறம் மறியாகப் பார்ப்பாய். அஃதாவது, புறத்தே தோன்றும் தோற்றத்தை மாற்றி அகத்தே தோன்றும் தோற்றத்தைத் திருப்பிப் பார்ப்பாயாக என்பது; தோலின் வெளித் தோற்றத்தை விலக்கி அகத்தோற்றத்தைக் காண்டல், இதனைப் “பைம்மறியாப் பார்த்தல்” என்றும் கூறுவர்.

88. குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சம் என்னும் மாலை. இதனைக்கொன்றவன் முருகன்.
89. முருகச் செவ்வி - இளமைக் காலத்து அழகு.
90. ஊழ்வினையால் தவத்தைமேற் கொள்வாளாயினள்.
91. சாபசரத்தின் - சபித்தலாகிய அம்பினால், சபிக்கும் தன்மையை வில்லாகவும், சொல்லை அம்பாகவும் கொள்க.
92. செவ்வியளாயின் என் செவ்வியளாகுக - காமச் செவ்வியுடையளாயின், எனக்கு அந்நலத்தைத் தரும் இயல்பினளாகுக.

93. வார்கழல் வேந்தன் - வரிந்து கட்டப்பட்ட வீரகண்டையணிந்த உதயகுமரன்.
94. தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி - தீய வழியை நினையாத நெஞ்சுடையனா
    வாயாக.
95. வீங்கு நீர்ஞாலம் - பரந்த கடல் சூழ்ந்த நிலவுலகம்.
96. ஏதம் - குற்றம்.
97. உலக நோன்பு - உலகியலில் காணப்படும் வாழ்க்கைத்திறம். இதனைக் கண்டு, துன்பமும், துன்பக் காரணமும், துன்பத்தோற்றம், அதனைப் போக்கும் நெறிமுதலிய பன்னெறியாகக் கண்டு தெளிந்து, உயிர்கள் மேல் பேரருள் கொள்ளல். இவ்வுலக நோன்பு இந்நூலில் பயில வழங்கும்.

98. இன்பச் செவ்வி - முத்திநிலையாகிள நிருவாணநிலை.
99. மன்பதை - உயிர்கள்.
100. ஒரு பெரும் பூட்கை - ஒப்பற்ற பெரிய மேற்கோள் (துணிவு).
101. அறக்கதிர் ஆழி - அறமாகிய ஒளி பொருந்திய சக்கரம்.
102. தகை பாராட்டுதல் - நலத்தைப் பாராட்டிப் பரவுதல், யாவதும்சிறிதும்.
103. மிகைநா இல்லேன் - வேறே எப்பொருளையும் சொல்லுவது இல்லேன்.
104. வருணக் காப்பு - வருணக் கட்டுப்பாடு.
105. பொருள் விலையாட்டி - பொருளுக்குத் தன் நலத்தை விற்கும் விலைமகள்.
106. நயந்தோன் எனாது - விரும்புகின்றான் என்று ஒழியாது.
107. புதுவோன் பின்றை - புதியனாய் வந்த இந்த உதயகுமரன் பின்னே.
108. புராணன் - பழமையானவன்; புராணங்களால் பாராட்டப்படுபவன்.
109. செற்றம் செறுத்தோய் - பகைமைக்கு இடமாகிய சினத்தைக் கெடுத்தவனே.

110. காமற் கடந்த ஏமம் ஆயோன் - காமனது செய்கை முற்றும் அறவே நிகழாவாறு காத்தோம்புதலல் இடையறா இன்பமுடையனாயினவனே.
111. தீநெறிக் கடும்பகை - தீய வழியிற் செலுத்தும் நினைவாகிய மிக்க பகை.
112. ஆயிர ஆரத்து ஆழியம் திருந்தடி - ஆயிரம் ஆர்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருவடி.
113. தாமரை அடக்க - தாமரையின் பூவிதழ் கூம்பி மூடிவிட.
114. பூம்பொதி - பூவின் கூம்பிய இதழ். கூம்பும் காலத்துத் தன்பால் தங்கிய பெடையை, தாமரைப்பூ கூம்பி மூடிக்கொள்ள, சேவல், அவ்விதழைக் கிழித்துத் தன்பெடை பட்ட சிறையை நீக்கி, உடன்கொண்டு சென்றது.
115. அரிக்குரல் - அரித்த ஓசை; மெல்லிய குரல்.
116. இசைப்ப - தெரிவிக்க.
117. குடக்கண் சேதா -வளைத்த கண்களையுடைய செம்மையான ஆ.
118. மன்று - ஆநிரைகள் ஊரிடத்தே வந்து சேரும் இடம்.

119. மருதத்து இன் நரம்பு உளர - மருதயாழின் இனிய இசையை இசைக்க.
120. முல்லைக் குழல் மேல் கொள்ள - குழல் முல்லைமேற் கொள்ள - குழலிடத்தே முல்லைப்பண்ணைப் பாட.
121. அமரகம் - போர்க்களம்.
122. தமரகம் - தம்மவர்கள் இருக்குமிடம்.

123. தணியா நோக்கம் - நீங்காத காதல்.
124. புறத்தோர் வீதியில் - வெளியே ஏனைமக்கள் செல்லும் தெருவில்.
125. தாழ்வயின் அடைப்போர் - தோண்டிய பள்ளங்களில் புதைப்பவர்.
126. இளிவுடன் - அருவருப்போடு.
127. தொழுவிளிப்பூசல் - துதி முழக்கம்.
128. தீவிளிக் கூவும் - ஊளையிடும் ஓசையும்.
129. சாவோர்ப் பயிரும் - இறப்பவரை அழைக்கும். கூகை - பேராந்தை.
130. குரால் - கோட்டான்.
131. ஊண்தலை துற்றிய ஆண்தலை - தலை மூளையை உணவாக உண்ட ஆண்ட லைப் பறவை. ஆண் மகனது தலை போன்ற வடிவமுடையது இப்பறவை; அதனால் இதனை ஆண்டலைப்புள் என்றனர்.
132. புணரி - அலைகள்.
133. ஈற்றிளம் பெண்டிர் - மகவீன்ற இளைய மடந்தையர்.
134. செல்வக் கள்ளாட்டயர்ந்து - செல்வ மிகுதியால் செருக்குற்று மயங்கி வெறுப்பவைகளைச் செய்து.
135. தொட்டு - தோண்டி.
136. கவையடி பெயர்த்து - பிளவுபட்ட அடிகளை இயக்கி. தண்டாக்களிப்பு - குறையாத மகிழ்ச்சி.
137. ஆருயிர் போனால் அது செய்த வினைக்கேற்ப வேறே பிறப்பு எய்தும் என்ற பொருளில் ஐயமுண்டோ, என்றது: செத்தநின் மகனது உயிர் வேறு பிறப்பை எய்தியிருக்கும்; அதனை மீட்டும் தருவிப்பது என்பது முடியாது என்றவாறு.
138. ஆர் இடர் - பொறுப்பதற் கரிதாகிய துன்பம்.
139. அவலப்படிற்றுரை - கேடு விளைவிக்கும் பொய்ம்மொழி.
140. ஆழியங்குன்றம் - சக்கரவாளகிரி.
141. நால்வகை மாபெருந் தீவுகள், “மஹாத்வீபம் நான்கு; இவற்றுள் ஒன்று ஜம்புத்வீபம்” என்பார் புத்த நூலார்.

142. மண்ணீடு - வெண்சுதையால் செய்த வடிவுகள்.
143. எயில் - மதில்.

144. மாரி வறம்கூரும் - மாரி வற்றிவிடும்; மழை இல்லையாய் விடும்.
145. தவத்திறம் பூண்டோள் - தவத்தின் தகுதிகொண்ட மணிமேகலை.
146. இரும்பௌவம் - பெரிய கடல்.
147. நாமம் செய்த நல்நாள் - பெயர் வைத்த நன்னாள்.
148. கையற - செயல் அற.
149. கடுகவை - பிறவி நோய்.
150. மாபெருந் தவக்கொடி - மிக்க பெரிய தவத்திறம் பூணுதற்குரிய கொடிபோலும் மகள்.
151. யாமம் கொள்பவர் - நாழிகைக் கணக்கெடுப்போர்.
152. நிறையழியானை நெடுங்கூவிளி - போக்குவரவின்றிக் கட்டுண்டு கிடத்தலால் உணவு கொள்ளாது வருந்தி, பாகர் நிறுத்தும் நிறை கடந்த யானைகள் நெடிதாய் இசைக்கும் பிளிறல்.
153. துடி - பம்பைபோலும் ஒருவகை இசைக்கருவி.
154. புனிறுதீர் மகளிர் - மகவுபெற்று வாலாமை நீங்கும் மகளிர்; கயக்கம் தீர் மகளிர் - மகவுபெற்று வருத்தம் நீங்கும் மகளிர்.
    குறிப்பு : மகவுபெற்ற மகளிர் பத்தாம் நாள் இரவில் மகப்பயந்த முதிய மகளிர் புடைசூழச் சென்று மாலையில் நீராடல் பண்டையோர் மரபு.
155. வலித்த நெஞ்சின் ஆடவர் - பகைமை யிருத்தலால் அது குறித்த நெஞ்சினை யுடைய வீரர்; வலிய பகைவர்கள்.
156. புலிக்கணத்து அன்னோர் -புலிக்கூட்டம் போன்ற வீரர்கள்.

157. இடும்பலி யோதை - பலியிடும் ஓதை - பலியிடுவோர் செய்யும் பெருமுழக்கம்.
158. நெடும்புண் உற்றோர் - போரில் பெரிய புண்பட்டவர்.
159. உலக அறவி - எல்லாவகை மக்களும் வந்து தங்குதற்குரிய அறச்சாலை.
160. காவலாளர் கண் துயில்கொள்ள - இரவு முற்றும் காவல்புரிந்த வீரர் விடியலில் கண்ணுறக்கம் கொள்ள.
    தூமென்சேக்கைத் துயில்கண் விழிப்ப - தூய மெல்லிய பள்ளியில் துயின்ற ஆடவர் மகளிர் என்ற இருபாலார் கண்களும் விழித்துக்கொள்ள.

    1.  வலம்புரிச் சங்கம் - வலம்புரி என்னும் சங்கு. வரிது எழுந்து ஆர்ப்ப - வறிதே முழங்க. புலம்புரிச் சங்கம் - புலவர் கூட்டம். பொருளொடு முழங்க - பொருள் நிரம்பிய மொழிகளைச் சொல்லி ஓசை செய்ய.

161. புகர்முக வாரணம் - புள்ளி பொருந்திய பட்டமணிந்த யானை, பொறிமயிர் வாரணம் - பொறிகள் பொருந்திய மயிரினையுடைய கோழி.
162. பணைநிலைப்புரவி - குதிரைப் பந்தியில் நிற்கும் குதிரைகள். ஆல - ஆட.
163. பணைநிலைப் புள் - மரக்கிளையில் தங்கும் பறவைகள். ஆல-முழங்க.
164. பூம்பொழில் - பூஞ்சோலைகளில், ஆர்கை - நிரம்பிய. புள் - பறவைகள். பூங்கொடியார் - பூங்கொடி போலும் மகளிர். கைப்புள் - கையில் அணிந்த வளைகள்.
165. கடவுட் பீடிகை - தெய்வங்கட்குரிய பீடங்கள். பூப்பலி - அழகிய படைச்சல்கள். கடைகொள - முற்றுப்பெற.
    கலம் பகர் பீடிகை - அணிகலம் விற்கும் கடைத்தெரு. கடையின் வாயிலுக்குப் பூச்சொரிந்து பொட்டிட்டுப் பூசை செய்தல்.
166. குயிலுவர் கடை - தோற்கருவி வாசிப்போருடைய வீட்டு முற்றம். பண்ணியம் - பண்ணமைந்த இசை.
    கொடுப்போர்கடை - கொடைவள்ளல் வீட்டுமுற்றம். பண்ணியம் - பலபண்டங்கள்.
167. உரவுநீர் அழுவம் - விரிந்த நீர்மிக்க கடல்.
168. கார்இருள் சீத்து - மிக்க இருளைக் கெடுத்து.

169. ஞாழல் - ஒருவகைக் கொன்றை; புலிநகக்கொன்றை.
170. தாழ்கண் அசும்பு - ஆழ்ந்த நீர்நிலைச் சேற்றில்.
171. குண்டுநீர் இலஞ்சி - ஆழமான நீரையுடைய பொய்கைக் கரை.
172. முடக்கால் புன்னை - வளைந்த அடிமரத்தையுடைய புன்னை.
173. வெயில் வரவு ஒழித்தல் - வெயில் நுழையாதபடி நெருங்கத் தழைத்த.
174. நடுக்குறூஉம் - நடுக்கம் கொள்ளும்.
175. எல்வளை - விளங்குகின்ற வளையினையுடையவளே.
176. விஞ்சையில் தோன்றிய - வித்தையால் தோன்றின.

177. குரல்தலைக் கூந்தல் - பூங்கொத்துக்களைச் சூடிய கூந்தல்.
178. வீழ்துயர் - மிக்க துயரம்.
179. விழுமக்கிளவி - துயரத்தைப் புலப்படுத்தும் சொல்.
180. தந்தை - கோவலன்.
181. வெவ்வினை உருப்ப - தீவினை வருத்த.
182. கோற்றொடி மாதர் - திரண்டவளையணிந்த காதலியாகிய கண்ணகி
183. உழந்த - வெட்டுண்டு வருந்திய.
184. நறுமலர் அல்லது மரம் பிறசொரியாது - நறிய பூக்களைத் தவிர, ஏனை எவற்றையும் மரங்கள் உதிர்ப்பதில்லை.
185. பிறப்பு விளங்கு அவிர்ஒளி - அறத்தகை ஆசனம் - அறவோர் காண்பார்க்குப் பழம்பிறப்பு விளங்குவதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய வீற்றிருக்கும் அழகுடைய ஆசனம்.

    1.  இருஞ்செரு - மிக்க போர்.
    2.  

186. “தொழுதகை மாதவ” - இது முதல் மணிமேகலை முன்னைப் பிறவியில் தன் முன்தோன்றி நல்லவை கூறிய பிரமதருமன் என்னும் முனிவனை அப்பீடிகையில் எதிர்பெய்து கொண்டு கூறுகின்றாள். தொழுதகை மாதவ - யாவரும் தொழத்தக்க பெரிய தவத்தையுடைய பிரமதரும முனிவ.
187. துணிபொருள் - மெய்ப்பொருள்.
188. காயங்கரை - ஒரு யாறு.
189. வாய் - உண்மை.
190. நிலநடுக்கம் - பூகம்பம்.
191. அலத்தகச்சீறடி அமுதபதி - செம்பஞ்சிபூட்டிய சிறிய அடிகளையுடைய அமுதபதி என்க.
192. தனக்குப்புக்கேன் - தனக்கு மனைவியாயினேன்.
193. பராவரும் மரபு - வழிபடும் முறைமை.
194. திட்டிவிடம் - கண்ணில்விடம் உடையதொரு பாம்பு.
195. ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று - ஞானம்பிறத்தற்குரிய தகுதி இப்பிறப்பில் இல்லை.
196. கவேரகன்னி - காவிரி.
197. தவாக்களிமூதூர் - கெடாத செல்வக் களிப்பினையுடைய பழையவூராகிய காவிரிப்பூம்பட்டினம்.
198. அருந்துயர் - உதயகுமரனால் மணிமேகலைக் குண்டாவது போன்றிருக்கும் துன்பம்.
199. வேகவெந்திறல் - சினமும் மிக்க திறலுமுடைய.
200. சினமாசு - சினமாகிய குற்றம்.
201. மனமாசு - மனவழுக்காகிய காமமும் மயக்கமும்.
202. அறச்செவி - அறத்தைக் கேட்டற் குரியகாது.
203. மறச்செவி - பாவத்தைக் கேட்கும் காது.

204. பிறவிப்பணி மருத்துவன் - பிறவி நோய்க்கு மருந்தாகிய ஞானமளிக்கும் புத்தன்.
205. திருந்தொளி ஆசனம் - அழகிய ஒளி விளங்கும் பீடிகை.

    1.  உணர்வு பாழாகி - அறிவு கெட்டு.

206. செவித்துளை - செவியில் நற்பொருளைக் கேட்கும் திறம்.
207. வறந்தலையுலகம் - வறுமையுற்ற உலகில் (அறிவு வறுமை).
208. அறம் பாடுசிறக்க - அறம் தோன்றி விளங்க.
209. சுடர்வழக்கு அற்று தடுமாறுகாலை - வெயிலவன் தோன்றுவதின்றி எப்போதும் இருளேயாகி யாவும் மயங்கும் காலத்து.
210. நாமிசை வைத்தேன் - நாவால் பரவுகின்றேன்.

    1.  நின்தமர் அலம் - யாம் உனக்குச் சிறந்த அன்புடையவர்களல்வோம்.

211. உன் குறிப்பினம் - உன் குறிப்பின்படியே நின்று ஒழுகுவேம்.
212. நீங்காத்தன்மை - எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் தன்மை.
213. கந்தசாலி - மிக்க மணமுள்ள ஒருவகை நெல்.
214. வெந்துகு வெண்களர் - வெந்துகரிந்து உதிரும் வெண்மையானகளர் நிலம்.
215. வீழ்வதுபோன்ம் - விதைக்கப்படுவது போலும்; நீ உதயகுமரனைச் சேர்வது, கந்தசாலியின் விதையைக் களர்நிலத்தே விதைப்பது போலப் பயனற்றுப்போம்.
216. திறப்படற்கு ஏதுவா - நல்ல நெறியிற் செல்வதற்கு ஏதுவாக.

    1.  அறிபிறப்பு - அறிதற்கு வேண்டியவற்றை அறியும் பிறப்பை.

217. அறம்பாடு - அறத்தின் தோற்றம்.
218. பிறவறம் உரைப்போர் பெற்றி - பிறசமய வாதிகளின் சமய அறங்கள்.
219. படிற்றுரை - பொய்யுரை.
220. அல்லியங்கோதை - மணிமேகலையே.
221. அந்தரம் - வானம்.
222. அருந்திறல் - மிக்க வன்மை.
223. கொள்கை - ஒழுக்கம்; விரதமுமாம்.
224. உணவின் பிண்டம் - உணவினாலாகிய தசைப்பிண்டம்.

    1.  இலங்கு தொடி - விளங்குகின்ற வளையினையணிந்த.

225. பொற்கொடி - காமவல்லிக்கொடி.
226. பூமியங்கிழவன் - அரசன்.
227. என்பேன் - என்று பெயர் கூறப்படுவேன்.
228. ஆய பிறவியில் - இப்போது ஆகிய இப்பிறப்பில்.
229. மன்பெரும் பீடிகை - மிக்க பெருமையான பாத பீடிகையால்.

    1.  ஆருயிர் மருந்து - சோறு.

230. தொலைவு - குறைதல்.
231. ஊர் ஆங்கண் - ஊரிடத்தே.
232. மாத்திரை - அளவு.

233. மாரன் - அறத்திற்குமாறான ஆசைகளை மனதில் எழுப்பும் ஒரு தேவன். இவன் அறத்திற்கு மாறான மன்மதன் அல்லன்.
234. தீநெறிக் கடும்பகை - பாவ வழிகளாகிய மிக்க பகை. பாவநெறி ஒருவனைப் பகைவன்போலத் துன்பத்துக்குள்ளாருக்குதலின் “கடும்பகை” யென்றார்.
235. அழிவில்லாத நிருவாணத்தை விரும்புதலால், அழியும் இயல்பினதான துறக்கம் வேண்டப்படாதாயிற்று.
236. எண்பிறக்கு ஒழிய இறந்தோய் - மாந்தர் எண்ணமுடியாத உயர்நிலையடைந் தோய். பிறக்குஓழிய - பிற்பட.
237. கண் - ஞானக்கண். கண்ணோய் - ஞானியே. இந்திரனுக்குக் கண்ணிரண்டும் கொடுத்த வரலாறு உண்மையின், கண்ணைக் கொடுத்தோய் என்றுமாம்.
238. வாய்மொழி - மெய்ம்மை.
239. நரகர் துயர் - நரகர் என்பவர்க்குற்ற துன்பம்.
240. உரகர் - நரகர் இவர் பண்டையில் பாம்பு வணக்கம்புரிந்த ஆரியர் கூட்டத்து ஒரு பிரிவினர் என்றும் கூறுப.
241. விழுப்பம் - பெருமை.
242. விடூஉம் - நீக்கும்.
243. புறங்கடை - வாயிற்புறத்தே.

244. இசை - புகழ்.
245. ஆற்றுநர்க்கு அளிப்போர் - பிறர் செய்யும் மிகையினைப் பொறுக்கும் வன்மை யாகிய செல்வர்க்கு உதவி செய்பவர்.
246. அறவிலை பகர்வோர் - பயன் நோக்கி உதவி செய்பவராவர்.
247. ஆற்றாமாக்கள் - மிக்க வறியர்.
248. மெய்ந்நெறி வாழ்க்கை - மெய்யாகிய அறநெறிக்கட் செலுத்தப்படும் வாழ்க்கை.
249. மண்திணி ஞாலத்து - அணுக்கள் செறிந்த நிலவுலகத்தில்.

250. துரகத்தானை - குதிரைப்படை
251. அரிதின் தோன்றி - அருமையாகப் பிறந்து.
252. தவ்வையர் - தமக்கையர்
253. அவ்வையர் - தாய்மார்.
254. பெறுமின் - அறிந்துகொண்மின்.
255. நடுங்காத - பிழைபடாத.
256. நற்றிறம் - நல்ல கூறுபாடுகள்.
257. பரியல் - வருந்தாதே.

258. அறவி - அறத்தொடு கூடிய வழி. பெற்றியின் - முறைப்படி. நல்கினை - உவந்து.
259. தரும தலைவன் - புத்தன்.
260. கண் அடைத்தாங்கு - இடமெல்லாம் நிரப்பி அடைத்துவிட்டாற்போல.
261. செயிர் வழங்கு தீக்கதி - குற்றம் நிலவும் துன்பக்கதி, உயிர் வழங்கும் பெருநெறி - உயிர்களெல்லாம் செல்லும் வழி.
262. தண்பனி…. மண்டிலம் - குளிர்ந்த பனியைப்போக்கிய சிவந்த கதிர்களையுடைய ஞாயிறு.
263. மலர்தலை யுலகம் - இடம் விரிந்த உலகம்.
264. விரி…செல்வன் - ஞாயிறு.
265. ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் யாண்டு. பேரறிவாளன் - புத்தன்.
266. சுருங்கைச் சிறுவழி - சுருங்கையாகிய சிறியவழி, சுருங்கை - மதகு.
267. அளவா - போதிய அளவிற்றாகாத. நல்லறம் புகூஉம் என இயைக்க.

268. தீங்குறா - மாறுபாடின்றி.
269. வளி… கொட்கும் - காற்று வலமாகச் சுழலும்.
270. நளியிருமுந்நீர் - நீர்செறிந்த பெரிய கடல்.
271. கன்று ஆர்த்தி - கன்றை உண்பித்து, கலநிறை பொழியும் - கறவைக்கலம் நிறைந்து வழியும்படிப் பொழியும்.
272. பயன் - பழம். “பழந்தேர் வாழ்க்கைப் பறவை” என்றார் பிறரும் உறைபதி - வாழுமிடம்.
273. வெரூஉப்பகை - அஞ்சுதற்குக் காரணமான பகை.
274. நொடிவன - சொல்லுவனவற்றை.
275. விடுநிலம் - மேய்ச்சலுக்காக அரசனால் விடப்பட்ட புல்வெளி. படுபுல் - தானே முளைத்துச் செழித்த புல், செற்றம் - பகைமை.
276. நேமி - வட்டம். நேமியையுடைய சக்கரம் என்க. முதல்வன் - திருமால். மகன் - பிரமன்.

277. தெருமரல் உள்ளத்து - தடுமாறுகின்ற நெஞ்சத்தையுடைய விலங்கு மகன் என இகழ்வார், “ஆன்மகனாதற்கு ஒத்தனை” என்றனர். மகனல்லாய் - ஆறறிவுடைய மகன் அல்லை.
278. ஆன்மகன் - ஆனுக்குமகன். மான்மகன் - மானுக்குமகன். அசலன், சிருங்கி, விரிஞ்சி முதலிய அந்தணர் முறையே ஆனுக்கும், மானுக்கும், புலிக்கும் பிறந்தவர் என்க.
279. புரையோர் - உயர்ந்தோர், கேசகம்பளன் என்பான் ஒரு முனிவன்.
280. ஓங்குயர் - மிகவுயர்ந்த.
281. நடவை - நடந்து செல்லும் வழி.
282. தமர் இல் தீர்ந்த - தனக்கு உரியவர் இல்லத்தினின்றும் ஒழுக்கக் கேட்டால் நீங்கின.

283. காப்புக்கடை கழிந்து - கொண்ட கணவனது காவலைக் கடந்து (வியபிசாரம் செய்து)
284. எறிபயம் உடைமையின் - கண்டோர் வருத்துவர் என்னும் அச்சத்தால். இரியல் மாக்கள் - நீங்கிச் செல்லும் மாந்தருடன். ஆடிய - ஆடுவதற்கு. செழியன் - பாண்டியன்.
285. தோன்றா போந்தேன் - பிறர் கண்ணுக்குத் தோன்றாதபடி வந்து விட்டேன். துடவை - தோட்டம். இட்டனென் - வைத்துவிட்டு.
286. அல்லல் உற்று - துயர் மிகுந்து.
287. சொல்லுதல் தேற்றேன் - சொல்லிற்றிலேன். சொற்பயம் இன்மையின் - சொல்வதால் ஒரு பயனும் இல்லாமையால். புல்லல் ஓம்பன்மின் - தீண்டன்மின்.
288. முதல்வன் - பிரமன்.
289. கடவுட்கணிகை - திலோத்தமை. சிறுவர் இருவரும் என்க. இருவர் - வசிட்டனும் அகத்தியனும்.
290. புரிநூல் - பூணுநூல்.

    1.  காணார் - குருடர்

291. பேணுநர் இல்லோர் - அகதிகள்.
292. இசைத்து - அழைத்து, உடனூட்டி - ஒருங்கேயிருந்து உண்ணச் செய்து.

    1.  அழியல் - வருந்தாதே. கொள்ளாய் - கொள்வாயாக.

293. வறம் கூரினும் - வறிதாய் விடினும். வறம்கூரா - வறுமையுறாது.
294. தொலைவு - குறைதல்.
295. சிந்தா தேவி - சிந்தா விளக்காகிய தேவி
296. நியமம் - கோயில்.
297. நந்தா - அவியாத. கல்வெட்டுக்கள் “நுந்தா விளக்கு” என்பதும் இதுவே.
298. நாமிசைப்பாவாய் - நாவிடத்தேயிருந்து நல்ல சொற்களைச் சொல்விக்கும்தேவி.

    1.  ஈண்டுச் செய்வினை - இவ்வுலகத்தே செய்யும் அறத்தின் பயனை.

299. ஆண்டு நுகர்ந்திருத்தல் - தேவருலகத்தே நுகர்ந்து கொண்டிருத்தலை.
300. காண்டகு சிறப்பின் - கண்டுகொண்டிருக்கும் சிறப்பினையுடைய.
301. புறங்காத்து ஓம்புநர் - பிறரைப் பாதுகாப்பவர்.
302. பற்றற முயல்வோர் - இருவகைப்பற்றும் கெட முயல்பவர்.
303. யாவரும் - ஈவோரும் கொள்வோருமாகிய எவரும்.
304. திருந்து முகம் - உவகையால் மலர்ந்த முகம்.
305. கடிஞை – பிச்சைக்கலம்

    1.  விடர் - தீயொழுக்கமுடைய காமுகர்.

306. விட்டேற்றாளர் - பிறரை இகழ்ந்து கடுஞ்சொல் சொல்லும் தீயவர்.
307. நடவைமாக்கள் - வழிச்செல்லும் தீயவர். நகை - அற்பர்.
308. வட்டு - உருண்டை யுருட்டியாடல். வம்பக்கோட்டி - பயனில்சொல் கூறித் திரிவோர் கூட்டம்.
309. முட்டா வாழ்க்கை - குறைவில்லாத வாழ்வு.
310. திருவின் செல்வம் - கண்டோர் மதிக்கத்தக்க பெருஞ்செல்வம்.
311. ஒருதனி - தன்னந்தனியாக, பெருமகன் - அரசன், இந்திரனுமாம். இந்திரன் செல்வம் முனிவன் சாபத்தால் கடல் கொள்ளப்பட்டதென்றொரு கதையுண்டு.
312. மாநீர் வங்கம் - கடலிற் செல்லும் கலம்.
313. அருந்துவோர் - உணவு ஏற்று உண்போர்.
314. குமரி மூத்த பாத்திரம் - வறிதே நெடுநாள் கிடந்த கலம்.

315. வங்கமாக்கள் - மரக்கலத்துக்கு உரியவர். 2. கால் - காற்று.
316. மால் இதை - மரக்கலத்தின் பெரிய பாய்.
317. மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்கள்.
318. பொறேஎன் - விரும்பேனாயினேன்.
319. தவந்தீர் மருங்கில் - தீவினைப்பக்கத்தேனாய். பாத்திரம் சுமந்து என் - ஏற்போரில்லாத போது இப்பாத்திரத்தைச் சுமத்தலால் பெறும் பயன் என்னை?
320. உயிர் காவலனாகிய ஒருவன் வந்து தோன்றும்; உயிரைக்காக்கும் ஒருவன் வருவன்.
321. குடர்த்தொடர்மாலை - குடராகிய மாலை.
322. பொன் அடர் முட்டை அகவயினான் - பொன் தகட்டாலான முட்டையின் உள்ளிடத்தான்.
323. தற்காத்தளித்த தகை ஆ - தன்னைப் பாலூட்டி வளர்த்த அழகிய ஆ.
324. ஒற்கா - ஓல்கா ; தளராத.
325. ஆவயிற்று - ஆவின் வயிற்றில், அமரர்கணம் - தேவர் கூட்டம்.
326. தீங்கனி நாவல் - தீவிய கனிகளையுடைய நாவல் மரம். தீவு - நாவலந்தீவு.
327. புண்ணிய நன்னீர் - புண்ணியப் பொருளாகிய நல்ல நீர். பூ - வானவர் சொரியும் பூ,
328. மண் - மண்ணுலகம். வேந்தன் - பூமிசந்திரன் என்னும் அரசன்.
329. புண்ணிய முதல்வன் - புண்ணியத் தலைவனான முனிவன்.
330. அரைசு - அரசு.
331. நிரைதார் வேந்தன் - வரிசையுறத் தொடுத்த மாலையணிந்த அரசன்
332. துறக்க வேந்தன் - இந்திரன். துய்ப்பு - அவியுணவு.
333. அறக்கோல் - அறம் திரியாத செங்கோல்.
334. நலத்தகை - நற்பயன்; செல்வக்காலம்.
335. அலத்தற்காலை - வறுமைக் காலம். ஆகியது - உண்டாயிற்று.
336. ஒழித்துவைத்தாங்கு - பயன்படுத்தாது ஓரிடத்தே வறிதே வைத்தது போல.
337. வறன் ஓடு உலகில் - வறுமை விரியப் பரந்துள்ள உலகில். வான்துயர் - மிக்க துன்பம்.
    அறனோடு ஒழித்தல் - அறம் செய்தற்குரிய அமுத சுரபியாகிய ஒட்டினைப் பயன் படுத்தாது வைத்திருத்தல்.

338. மதுமலர்க் குழலாள் - தேனையுடைய பூவணிந்த கூந்தலையுடைய மணிமேகலை.
339. திப்பியம் - வியப்புத் தருவது.
340. குளன் அணி தாமரை - குளத்திடத்தே அழகுற மலர்ந்த தாமரை நாப்பன் - நடுவே.
341. திருமலர் - அழகு சிறந்த தாமரைப்பூ.
342. வான் தரு கற்பு - மழை பெய்விக்கும் கற்பு.
343. தனி ஓங்கிய - நிகரறச் சிறந்த. தகைமையள் - தகுதியுடையள்.
344. புகல்வேண்டும் - விரும்பிச் செல்லவேண்டும்.

345. ஊரீரேயோ - ஊரில் உள்ள சான்றோர்களே. ஈமம்- விறகடுக்கு.
346. சாற்றினள் - சொல்லினள்.
347. முடலை விறகு - முறுக்குண்டு கிடக்கும் விறகு. எரி பொத்தி - எரி மூட்டி. முளியெரி - மிக்க நெருப்பு.
348. பாயற்பள்ளி - படுக்கையிடம். உடன்படுத்து வைத்தான் என இயைக்க, கூறை-புடைவை.
349. ஆடிய - பூசிக்கொண்ட.
350. தொல்நிறம் - பழைய நிறமும் ஒளியும், வழாஅது - கெடாமல்.
351. விரை - மணம் கமழும்.
352. திருவின் செய்யோள் - திருமகளாகிய செய்யவள்.
353. தீவினையாட்டி - தீவினை செய்தவள்.
354. ஊர்திரை - ஒன்றன்பின் ஒன்றாக வூர்ந்து செல்லும் அலைகள். உய்ப்ப - செலுத்த.
355. நக்க சாரணர் - உடையில்லாமல் திரிபவர். இதனால் நாகர் “நக்க சாரணர் நாகர்” எனப்படுகின்றனர்.
356. கண்மணி யனையான் - கண்ணிலுள்ள மணியொப்பவனான கணவன்.
357. புண்ணியம் முட்டாள் - புண்ணியம் செய்தலில் குறையாளாய்.

358. அரும்பெறல் மரபு - பெறுதற்கரிய முறைமை (கற்பு).
359. வியப்பினள் - தகுதியுடையவள். பெண்டிரும் : உம்மை, உயர்வுச் சிறப்பு.
360. குழிசி - பானை. கழிமுடைநாற்றம் - மிக்க புலால் நாற்றம்.
361. உணங்கல் - வற்றல்
362. எண்கு - கரடி. பிணவு - பெண்கரடி.
363. அருந்துதல் - உணவு.
364. உழந்தோன் - துன்புற்றான்.
365. வெங்கள் - புளிப்புமிக்க கள்;விரும்பத்தகும் கள்ளுமாம்.

366. வெவ்வுரை - கொடிய சொல்.
367. ஞாலத்து உறுபயன் - உலகத்து உயிர் வாழ்தலாலாகும் பயன்.
368. கோறல் - கொல்லுதல்
369. கயக்கறுமாக்கள் - கயங்குதல் இல்லாத அறிவுடையோர் கடிந்தனர் - விலக்கினர்.
370. உரவோர் - அறிவுடைய பெரியோர்.
371. செவ்வனம் - தெளிவாக.
372. உயிர்வாழ்வுழி உடல் உற்றதை யுணரும் என்க. உற்றது - உடலிற்பட்டது.
373. உடம்பு தடிந்து, எரியூட்டினும் உணராது என்க.
374. தடிந்து - குறைந்து (வெட்டி).

375. போனார் - போன உயிர். புக்கில் - புகுமிடம்.
376. சேண்சேறல் - நெடுந்தொலைவு போதல்.
377. பூண்ட யாக்கை - உயிர் நிற்றற்குக் கொண்ட உடம்பு.
378. ஓம்புதல் தேற்றேன் - காத்தலைச் செய்யேன் ; இழந்து விடுவேன் என்பதாம்.
379. தமக்கு ஒழிமரபின் நல்லறம் என இயைக்க. தமக்கென்றே வரையறுத்த முறைமை யினையுடைய நல்லறம்.
    6 படர்குவை - செல்வாய்.
380. அடுதொழில்-கொல்லுதல்.
381. மூத்துவிளிமா - முதுமையுற்று இறக்கும் உயிர்கள்.
382. தீத்திறம் - கொலைத்தொழில்.

383. நெடியோன் - திருமால். மயங்கி-அம்பரீடனுக்கு முனிவர் இட்ட சாபத்தை யேற்றதனால் மயங்கி.
384. அடலரு முந்நீர் - தடுத்தற்கரிய கடல்.
385. நெடுமலை - நெடும் பாறைகள்.
386. அணங்குடை யளக்கர் - முழங்குதலையுடைய கடல். முழங்குகடலை. வருத்தத் தால் புலம்புவதாகக் கருதிக் கூறுதலின். “அணங்குடையளக்கர்” என்றாள். பட்டேன் - வருந்தினேன்.
387. ஆருயிர் மருத்துவி - ஆருயிர்கட்கு மருந்தாகிய உணவு அளிப்பவள். உயிர்கள் எய்தும் நோய்வகை யெவற்றிற்கும் பெரிய நோய் பசியாதலின், அது நீக்கும் உணவை. “ஆருயிர் மருந்து” என்றும், அதனைத் தருபவளாதலின், “ஆருயிர் மருத்துவி” யென்றும் கூறினாள்.
388. துன்னிய - நெருங்கி நீங்காது நின்ற.

389. திப்பியமானது - தெய்வத் தன்மையுடையது.
390. சிதைத்தாய் - காலால் இடறிக் கெடுத்தாய்.
391. அந்தரம் செல்லும் - வானத்தூடு செல்லும்.
392. தந்தித்தீ - யானைத் தீ யென்னும் நோய்.
393. சம்புத்தீவு - நாவலந்தீவு.
394. கம்பம் - நடுக்கம்; ஈண்டுக் கேட்டின் மேற்று. கழிபெருஞ் செல்வர் - மிக்க பெரிய செல்வமுடையோர்.
395. நோன்நகர் - அடுத்தாரைத் தாங்கும் வன்மை படைத்த நகரம். (காவிரிப்பூம் பட்டினம்)

396. நிலனொடுபோகி - நிலத்தே நடந்து சென்று.
397. ஊரூராங்கன் - ஊர்தோறும்.
398. ஆரும் - பாதுகாப்போர் ஒருவரும்.
399. இடுவோர் - உணவு இடுவோர். தேர்ந்து - நோக்கி.
400. வடுவாழ் கூந்தல் - வகிர்ந்த கூந்தலையுடைய மணிமேகலையே.

401. கொடுந்துயர் - மிக்க துன்பம்.
402. மாதவர் பள்ளி - அறவணவடிகள் உறையுமிடம்.
403. நகுதக்கன்று - பிறர் எள்ளி நகைத்தற்குரிய தொன்றாம்.
404. தக்கு - தக்கது. எள்ளுரை - இகழ்ச்சியுரை.
405. காதலன் வீய - கோவலன் இறக்க.
406. போதல் செய்யா - நீங்காத.

407. நளியிரும் பொய்கை - மிக்க நீர் நிறைந்த பொய்கை.
408. முளியெரி - மிக்க தீ. முதுகுடி - பழங்குடி.
409. கைத்தூண் வாழ்க்கை கடவியம் - கையிடத்ததாகிய உணவைப் பெற்றுண்டு வாழும் தகுதியுடையோம்.
410. பான்மையின் - முறைமையுடைய.

411. நறுந்தாது - நறிய தேன். நயன் - தேனாகிய பசை.
412. வறும்பூ - தேன் இல்லாத வறிய பூ.
413. வினையொழிகாலை - நல்வினைப்பயன் தீரும் காலத்தே தானும் நீங்கி விடும்.
414. போது அவிழ் செவ்வி - மணத்துக்குரிய சமயம். மணிமேகலையை வல்லியென்ற
    தனால், அவள் மணத்துக்குரிய செவ்வி எய்திய நிலையை, ….போதவிழ் செவ்வி” யென்றாள். உதயகுமரனாம் வண்டு என்க.
415. சிதையா உள்ளம் - வேறொன்றால் அழியாத உள்ளம்.
416. கடிஞை - பிச்சைக்கலம்.
417. பிச்சைமாக்கள் - பிச்சையெடுத்துண்பவர்.
418. சுடுமண் - செங்கல். அரங்கு - நாடகவரங்கு.
419. வடு - குற்றம். குடிக் குற்றப்பட்ட மகளிர் தலைமேல் செங்கல் ஏழு ஏற்றி அரங்குசூழ வருவித்தல் பண்டைமரபு.
420. மனையகம் புகா மரபினன் - மனையகத்துட்புகேன் என்றவாறு.

421. அரவ வண்டு - இசை யொலிக்கும் வண்டு. தேன், வண்டு, சுரும்பு, மிஞிறு என்பன வண்டின் வகை.
422. தருமணல் ஞெமிரிய -புதுமணல் பரப்பிய. திருநாறு ஒரு சிறை - அழகு திகழும் ஒரு பக்கத்தே. விதானம் - மேற்கட்டி, பொன்னால் சுவரும். பவழத்தால் தூணும், முத்தால் விதானமும் விளங்க, பளிங்கினால் செய்த மண்டபம் என்க.
423. துளங்கும் மான் - ஒளியால் அசைத்தலையுடைய சிங்கம். ஊர்தி ஈண்டு இருக்கை
    யென்னும் பொருளது.
424. வெண்டிரை விரிந்த - வெள்ளிய அலைபோல விரிந்த.
425. கோதையர் - மகளிர்.

426. வாள் திறல் குருசில் - வாட்போரில் சீரிய திறல்படைத்த அரசகுமரனே.
427. கடியிற் காவல் - திருமணத்தால் பிறக்கும் காவல். நல்லரங்கு - ஏழுகோல் அகலமும், எண்கோல் நீளமும், ஒருகோல் குறட்டுயரமும் வாய்தலிரண்டுமுடைய நாடகமேடை.
428. சுரும்பாகிய நாண்பூட்டி, கரும்பாகிய வில்லை வளைத்து, அரும்பாகிய அம்பு கொடுத்து எய்ய.
429. செருக்கயல் நெடுங்கண் - செருச்செய்யும் கயல்மீன்போலும் நீண்ட கண்ணால், சுருக்குவலை படுத்து நெஞ்சம் அகப்படுத்துக்கொண்டு - சுருக்கு வலை வீசி நெஞ்சினை அதன்கண் அகப்படுத்திக்கொண்டு.
430. பண்தேர்மொழியின் - பண்ணிசைபோலும் இனிய சொற்களால், பயன் - பொருள். வண்டின் - வண்டுபோல.
431. கொண்டி மகளிர் - பொருளைக் கவர்ந்துகொள்ளுதலையுடைய மகளிர்.
432. பான்மையின் - கொள்ளுதற்குரிய முறைப்படி.படிற்றுரை - பொய்யுரை.

433. உதயகுமரன் நெஞ்சில் நினைக்குந்தோறும் அவன் மனக்கண்ணில் மணிமேகலை தன் முழுமேனியும் தோன்ற நிற்றலின், “உடம்போடு… கள்வி” என்கின்றான். தன் நெஞ்சினை அவள் கவர்ந்தேகியதனைத் தான் அறியாமையின், “வஞ்சக் கள்வி” என்றான்.
434. நோற்றூண் வாழ்க்கை - விரதம் காத்துப் பிச்சை யேற்றுண்டு வாழும் வாழ்க்கை. நொசிதல் - நுணுகல். தவமுடையார் தொழில் தவத்தின்மேல் நின்றது.
435. ஏற்றூண் - இரந்துண்டல்.
436. கேள்வியாளரின் - நுண்ணிய நூற்பொருளைக் கேட்ட சான்றோர்களால்.
437. தோட்ட செவி - துளைக்கப்பட்ட செவி. பல நுண்பொருளைக் கேட்டுப் பயின்றோர் செவியைக் “கேள்வியால் தோட்கப்பட் செவி” யென்றல் மரபு. “கேள்வியால் தோட்கப்
    படாத செவி” என்பது திருக்குறள்.
438. இடும்பைக் கொள்கலம் - துன்பமெல்லாம் கொண்டுவைக்கும் கலம்.
439. மண்டு அமர் முருக்கும் களிறு - நெருங்கிய போரில் முந்துற்றுச் சென்று பெரும் களிற்றியானை.
440. வேட்டது - விரும்பியது.

441. பெரும் பசி - யானைத்தீ என்னும் நோயாலுண்டாகிய பசியால்.
442. மாயையின் - மாயமாக.
443. இம்மண்ணீட்டு யார் - இம்மண்ணாற் செய்த பாவைகளுள் யார்.
444. பாடுகிடப்பேன் - வரங்கிடப்பேன்.
445. இமையோர் பாவை - தேவர்களுடைய தலைவி.
446. பவளச் செவ்வாய் - பவளம்போல் சிவந்த வாய். தவள வாள் நகை - வெள்ளிய ஒளிபொருந்திய பற்கள்.
447. முரிந்து - வளைந்து
448. குவிமுள், கோணம் (தோட்டி) கவைமுள் மூன்றும் யானையை அடக்கும் கருவி, கடி கொள - காவல் கொள்ள. வாள் நெகை,குவிமுள்ளும் ; கண் கோணமும்; புருவம், கவை, முள்ளுமாகக் கொள்க.
449. கல்விபாகர் - கல்வியாகிய பாகர். காப்பு வலை ஓட்டி - காத்தலாகிய வலையைச் சிதைத்து.

450. “வல்வாய் யாழின்” என்றான். வலிய யானை யாழிசைக்கு மயங்கி வணங்குதல்
    போலத் தன்னைத் தன் யாழிசைபோலும் மொழியால் வணக்கினமை தோன்ற.
451. முதுக்குறை முதுமொழி - பேரறிவு சான்ற அறிவு மொழி.
452. புதுக்கோள் யானை - புதிதாகக் கொண்ட யானை.
453. உன் அடி தொட்டேன் - உம் திருவடி தொட்டுச் சூள் செய்தேன்.

454. ஏடவிழ்தார் - இதழ் விரிந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலை.
455. நாநல் கூர்ந்தனை - சொற்பயன் இழந்தாய்.
456. அயர்ப்பாய் - மறந்திடுக.
457. பையரவல்குல் - பாம்பின் படம்போலும் அல்குலையுடைய மணிமேகலை.
458. முத்தை முதல்வி - முதுமையும் முதன்மையுமுடைய சம்பாபதி. அடி பிழைத்தாய் - அடியில் வணங்காது குற்றப்பட்டாய்.
459. இளங்கொடி - மணிமேகலை.

460. கைவிடலீயான் - கைவிடான். “அரசு துயிலீயாது” (பதிற். 12)
461. காய்பசியாட்டி - மிக்க பசிநோய் உடையளான.
462. ஆற்றாமாக்கட்கு - வறியவர்க்கு.
463. விழுத்தகைத்து - சிறப்புடைத்து. என்று - என்று கருதி.
464. துனித்தனர் - ஆராய்ந்து சொல்லினர்.
465. குழலிசை காட்ட - வேய்ங்குழலின் ஓசையைச் செய்ய.
466. பொங்கர் - சோலை. 8. புணர்துணை - பெண்ணன்னம்.
467. இருசிறை - இரண்டு சிறகுகளையும். ஒரு சிறை - ஒரு பக்கத்தே.

468. தம்முன் - பலதேவன். பிஞ்சை - நப்பின்னை; அன்னை, “மென்றோளஞ்ஞை” (அகம், யென வந்தாற்போல.
469. கோங்கலம் - கோங்கம்பூ.
470. பாங்கு - அருகே.
471. ஓர் பாவை - ஒரு பெண். “கோங்கலருக்குப் பொன் தட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமை.”
472. அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் - அழகிய பூக்கள் நிறைந்த சோலைக்குள்.
473. பிணவுக்குரங்கு - பெண்குரங்கு.
474. மடவோர்க்கு - மகளிர்க்கு.
475. கடுவன் - ஆண் குரங்கு. ஊக்குவது - ஆட்டுவது. “ஐயசிறி தென்னை யூக்கி” (கலி) என்றாற்போல.
476. தளவு - ஒருவகை முல்லை.
477. முருகு - நறுமணம்.
478. கருவிளம் பொங்கர் - கருவிளம் புதர்.

479. குறுங்கால் நகுலம் - குறுகிய கால்களையுடைய கீரி.
480. பிறழ்ந்து - நெறிமாறி.
481. இறும்பு - குறங்காடு. வெறி - ஆடு.
482. இடுங்கற்குன்றம் - செய்குன்று.
483. பரப்புநீர்ப் பொய்கை - நீர் நிறைந்த பரந்த பொய்கை.
484. கரப்புநீர்க்கேணி - மறைதலையுடைய நீர் நிறைந்த கிணறு; இது அந்தக் கேணி யெனப்படும்.
485. ஒளித்துறையிடம் - ஒளிந்திருக்குமிடம்.
486. மகதவினைஞர் - மகதநாட்டுத் தொழிலாளர்.
487. தண் தமிழ்வினைஞர் - தண்டமிழ் நாட்டுத் தொழிலாளர்.
488. போதிகை - தூண் முடியில் இருக்கும் போதிகைக் கட்டை; இதனைப் போதைக்கட்டையென்பர்.
489. தவளநித்திலம் - வெள்ளிய முத்து.
490. கோணச் சந்தி - கோணமாகிய சந்தி. விதானம் - மேற்கட்டி.
491. தமனியம் - பொன். வனப்பு - அழகு.

492. ஆர்புனைதெரியல் - ஆத்திப்பூவால் தொடுத்த மாலை.
493. காரியாற்றுக்கொண்ட - காரியாற்றின் கரையில் வென்றி பெற்ற. தோற்றவன் “காரியாற்றுத் ‘துஞ்சிய நெடுங்கிள்ளி” என்பவன்.
494. வலிகெழு தடக்கை - வலிபொருந்திய பெரிய கை.
495. ஒளி - அரசர்பாலுள்ள கடவுட்டன்மை யென்பர்.
496. வம்பமாதர் - புதியளாய் வந்த காயசண்டிகை.
497. அகவயின் - உள்ளே.
498. பெரும்பெயர் - மிக்க புகழ்.
499. ஐயப் பாத்திரம் - பிச்சைப் பாத்திரம் - அமுதசுரபி.
500. மொய்கொள் மாக்கள் - நெருங்குகின்ற மக்கள். மொசிக்க - உண்ண.
501. தாங்கரும் தன்மை - தாங்குவதற்கு அருமையான தன்மை.
502. யாங்கு ஆகியது - எவ்விடத்தே பெறப்பட்டது.

503. விரைத்தார் - மணம் கமழும் மாலை.
504. விஞ்சைமகள் - வித்தியாதரப்பெண்; பல வித்தைகளையுடைய பெண்.
505. விழவணி மூதூர் - விழாவால் அழகுகொண்ட பழைய ஊராகிய இக்காவிரிப்பூம் பட்டினத்தில்.
506. வானம் வாய்க்க - மழை தப்பாது பெய்க.
507. அம்பலம் - ஊரம்பலம்.
508. ஊனுடைமாக்கள் - வெற்றுடல் தாங்கும் மக்களுக்கு. உயிர்மருந்து - உணவு.
509. சீத்து - இடித்துத் தகர்த்து.
510. ஆக்குமது - கோட்டம் அமைப்பதே செயற்பாலது.

511. பொருள்புரி நெஞ்சின் புலவோன் - வாய்மை நான்கையும் விரும்புகின்ற நெஞ்சமுடைய புத்தன். பொருள் - மெய்ம்மை.
512. அட்டிற் சாலை - உணவு சமைக்குமிடம்;
513. அருந்துநர் சாலை - உணவு உண்போர் சாலை.
514. மதியோர் - அறிவுடையோர்.
515. பொதியில் - பொது இடம்; அம்பலம்.
516. கற்றறிவிச்சை - கற்றறிந்துள்ள வித்தைகள் பலவும்.
517. முதுக்குறை முதுமொழி - அறிவுப் பொருள் நிறைந்த சொல்.

518. தண் அறல் - குளிர்ந்த கருமணல்.
519. பிறை நுதல் - பிறைபோலும் நெற்றி.
520. தகை - அழகு.
521. விறல் வில் புருவம் - விறல் படைத்த வில்லொத்த புருவம்.
522. இறவின் உணங்கல் - இறாமீனின் வற்றல்.
523. கழுநீர்க் கண் - செங்கழுநீர் மலர்போன்ற கண்.
524. வழுநீர் - பீளை வடியும் கண்ணீர்.
525. குமிழ் - குமிழம்பூ.
526. நகை - பல்.
527. சுரை வித்து - சுரைக்காயின் விதை.
    11 இலவிதழ்ச் செவ்வாய் - இலவம் பூவின் இதழ்போல் சிவந்த இதழ்களையுடைய வாய்.
528. புலவுப்புண் - புலால் நாற்றம் நாறும் புண்.
529. வள்ளைத் தாள் - வள்ளைக் கொடியின் இலை.
530. இறும்பூது - பெருமிதம்.
531. தாழ்ந்து ஒசி மடல் - தாழ்ந்து வளைந்து வீழ்ந்து தொங்கும் மடல்.
532. திரங்கி - திரைந்து.

533. வேய்த் தோள் - மூங்கில் போலும் தோள்.
534. உகிர் - நகர்.
535. குறங்கிணை - துடையிரண்டு.
536. ஆவக் கணைக்கால் - அம்புப் புட்டில் போன்ற கணைக்கால்.
537. தளிரடி - தளிர் ஒத்த அடி.
538. புறங்காட்டுவ - புறத்தே தோன்றும்படி தெரிகின்றன.
539. முனி - உலர்ந்து.
540. புலால் மறைத்து - புலால் நாறாதபடி மறைத்து.
541. தூசி - புடைவை.
542. தற்பாராட்டும் - தன்னைப் பாராட்டுகின்ற.
543. பிறன்போல் -அயலான்போல.
544. மதுக்கமழ் அலங்கல் - தேன் மணக்கும் மாலை.
545. பவளக் கடிகை - பவளத் துண்டம்.
546. குறிப்பு - இங்கிதம்.

547. மாயவிஞ்சை - மாயவித்தை.
548. வம்பலன் - புதியோன்; அயலான்.
549. இடையிருள் யாமம் - நள்ளிரவு.
550. வேக வெந்தீ - கொடிதாய்ப் பற்றும் நஞ்சு.
551. போகுயர் புற்றளை - மிகவுயர்ந்த புற்றின் புழை.
552. ஆகம் - மார்பு.
553. அலர் உறுத்த - மணத்தால் அவன்இருப்பினைக் காட்ட.
554. ஊழடியிட்டு - முறையே அடிமேல் அடி வைத்து.

555. எயிறு நஞ்சு அரும்ப - பல் விடத்தைக் கக்க.
556. பை விரித்தென - படத்தை விரித்தாய் போல.
557. இருந்தோன் - இருந்த காஞ்சனன்.
558. சுரும்பு அறை மணித் தோள் - வண்டு ஒலிக்கும் மாலையணிந்த அழகிய தோள்.
559. கைம்மை - இவள் கைம்பெண்; இவள் கையைப் பற்றுதலாகிய இழி செயல்.
560. வெவ்வினை - கொலை.

561. திட்டிவிடம் - கண்ணில் நஞ்சுடைய பாம்பு.
562. கட்டழல் - மிக்க நெருப்பு.
563. தவிர்விலேன் - நீங்காது செலுத்தினேன்.
564. பிணிப்பறு மாதவன் - பற்றற்ற மாதவனாகிய புத்தன்.
565. ஒழிவின்று - குறையாமல்; சிறிதும் விடாமல்.
566. அறந்தரு சால்பு - அறத்தால் உண்டாகும் இன்ப நிறைவு.
567. இடர் வினை - துன்பத்தைச் செய்யும் வினை; காதற் செய்கை.
568. வை வாள் - கூரிய வாள்.
569. மயக்குறு வெகுளி - அறிவை மயக்கும் சினம்.

570. சேயரி நெடுங்கண் - சிவந்த அரிபரந்த நெடிய கண்ணையுடையாய்.
571. அல்லியந் தார் - பூவின் அகவிதழ்களால் தொடுக்கப்பட்ட மாலை.
572. மகன் - கணவன்.
573. மகள் - மனைவி
574. தடுமாறு பிறவி - மகனுமகளுமாய் மாறிப் பிறந்து இறந்து வரும் பிறவி. தாழ்தரு - தங்கும்.
575. விழுமம் - துன்பம்.
576. அவலவெவ்வினை - மெலிவை யுண்டுபண்ணும் கொடிய வினை. வினையினின்றும் தம்மைத் தலைவனாகிய கடவுள் காப்பன் என்போர் அறியாதார் என்க. இஃது இறைவனொருவனுண்மை துணிந்து வினைத்துயர் நீங்க அன்பு நெறியில் வழிபடும் சைவர் முதலாயினார்க்கு மறுப்பு.

577. மறம் செய்துளது - பாவம் செய்யப்பட்டதாயின்.
578. தீங்கு - துன்பம்.
579. கணவனை - உதயகுமரனை.
580. வருந்து துயர் - பிரிவெண்ணி வருந்துதற்கு ஏதுவாகிய துயரம்.
581. காவல் - சிறை.
582. கொட்பு - கொள்கை.
583. மாதவன் - அறவணவடிகள்.
584. காதலி - அன்புடையளாகிய.
585. புரையோர் - உயர்ந்தோர்; ஈண்டுச் சங்கத்தார். போகலும் போகுவை - போவாய்.
586. பொருளுரை - அறவுரை. பொருந்தி - கேட்டு.
587. மாநீர் - கடல்.

588. மாயம் இல் செய்தி - குற்றமில்லாத சிறப்பினையுடைய.
589. இன்னும் சேறல் - மறுபடியும் செல்வது, மணிமேகலை ஆபுத்திரனுடன் புறப்பட்டு, அவன் அங்கத்தில் வர, தான் விசும்பு வழியாக மணிபல்லவம் அடைந்தாள். 25ஆம் காதை காண்க.
590. சாவக மன்னன் - ஆபுத்திரன்
591. தீவம் - மணிபல்லவம்.
592. அறிபொருள் - அறிந்த சமயப் பொருள்.
593. ஓங்கிய - உயர்ந்த உயர்ந்தோர் பலரால் - உயர்ந்தோர் பலர் உளர்.
594. மன் - நிலைபெற்ற. கணம் - கூட்டம்.
595. தொன்று முதிர் கந்து - மிகப் பழமையான தூண். மயன் - தெய்வத் தச்சன்.
596. உறு துணை - மிக்க துணைவன்.

597. உடன் உறைந்தார் - உடனிருந்து கண்டவர்.
598. பொருந்துபு - பொருந்த,
599. நா நனி வருந்த - நா மிகத் தடிப்பேற.
600. தேறுக - தெளிவாய்.

601. உவாமதி - முழுத்திங்கள்.
602. நிவந்தோங்கு - மிகவுயர்ந்த, ஒரு பொருட் பன்மொழி.
603. அருட்கண் விழிக்க - அருளாகிய அறமே தழைப்பிக்க.
604. திகிரி - அரசாட்சி. அரசாட்சியை உருளை (திகிரி) என்றமையின் அதற்கேற்ப, “உருள்க” என்றார். செல்க என்பது கருத்து.
605. வரைந்த - அறுதியிட்ட.
606. கன்றிய - செறிந்த; அடிப்பட்ட.
607. தீவினை உருப்ப - தீவினை வந்து தூண்ட.
608. ஈறு - கேடு.
609. பார் – சோணாடு

610. நன்று - அறம்.
611. நலம் பல - நற்செய்திகள் பல.
612. முடிபொருளுணர்ந்தோர் - “பாரமார்த்திக ஞானிகள்”
613. முது நீர் உலகு - பழைமையான கடல் சூழ்ந்த உலகில்.
614. கடியப்பட்டன - விலக்கப்பட்டன. அவை, கள், பொய், களவு, கொலை, காமம்.
615. அது - காமம்.
616. அல்லவை - ஏனைய கள் முதலிய நான்கு.
617. தாங்கா நரகம் - பொறுக்கமாட்டாத துன்பம் தரும் நரகம்.

618. மதிமருள் வெண்குடை - முழுமதி போலும் வெண்கொற்றக்குடை.
619. வாய் வாள் - வெட்டுதலில் தப்பாத வாள்.
620. வஞ்ச விஞ்சையன் - கொலையை மனத்தே கொண்டிருந்த காஞ்சனன். அத்தீவினை, அவளை ஏற்றி, இவனை உய்த்து, விஞ்சையனைக் கூஉய், மனத்தையும் கலக்கி, வாளால் எறிந்தது என இயைக்க.
621. செயற்பாலது - செய்தற்குரிய கொலைத் தண்டத்தை.
622. தகவிலன் - அரசு நெறியறியும் தகுதியில்லான்.
623. மன்னவன் - மனு வேந்தன்.
624. துயர் வினையாளன் - தீவினையாளன் (உதய குமரன்)
625. உறுவதன்முன் - அடைவதற்கு முன்பே.
626. கணிகை - மாதவி. மகள் - மணிமேகலை. தன் மகன் கொலையுண்டற்கும், தன் குடி பழி யெய்துதற்கும் காரணமாதலின், மணிமேகலையைத் தாய்முறை கொண்டு, “கணிகை மகள்” என அரசன் இகழ்ந்தான் என்க.

627. தோன்ற - தான் தேவியின் அடி வீழாமைக்குரிய ஏது தோன்ற.
628. கொற்றம் - அரசவுரிமை.
629. செற்ற தெவ்வர் - போரை விரும்பும் அரசர்.
630. செருப்புகல் மன்னர் - போரை விரும்பும் அரசர்.
631. செல்வுழிச் செல்க என விளிதலின்றி, வறிதே மூத்த விளிதல் என இயைக்க, “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர்” - (அகம். 61.) விளிதல் - சாதல்.
632. நாப்புடை பெயராது - நா கூறுதற்கு எழாது. நாணுத்தகவுடைத்து - நாணும் தகுதியுடைத்து.

633. மன்பதை - மக்கள்.
634. பிக்குணிக் கோலத்து - பிக்ஷுணியின் வேடத்தால்.
635. திரிந்தோன் - கலங்கி வேறுபட்ட உதயகுமரன்.
636. அரசியல் - அரசருக்குரிய தகுதி.
637. கையற - செயற்றொழிய
638. பெரும்பிறி தாக்கும் - பயன்படா வகையிற் கெடுக்கும்.
639. அறிவு - தவஞானம்
640. தக்கன்று - தக்கதன்று.
641. சிறப்பின்பாலார் - கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற சிறப்பின் பகுதியுடையவர்களே. மக்கள் - புலவர்.
642. சிறை நோய் - சிறைத் துன்பம்.

643. தகைக்குநர் - தடுப்பவர்.
644. புக்கில் - புகுமிடம்.

645. செயப்பாட்டு வினையால் - செய்யப்படுவனவாகிய இருவகை வினையாலும்.
646. வினையால் உயிர்புகும் புக்கில் தெரிந்துணர்தல் அரிது என்க.
647. அந்தரஞ் சேறல் - விசும்பாறாகச் செல்லுதல்.
648. அயலுரு - வேற்றுருவம்.
649. காதலன் - இராகுலன், அவனே உதயகுமரனாகப் பிறந்தான்.
    கடுந்துயர் - மகனையிழந்த மிக்க துன்பம்.
650. செற்றம் செறுத்தோர் - பகையை நெடிது நிற்கும் சினமாகிய குற்றத்தை அறச் சிதைத்தவர்.
651. மல்லல் - வளம்.
652. அல்லல் மாக்கள் - துன்பமுறும் மக்கள். நிரப்புநர் - நிரம்பக் கொடுப்பவர்.
653. செல்லுலகு - எடுத்த உடம்பின் நீங்கிச் சென்றடையும் நல்லுலகம்.

654. துணிபொருள் - “பரமார்த்த தத்துவ ஞானம்.”
655. ஞான நல் நீர் - ஞானமாகிய நல்ல நீர்.
656. தேனாரோதி செவி முதல் - தேன் பொருந்திய கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியின்கண். தேனாரோதி - அன்மொழித் தொகை.
657. மகனையிழந்த துயராகிய நெருப்பு மனம் விறகாகப் பற்றி, உள்ளத்தைச் சுட்டெழுந்த கொடிய தீ என்க. ஆயிழை - மணிமேகலை.
658. தேறுபடு சின்னீர் - தேற்றாங்கொட்டையால் தெளிவிக்கப் பெற்ற சிறிதாகிய நீர். சிறிதாகிய நீரைச் சின்னீர் என்றல் மரபு.
659. மாறு கொண்டு - பகைமை கொண்டு. ஓரா - தெளியாத.
660. தகுதி - தக்க செயல்.
661. காதலன் - உதய குமரன்.

662. தொன்றுபடு மாநகர் - பழமை பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்தின் கண்.
663. பூவிலை ஈத்தவன் - மாதவி கூத்தும் பாட்டும் என்ற கலைவகை நிரம்பிப் பூத்த காலத்து அன்றைப் பரியம் கொடுத்துச் சேர்ந்த கோவலன்.
    மாதவர் பள்ளி - அறவணவடிகள் உறையும் பள்ளி.
664. பரந்து படு மனை - மிகப் பலவாய் விரிந்த மனைகள்.
665. அரங்கக் கூத்தி - அரங்கமேறிக் கூத்தாடும் பான்மையான மணிமேகலை.
666. நாடகக் கணிகையர் - நாடகமாடும் கணிகை மகளிர்.

667. பண்டு அறிவு உடையேன் - முன்பு கண்ட அறிவு உடையேன்; முன்பு கண்டுள்ளேன் என்பது.
668. பார்த்திப - அரசே.
669. நடுக்கின்று - முறை பிறழ்வின்றி.
670. வாகை வேல் - வெற்றிமாலை சூடிய வேல். தேவி - மனைவி. தேவியாகிய வாசமயிலை யென்பவள்.
    5.கருவொடு வரும் - கருப்பமுற்று வருவாள்.
671. கணி - சோதிடன்.
672. புலம்பல் - வருந்தாதே.
673. உள்ளக் களவு - உள்ளத்தால் பிறர் பொருளை மறையிற் கொள்ளக் கருதுதல் இதுவும் குற்றமென்பது பட, “உள்ளக் களவு” என்றார்.

674. தலைமையாக் கொண்ட தலைமையில் வாழ்க்கை - உரவோர் விலக்கியவற்றைத் தலைமைப் பொருளாகக் கொண்டொழுகுதல் கடைப்பட்ட பரத்தைமை வாழ்வு.
675. புலைமை - புலைத்தன்மை யுடையது.
676. யாண்டு பல புக்க நும் இணையடி - யாண்டு பல ஆதலின் முதுமையுற்ற நும் அடிகள் இரண்டும்.
677. காண்தகு நல்வினை - அழகிய நல்வினை யானது.
678. நாத்தொலைவில்லை - அறம் உரைக்கும் உமது நா மெலிவடைந்ததில்லை.
679. செய்தவ யாக்கையின் மேவினேன் - தவம் செய்தற்கமைந்த இவ்யாக்கையொடு கூடியிருந்தேன்.
680. வீழ் கதிர் - மறையும் ஞாயிறு.
681. அருவுரு - பேதைமை முதல் வினைப்பயன் ஈறாகக் கூறிய பன்னிரு நிதானங்களுள் ஒன்று. “அருவுரு என்பது அவ்வுணர்வு சார்ந்த, உயிரும் உடம்புமாகும் என்ப.” (மணி. 30:84-5)

682. பவம் - பவமெனப்படுவது கருமவீட்டம், தருமுறையிதுவெனத் தாந்தாம் சார்தல். (மணி.30:93-4).
683. தோற்றம் - பிறப்பு.
684. பெரும் பேறு - பரி நிருவாணம்.
685. புரைதீர் - குற்றமில்லாத. குற்றமாவது - பிறவிக்கேதுவாய துறக்க இன்பந் தருதல்.
686. பிற அறம் - மற்றைய சமய வறங்கள்.
687. முத்தேர் நகை - முத்துப்போலும் பல்.

688. பிழைப்பறியாது - பெய்யா தொழிதல் இன்றாம்.
689. மரன் - மரங்கள்.
690. உள் நின்று உருக்கும் - உடற்குள்ளேயிருந்து உயிரை வருத்தும்.

691. மறன் - பாவம்.
692. நீத்தத் திறன் - நித்தப் பொருள்களின் வகை.
693. செல்லுயிர்ப் புக்கில் - உடம்பின் நீங்கிச் செல்லும் உயிர்க்குப் புகுமிடம்.
694. சார்பின் தோற்றம் - பேதைமை முதலாகக் கூறிய பன்னிரண்டு; அவை ஒன்றினொன்று சார்ந்து தோன்றுவனவாதலின், “சார்பின் தோற்ற” மென்றார்.
695. உய்தி - வீடுபேறு.
696. ஆரியன் - அரியவனாகிய புத்தன். ஆரியன் என்பது அருமையென்னும் சொல்லடியாகப் பிறந்த செந்தமிழ்ச் சொல்.
697. பெண் இணையில்லாப் பெருவனப்பு - பெண்களின் நிகரற்ற பேரழகு.
698. காமனொடு இயங்கா - காமக்குறிப்பு உடையவல்ல. ஏனை மகளிர் கண்ணிணை யியக்கத்தே இக்குறிப்புண்மையின், “பெண்ணிணையில்லாள்” என்றவன், மேலும் “இணையில்லாள்” என்றான்.

699. மன்பெருஞ் செல்வம் - அரசப் பெரும் போகம்.
700. ஆ வயிற்று இப்பிறப்பு - ஆவின் வயிற்றிற் பிறந்த இப்பிறப்பு. அப்பிறப்பு என்பதில், சுட்டு, சாலிவயிற்றிற் பிறந்த பிறப்பைச் சுட்டிற்று பண்டறி சுட்டு.
701. பிணிப்பு - பற்று.
702. பெருமகன் - அரசனான அத்திபதி. பெயர்வோர் - அவந்தி நகர்க்குச் செல்வோர்.
703. கலங்கஞர்த் தீவினை - கலங்குவதற்குக் காரணமான துன்பம் பயக்கும் கொலை முதலிய பத்துவகைப் பாவங்கள்.
704. பிரமர் - பிரம காயிக லோக முதலிய இருபது வகை உலகத்து வாழும் பிரம கணங்கள். தேவர் - தெய்வவுலகு ஆறினும் உள்ள தேவகணங்கள்.
705. இன்னாப் பிறவி இழுக்குநர் - துன்பந்தரும் பிறவித் தொடர்பு அறுத்தவர்.

706. மாற்றரும் - பிறரால் தடுத்தற்கரிய.
707. சாற்றி - எடுத்தோதி. காட்டி - ஏதுவும் பயனும் இயையக்காட்டி.
708. கடிப்பு - பறையை அறையும் குறுந்தடி.
709. வெவ்வுரை - இன்னாச்சொல்; அஃதாவது “இராகுலன் திட்டிவிடத்தால் இறந்துபடுவன்; நீ அவனுடன்தீக்குளிப்பாய்” என்பது.
710. பெருமகற்கு - புத்தனை அறிந்து கோடற்பொருட்டு. பிறவி - பழம் பிறப்பு.
711. தரும பீடிகை - புத்த பீடிகை.
    7.இருளற - விளங்க.
712. யாய் - சாலியாகிய தாய்.
713. பெற்றி - வரலாறு.
714. செவ்வி - பார்த்தற்குரிய சமயம். உணங்க - வாட.

715. புரையோர் - உயர்ந்தோர்; அமைச்சர் முதலிய சான்றோர்.
716. கேள்வி யின்னிசை - கேட்டின் புறத்தக்க இனிய இசை.
717. செங்கடை - சிவந்த கடைக்கண்.
718. அருப்புக் கணை - மலராகிய அம்பு.
719. தருக்கிய - மயக்கிய
720. தூவறத் துறத்தல் - ஒட்டுப் பற்றின்றித் துறத்தல்.
721. ஏதமின்றாய் - தீதின்றி; மறதி முதலியவற்றாற் கெடாது.
722. இப்பதிகெழு நன்னாடு - இந்நகரத்தையுடைய சாவகநாடு.
723. மடிய - சாவ.
724. தகைமையது - வறுமை மிகுதியுடையது.
725. வெங்கோடை - கொடிய கோடைக்காலம்.
726. “தோன்றிய” என மீட்டும் கூறியது, பின்னர் உண்டான நலத்தின் சிறப்புணர்த்தற்கு.

727. தாயொழி குழவி - தாயையிழந்த குழவி.
728. துயர்நிலை யுலகம் - பிறவிக்கேதுவாகிய துன்பம் நிலைபெற்ற இம்மண்ணுலகு.
729. உயர்நிலை யுலகம் - நிருவாணம்.
730. பெறுதி - (உயிர்கள் எய்தும் இறுதியை) ஊதியம்.
731. மதிமாறு ஓர்ந்தனை - தன்னலம் கருதா நின் அறிவால், அதற்கு மாறாகத் தன்னலங் கருதிச் செல்ல நினைந்தனை.
732. தணியா வேட்கா - மாற்றமுடியாத ஆர்வம்.
733. சுற்றம் - அரசர் சுற்றம்.
734. மதுரைச் செழுங்கலைப் பாவாய் - சிந்தா தேவி.
735. வயிறுகாய் பசி - வயிற்றை வெதுப்பும் பசி நோய்.
736. இரந்தூண் வாழ்க்கை - இரந்துண்டு வாழ்தல்.
737. அருந்தூண் வாழ்க்கை - அருந்துதற்கு வேண்டும் உணவு.
738. பவம் - கருமக் கூட்டம்.
739. மணிதிகழ் அவிரொளி - மணிபோல் விளங்கும் ஒளி.
740. பிரமர் - பிரமகணங்கள்.
741. நா மாசு - நாவினது குற்றம்.
742. பேணுதல் - திருந்திய அடிகளை வணங்குதல்.
743. அயர்த்து - மறந்து விட்டுவிட்டு.

744. பெற்றிமை - தன்மை.
745. நின் குறி இருந்து - நீ இறந்தவிடத்தே உண்ணா நோன்பு பூண்டு இருந்து. குறி - இடம்.
746. மெய் வைத்தோர் - உயிர் விட்டவர்.
747. ஊர்திரை - பரந்த அலைகள்.
748. ஆய்மலர் - அழகிய பூ.
749. அரசற்கு - அரசனாகிய நினக்கு (நின்பொருட்டு).
750. “நின்னுயிர் கொன்றாய்” என்பது முதலியன பழிப்பது போலப் புகழ்தல்.
751. பிறர் - ஒன்பது செட்டிகளும் பிறரும்.
752. மடவரல் - இளமை, அழகு.

753. இலங்கு இதழ்த்தார் - விளங்குகின்ற பூ இதழ்களால் தொடுக்கப்பட்டமாலை.
754. அந்தரத் தீவு - இரண்டாயிரம் தீவு. (அந்தமான், இலக்கத் தீவு).
755. பெருந்தீவு - நான்கு பெருந்தீவுகள். “நால்வகை மரபின் மாபெருந்தீவும், ஓரீராயிரம் சிற்றிடைத் தீவும் பிறவும் மாங்கதன் இடவகை புரியன” - (மணி. 6:195-7).
756. நிறுத்த - நிறுத்துதற் பொருட்டு.
757. புரை - குற்றம். பிற - அசை.

758. படைத்தனை - அறம் பூணற்குரிய நல்லுணர்வு பெறுவித்தனை
759. நின் திறம் - நின்னிடத்தினின்றும்.
760. புன்கண் - துன்பம். கொள்ளல் - கொள்ளாதே.
761. வாயெடுத்தழைக்கும் - தாயிழந்த குழவி தன் தாயை நோக்கி அழுது அழைப்பது போல வாய்விட்டரற்றி யழைக்கும்.
762. வங்கத்து ஏகுதி - மரக்கலத்தில் செல்வாயாக.

1.குணம் பல ஏத்தி - குணங்களைப் பலபடச் சொல்லிப் பரவி.
2. அன்புக் கடன் - கணவன் இறப்பின் உடன் இறத்தலும், தீ மூழ்கலும். தவம் - கைம்மை நோன்பு.
3. கடன் முடித்தது - மதுரை எரித்துக் கணவனைக் கூடியது.
4. இறை - கணவனான கோவலன்.
5. வெம்மையின் - வெகுளித் தீயால்.
1. விண்ணவர்ச் சென்றேம் - விண்ணவராகி, விண்ணுலகு சென்றேம்.
2. அடு சினப் பாவம் - மதுரையை எரித்தற்கு ஏதுவாயிருந்த வெகுளியால் தோன்றிய பாவம்.
3. உம்பர் இல் வழி - விண்ணுலகத்தே நல்வினை நுகர்தல் இல்லாவிடத்து.
4. பல் பிறப்பு யாங்கணும் - எல்லாப் பிறப்பினும்.
5. உழல்வேம் - வருந்துவோம்.
6. திலகம் - மேலானது. உரவோர் - அறிவுடையோர்
7. கரவரும் பெருமை - மறைக்கமுடியாத பெருமை.
8. பாரமிதை - உடம்பு. உறுப்பு, பொருள் முதலியன குறைவறப் பெற்றுத் தான முதலிய பத்தும் உடையராதல். தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள், வலிமை, ஞானம் என்ற இப்பத்தும் தசபாரமிதை எனப்படும். அளவின்றி - குறைவின்றி
9. துளக்கமில் - நடுக்கமில்லாத.
10. போதிமூலம் - அரசமரம்.
11. சக்கரவாளம் - உலகம் முப்பத்தாறு தன்னுள் அடக்கியகோளம்.
12. அறக்கதிர் - அறமாகிய ஒளிக்கதிர்
13. தோற்றரவு - பிறத்தல்.
14. உள்ளம் துறவி தோன்றி - உள்ளத்தே துறவு உணர்வு தோன்றுதலால்.

1.  பிறவி நீத்த பெற்றியம் - பிறவித் தொடர்பற்ற நிருவாணமெய்தியவராகுவம்.
2.  இருத்தி - சித்தி.
3.  நறை - தேன்.
4.  அறிபொருள் - அறிதற்குரிய சமய நூற்பொருள்.
5.  மெய்வகையின்மை - அவை பொய்யாந்தன்மை
6.  பிடகநெறி - புத்தனருளிய ஆகமமாகிய பிடகநூல் நெறி. இப்பிடகம், சுத்தம், வினயம், அபிதன்மம் என மூவகைப்படும்.
7.  தேவகுலம் - கோயில்.
8.  தெற்றி - மேடை; திண்ணையுமாம்.
9.  மிடைந்து - செறிந்து.
10. கற்று அடங்கினர் - கற்றற்குரியவற்றைக் கற்று, அவற்றுட் கண்ட தற்குத் தக நிற்பவர்.

11. தொன்னூர்ற்புலவர் - பழைய நூல்களைக் கற்றுணர்ந்த புலவர்.
12. எயிற்புற விருக்கை - புறமதில் இருக்கை.
13. ஏதம் இல் - குற்றமில்லாத.
14. ஆண்டைய அருத்தாபத்தி - ஈண்டுக் கூறியதொன்றைக் கொண்டு ஆண்டு உள்ளதை யறிதற்குரிய அருந்தாபத்தியளவை.
15. அபாவம் - இன்மை.
16. எய்தியுண்டாம் நெறி - சம்பவம்.
17. புலங்கொளல் - அறிதல்.
18. சுட்டுணர்வு - உள்ளதன் உண்மையையுள்ளவாறு காண்டல்.

19. பாங்கு உறு - பகுதிகளான.
    *சமயம் ஆசிரியர் அளவை
    உலோகாயதம் - பிருகற்பதி பிரத்தியக்கம்
    பௌத்தம் - சினன் பிரத்தியக்கமும் அனுமானமும்
    சாங்கியம் - கபிலன் பிரத்தியக்கமும் அனுமானமும் ஆகமமும்
    இவ்வாறே பிறவற்றையும் ஓட்டிக்கொள்க. சாத்தம் - ஆகமம்.
20. இருசுடர் - ஞாயிறு திங்களும். இயமானன் - உயிர்.
21. கட்டி நிற்போன் - சமைத்து நிற்பவன்.
22. கலையுருவினேன் - கலைகளை உருவாக உடையவன்.
23. துடைத்து - அழித்து. துயர் - பிறவியால் உளதாகும் இளைப்பு.

24. சார்பில் தோன்றா - ஓரிடத்தில் தோன்றாத.
25. வேதக்கு - வேதத்துக்கு. ஆரணத்துக்கு அங்கம் ஆறு உண்டு;அவை, கற்பம். சந்தம், நிருத்தம், சிக்கை, கணிதம், இலக்கணம், “வேதமாகிய புருடனுக்குக் கற்பம் கை,சந்தம் கால், கணிதம் கண், நிருத்தம் செவி, சிக்கை மூக்கு, இலக்கணம் முகம்,” என்பர். புல்லிக்கிடந்து - பொருந்தியிருந்து.
26. வரம்பில் அறிவன் - எல்லையில்லாத அறிவுடைய மற்கலி தேவன்.
27. பெய்வகை கூடி - பெய்யும் கூறுபாட்டால் நிலவணு முதலிய நால்வகையணுக் களோடும் கூடி.
28. சிதைவது செய்யா - அழியா.

29. அவல்போல் - அவலைப்போல.
30. கரும்பிறப்பு முதலாகக் கூறுவன பிறப்புவகை. இவை முறையே ஒன்றினொன்று சிறந்தன. கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன்பிறப்பு, வெண்பிறப்பு என வருவன.
31. பாற்பட்டு - பகுதிக்கண் உற்று.
32. கழிவெண்பிறப்பு - மிக வெண்மையான (தூய) பிறப்பு.
33. உறுமிடத்து - எய்துதற்குரிய விடத்து.
34. அவை பெரிது நீங்கல் - அவற்றின் முழுதும் நீங்கல்.
35. கருவிற் பட்டபொழுதே - கருப்பத்திலே கருவாகியபோதே.
36. இறைவன் - அருகன். இந்திரர் - நூறுவகை இந்திரர்.
37. தன்மாத்திகாயம் - எங்கும் உளதாகி எஞ்ஞான்றும் பொருள்களை நடத்துவது (மணி. 27:187-8).

38. அதன்மாத்திகாயம் - பொருள்களனைத்தையும் நிற்கச்செய்வது.
39. காலாகாயம் - குறியதும் நெடியதுமாய வினைநிகழ்ச்சி நிகழ்விப்பது.
40. பந்தம் - கட்டு.
41. அறுத்திடுதல் - தொடராதவாறு செய்துகொள்ளுதல்.
42. மாண்பு அமை பொதுவாய் - மாட்சிமைப்பட அமைந்த சாமானிய தத்துவமாய்.
43. இறுமளவும் - அழியுங்காறும்.
44. பொறியுணர்விக்கும் பொது - “பொறிகட்கு விடயமாகும் சாமானியத் தன்மை.”

45. புலமார் பொருள் - தத்துவப்பொருள்.
46. சத்தம் முதல் நாற்றம் இறுதியாகிய ஐந்தனுள் நீர் சத்தம் முதலிய நான்கும். தீ சத்தம் முதலிய மூன்றும். காற்று சத்தம் முதலிய இரண்டும். விண் சத்தம் ஒன்றும் குணமாகக் கொண்டன என்பது.
47. தாதகிப்பூ - ஆத்திப்பூ, கட்டி - கருப்புக்கட்டி மற்றும் - ஆவாரம்பட்டை (ஆவிரம் பட்டை) வேலங்கொழுந்து முதலியன.
48. மதுக்களி - மதுவினிடத்தே களிப்பு. பிறந்தாங்கு - பிறந்தது போல.
49. பறையோசையின் - பறையோசை நிறுத்த நிற்பதுபோல.

50. மெய்வகை - மெய்ந்நூற் கூறும் பொருட் கூறுபாடு.
51. தெய்வமயக்கு - தெய்வமேறுதல்.
52. மையலுறுவார், அறிவு மயங்குவோர்.
53. காழியர் - பிட்டுவாணிகர்.
54. கூவியர் - அப்பவாணிகர்.
55. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி முதலிய இசை, திறம் இவற்றின் கிளை.
56. நிலம் - எழுத்து, அசை, சீர் என்ற இடம். காலம் - யாழ். கண்டம் - குரல்.
57. விலங்கு அரம் - வாளரம்.
58. வளை போழ்நர் - சங்கறுப்பவர்.
59. இரீஇய - இருந்து வாழும்.
60. வேத்தியல் - வேந்தர்க்காடும் கூத்து. பொதுவியல் - ஏனையெல்லார்க்குமாடும் கூத்து.
61. வேறுபாலாக - வேறு வேறு பகுதியாக. எண்வகைக்கூலம் - நெல்,புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில்நெல்.
62. குவைஇய - குவித்த.
63. மாகதர் - இருந்தேத்துவோர். சூதர் - நின்றேத்துவோர், வேதாளிகர் - பலவகைத் தாளத்திற்கேற்ப ஆடுவோர். பொதுவர் - பொதுமகளிர்.
64. கண் நுழைகல்லா - கட்பார்வை செல்ல முடியாத.
    அறுவையர் - உடை விற்பவர்.
65. மன்னிய - பெருகவுள்ள.
66. அருந்தொழில் - அரிய “வைதிகக் கிரியைகள்”
67. மன்றம் - ஊர்மன்றம்; நடுநாட்டார், இதனை “மன்ற வெளி” என்று இன்றும்
    வழங்குப.
68. பொதியில் - பொதுவிடம்.
69. சதுக்கம் - நான்கு தெரு கூடுமிடம்.
70. புதுக்கோள்யானை - புதுவதாகப் பிடிக்கப்பட்ட யானை.
71. பொற்றார் - பொன்னால் செய்த கிண்கிணி மாலை.
72. கதிக்குஉற - நடையில் மேம்பாடு எய்த. வடிப்போர் - பயிற்றுவோர்.
73. வேணவா - மிக்க அவா. வேட்கை +அவா-வேணவா.
74. நன்னீரிடம் - பொய்கை முதலாயின.
75. தமனியப்பொதியில் - பொன்னாலாகிய அம்பலம்.
76. கோலம் - ஓவியம். குயின்ற - அமையச்செய்த. கொள்கையிடம் தவச்சாலை.

77. விளிந்தமை - இறந்தது.
78. அருகனேன் - பக்குவமுடையேன்.
79. மலையா - மாறுபடாத.
80. குட்டுவர் - சேரர் குடியினர்.
81. விடர்ச்சிலை பொறித்த வேந்தன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். விடர் - ஈண்டுப்பாறை. சிலை - விற்பொறி.
82. துப்புஅடு - பவளத்தையொத்த.
83. பிறவா இன்பம் - பிறவாமையால் வரும் இன்பம்.
84. அறத்தகை முதல்வன் - அறத்தால் தகுதிபெற்ற புத்தன்.
85. உருப்ப - வருத்திச் செலுத்த.
86. காதலி - கண்ணகி.
87. அற்புதக்கிளவி - அற்புதமான சொற்கள்.
88. கரத்தலின் - இல்லாதொழிதலால்.
89. ஆருயிர் மருந்து - நிறைந்த உயிர்களை வருத்தும் பசிப்பிணி போக்கும் உணவாகிய மருந்து தருபவளே.
90. நாட்டகவயின் - நாட்டிற்குள்.
91. கார்என - மழைமுகில்போல.
92. குணவதம் - நற்குணம் நல்விரதம்; குணமென்றே கொண்டு வதம் என்பதைப் பகுதிப்பொருள் விகுதியாக்கலுமொன்று. “குணவதம்கொளுத்தலாமோ” என்ற சிந்தாமணிப் பாட்டுக்கு நச்சினார்க்கினியர் உரைப்பது. காண்க.
93. மிக்கோள் - மேம்பட்டாள்.
94. தருமதவனம் - தருமத்தைக் கொடுக்கும் வனம்.

95. கொங்கவிழ் குழலார் - தேன்மலரும் குழலையுடைய கற்புடையமகளிர்.
96. நலத்தகை - நற்குணமும் அழகும் உடைய. 3. அலத்தற்காலை - வறுமைக்காலம்.
97. உயங்காதொழி - வருந்தற்க. 5. கடிஞை - அமுதசுரபி யென்னும் கலம்.
98. ஆருயிர் மருந்து - உணவு. நிலம் - நிலத்துமக்கள்.
99. தாங்கா மாரி - இதுகாறும் மழைபெய்து உயிர்களைத் தாங்காத மழை.
100. பாரகவீதி - நிலத்திடத்து.
101. கொழுநீர் இலஞ்சி - மிக்க நீர்பொருந்திய பொய்கை.
102. பேணாமாக்கள் - பிறரால் பாதுகாக்கப்படாத மக்கள்; ஆதரவற்றவர்
103. பேசார் - ஊமை. 3. பிணித்தோர் - நோயுற்றோர்.
104. படிவநோன்பியர் - தவவடிவும் நோன்புமுடையவர்.
105. மடிநல்கூர்ந்த - உடுக்கும் உடையில்லாத.
106. ஈண்டி - நிறைந்து. 7. கைப்பெய் பிச்சை - கையிடத்தே இடம்படும் பிச்சை.
107. சீர்பெற - நன்கு அமைய. நீர் முதலியன சீர்பெற வித்தியவித்தின் விளைவும், பிச்சையின் பயனும் பெருகிய தென்னவளம் சுரப்ப என்க.
108. வசி - மழை.
109. பாசிலைத் திரையல் - பசிய இலையாகிய வெற்றிலை.
110. பளிதம் - பச்சைக் கருப்பூரம். இது பாளிதம் எனவும் வழங்கும் “அடகுபுலால் பாகுபாளிதமுமுண்ணான் கடல்போலுங் கல்வியவன்” என்புகழிப்போல.
111. வாய்வதாக - தப்பாது பயன் வழங்குக.
112. மனப்பாட்டு அறம் - மனத்திடத்தே கொண்டியற்றும் அறம்.

113. வானவர் தலைவன் - இந்திரன்.
114. தந்தை - கோவலன்.
115. அவன் அருளறம் பூண்டவனாதலின், “மன்னுயிர் முதல்வன்” என்றார்.
116. மகரவேலை - மகரமீன் வாழும் கடல்.
117. முன்னிய - செலுத்திச் சென்ற.
118. முங்கி - முழுகி.
119. இடுக்கண் - துன்பம். வந்தெய்தா - வந்துஎய்துதற்காகாத. வழுவாச்சீலம் - குற்ற மில்லாத சீலத்தை.
120. வாய்மையிற்கொண்ட பான்மை - வாய்மையுடன் கொண்டிருந்த முறைமையினால்.
    பாண்டுகம்பளம் - வெள்ளைக் கம்பலமாகிய இருக்கை

121. நடுக்குற்றதன்மை - சீலமும் வாய்மையும் கொண்டோர் இருப்பினை யுணர்த்தற்கு இந்திரனது கம்பலம் அசையும் என்பவாகலின், ஈண்டு அது நடுங்கிற்று; அத்தன்மையை அவ்விந்திரன் நோக்கினான் என்க.போதிமூலத்து நாதனாவோன் - போதிசத்துவர்; புத்தனாதற்குரியவன்.
122. எவ்வமுற்றான் - துன்பமுற்றான். தனது - அவனது.
123. ஐவகைச் சமயம் - அளவை வாதமுதலாகவுள்ள ஐந்தும், (1) ஆசீவகவாதம் நிகண்ட வாதங்களும். (2) சாங்கியம், (3) வைசேடிகம், (4) பூதம் (5) ஆக ஐவகைச் சமயம்.

124. செவ்விதன்மையின் - ஒவ்வொன்றும் மெய்யானதாக இல்லாமையால்.
125. நாமம் - பெயர். சாதி - வகை. குணக்கிரியை - குணமும் செய்கையும்.
126. அவை - நாமசாதி முதலியன. அடையும் - அனுமானத்தின் கண்ணும் அடங்கும்.
    ஏனையளவை - ஆறும், எட்டும் பத்துமாகக் கூறியவற்றுள் காண்ட லொழிந்த மற்றவை.
127. பக்கம் - இது மேற்கோள், பிரதிஞ்ஞை எனவும் வழங்கும்.
128. அடுக்களை - அடுப்பு. 6. எனல் - என்று துணிதல்.

129. சபக்கம் - துணியப்பட்ட கருத்து வெளிப்பட்ட பக்கம்.
130. விபக்கம் - துணியப்படுங் கருத்து காணக்கூடாத பக்கம்.
131. திருத்தக - கேட்போர் இனிதறிய.
132. தீய சாதனம் - “பிரமாணபாசம்,” நாட்டிய - வற்புறுத்திய.
133. ஐயமின்றி - தெளிவாக.

134. அறிவு - பரிநிருவாணத்தையறியும் அறிவு. வறிதாய் - இல்லையாதலால்.
135. நிலைகாலத்து - தகுதியால் அமையுங்காலத்தில்.
136. முடிதயங்கு அமரர் - தலையில் முடிவிளங்கும் தேவர்.
137. துடிதலோகம் - அறுவகைத் தெய்வலோகத்துள் ஒன்று. ஒழிய வறிதாக.
    கௌதமபுத்தர் - சுத்தோதனர்க்குப் புதல்வராய்ப் பிறப்பதற்குமுன் இருந்த உலகம் இது என்பர்.
138. மாரன் - மனத்தைத் தீயவழியிற் செலுத்தி மயக்கும் தேவன்
139. குற்றமூன்று - காமம், வெகுளி, மயக்கம்.
140. வாமன் - புத்தன்.
141. ஏமக்கட்டுரை - இன்பத்தைப் பயக்கும் பொருளுரை.
142. எண்ணில் புத்தர்கள் - அறம்குன்றிய காலங்களிலெல்லாம் பலப்பல புத்தர்கள் தோன்றி அறம் வலியுறுத்தினர் என்பர்; அதனால் புத்தர்கள் எண்ணிலர் என்க.

    1.  நிலையில - நிலையில்லாதவை. வறிய - பயனில்லாதவை.

143. உலையா வீட்டிற்கு - துன்பம், அறிவில்லாத இன்ப வீடு
144. நால்வகை வாய்மை - துன்பம், துன்பத்தோற்றம், துன்பநீக்கம், துன்ப நீக்க நெறி.
145. ஐவகைக் கந்தம் - “உருவு, நுகர்ச்சி, குறிப்பே,’ பாவனை, உள்ள அறிவு இவை ஐங்கந்த-மாவன” (மணி. 30:189-90).
146. ஆறுவகை வழக்கு - உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த உண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த உண்மை வழக்கு.
147. நயம் நான்கு : ஒற்றுமை நயம். வேற்றுமை நயம், புரிவின்மைநயம், இயல்புநயம்.
148. நால்வகை வினாவிடை - (பின்னர்க் கூறப்படுகின்றன).
149. நின்மிதி - உண்டாக்குதல்.
150. ஊழ்பாடு - முடிவுபடுதல்.
    2.  

151. இற்று - இத்தன்மைத்து.
152. ஆயின் - ஆராய்ந்து பார்க்குமிடத்து. அறியார் நரகு அறிகுவர் என்க.
153. முயற்கோடு - முயலுக்குக் கொம்பு.
154. குறளை - கோட் சொல்லுதல்.
155. வெஃகல் - பிறர் பொருளைக் கவரவிரும்பல்,
156. பொல்லாக்காட்சி - மயக்கம்; உண்மையறியாமை.
157. உருப்பன - தோன்றுவன. (உருக்கொள்வன என்பது சொற் பொருள்).
158. பயன் - மெய்ப்பொருள்.
159. உள்ளக்கவலையின் - உள்ளத்தே நீங்காத துன்பத்துடன்
160. சொல்லிய பத்து - உடம்பிலும், சொல்லிலும் உள்ளத்திலும் தோன்றுவன என மேலேயுரைத்த பத்துக்குற்றம்.

161. சீலம் - ஐந்தென்றும், பத்தென்றும், எட்டென்றும் கூறுவர். கொல்லாமை, பொய் யாமை, கள்ளாமை, காமமின்மை, கரவாமை, என ஐந்து; பிறவும் இவைபோல்வன.
162. மகிழ்ச்சி - இன்பம்.
163. புரிவு - தொழில், புலன்கொளாதது - நுகரப்படாதது.
164. மேவுதல் - பொருந்துதல். 5. ஆராமை - நிரம்பாமை.
165. பசைஇய - ஒட்டிய. 7. ஈட்டம் - கூட்டம்; செறிவு.
166. உறப்புணர் உள்ளம் - மிகக்கூடிய விஞ்ஞானம்.
167. இடும்பை புரிதல் - துன்பம் செய்தல்.
168. தாக்கு - வலிமை; நோன்மையுமாம். (தாங்குந் தன்மை).
169. வீழ்கதிர் - மறையும் ஞாயிறு.

170. அன்மகன் - பற்று உடையவன்.
171. புகல்வான் - வினவுவோன், உரைக்கு - வினவுதற்கு.
172. கட்டு - தொடர்பு
173. ஓட்டி - பொருந்தி.
174. காமம் - அநித்தம்.
175. காமம் - துக்கம் தருவது. இவ்வாறே ஓட்டிக்கொள்க.
176. அநான்மா - ஆன்மாவுக்கு ஊதியம் தருவதன்மை.
177. அசுசி - தூயதன்மை.
178. பற்று - காமம்.
179. மைத்திரிபாவனை.
180. கருணா - கருணாபாவனை; முதிதபாவனை, செற்றம் - வெகுளி.
181. சுருதி - ஞானநூல் கேட்டல்.
182. சிந்தனா - சிந்தித்தல்.
183. பாவனா - பாவித்தல்.
184. தரிசனை - அறிதல்.